Skip to main content

Posts

Showing posts from August, 2013

கைமாறும் நூல்கள்

திருவல்லிக்கேணி சாலையோர கடைகளில் தான் நான் பல நல்ல நூல்களை வாங்கி உள்ளேன் . புத்தகக் கடைகளில் போலல்லாது பல தரப்பட்ட புதிய பழைய நூல்கள் வரும் . இவ்வளவு விலைவாசி ஏறினாலும் அதே விலை தான் . ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அதன் நிலை, கனம், அட்டை பார்த்து ஒரு விலை மனதுக்குள் போடுவேன். இதற்கும் தரத்துக்கும் சம்மந்தமில்லை. பின் கடைக்காரரிடம் விலை கேட்பேன். அவர் எப்போதும் ஒரு ஐம்பது நூறு கூட்டி கேட்பார். ஆனால் பேரம் நிச்சயம் என் கணக்கில் படிந்து விடும். நேற்று உம்பர்த்தோ ஈக்கோவின் How to Travel with Salmon என்கிற பத்தி தொகுப்பு வாங்கினேன். 2008இல் லஷ்மி என்பவர் வாங்கி பெயரெழுதி இருக்கிறார். 

மீண்டும் ஒரு பசு அரசியல்

“ புறப்பாடு ” கட்டுரையில் நாம் ஏன் பசும் பால் குடிக்கக் கூடாதுன்னா பசு குப்பை மற்றும் மலம் சாப்பிடுகிறது என்கிறார் ஜெயமோகன் . அவருக்கு மிருகங்களை பற்றி போதுமான புரிதல் இல்லை என்பதைத் தான் இது காட்டுகிறது . பொதுவாக நாய் கூட மலம் சாப்பிடும் . அதற்கு பசி என்று அர்த்தம் இல்லை . மிருகங்களுக்கு மூத்திரம் மலம் எல்லாம் அசிங்கம் அல்ல . 

ராஞ்சனா: காதலின் “களைப்பு”

ராஞ்சனா மிக உணர்ச்சிகரமான நாடகியமான தனுஷ் மற்றும் ரஹ்மானின் சில அற்புதமான தருணங்களை உள்ளடக்கிய படம். ஆனால் இது மட்டுமே அல்ல அது வெற்றி பெற்றுள்ளதற்கு காரணம். சொல்லப் போனால் படத்தின் பல திரைக்கதை கோளாறுகள், லாஜிக் நெருடல்கள், தேய்வழக்குகள், மீள்கூறல்கள் காரணமாய் நெஞ்சில் தங்குகிற படைப்பூக்கமுள்ள காட்சி என ஒன்றும் இல்லை என கூறலாம். ஒட்டுமொத்தமாய் ஒரு மனத்திறப்புக்கு இட்டு செல்ல எண்ணிலா காட்சிகளில் ஒன்றாகவோ ஒவ்வொரு காட்சியும் அமைந்துள்ளது. தனியாய் எதற்கும் முக்கியத்துவம் இல்லை. தனியாய் பார்க்கையில் காட்சிகள் இதுவரை பார்த்த எத்தனையோ தமிழ் இந்திப்படங்களின் பிரதியாகவோ தோன்றும். படமும் துவங்கியதில் இருந்து பழகிய மாட்டு வண்டியை போல் பரிச்சயமுள்ள தடத்தில் பிசகாமல் நடந்து வீடு போய் சேர்ந்து விடுகிறது. ஆனாலும் இப்படம் நம்மை நெகிழ வைக்கிறது. ஏதோ ஒரு புள்ளியில் ஈர்க்கிறது. இந்தியா முழுக்க அதைப் பார்த்த சாதாரண ஜனத்திரளின் அகத்தின் ஒரு உணர்கொம்பை அது மிகச்சரியாக சென்று தொட்டுள்ளது. ராஞ்சனா நமக்கு ஏன் பிடிக்கிறது?

கலைஞன் பாமரனாக தோன்றும் வேளை

நேற்று ஆனந்த காந்தியுடன் கூகிள் ஹாங்கவுட்டில் அரட்டையில் கலந்து கொண்டேன். துடிப்பாக பேசும் இளைஞர். விமர்சனபூர்வமான கேள்விகளை எதிர்கொள்கையில் பதற்றமாகிறார். தீஷியஸின் கப்பல் படத்தில் உள்ள தெளிவு, ஆழம், அமைதி எல்லாம் பார்க்கிற போது அதன் இயக்குநரிடம் நேரில் உள்ள முதிர்ச்சியின்மை வியப்பளிக்கிறது. பொதுவாக கலைஞர்களை நேரில் சந்திக்கையில் நாம் எல்லோருக்கும் தோன்றுகிற குழப்பம் தான் இது.

சார் என் கதை புடிச்சிருக்கா?

\ தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக படைப்புகளை இன்னொருவருக்கு அனுப்பி கருத்து கேட்பது இன்று பரவலாகி வருகிறது. ஜெயமோகன் தற்போது தனக்கு பிடித்த இளம்படைப்பாளிகளின் கதைகளை பிரசுரிக்கையில் இன்னொரு புறம் பிடிக்காத பலரையும் நிராகரிக்க தான் செய்கிறார். நிராகரிப்படுபவர்கள் காயப்படுகிறார்கள். கோபமாகிறார்கள். குழப்பமடைகிறார்கள். இதெல்லாம் தேவையா என யோசிக்கிறேன்.  நானும் இது போல் என் படைப்புகளை ஜெயமோகன் உள்ளிட்ட பலரிடமும் படிக்க கொடுத்துள்ளேன். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை என்பதை தொடர்ந்து எழுத ஆரம்பித்த பின் தான் உணர்ந்தேன். மேலும் நிராகரிப்பை எதிர்கொள்ளும் சிறந்த வழி தொடர்ந்து எழுதி பிரசுரித்துக் கொண்டே இருப்பது தான். இது குறித்து என் கருத்துக்களை சுருக்கமாக கீழே அடுக்கி இருக்கிறேன்.

பெண்களின் துப்பறியும் நாவலில் உள்ள பெண்மை

கேரின் ஸ்லாட்டரின் Fractured எனும் துப்பறியும் நாவல் படித்தேன் . அதிக பரபரப்பில்லாத மென்மை கொண்ட குற்றவிசாரணை எழுத்து . ஒரு ஆண் மற்றும் பெண் விசாரணை அதிகாரியின் கண்ணோட்டத்தில் இருந்து பிரதானமாய் கதை நடக்கிறது .  

இளவரசனின் மரணம்: நம் கள்ள மௌனத்தின் பின்னுள்ள உளவியல்

கொல்லப்பட்ட அல்லது சாவை நோக்கி துரத்தப்பட்ட தலித் இளைஞன் இளவரசனின் வாழ்க்கை மற்றொரு ஜாதிய பாடமாக, அமர காதல் கதையாக மீடியாவால் சித்தரிக்கப்பட்டு மெல்ல மெல்ல நினைவின் அடுக்களில் மறைந்து போகிறது. ஆரம்பத்தில் இருந்தே சட்டமும் நீதியும் இளவரசனுக்கு எதிராகவே இருந்து வந்தது. அவனது கொலையை ஒரு தற்கொலையாக்கி மூடி மறைக்க காவல்துறை, மருத்துவர்கள், அரசியல் தலைவர்கள், மீடியா என அனைத்து தரப்பினரும் மனமுணர்ந்து உதவி வருகிறார்கள். ஒரு சில பத்திரிகை டி.வி அலைவரிசைகள் தவிர பெரும்பாலும் இக்கொலை ஒரு காதல் விவகார பிரச்சனை என்கிற அளவில் மூடி மறைக்கப்பட்டது. 

யானை வந்தால் ஆளைக் கொல்லும்…அவ்வளவு தானே!

”பூதக்கண்ணாடி” லோஹிததாஸின் இயக்கத்தில் மிக அதிகம் பேசப்பட்ட படம். நல்ல இசை, மம்முட்டியின் அற்புத நடிப்பு, பாம்பு குறியீடுகள் என பல விசயங்கள் இருந்தாலும் படம் எனக்குள் தூண்டிய கேள்வி பைத்தியம் சம்மந்தப்பட்டது. 

இன்றிரவு நிலவின் கீழ் – ஒரு விமர்சனம் (கரிகாலன்)

இந்த கவிதை மொழிபெயர்ப்பில் உலகப் புகழ் பெற்ற ஹைக்கூ கவிஞர்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார் ஆசிரியர் . அபிலாஷ் .   ஹைக்கூ , ஈரடி வெண்பாக்களைப் போல , சில வார்த்தைகளிலேயெ , ஒரு காட்சியை , ஒரு தரு ணத்தை , ஒரு படிமத்தை , ஒரு தரிசனத்தை , சட்டென்று உங்கள் மனதில் நிறுத்தும் சக்தி கொண்ட ஜப்பானிய கவிதை வடிவம் .  உதாரணமாக ,  நிலவொளி - அந்தரத்தில் உறைந்து Moonlight frozen in mid air       ஸெயீஷி , ஜப்பான் . என்ற வரிகள் நமக்கு அளிக்கும் அகக் காட்சி மிகவும் அழகானது . 

