Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்



என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: “உள்ளூர கடுமையான உயிர்பயம் இல்லாவிட்டால் நான் குஸ்திவளையத்துக்குள் இத்தனை தீவிரமாக மோதியிருக்க மாட்டேன்”

அடுத்து என் மாஜி குருநாதரின் நினைவுத்திறன் நாளுக்கு நாள் மங்கி வருவது எண்ணி சற்று துக்கித்தேன். என் தொடர்பான அத்தனை நினைவுகளையும் ஏறத்தாழ இழந்த நிலையில் அவர் முழுக்க தனது கற்பனையின் வீச்சை நம்பியே உள்ளார். மிக சமீபமாக நிகழ்ந்த சம்பவங்களில் கூட அவரது நினைவு உயர்குதிகாலில் தடுமாறுகிறது. அப்பதிவை படிக்கையில் எனக்கு ஏற்பட்ட மனநிலை வருத்தமோ ஆத்திரமோ அல்ல. வியப்பும் நகைப்புமே. அதற்கு இரண்டு காரணங்கள். ஜெயமோகன் நான் எதிர்பார்த்தபடி எனது கட்டுரையின் எந்த விமர்சனக் கருத்தையும் நேரடியாக தர்க்க ரீதியாக எதிர்கொள்ளவில்லை. அந்த தகுதி இருந்தும் அதற்கான வலுவான மனநிலையில் அவர் இப்போது இல்லை. இத்தனை வருடங்களாக அவரை நெருக்கமாக கவனித்த வந்தவன் என்ற முறையில் எனக்கு இது எளிதாக கணிக்க முடிந்தது. இதுவே எனக்கு ஏற்பட்ட வியப்பின் முதல் காரணம். அடுத்து அவரது எழுத்தில் வரிக்கு வரி நினைவுப் பிழைகளும் உள்முரண்களும் சிரிப்பு மூட்டும்படியாக இருந்தன. ஒரு கட்டத்தில் உரக்க சிரிக்க ஆரம்பித்து எனது அன்றைய மனஇறுக்கத்திலிருந்து விடுபட்டு லேசானேன். ஜெயமோகனின் பதிவு சற்று மேதாவித்தனத்துடன் விரிக்கப்பட்ட நகைச்சுவை துணுக்குதான் என்றாலும் அதிலுள்ள தகவல் பிழைகளை திருத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது. ஏனென்றால் அது என்னைக் குறித்த மிக தவறான சித்திரத்தை முன்வைக்கிறது. மேலும் அவரது நினைவுப் பிழைகள் கடுமையான மன-அழுத்தத்தின் அல்லது அல்சமெயர்ஸ் போன்ற கோளாறின் அறிகுறியாக இருக்குமோ என்று துணுக்குறுகிறேன். நான் விளக்கப்போகும் நினைவுப்பிழைகள் அவரது மருத்துவருக்கும் ஒரு முக்கியமான ஆவணமாக இருக்கக் கூடும். இதை மிகுந்த கரிசனத்துடனும் ஆழ்ந்த வருத்தத்துடனும் எழுதுகிறேன். நான் தரப்போகும் சான்றுகள் நிரூபிக்கும் அவரது உளப்பிரச்சனையை அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் படை கவனிப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஜெயமோகனை நான் முதலில் சந்தித்தது தக்கலையில் உள்ள நண்பர் ஹமீம் முஸ்தபாவின் களஞ்சியம் எனும் புத்தகக்கடையில். ஜெயமோகன். அப்போது ஜெயன் வைணவம் குறித்து வெகு சிலாகிப்பாக ஒரு மாமாவுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவர் எழுத்தாளர் என்றே எனக்குத் தெரியாது. என் அப்பாவிடம் இருந்து தொற்றி இருந்த தி.க. பாதிப்பால் எனக்கு மதவாதிகளை பார்த்தாலே பற்றிக் கொண்டு வரும். இதனால் ஜெ.மோவுடனான எனக்கு முதல் சொற்றோடரே முரண்பாட்டில் தான் ஆரம்பித்தது. அவர் தனது இரு பதிவுகளில் நினைவுகூருவது போல் சு.