பொதுமக்கள் நினைப்பதையும் நம்புவதையும் எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் நினைக்கவோ நம்பவோ ஏற்கவோ அவசியமில்லை. கடந்த சில வாரங்களாகவே இத்தகைய ஒரு தரப்பு வாதத்தை நான் பார்க்கிறேன் - எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் மக்களின் உணர்வுகளில் இருந்து விலகி நிற்கிறார்கள், அது ஒரு தவறு என்று. நிச்சயமாக இல்லை. அப்படி அவர்கள் நிற்பதே சரி என நினைக்கிறேன். மக்களின் போக்குகளைப் புரிந்துகொள்வது வேறு அதை விமர்சிக்காமல் ஏற்பது வேறு. பின்னது வெகுஜன வணிகப் படைப்பாளிகள், ஊடகவியலாளர்களின் குணம், இலக்கு. அவர்கள் வெகுஜனத்தைப் பயன்படுத்தி சம்பாதிப்பவரக்ள். எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் வெகுமக்கள் போக்கிற்கு எதிராகவோ விலகியோ நின்று சிந்திப்பவர்கள். தேர்தலை கணிப்பதோ தேர்தலை வழிநடத்துவதோ அவர்கள் பணியல்ல. தோற்கும் கட்சியைக் கூட அவர்கள் ஆதரிக்கலாம். அரைநூற்றாண்டுக்கு மேலாக இடதுசாரிகள் ஆட்சியில் இல்லாதபோது கூட இடதுசாரி ஆதரவாளர்களாக இருந்த எழுத்தாளர்கள் இல்லையா? கடுமையான அராஜகவாதிகளாகவும் படைப்பாளிகள் இங்கு இருந்திருக்கிறார்கள். அதுவே சரி. பொதுமக்களிடம் அனுபவத்தின் திரட்சியான ஞானம் இருக்கும். ஆனால் பகுத்தறிவோ கருத்துக்களை அ...