Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

அபிலாஷ் சந்திரனின் “கால்கள்” - Finding one's feet and landing on them! - ஷஹிதா


Lagya balai - லக்யா பலாய் - உன் வலி வேதனைகளை எனக்குத் தந்துவிடு ! என் தங்கையின் ( கஷ்மீரி ) மாமியார் அவளைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் உரையாடத் துவங்குமுன் சொல்லும் உளப்பூர்வமான முகமன் இது . கேட்கும் போதெல்லாம் நடைமுறைப்படுத்த இயலாதே என்ற ஆதங்கம் கொள்ளச் செய்யும் , இதை விடவும் அதி உன்னதமான வாழ்த்து உலகில் இருக்குமா என்று உருக வைக்கும் சொற்கள் . 
வலி எத்தனை உக்கிரமான உணர்வாக , வாழ்வை , அதன் தரத்தை நிர்ணயிக்கும் , மாற்றிப் போடும் விசையாக இருக்கிறது என்பதைத் தன் ஆங்கில இலக்கியப் புலமை , அங்கதச்சரளம் , கவிதைமொழி எல்லாமும் இழைந்த நடையில் அபிலாஷ்சந்திரன் பேசும் நாவல் கால்கள் . தொடர்ந்து வலியும் வாதையுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி மதுக்ஷரா . அவள் குடும்பம் , கல்வி , நட்பு , சமூகத்தில் அவளுடைய நிலை இவற்றோடு வலியை , உடற்குறைப்பாட்டை , நோயை மையமாகக் கொண்ட நாவலானாலும் பாத்திரங்களின் அசல்தன்மையும் , வெளிப்பாட்டின் கலைத்தன்மையும் , 552 பக்கங்களை களைப்பின்றி பின்தொடர வற்புறுத்துகின்றது .

ஒரு காலின் பலமின்மை காரணமாக , சுழற்சி முறையில் போல , சில வாரங்களுக்கு ஒரு முறை என்ற ஒழுங்கில் ( ! ) விழுந்து அவதிப்படுகிறாள் மது . பாதங்களின் வீக்கம் , வலி , இடுப்பு வரையில் பரவுகிறது . தன் ஊனத்துக்குக் காரணம் என்று கருதும் தன் பெற்றோர் மீதும் , சமூகத்தின் மீதும் அவளுக்கு இருக்கும் கசப்பு , அனுபவிக்கும் வலி , கால் சரியாகி அவளும் ஒருநாள் எல்லோரையும் போல நடக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் மதுவின் அப்பா ஏற்பாடு செய்யும் தொடர் சிகிச்சை முறைகள் , 
இவற்றை எல்லாம் சுவாரஸ்யமாகவும் , தனிமைக்கசப்பு , அகச்சிக்கல்களை ஒரு பெண் உணரும் கோணத்தில் அபாரமான துல்லியத்துடனும் சொல்லியிருக்கிறார் அபிலாஷ் . மதுவின் பெற்றோர் , ஆசிரியருடன் , நண்பர்கள் கார்த்திக் , கண்ணன் , அந்தத் தெருவில் வசிக்கும் ஏராளமான நபர்கள் என்று பெரிய கதாபாத்திரக் கூட்டம் .
போலியோ தாக்குதலில் , துரதிர்ஷ்டத்தின் ஒரு நொடியில் நொடித்துப் போன இடது காலைத் தன் அம்மாவோடு ஒப்பிட்டுப் பார்க்கிறாள் மது ! தன் அம்மாவுடன் கொண்டிருந்த love hate உறவும் , சூம்பின காலையே தன் அம்மா என்று நினைப்பதுமாக கவிஞர்களுக்கு மட்டுமே எட்டும் வெளிப்பாட்டு உயரம் . விசாலத்தின் அசமஞ்சத்தனம் ஒரு வகையில் தன் ஊனத்துக்குக் காரணம் என்ற ஆழமான நினைப்பின் காரணமாகத் தன்னை அறியாமலே அவள் மேல் ஊறிப்போன வெறுப்பு , ஆனாலும் தன் உடலின் ஒரு பகுதியைப் போன்ற தாயை முழுக்கவும் விலக்கவும் முடியாத அன்பு என்று வெர்பல் லெவெல் அர்த்தத்திலும் சரி சப்டெக்ஸ்ட்டிலும் ஒரு கவிதைக்கான பொருள் போல அத்தனைப் பொறுத்தம் !