அசோகமித்திரனை வசைபாடும் சாருவின் வண்டவாளங்கள்

தன்னை பாராட்டவில்லை என்கிற காரணத்துக்காக அசோகமித்திரனுக்கு சாகும் வயது வந்து விட்டதென்றும் அவர் சமகால வாசிப்பற்ற தாத்தா என்றும் சாரு பழித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதுவும் சுஜாதாவின் “கனவித்தொழிற்சாலையுடன்” அசோகமித்திரனின் படைப்புலகை ஒப்பிடுவது சுத்த அபத்தம். அசோகமித்திரன் தமிழ் நவீனத்துவத்தின் உச்சம் என நமக்கு நன்றாகவே தெரியும். சாருவுக்கும் கூடத் தான். சாரு ஒருவரை ஏற்பதிலோ நிராகரிப்பதிலோ எந்த விழுமியமும் பாராட்டதவர். நாளை மார்க்வெஸ் ஒரு பேட்டியில் “தமிழில் ஜெயமோகன் என்றொருவரது எழுத்தை மொழிபெயர்ப்பில் படித்து வியந்தேன்” என்று கூறினால் (அப்படி கூறமாட்டார் என்றாலும் ஒரு உ.தா-வுக்கு) சாரு அப்படியே பல்டி அடித்து ”மார்க்வெஸ் நன்றி அறியாதவர், அவரை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதே நான், அவர் என்னோடு ஒப்பிடுகையில் படுமொக்கையான எழுத்தாளர்” என்றும் கூறுவார். 

ரத்தம் என்னை கடவுளாக்கியது...

[ஆறு வருடங்களுக்கு முன் எழுதி “புதிய காற்றில்” வெளிவந்த கட்டுரை. இது ஒரு மீள்பதிவு ] நான் சிவனாயிருக்கிறதினாலெ இத ( சிவபானம் -- கஞ்சா ) குடிக்க வேண்டியிருக்கு

ரவீந்திர ஜடேஜா: திறமை என்றால் தான் என்ன?

முன்னர் கும்பிளேவுடனான ஒரு பேட்டியில் “ கிரிக்கெட்டில் முன்னேற அடிப்படை தகுதி என்ன ?” என கேட்டார்கள் . “ திறமை ” என்றார் கும்பிளே . வியப்பாக இருந்தது . ஏனென்றால் கும்பிளே ”திறமையானவராக” அல்ல கடுமையாக உழைப்பவராக ஒழுக்கமாக நேர்த்தியாக ஆடுபவராக அறியப்பட்டவர். ரவீந்திர ஜடேஜா தன் பந்து வீச்சு பாணியால் கும்பிளேவுடன் ஒப்பிடப்படுபவர். அதே போல் வேகமாக வீசுபவர். அதே போல் பந்தைப் திருப்பும் அபரித திறமை அற்றவர். அப்படி என்றால் திறமை என்றால் என்ன? கூர்மையாக வேகமாக வீசுவது கூட ஒரு திறமை தானா? 

மின்நூல்கள்: சில எதிர்கால ஊகங்கள்

எதிர்காலத்தில் மின்நூல்கள் பிரபலமானால், அவற்றை எழுத்தாளனே சுயமாய் பிரசுரிக்கும் நிலை வந்தால் அது பதிப்பாளனுக்கு ஊறு விளைவிக்காதா? இதன் அனுகூலங்களும் பிரச்சனைகளும் என்ன? ஒரு பதிப்பாளரின் கண்ணோட்டத்தில் இருந்தும் மின்நூல்கள் லாபகரமாகவே இருக்கும். ஒன்று, அச்சுபதிப்பில் கணிசமான புத்தகங்கள் நஷ்டம் ஏற்படுத்துபவை தான். பத்தில் ஒன்றோ ரெண்டோ தான் வெற்றி பெறும் நூல்கள். மிச்ச நூல்களின் பிரதிகளை ஆயிரக்கணக்கில் கிடங்கில் பாதுகாப்பதற்கும் நிறைய செலவாகும். தமிழில் எழுத்தாளனுக்கு சரியாக ராயல்டி போகாததற்கு இந்த நஷ்டங்களும் பதிப்பு தொழில் ஒரு பெரும் சூதாட்டம் என்பதும் பிரதான காரணம்.

“ஸ்டீவ் ஜோப்ஸ் நிறைய டிப்ஸ் வழங்கக் கூடியவர்”

ஸ்டீவ் ஜோப்ஸின் அம்மா ஜோனா ஒரு ஜெர்மானிய வம்சாவளியில் தோன்றியவர். அப்பா ஜிந்தாலி ஒரு சிரியன் முஸ்லீம். இருவரும் காதலித்தனர். ஜோனா கர்ப்பமாக அவரை உடனடியாக மணம் புரிய முடியாது என ஜிந்தாலி மறுத்தார். விளைவாக ஜோனா ஜோப்ஸை பிறந்து சில மாதங்களில் தத்து கொடுத்தார். கொடுக்கும் போது தன் மகனுக்கு கட்டாயம் கல்லூரி கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.