நாட்டின் நடக்கும் குற்றங்களின் மொத்தப் பழியையும் தவெக ஆட்சி மீது சுமத்தக் கூடாது என்பதை ஏற்கிறேன். குற்றங்களை மொத்தமாகத் தடுப்பது அல்ல, குற்றங்களில் இருந்து அடிப்படையான பாதுகாப்பளிப்பதும், குற்றங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பதான நம்பிக்கை அளிப்பதும்தன அரசின் பணிகள். அதாவது ஒரு கட்டமைப்பும் அதற்கான நடைமுறையும் உள்ளதாகக் காட்டுவதற்கே அரசும் அமைச்சரவையும் முதல்வரும் இருக்கிறார்கள். சூலூர் சிறுமியின் கொலைச் சம்பவத்தில் காவல்துறை வேகமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்தது பாராட்டத்தக்கது. காவல் அதிகாரிகள் எப்படி ஊடகங்களிடம் பேசினார்கள், எவ்வளவு சீரியஸாகத் தெரிந்தார்கள் என்பது முக்கியமல்ல. அது optics.
அதேநேரம், தவெக அரசு மேற்சொன்ன opticsக்காகத்தான் அக்குழந்தையின் சடலத்தை அவசரமாக எரித்தார்கள். தாயிடம் கூடக் காட்டாமல் அநீதி இழைத்தார்கள். குழந்தையின் தாய் ஆவேசமாகப் பேட்டியளித்ததும் உறவினர்கள் போராட்டம் நடத்தியதும் ரூட்ஸ் மீடியாவை கலங்க வைத்துவிட்டது. குழந்தையின் சடலத்தை வைத்து எதாவது ஊர்வலம் போவது, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் வந்து துக்கம் விசாரிப்பது, அறிக்கை விடுவதெல்லாம் நடந்து குழந்தையைக் கூட பாதுகாக்க வக்கில்லாத அரசு என்பதான தோற்றம் வந்துவிடுமோ என பந்துவிட்டார் ஜான். உடனே அவர் தன் கட்சியின் ஜோம்பிகளை அழைத்து அத்தாயின் ஒழுக்கத்தைக் கேள்வி கேட்கும்விதமாக காணொளிகளையும் பின்னூட்டங்களையும் பதிவேற்ற வைத்தார். கதையாடலை அப்பெண்ணுக்கு எதிராக மாற்றினார். இது அவரைக் கொஞ்சம் அச்சுறுத்தி வைக்கவும்தான். கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போதும் சங்கீதா தரப்பை இப்படித்தான் தரங்கெட்டு விமர்சித்தார்கள். இது அவர்களின் வழமையான உத்தி. அவர்களுக்குத் தேவை தம் ரீல்ஸ் அடிப்படையிலான பிம்பத்துக்கு பாதகம் வராதிருப்பது. அப்படி ஆட்சிக்கு வந்தவர்கள் இப்படிச் சிந்திப்பதில் வியப்பில்லை.
விஜயண்ணா ரொம்ப தாமதமாக ஒரு அறிக்கை வெளியிட்டதும், போனில் பெற்றோரிடம் பேசியதாக செய்தி வந்ததும் அவர் வேறொரு லோகத்தில் இருக்கிறார், ஆட்சியை அவர் பொருட்டு வேறு யாரோ செய்கிறார்கள் என்பதால்தான். வியூக வகுப்பாளர்களே வழக்கு விசாரணையில் முடிவெடுக்கிற விசித்திர ஆட்சியை இப்போதுதான் பார்க்கிறேன்.
ஒரு நல்ல ஆட்சியில் எதிர்க்கட்சியின் விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் குடும்பத்தையும் பெற்றோரையும் ஆறுதல் சொல்வார்கள். சடலத்தை அவசரமாக எரிக்காமல், பெற்றோரை அவமதிக்காமல் நடைமுறையை நிகழ அனுமதிப்பார்கள். மக்கள் குற்றவாளியின் கைதினால் அமைதி கொள்வார்கள் என நம்புவார்கள். இச்சம்பம் இந்த ஆட்சி ஒரு புள்ளியில் நிலையாக இல்லை, அது எல்லாவற்றையும் ஊடக மேலாண்மையாகப் பார்க்கிறார்கள்,அதைக் குறித்தே அதிக கவலை கொள்கிறார்கள் எனக் காட்டுகிறது.
கருத்துகள்