DOES HE KNOW A MOTHER'S HEART:
மதுவின் பேராசிரியர் மதுசூதனனின் மகன் பாலுவின் நோய்மை , மனநலம் பற்றின பத்திகள் , ஒருவனுக்கு மனநோய் இருக்கிறதா இல்லையா என்று தீர்மானிக்க /யாரும் தான் யார்/ என்று வாதிடும் மதுவின் கேள்விகள் , இவை எல்லாமுமே தனியான ஒரு நாவலாக விரிக்கப் போதுமான அளவுக்கு கனம் கொண்ட பக்கங்கள் . 
மதுவின் போலியோவுக்கும் , பாலுவைப் பற்றின கிளைக்கதைக்கும் தொடர்புடைய புத்தகமாக Arun shourie யின் Does he know a mother's heart ஐச் சொல்லலாம் . நான் வாசித்தவரையில் - தன் குழந்தையின் துயரம் , ஊனம் , வலி ஒரு தந்தையின் மனோபாவத்தை , அவனின் வாழ்வை எத்தனைத் தூரம் மாற்றுகிறது என்பதற்கான மிகக் குறிப்பிடத்தகுந்த பதிவுகளாகத் தெரிபவை அபிலாஷின் கால்களும் , அருண் ஷோரியின் Does he know a mother's heart ட்டும் .
பிறப்பின் போது மூளையில் காயங்களை அடைந்து அதனால் பல்வேறு உடற்குறைகளுக்கு , வாதைகளுக்கு ஆளானவர் ஆதித் .அவருடைய தந்தை , அரசியல்வாதியும் எழுத்தாளருமான அருண்ஷோரி தன் மகனின் உடற்குறை ஏற்பட்ட விதம் , 35 ( புத்தகம் வெளியான 2011 ல் ) வயது நிரம்பிய ஆதித்தின் உலகம் , அவருடைய தனித்தன்மைகள் , வலியும் வேதனைகளும் மருத்துவ சிகிச்சைகளுமான அவருடைய அன்றாட வாழ்கைப்பாடுகள் என்ற அத்தனையையும் பதிவு செய்யும் போதே , வலியும் துயரமுமான வாழ்கை , எப்படி , மதங்களை , இறைவனை எதிர்க்க , மறுக்கச் செய்கிறது என்றும் ஆவேசமாகப் பேசும் நூல் இது . 
அருண் ஷோரி - தன் மகனின் அன்றாடப்பாடுகளை இயன்ற வரையில் மேம்படுத்திக் கொடுப்பதில் முனைப்புக் கூடிய ஒரு தகப்பன் . தன் கசப்பை , தத்துவார்த்தமாக , தர்க்கரீதியிலான தேடல்களில் , கேள்விகளில் தொலைத்துக்கொள்ள முற்படுகிறார் . Does he know a mother's heart அபுனைவு எனும் போதும் , இரு நூற்களுமே உடற்குறைபாடு , வலியைப் பிரதானமாகப் பேசும் , நம் இந்தியக் குடும்ப அமைப்பில் விசேஷக் குழந்தைகளின் தகப்பன்மாரின் உளவியல் கூறுகளை அறியத்தரும் முக்கியமான புத்தகங்களாக இருக்கின்றன .
பிரம்மேந்திரன் - மதுவின் அப்பா . மொடாக் குடியர் , மனைவியை அடிப்பவர் , சூம்பிப் போன தன் காலும் அம்மாவும் ஒன்றே தான் என்ற முடிவுக்கு மது வரக் காரணமான அளவுக்கு மதுவின் அம்மாவை முடக்கிப் போடுபவர் ! மகாமோசமான மனிதன் என்ற முடிவுக்கு யாரையும் வரச்செய்யும் குணவிசேஷங்கள் . ஆனாலும் மதுவின் மீது அவர் காட்டும் அக்கறை , சொல்லப்போனால் அளவுக்கு அதிகமான கவனம் காரணமாக வாசகனின் மனதில் ஒரு இடத்தைத் தக்க வைத்துக்கொள்கிறார் . தன் மகளின் இந்நிலைக்குத் தானே காரணம் என்ற குற்ற உணர்வோடே , எப்போதாவது அவள் நிச்சயம் நடப்பாள் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையைக் கடத்தும் ஒரு தந்தை , தன் இயலாமையை குடியில் மறக்க எத்தனிக்கிறார் . 