ராவின் ”புளியமரத்தின் கதை” குறித்து நான் உரையாடியது அப்போது அல்ல, பின்னர் என் கல்லூரியின் விழாவில் அது குறித்து அவர் பேசி முடித்த பிறகு. இதைப் பற்றி “எழுத்தாளர்களை அணுகுதல்” கட்டுரையில் குறிப்பிடும் என் குருநாதர் நான் அவரை பூர்ஷுவா என்று கருதி அவ்விழாவை புறக்கணித்ததாக குறிப்பிடுகிறார். உண்மையில் அவரை நான் தனிப்பட்ட முறையில் அந்த விழாவுக்கு தலைமை தாங்க அழைத்திருந்தேன். விழாவிலும் அவருடன் உரையாடினேன். அடுத்து எனது இரு கால்களுமே போலியோ பாதிக்கப்பட்டிருப்பதாய் ஜெ.மோ சொல்லுவதும் தவறு. எனக்கு இடது கால் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. நான் ஜெயமோகனை சந்திக்க ஆரம்பித்த நாட்களில் பிறர் ஆதரவின்றி நடக்கும் ஆற்றல் கொண்டிருந்தேன். அப்போது நான் பைக் வேறு ஓட்டிக் கொண்டிருந்தேன். காதலியை கூட்டிக் கொண்டு கடற்கரை பூங்கா மற்றும் சொல்லக் கூடாத பல இடங்களுக்கும் திரிந்து கொண்டிருந்தேன். அவளை பார்க்காத நாட்களில் குருநாதரை விஜயம் செய்வதே என் வழக்கமாக இருந்தது. ஆனால் ஜெ.மோவோ தன் பதிவில் திருதிராஷ்டிர கண்கள் வழி என்னென்னமோ கண்டதாக சொல்கிறார். உதாரணமாக அவரது வீட்டுக்கு என் அம்மா என்னை தோளில் சுமந்து கொண்டு வந்ததாக குறிப்பிடுகிறார். அப்போது அவர் என் அம்மாவை கண்டித்ததாகவும், உடனே என்னை அங்கே தனியே விட்டு விடுமாறு வற்புறுத்தியதாகவும் சொல்கிறார். பிறகு ஜெ.மோவின் அறிவுறுத்தலால் மனம் திருந்திய நான் தானாக முயற்சி செய்து கிறித்துவ போதக மேடைகளில் நிகழ்வது போல் நடக்க ஆரம்பித்து விட்டேனாம். இவை வெறும் கற்பிதங்கள் மட்டுமே. ஜெ.மோவின் அப்போதைய வீட்டு வாசல்படிகளில் நான் அவருடன் நானாகவே ஏறி நுழைந்தபோது அவர் சொன்ன வாசகம் இன்னும் நினைவில் உள்ளது: “இந்த படிகளை பார்த்தால் போதும் கோணங்கி உடனே அவற்றை உருவகமாக்கி விடுவார்”.
கட்டுரையின் மற்றொரு இடத்தில் நான் அவரிடம் சொன்னதாக் இப்படி குறிப்பிடுகிறார்: ”உடற்குறை உள்ளவர் என்ற ‘இரக்க’மே இல்லாமல் நான் அவரை நடத்துவது அபாரமான தன்னம்பிக்கையை அளித்தது என்றார்.” நிஜத்தில் 1998-இல் இருந்து 2001 வரையிலான தினசரி சந்திப்புகளில் ஒருமுறை கூட நானாக ஊனம் குறித்து அவரிடம் விவாதித்தது இல்லை. ஒரு முறை தற்செயலாக என்னை தொலைபேசியில் அழைத்து “ஆணுக்கு அழகு உடல் அல்ல, அறிவு தான்” என்றார். நான் ஏற்கனவே ஒரு பெண்ணை அடைந்து விட்டிருந்ததால் அந்த தாமதமான அறிவுரை எனக்கு சற்று சலிப்பையே அளித்தது. இரண்டாவது முறை என்னைப் பற்றிய அவரது அவதானிப்பை ஒரு ஆர்வத்தில் கேட்ட போது குரு இப்படி சொன்னார்: “உன்னிடம் ஊனம் குறித்த பிரக்ஞையே நான் காணவில்லை. ஊனத்திற்கான அனுகூலங்களையும் நீ இதுவரை என்னிடம் எதிர்பார்க்க இல்லை”. மேற்சொன்ன கட்டுரையில் ஜெ.மோ நேர்முரணான சித்திரத்தை அளிக்கிறார். தனிப்பட்ட வகையிலான பொய்யும் உண்மையும் ஒருவகை கருத்து சுதந்திரமே என்று நம்புகிறவன் நான். குருநாதர் நாளை அவரது நான் கடவுளில் வரும் குள்ளப்பாத்திரம் நிஜத்தில் அபிலாஷ் தான் என்று கூட எழுதலாம். அவற்றை ஒரு வேடிக்கையாக கடந்து சென்று விடலாம் என்றாலும் இத்தகைய மனப்பிராந்திகள் அவரது மன நலம் குறித்த ஆழ்ந்த கவலையை எனக்குள் ஏற்படுத்துகிறது.

