முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அபிலாஷ் சந்திரனின் “கால்கள்” - Finding one's feet and landing on them! - ஷஹிதா


Lagya balai - லக்யா பலாய் - உன் வலி வேதனைகளை எனக்குத் தந்துவிடு ! என் தங்கையின் ( கஷ்மீரி ) மாமியார் அவளைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் உரையாடத் துவங்குமுன் சொல்லும் உளப்பூர்வமான முகமன் இது . கேட்கும் போதெல்லாம் நடைமுறைப்படுத்த இயலாதே என்ற ஆதங்கம் கொள்ளச் செய்யும் , இதை விடவும் அதி உன்னதமான வாழ்த்து உலகில் இருக்குமா என்று உருக வைக்கும் சொற்கள் . 
வலி எத்தனை உக்கிரமான உணர்வாக , வாழ்வை , அதன் தரத்தை நிர்ணயிக்கும் , மாற்றிப் போடும் விசையாக இருக்கிறது என்பதைத் தன் ஆங்கில இலக்கியப் புலமை , அங்கதச்சரளம் , கவிதைமொழி எல்லாமும் இழைந்த நடையில் அபிலாஷ்சந்திரன் பேசும் நாவல் கால்கள் . தொடர்ந்து வலியும் வாதையுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி மதுக்ஷரா . அவள் குடும்பம் , கல்வி , நட்பு , சமூகத்தில் அவளுடைய நிலை இவற்றோடு வலியை , உடற்குறைப்பாட்டை , நோயை மையமாகக் கொண்ட நாவலானாலும் பாத்திரங்களின் அசல்தன்மையும் , வெளிப்பாட்டின் கலைத்தன்மையும் , 552 பக்கங்களை களைப்பின்றி பின்தொடர வற்புறுத்துகின்றது .

ஒரு காலின் பலமின்மை காரணமாக , சுழற்சி முறையில் போல , சில வாரங்களுக்கு ஒரு முறை என்ற ஒழுங்கில் ( ! ) விழுந்து அவதிப்படுகிறாள் மது . பாதங்களின் வீக்கம் , வலி , இடுப்பு வரையில் பரவுகிறது . தன் ஊனத்துக்குக் காரணம் என்று கருதும் தன் பெற்றோர் மீதும் , சமூகத்தின் மீதும் அவளுக்கு இருக்கும் கசப்பு , அனுபவிக்கும் வலி , கால் சரியாகி அவளும் ஒருநாள் எல்லோரையும் போல நடக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் மதுவின் அப்பா ஏற்பாடு செய்யும் தொடர் சிகிச்சை முறைகள் , 
இவற்றை எல்லாம் சுவாரஸ்யமாகவும் , தனிமைக்கசப்பு , அகச்சிக்கல்களை ஒரு பெண் உணரும் கோணத்தில் அபாரமான துல்லியத்துடனும் சொல்லியிருக்கிறார் அபிலாஷ் . மதுவின் பெற்றோர் , ஆசிரியருடன் , நண்பர்கள் கார்த்திக் , கண்ணன் , அந்தத் தெருவில் வசிக்கும் ஏராளமான நபர்கள் என்று பெரிய கதாபாத்திரக் கூட்டம் .
போலியோ தாக்குதலில் , துரதிர்ஷ்டத்தின் ஒரு நொடியில் நொடித்துப் போன இடது காலைத் தன் அம்மாவோடு ஒப்பிட்டுப் பார்க்கிறாள் மது ! தன் அம்மாவுடன் கொண்டிருந்த love hate உறவும் , சூம்பின காலையே தன் அம்மா என்று நினைப்பதுமாக கவிஞர்களுக்கு மட்டுமே எட்டும் வெளிப்பாட்டு உயரம் . விசாலத்தின் அசமஞ்சத்தனம் ஒரு வகையில் தன் ஊனத்துக்குக் காரணம் என்ற ஆழமான நினைப்பின் காரணமாகத் தன்னை அறியாமலே அவள் மேல் ஊறிப்போன வெறுப்பு , ஆனாலும் தன் உடலின் ஒரு பகுதியைப் போன்ற தாயை முழுக்கவும் விலக்கவும் முடியாத அன்பு என்று வெர்பல் லெவெல் அர்த்தத்திலும் சரி சப்டெக்ஸ்ட்டிலும் ஒரு கவிதைக்கான பொருள் போல அத்தனைப் பொறுத்தம் !