மதுவை காலிப்பர்களை விடாது அணியச்செய்ய வலியுறுத்தி ,பல்வேறு விதமான சிகிச்சைகளுக்கு ஆட்படுத்தி , விதவிதமான களிம்புகளிட்டு பிரமேந்திரன் குணப்படுத்த நினைப்பது , சூம்பி , வளைந்து போன தன் மனதைத் தான் என்ற நினைப்பு பிரமேந்திரனின் பெயரோடே என் நினைவில் பொருந்திவிட்டது . 
பிரமேந்திரன் பாத்திரத்துக்கான ஒரு அசலான முகம் என் நினைவின் அடுக்குகளில் புதையுண்டு கிடந்ததை நாவலைப் படித்து முடித்த மறுநாள் என் பள்ளித்தோழனின் தந்தை இறந்த செய்தி வந்து சேர்ந்த போது ஒரு நடுக்கத்தோடு உணர்ந்து கொண்டேன் . குடிகாரர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்ற முற்றுமுழுதான தீர்மானத்தில் நான் இருந்த பிராயத்தில் , காண வாய்த்த போதெல்லாம் குடிபோதையில் தள்ளாடியபடியே இருந்த மனிதர் அவர் . எப்படியான போதும் தன் மக்களின் மீது அவர் கொண்டிருந்த பிரியம் என் நினைவில் உருண்டபடியிருந்திருக்கிறது . கால்கள் படித்துக்கொண்டிருந்த ஒரு வார காலமும் நான் அவரை நினைத்துக் கொண்டிருந்ததும் நோய் முற்றி அவர் அதே வார இறுதியில் இறந்து போனதும் வெறும் ஒரு தற்செயல் தான் என்பதை இன்னமும் நம்ப முடியவில்லை . ஒரு மனிதன் என் மனதில் இடம்பெற்றிருப்பதையும் அவனின் குணவிசேஷங்களை என்னை அறியாமல் கவனித்திருக்கிறேன் , அங்கீகரித்திருக்கிறேன் என்பதையும் உணர்த்த அவன் இறந்து போக வேண்டியிருந்திருக்கிறது .
துவக்கத்தில் இருந்தே சீரான மெதுகதியில் இறுதி வரை செல்லும் கதையில் உணர்ச்சிக்கொந்தளிப்புகளோ ட்ராமாவோ எங்குமே படிக்கக் கிடைப்பதில்லை . ஒரு கட்டத்தில் , கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு , மது வழக்கத்தை விடக் கூடுதலான நாட்கள் படுக்கையில் கிடக்கும் இடத்தில் அவள் கால்களை வருடினபடி பிரமேந்திரன் அழும் இடத்தில் ஒரு இமோஷனல் ட்ராமா அரங்கேறி இருக்க வேண்டிய நேரம் கூட பிரமேந்திரனின் குடிபோதை மெல்லிய ஒரு அங்கதத்தைப் புகுத்தி இலகுவாக்கிவிடுகிறது . மது , அவள் அம்மா , அப்பா என்று எல்லா பாத்திரங்களையும் இயல்பான மனிதர்களாக அவர்களின் குறைகளோடே உலவ விட்டிருப்பதும் , எந்த நேரத்திலும் எவர் மீதும் வாசகன் இரக்கம் கொள்ளும் விதமாக எழுதப்படவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும் .
டாக்டர் ஆப்ரகாமிடம் சிகிச்சைக்குச் செல்வதில் , மது இனி நடக்கவே போவதில்லை என்பதையும் , வருடக்கணக்காக செய்து வந்த சிகிச்சைகளினால் ஒரு பலனும் இல்லை என்பதையும் குடும்பம் அறிந்து கொள்வதும் , குறிப்பாக தன்னுடைய உடற்குறைக்கான காரணமாய் தன் பெற்றோரை இனி பழி சுமத்தவே முடியாது என்று மது உணர்ந்து கொள்வதும் நாவலின் உச்சகட்டம் .
மதுவின் மனக்கிலேசங்கள் , அவை தீவிரம் கொள்ளும் சமயங்களில் அவள் தனக்குள்ளாகவே நிகழ்த்திக்கொள்ளும் உரையாடல்கள் ஆகியவற்றையும் , மிக முக்கியமாக அவளுடைய ஊனத்துக்கான காரணம் அவள் பெற்றோரின் அஜாக்கிரதை அல்ல எனும் மிக முக்கியமான செய்தியும் அவளில் உண்டாக்கும் தெளிவை , மாற்றங்களை , தன்னுடைய குறைப்பாட்டை ஒப்புக்கொள்வதுடன் அதனோடே உலகைச் சந்திக்க அவள் ஆயத்தமாகி நிற்பதையும் அவளுக்கு வரும் கனவுகளை விவரிப்பதன் மூலம் அறியத்தருகிறார் அபிலாஷ் . 