”ஜவகர்லால்நேரு பல்கலைக்காக முயன்றார். இடம் கிடைக்கவில்லை. ‘அப்படியானால் சென்னைக்கு போங்கள். தனியாக நின்று போராடுங்கள்’ என்றேன். சென்னை கிறித்தவக் கல்லூரியில் சேர தனியாகக் கிளம்பிச் சென்றார். அது அவரது வாழ்க்கையின் முதல் தனிப்பயணம்.”
சென்னைக்கு நான் படிக்க தனியாக பயணித்தேன் என்று மேலும் ஜெ.மோவின் கதை வளர்கிறது. நான் குடும்ப உறவினர் புடை சூழவே சென்னை வந்தேன். ஏற்கனவே முடிவு செய்து விட்டு அவரிடம் சொல்ல சென்றேனே தவிர அவரிடம் அறிவுரைக்காக நாடவில்லை. பிறகு எனக்கு நேர்ந்த கசப்பான சம்பவம் குறித்து குருநாதரிடம் அழுதது பற்றி “இன்றிரவு நிலவின் கீழ்” முன்னுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். அந்த விஷயத்தையும் பதிவில் குறிப்பிடும் போது பாதிக்கு மேல் அவரது கற்பனையே விரிகிறது. நான் மனம் வருந்தக் காரணம் ஒரு பெண் விவகாரம் என்று நினைவின் வெற்றிடங்களை நிரப்புகிறார். ”பெண்கள் அறிவதிகாரத்தின் முன் மண்டி இடுவார்கள். நீ உன் அறிவைக் கொண்டு தான் பெண்ணை அடைய முயல வேண்டும்” என்று குருநாதர் அன்று என்னை அறிவுறுத்தியது உண்மைதான். ஆனால் அது சற்று விவகாரமான அறிவுரை என்று ஜெ.மோ அப்போதும் சரி இப்போதும் சரி உணர இல்லை. என் மனதை அன்று காயப்படுத்தி கண்ணீர் மல்க வைத்த பெண்ணை என் அறிவதிகாரத்தால் நான் வென்று எடுக்க முடியாது. ஏன் எனில் அவர் வயது மூத்த ஒரு பெண்மணி. என் மாமியார்.

அடுத்து அவர் சொல்லும் குற்றசாட்டில் குருநாதரின் விரல் நடுக்கங்களை நமக்கு காண முடிகிறது. ”ஜெயமோகனின் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரையில் நான் கீழ்கண்ட குற்றசாட்டுகளை தர்க்கரீதியாக பேசியிருந்தேன். சுருக்கமாக ஜெயமோகனிடம் நான் மாறுபடும் கருத்துக்கள் இவை:

• மனுஷ்யபுத்திரன் பக்தி இலக்கியத்தின் நீட்சி. நம்மாழ்வாரின் பேரன். குணங்குடி மஸ்தானின் மறுபிறவி.

• இறைவனை அடைதலே அவரது கவிதையின் ஆதார தேவை.

• அவர் ஊனத்திலிருந்து எழுந்த குறையுணர்வு தான் அவரை தன் ஆத்மீக குறையை உணர வைத்து ஆன்மீக கவிஞராக்குகிறது.

• மனுஷ்யபுத்திரன் ஒரு எழுச்சிக்கவிஞர். அவரது கவிதைகளில் ”உணர்ச்சி கொப்புளிக்கிறது.”