DOES HE KNOW A MOTHER'S HEART:
மதுவின் பேராசிரியர் மதுசூதனனின் மகன் பாலுவின் நோய்மை , மனநலம் பற்றின பத்திகள் , ஒருவனுக்கு மனநோய் இருக்கிறதா இல்லையா என்று தீர்மானிக்க /யாரும் தான் யார்/ என்று வாதிடும் மதுவின் கேள்விகள் , இவை எல்லாமுமே தனியான ஒரு நாவலாக விரிக்கப் போதுமான அளவுக்கு கனம் கொண்ட பக்கங்கள் . 
மதுவின் போலியோவுக்கும் , பாலுவைப் பற்றின கிளைக்கதைக்கும் தொடர்புடைய புத்தகமாக Arun shourie யின் Does he know a mother's heart ஐச் சொல்லலாம் . நான் வாசித்தவரையில் - தன் குழந்தையின் துயரம் , ஊனம் , வலி ஒரு தந்தையின் மனோபாவத்தை , அவனின் வாழ்வை எத்தனைத் தூரம் மாற்றுகிறது என்பதற்கான மிகக் குறிப்பிடத்தகுந்த பதிவுகளாகத் தெரிபவை அபிலாஷின் கால்களும் , அருண் ஷோரியின் Does he know a mother's heart ட்டும் .
பிறப்பின் போது மூளையில் காயங்களை அடைந்து அதனால் பல்வேறு உடற்குறைகளுக்கு , வாதைகளுக்கு ஆளானவர் ஆதித் .அவருடைய தந்தை , அரசியல்வாதியும் எழுத்தாளருமான அருண்ஷோரி தன் மகனின் உடற்குறை ஏற்பட்ட விதம் , 35 ( புத்தகம் வெளியான 2011 ல் ) வயது நிரம்பிய ஆதித்தின் உலகம் , அவருடைய தனித்தன்மைகள் , வலியும் வேதனைகளும் மருத்துவ சிகிச்சைகளுமான அவருடைய அன்றாட வாழ்கைப்பாடுகள் என்ற அத்தனையையும் பதிவு செய்யும் போதே , வலியும் துயரமுமான வாழ்கை , எப்படி , மதங்களை , இறைவனை எதிர்க்க , மறுக்கச் செய்கிறது என்றும் ஆவேசமாகப் பேசும் நூல் இது . 
அருண் ஷோரி - தன் மகனின் அன்றாடப்பாடுகளை இயன்ற வரையில் மேம்படுத்திக் கொடுப்பதில் முனைப்புக் கூடிய ஒரு தகப்பன் . தன் கசப்பை , தத்துவார்த்தமாக , தர்க்கரீதியிலான தேடல்களில் , கேள்விகளில் தொலைத்துக்கொள்ள முற்படுகிறார் . Does he know a mother's heart அபுனைவு எனும் போதும் , இரு நூற்களுமே உடற்குறைபாடு , வலியைப் பிரதானமாகப் பேசும் , நம் இந்தியக் குடும்ப அமைப்பில் விசேஷக் குழந்தைகளின் தகப்பன்மாரின் உளவியல் கூறுகளை அறியத்தரும் முக்கியமான புத்தகங்களாக இருக்கின்றன .
பிரம்மேந்திரன் - மதுவின் அப்பா . மொடாக் குடியர் , மனைவியை அடிப்பவர் , சூம்பிப் போன தன் காலும் அம்மாவும் ஒன்றே தான் என்ற முடிவுக்கு மது வரக் காரணமான அளவுக்கு மதுவின் அம்மாவை முடக்கிப் போடுபவர் ! மகாமோசமான மனிதன் என்ற முடிவுக்கு யாரையும் வரச்செய்யும் குணவிசேஷங்கள் . ஆனாலும் மதுவின் மீது அவர் காட்டும் அக்கறை , சொல்லப்போனால் அளவுக்கு அதிகமான கவனம் காரணமாக வாசகனின் மனதில் ஒரு இடத்தைத் தக்க வைத்துக்கொள்கிறார் . தன் மகளின் இந்நிலைக்குத் தானே காரணம் என்ற குற்ற உணர்வோடே , எப்போதாவது அவள் நிச்சயம் நடப்பாள் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையைக் கடத்தும் ஒரு தந்தை , தன் இயலாமையை குடியில் மறக்க எத்தனிக்கிறார் . 
