“வெக்கை” நாவலில் வடக்கூரான் நேரடியான சித்தரிப்பில் தோன்றுவதில்லை. அவன் முழுக்க முழுக்க சிதம்பரத்தின் கற்பனையில் மீள மீள வருகிறான் - துண்டுத்துண்டான சித்திரங்களாக. அதுவும் சிதம்பரம் வடக்கூரானின் உடலைப் பற்றியே அதிகமும் யோசிக்கிறான். அவனை வெட்டும் போது அருவாள் அவனது உடம்பில் ஆழமாக பதிகிறது; இழுத்து வெளியே எடுக்க சிரமப்படுகிறான். வடக்கூரான் உடம்பை அப்படி வளர்த்து வைத்திருக்கிறான் என சிதம்பரம் பின்னர் இதைக்குறித்து யோசிக்கையில் நினைத்துக்கொள்கிறான்.
எந்த ஆணும் மற்றொரு ஆணைப் பற்றி இப்படி யோசிக்க மாட்டான் - ஒரு பெண் தனக்கான ஆணைப் பற்றி இப்படி நினைக்கலாம். ஆனால் சிதம்பரம் வடக்கூரானை வெட்டும் போது கத்தி அவர்களின் உடல்களுக்கு இடையில் ஒரு பிணைப்பை உருவாக்குகிறது. கொலை தரும் குற்றவுணர்வை பூமணி பேசுவதே இல்லை. மாறாக கொலையின் ரத்தக்காமத்தை நுட்பமாக சித்தரிக்கிறார்.
மற்றொரு இடத்தில் சிதம்பரம் கரும்புக்காட்டில் கரும்புகளை சுவைக்கும் காட்டுப்பன்றியை காணும் போது அதை எப்படி கொல்வது என யோசிக்கிறான். அதை வெட்டினால் பன்றி அருவாளைக் கடிக்கும்;அருவாள் அபோது துண்டுத்துண்டாகி விடுமே. ஒரு ஈட்டி இருந்தால் அதன் மீது பாய்ச்சி சாய்த்து விடலாமே என நினைக்கிறான். (இதை சிவசாமி செய்வது போல வெற்றிமாறன் படத்தின் துவக்கத்தில் ஒரு ஆக்ஷன் காட்சியை அமைத்திருக்கிறார்.) ஒளிந்திருக்கும் போது அவன் ஏன் பன்றியை கொல்வதைப் பற்றி யோசிக்க வேண்டும்? அவனுக்கு பயனே இல்லையே.
ஒரே காரணம் தான் - அவன் மனம் வடக்கூரானின் உடம்பில் ஆட்கொண்டிருக்கிறது. அவன் அதைப் பற்றியே திரும்ப திரும்ப யோசிக்கிறான். இந்த பன்றி அவனுக்கு வடக்கூரானை நினைவுபடுத்துகிறது. வடக்கூரானை தான் தாக்கிய முறை தவறோ, வேறு என்னவெல்லாம் செய்திருக்கலாம் என யோசிக்கிறான். இதை நினைக்கும் போதே வடக்கூரானின் பலமும் (அருவாளையே சிதறடிக்கும் கூர்மையான பற்கள்) அவன் சமூகத்தை சீரழிப்பதும் (காட்டிலிருந்து வந்து கரும்புத்தோட்டத்தை அது நாசம் பண்ணுவது, அதுவும் ருசித்து அதை செய்வது, தன்னை யாரும் தடுக்க முடியாது எனும் அதன் ஆங்காரம்) இந்த பன்றியின் காட்சி அவனுக்கு உணர்த்துகிறது. இப்படி அவனால் கடைசி வரை வடக்கூரானை மறக்க முடிவதே இல்லை. அவன் தலைமறைவில் இருக்கையில் அவன் அப்பாவிடமும் வடக்கூரானைப் பற்றி அவனது குற்றங்களை சட்டமும் காவல்துறையும் தட்டிக்கேட்காதது பற்றி, மக்கள் அவனை பொறுத்துப் போவதைப் பற்றி பேசுகிறான். அதாவது கொன்ற பிறகும் அவனது கோபம் குறைவதில்லை, ஏனென்றால் வடக்கூரான் என்பது ஒரு உடல் அல்ல. அது கொல்லக்கொல்ல திரும்ப வரும் ஒரு காட்டுப்பன்றி. அது உடம்பில் இருந்து உடம்புக்குப் பாயும் ஒரு முடிவுறாத அகவெறுப்பின் நதி.
நாவலில் வடக்கூரானை சிதம்பரம் நேரில் சந்தித்து உரையாடுவதோ அவனை அணுக்கமாய் அறிவதோ இல்லை என்பதும் முக்கியம். அவனது ஆங்காரம் முழுக்க வடக்கூரான் குறித்த நினைவுகளிலே இருக்கிறது. வாசகர்களுக்கு எப்படி வடக்கூரான் ஒரு பனிமூட்டமோ சிதம்பரத்துக்கும் அப்படியே. அவனை வெட்டும் போதும் கூட அவனது உடம்பை அவன் முழுக்க பார்ப்பதில்லை. அருவாள் ஆழமாய் பதியும் அந்த தசைத்தொகுதியாக மட்டுமே சிதம்பரத்தின் நினைவுகளில் வடக்கூரான் எஞ்சுகிறான். ஆகையால் தன் பழிவெறியை, கோபத்தை உறுதிப்படுத்த சிதம்பரம் தன் நினைவுகளில் மீள மீள வடக்கூரானை உருவாக்குகிறான். அவன் கலைந்து போய் விடக்கூடாதே எனும் பதற்றம் அவனுக்குள் இருக்கிறது. வன்மம் என்பது அள்ள அள்ள கைக்குவளையில் நிற்காத நீர் என பூமணி நமக்கு உணர்த்துகிறார். வன்மத்தை நம்மால் பார்க்கவோ கையில் எடுக்கவோ முடியாது, அதை அறியும் மனித மனம் எப்படியெல்லாம் பதறுகிறது, போராடுகிறது என்பதே இந்நாவலின் மையக்கரு. இதற்காகவே பூமணி நாவலின் கதையாடல் முழுக்க அண்ணனின் கொலை, வடக்கூரானின் கொலை ஆகியவற்றை பூடகமாக, முழுமையற்றதாக, தேசலாக சித்தரிக்கிறார்.
அதனால் தான் “வெக்கை” வேறெந்த தமிழ் நாவலில் இருந்தும் தனித்து தெரிகிறது.

கருத்துகள்