இந்தப் பூடகமான வெளிப்பாட்டு முறை நிச்சயமாக , சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது . எளிய ஒரு வாசகனால் இக்கனவுகளின் உள்ளோட்டங்களைப் புரிந்து கொள்ளவோ பின் தொடரவோ இயலுமா என்ற கேள்வி எழாமலும் இல்லை .
கார்த்திக் - மது , கண்ணன் - மது இடையிலான உறவையும் , மதுவின் தர்க்க அறிவு , வாசிப்பின் ஆழ நீளம் , தார்மீக நியாயங்கள் குறித்த பார்வை என்று அவளுடைய ஆளுமையையும் உரையாடல்கள் வழியாகவே சொல்லி இருப்பதிலும் , சிடுக்குகளற்ற உரையாடல்கள் x மதுவின் அகவெளிப் பயணங்கள் மற்றும் அவளுடைய கனவுகள் வரும் பத்திகளில் மட்டுமான சிக்கலான அடுக்குகள் என்று brilliant ஆகப் பிரித்தாண்டிருக்கிறார் அபிலாஷ் .
// வாழ்க்கையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவது தான் இலக்கியத்தின் கொள்கைக் கோட்பாடு .... வாழ்க்கையின் அவலங்களினால் மனமொடிந்து போகிறவர்களுக்கு , வாழ்க்கை இப்படியே இராது , இது மாறும் என்கிற நம்பிக்கையை சொல்வேன் // என்று ஜெயகாந்தன் தன் இலக்கியக் கோட்பாடு பற்றிப் பேசியிருப்பதைச் சமீபத்தில் படித்தேன் . இந்தச் செய்தியை சொல்லத்தானா இத்தனை பெரிய பட்டாலியனைத் திரட்டி இவ்வளவு பெரிய கதையைச் சொல்லிக்கொண்டிருக்கிறார் எனத் தோன்றிவிடாமல் ஆசிரியரின் கலையம்சத்துடன் கூடிய வெளிப்பாடு உதவுகிறது . அவரது சொந்த ஊர் , பார்த்துப் பழகிய மக்கள் என்ற பின்னணியில் தான் தன் அனுபவ ஆழத்தை , அதன் சாராம்சத்தைக் கதையாக்கியிருக்கிறார் எனத் தோன்றச் செய்யும் மெய்த்தன்மையும் வாசகனை நம்பிக்கை கொள்ளச்செய்கிறது , பாதிப்புக்குள்ளாக்குகிறது . வாழ்வு/கால மாற்றத்துக்கான ஒரு குறியீடாக , மதுவுக்கும் தெருவாசிகளுக்கும் ஒரு துக்கநிவாரணியாகவே பயன்படும் அந்தக்குளத்தின் தண்மை நாவலெங்கும் தளும்பித் தெரிக்கிறது .
மாற்றுத்திறனாளிகளின் மன/உடல் நிலை , சமூகச்சார்பு , எதிர்பார்ப்புகள் , வாதைகள் , பற்றின , சிறப்பான , கதையம்சத்துடன் கூடிய ஒரு ஆவணமாக பதிவாகியிருப்பதுடன் , உடற்குறைகள் உபாதைகளுடன் வாழ்தல் பற்றின நம் முன்முடிவுகளை அசைத்துப் பார்க்கும் விதத்தில் எழுதப்பட்டிருப்பதில் கால்கள் முக்கியமான நாவலாக score செய்கிறது . 
பல்வேறு உடற்குறைப்பாடுகளுடன் பிறந்து , சிசுப் பிராயத்திலேயே மறைந்த என் தம்பியின் மகள் சாராவை இந்நேரத்தில் நினைத்துக்கொள்கிறேன் . உடற்குறைகளோடென்றாலும் பிள்ளை வாழ்ந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் ஒரு அலை போல படர்ந்து மனதில் ஏறி வருதைப் பார்த்தபடி வலியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உலகின் சின்னஞ்சிறு சிசுக்களின் ஒரு நிமிட வாதையையாவது ஏற்றுக் கொள்ள உளப்பூர்வமாக விழைகிறேன் ..லக்யா பலாய் .


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...