மதுவை காலிப்பர்களை விடாது அணியச்செய்ய வலியுறுத்தி ,பல்வேறு விதமான சிகிச்சைகளுக்கு ஆட்படுத்தி , விதவிதமான களிம்புகளிட்டு பிரமேந்திரன் குணப்படுத்த நினைப்பது , சூம்பி , வளைந்து போன தன் மனதைத் தான் என்ற நினைப்பு பிரமேந்திரனின் பெயரோடே என் நினைவில் பொருந்திவிட்டது . 
பிரமேந்திரன் பாத்திரத்துக்கான ஒரு அசலான முகம் என் நினைவின் அடுக்குகளில் புதையுண்டு கிடந்ததை நாவலைப் படித்து முடித்த மறுநாள் என் பள்ளித்தோழனின் தந்தை இறந்த செய்தி வந்து சேர்ந்த போது ஒரு நடுக்கத்தோடு உணர்ந்து கொண்டேன் . குடிகாரர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்ற முற்றுமுழுதான தீர்மானத்தில் நான் இருந்த பிராயத்தில் , காண வாய்த்த போதெல்லாம் குடிபோதையில் தள்ளாடியபடியே இருந்த மனிதர் அவர் . எப்படியான போதும் தன் மக்களின் மீது அவர் கொண்டிருந்த பிரியம் என் நினைவில் உருண்டபடியிருந்திருக்கிறது . கால்கள் படித்துக்கொண்டிருந்த ஒரு வார காலமும் நான் அவரை நினைத்துக் கொண்டிருந்ததும் நோய் முற்றி அவர் அதே வார இறுதியில் இறந்து போனதும் வெறும் ஒரு தற்செயல் தான் என்பதை இன்னமும் நம்ப முடியவில்லை . ஒரு மனிதன் என் மனதில் இடம்பெற்றிருப்பதையும் அவனின் குணவிசேஷங்களை என்னை அறியாமல் கவனித்திருக்கிறேன் , அங்கீகரித்திருக்கிறேன் என்பதையும் உணர்த்த அவன் இறந்து போக வேண்டியிருந்திருக்கிறது .
துவக்கத்தில் இருந்தே சீரான மெதுகதியில் இறுதி வரை செல்லும் கதையில் உணர்ச்சிக்கொந்தளிப்புகளோ ட்ராமாவோ எங்குமே படிக்கக் கிடைப்பதில்லை . ஒரு கட்டத்தில் , கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு , மது வழக்கத்தை விடக் கூடுதலான நாட்கள் படுக்கையில் கிடக்கும் இடத்தில் அவள் கால்களை வருடினபடி பிரமேந்திரன் அழும் இடத்தில் ஒரு இமோஷனல் ட்ராமா அரங்கேறி இருக்க வேண்டிய நேரம் கூட பிரமேந்திரனின் குடிபோதை மெல்லிய ஒரு அங்கதத்தைப் புகுத்தி இலகுவாக்கிவிடுகிறது . மது , அவள் அம்மா , அப்பா என்று எல்லா பாத்திரங்களையும் இயல்பான மனிதர்களாக அவர்களின் குறைகளோடே உலவ விட்டிருப்பதும் , எந்த நேரத்திலும் எவர் மீதும் வாசகன் இரக்கம் கொள்ளும் விதமாக எழுதப்படவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும் .
டாக்டர் ஆப்ரகாமிடம் சிகிச்சைக்குச் செல்வதில் , மது இனி நடக்கவே போவதில்லை என்பதையும் , வருடக்கணக்காக செய்து வந்த சிகிச்சைகளினால் ஒரு பலனும் இல்லை என்பதையும் குடும்பம் அறிந்து கொள்வதும் , குறிப்பாக தன்னுடைய உடற்குறைக்கான காரணமாய் தன் பெற்றோரை இனி பழி சுமத்தவே முடியாது என்று மது உணர்ந்து கொள்வதும் நாவலின் உச்சகட்டம் .
மதுவின் மனக்கிலேசங்கள் , அவை தீவிரம் கொள்ளும் சமயங்களில் அவள் தனக்குள்ளாகவே நிகழ்த்திக்கொள்ளும் உரையாடல்கள் ஆகியவற்றையும் , மிக முக்கியமாக அவளுடைய ஊனத்துக்கான காரணம் அவள் பெற்றோரின் அஜாக்கிரதை அல்ல எனும் மிக முக்கியமான செய்தியும் அவளில் உண்டாக்கும் தெளிவை , மாற்றங்களை , தன்னுடைய குறைப்பாட்டை ஒப்புக்கொள்வதுடன் அதனோடே உலகைச் சந்திக்க அவள் ஆயத்தமாகி நிற்பதையும் அவளுக்கு வரும் கனவுகளை விவரிப்பதன் மூலம் அறியத்தருகிறார் அபிலாஷ் . 
