Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

நாவலெழுதுவது பற்றின குறிப்புகள் - 10


 
நாவலை எழுதிச் செல்லும்போது நாம் திறந்த மனத்தோடு இருப்பது அவசியம் என நேற்று ஒரு அத்தியாயத்தில் திருத்தமொன்றைச் செய்கையில் தோன்றியது. என் நாவலில் ஒரு பிரச்சினை தோன்றியது - சில பகுதிகள் ரொம்ப எதார்த்தமாக இருந்தன. அவற்றில் ஒன்றில் ஒரு சம்பவம் விவரிக்கப்படுகிறது. எனக்கு நேற்று அதைத் திருத்தும்போது அது உண்மைதான் என எனக்கு எப்படி நிச்சயமாகத் தெரியும் எனக் கேள்வி எழுந்தது. அது அப்பாத்திரம் சொல்வதே அன்றி அதை உண்மையென நான் எப்படி கேள்வியின்றி ஏற்றுக் கொள்கிறேன்? ஆகையால் அதை ஒரு கதையாகவே பார்க்கலாம் என முடிவெடுத்தேன். அது கதையெனில் அக்கதையை எழுதுவது யார், அதில் பாத்திரங்கள் யார் எனும் கேள்விகள் அடுத்து எழுந்தன. அக்கேள்விகளைப் பின் தொடர்ந்து கதையில் மாற்றமொன்றைச் செய்தேன். அது ஒரு மாயச்சரடைத் திறந்தது. அது கதைக்கு ஒரு புது வெளிச்சத்தையும் எழுத்தாளரான எனக்கு நிறைய சுதந்திரத்தையும் அளித்தது. ஒருவேளை என் நாவலின் கதைப் போக்கு இதுதான், மொழி இதுதான் என முடிவெடுத்து நான் பிடிவாதம் இருந்திருந்தால் கதைக்குள் இத்தகைய புதிய திறப்புகளை அனுமதித்திருக்க மாட்டேன்.

இதன் இழப்பு ஒன்று மட்டும்தான் - நேரம். நான் கதையின் துவக்கத்துக்குச் சென்று சில மாற்றங்களை அவ்வப்போது செய்ய நேரிடும். கதையின் பிற்பகுதியிலும் அதன் போக்கில் வருகிற வெவ்வேறு சாத்தியங்களையும் பரிசீலிக்க வேண்டும். இத்தகைய மாற்றங்கள் ஒரு அறையிலோ வீட்டிலோ புதிய கதவு ஒன்றை உருவாக்குவதைப் போன்றது. அப்புதிய கதவைப் பார்ப்பவர்கள் அவ்வழியே ஏன் போகக்கூடாது, அது எங்கேயெல்லாம் அழைத்துச் செல்லும் என யோசிப்பார்கள். கதைக்குள் ஒரு புது சாத்தியத்தை நாம் காட்டும்போது வாசகரின் மனமும் அவ்வாறே சிந்திக்கும் என்பதால் நாம் அதற்கான வேலைகளையும் பனுவலுக்குள் செய்ய வேண்டும். ஒரு கதவை உருவாக்கினால் அதற்கான பாதைகளையும் பின்னாளில் உருவாக்கிக் காட்டி விட வேண்டும்.
நாவலுக்கும் சிறுகதைக்குமான முக்கியமான வித்தியாசம் இது - சிறுகதையை மாற்றிமாற்றி எழுதும்போதெல்லாம் அது புது கதையாகிறது. நாவலுக்குள் அதைச் செய்கையிலோ அதனுள் புதிய சாத்தியங்கள் பிறக்கின்றன, புதிய அறைகளையும் ஊடுபாதைகளையும் ஒரு கட்டிடத்திற்குள் உருவாக்குவதைப் போன்றது அது.
நாவலை நாம் அதை எழுதும்போதே கண்டுபிடித்தபடி இருப்பதும் ஒருவித சுயபடிப்பினைதான். நான் ஒரு எழுத்தாளராக மலர்ந்து கொண்டே இருக்கிறோம் என அது உணர்த்துகிறது. நமது கண்டுபிடிப்புகள் ஒன்று நமது எழுதும் ஆற்றலை மேம்படுத்தி நமக்கான கதைமொழியை உருவாக்க உதவும் அல்லது நமது நேரத்தை வீணாக்கும். இந்த ரிஸ்கை கூட எடுக்காமல் எதற்கு எழுத வேண்டும்?

Comments

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

சாருவும் கெர்ட் வொனெகெட்டும்

  எனக்கு சாருவின் நகைச்சுவையில் உள்ள கட்டற்ற தன்மை பிடிக்கும். அதை ஒரு அபத்த நகைச்சுவை என்று சொல்லலாம். அதில் ஒரு குழந்தைமை எப்போதும் இருக்கும். குறிப்பிட்ட நபர்களை, நம்பிக்கைகளை பகடி செய்வது அவரது நோக்கமாக இருக்காது. யாருமே பார்க்கவோ பேசவோ விரும்பாத ஒன்றைப் பகடி செய்வார். அந்த ஒன்று சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாறும். அதை ஒரு எதிர்மறை கடப்புநிலைப் பொருள் (negative transcendent) என்றோ நிகழாத இன்மை (unrealized emptiness) என்றோ சொல்லலாம். எதிர்மறை கடப்புநிலைப் பொருள் என்றொன்றைப் பற்றி யாரும் சொல்லியிருக்கவில்லை. குந்தர் ஆண்டர்ஸ் இதை எதிர்காலத்தில் தொழில்நுட்ப ஆதிக்கத்தால் நாம் நமது முன்னேற்றத்தால் நம்மைதே கடந்து அழிவை நோக்கிப் போவோம் எனும் பொருளில் பயன்படுத்தினார். நான் இதை வெற்றுக்குறிப்பான் எனும் பொருளில் பயன்படுத்துகிறேன். சாரு தொடர்ந்து ஆன்மீகம், தன்னைக் கடந்த மகத்தான அனுபவங்கள் குறித்து எழுதுவார். அதனூனே தான் அவரது இந்தப் பகடியும் நிகழும். அவரது எழுத்தின் அடிநாதமே சொல்ல வரும் விசயத்தைக் கடந்த உணர்வுநிலையை நமக்குத் தருவதுதான். இதுவே அதன் கடப்புநிலைத்தன்மை. ஆனால் அவர் நகைச்சுவை என்று வ...