இந்தப் பூடகமான வெளிப்பாட்டு முறை நிச்சயமாக , சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது . எளிய ஒரு வாசகனால் இக்கனவுகளின் உள்ளோட்டங்களைப் புரிந்து கொள்ளவோ பின் தொடரவோ இயலுமா என்ற கேள்வி எழாமலும் இல்லை .
கார்த்திக் - மது , கண்ணன் - மது இடையிலான உறவையும் , மதுவின் தர்க்க அறிவு , வாசிப்பின் ஆழ நீளம் , தார்மீக நியாயங்கள் குறித்த பார்வை என்று அவளுடைய ஆளுமையையும் உரையாடல்கள் வழியாகவே சொல்லி இருப்பதிலும் , சிடுக்குகளற்ற உரையாடல்கள் x மதுவின் அகவெளிப் பயணங்கள் மற்றும் அவளுடைய கனவுகள் வரும் பத்திகளில் மட்டுமான சிக்கலான அடுக்குகள் என்று brilliant ஆகப் பிரித்தாண்டிருக்கிறார் அபிலாஷ் .
// வாழ்க்கையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவது தான் இலக்கியத்தின் கொள்கைக் கோட்பாடு .... வாழ்க்கையின் அவலங்களினால் மனமொடிந்து போகிறவர்களுக்கு , வாழ்க்கை இப்படியே இராது , இது மாறும் என்கிற நம்பிக்கையை சொல்வேன் // என்று ஜெயகாந்தன் தன் இலக்கியக் கோட்பாடு பற்றிப் பேசியிருப்பதைச் சமீபத்தில் படித்தேன் . இந்தச் செய்தியை சொல்லத்தானா இத்தனை பெரிய பட்டாலியனைத் திரட்டி இவ்வளவு பெரிய கதையைச் சொல்லிக்கொண்டிருக்கிறார் எனத் தோன்றிவிடாமல் ஆசிரியரின் கலையம்சத்துடன் கூடிய வெளிப்பாடு உதவுகிறது . அவரது சொந்த ஊர் , பார்த்துப் பழகிய மக்கள் என்ற பின்னணியில் தான் தன் அனுபவ ஆழத்தை , அதன் சாராம்சத்தைக் கதையாக்கியிருக்கிறார் எனத் தோன்றச் செய்யும் மெய்த்தன்மையும் வாசகனை நம்பிக்கை கொள்ளச்செய்கிறது , பாதிப்புக்குள்ளாக்குகிறது . வாழ்வு/கால மாற்றத்துக்கான ஒரு குறியீடாக , மதுவுக்கும் தெருவாசிகளுக்கும் ஒரு துக்கநிவாரணியாகவே பயன்படும் அந்தக்குளத்தின் தண்மை நாவலெங்கும் தளும்பித் தெரிக்கிறது .
மாற்றுத்திறனாளிகளின் மன/உடல் நிலை , சமூகச்சார்பு , எதிர்பார்ப்புகள் , வாதைகள் , பற்றின , சிறப்பான , கதையம்சத்துடன் கூடிய ஒரு ஆவணமாக பதிவாகியிருப்பதுடன் , உடற்குறைகள் உபாதைகளுடன் வாழ்தல் பற்றின நம் முன்முடிவுகளை அசைத்துப் பார்க்கும் விதத்தில் எழுதப்பட்டிருப்பதில் கால்கள் முக்கியமான நாவலாக score செய்கிறது . 
பல்வேறு உடற்குறைப்பாடுகளுடன் பிறந்து , சிசுப் பிராயத்திலேயே மறைந்த என் தம்பியின் மகள் சாராவை இந்நேரத்தில் நினைத்துக்கொள்கிறேன் . உடற்குறைகளோடென்றாலும் பிள்ளை வாழ்ந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் ஒரு அலை போல படர்ந்து மனதில் ஏறி வருதைப் பார்த்தபடி வலியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உலகின் சின்னஞ்சிறு சிசுக்களின் ஒரு நிமிட வாதையையாவது ஏற்றுக் கொள்ள உளப்பூர்வமாக விழைகிறேன் ..லக்யா பலாய் .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...