ஆனால் குருநாதர் தனது எதிர்வினையில் இந்த ஆதாரமான எதிர்கருத்துக்களை நீளம் தாண்டி விட்டு இப்படி ஒற்றை வரியில் சுருக்குகிறார்:
”கால்கள் இல்லாத ஒருவரை ஊனமுற்றவர் என்று அல்லாமல் வேறு எப்படியும் பார்க்க முடியாத மனக்கோளாறை நான் அக்கட்டுரையில் வெளிப்படுத்துவதாகச் சொல்லியிருந்தார். மனுஷ்யபுத்திரன் கவிஞர் அல்ல ஊனமுற்றவர் என்று நான் சொல்வதாக சொல்லியிருந்தார்.”
ஜெ.மோ குறிப்பிடுவது என் விமர்சனத்தின் ஒரு சிறு இழை மட்டுமே, மையக்கருத்து அல்ல. ஆதாரக்கருத்துக்களை எதிர்கொள்ளாமல் கொசுவலைக்குள் பதுங்குவது அவரது பதற்றத்தையே காட்டுகிறது. அல்லது விமர்சன ரீதியாக எதிர்கொள்ள முடியாத இயலாமையாக கூட இருக்கலாம். ஒரு அரை-விசுவாச சீடனாக நான் முதல் காரணத்தையே இன்றும் நம்ப விரும்புகிறேன். அடுத்து, அவர் தனக்கும் மனுஷ்யபுத்திரனுக்குமாப பூசல் காரணமாக ம.பு தனக்கு எதிரான ஆயுதமாக என்னை பயன்படுத்துவதாக அபாண்டமான குற்றசாட்டை வைக்கிறார். அதற்கு பிரதிபலனாக எனக்கு உயிர்மை ஆசிரியக் குழுவில் இடமளித்ததாகவும் சொல்கிறார். இந்த குற்றசாட்டும் குரு நாதரின் கவனமின்மையையே காட்டுகிறது. மேற்குறிப்பிட்ட “ஜெயமோகனின் ... ஊனம்” கட்டுரை பிரசுரமாவதற்கு முன்னரே பல பதிவுகளில் நான் ஜெ.மோவை பகடி செய்திருக்கிறேன். சாரு ஆன்லைனில் ஜெயமோகனை கருட புராணத்தின் படி எப்படி தண்டிக்கலாம் என்றொரு கட்டுரை வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலாக பரபரப்பாக படிக்கப்பட்டு வந்தது. அக்கட்டுரையை படித்த ஜெ.மோவின் லட்சக்கணக்கான வாசகர்களும், ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளும் அதற்கு மறுப்பு தெரிவித்து எங்கும் எழுதவில்லை. குருநாதர் இன்று துரோகி என்று கமண்டலம் உலுக்கி நீர் தெளித்து விட்டுள்ள நான் தான் முதல் முதலில் அன்று அக்கட்டுரையை கண்டித்து உயிரோசையில் எழுதினேன். இத்தனைக்கும் சாரு என் மிக பிரியமான எழுத்தாளரும் நண்பருமாக அப்போது ஆக இருந்தார். ஆனால் ஜெ.மோவிடமோ பல வருடங்களாக எந்த தொடர்பும் இன்றி இருந்தேன். அக்கட்டுரையை எழுதியதற்காக நான் என்ன அனுகூலத்தை பெற்றேன் என்பதை ஜெ.மோ தெளிவுபடுத்த வேண்டும். இவ்விரு முரண் ஆதரவு கட்டுரைகளையும் எழுத மனுஷ்யபுத்திரன் எனக்கு எந்த தூண்டுதலையும் அளிக்க இல்லை. உண்மையில் அவர் என்னிடம் ஜெ.மோ-சாரு மோதலில் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்றே தொடர்ந்து அறிவுறுத்தி வந்துள்ளார். 2008 டிசம்பரில் ஜெயமோகனின் இலக்கிய அரசியலை பகடி செய்து ”மிருகம்-மனிதன் – எழுத்தாளன்: ஒரு படிநிலைச் சறுக்கல்” என்று கட்டுரையை எழுதினேன். இக்கட்டுரையை மனுஷ்யபுத்திரன் மனதளவில் ஏற்றுக் கொண்டாலும் பிரசுரிக்க மறுத்தார். இளம் எழுத்தாளனாக சிலசமயங்களில் உண்மையை அறைகூவி பேசுவது எனது வளர்ச்சிக்கு பாதகமாக இருக்கும் என்று அவர் கருதினதே காரணம். பிற்பாடு சாரு இக்கட்டுரையை தனது இணையதளத்தில் பிரசுரிக்க மிகவும் விரும்பி என்னை வற்புறுத்தி கேட்ட போது குறுக்கிட்டு தடுத்தவரும் மனுஷ்யபுத்திரன் தான். அவர் ஒருவரை தூண்டி விட்டு எழுதவைக்கும் அளவுக்கு கீழ்த்தரமானவரல்ல. நானெழுதியதை விட ஆற்றல் மிக்கதாக ஒரு எதிர்வினையை அவரே தந்திருக்கலாம். இன்று வந்தடைந்திருக்கும் அதிகார புள்ளியில் இருந்து ஜெ.மோவுக்கு நேரடியாகவே தீங்கு விளைவிக்க நினைத்தாலும் செய்யலாம். அவருக்கு எழுத்தாள அடியாட்கள் அவசியம் இல்லை. மேற்சொன்ன ஊனக்கட்டுரையை பிரசுரிப்பதற்கு காரணம் அன்றிருந்த சூழலின் ஒரு விவாதப்பகுதியாக அவ்விசயம் மாறி விட்டிருந்ததே.

ஜெ.மோவின் கோபமான பதிவின் நகைச்சுவை பகுதி இனிமேல் தான் வருகிறது. சர்ச்சைக்குரிய ”கடவுளற்றவின் பக்திக் கவிதைகள்” கட்டுரைகளை நான் மிக எதேச்சையாக சற்று தாமதமாகவே படித்தேன் அக்கட்டுரையின் பின்னுள்ள அரசியலும், பலவீனமான தர்க்கமும், அதை கட்டியெழுப்பவதற்கான அசட்டுத்தனமான அபிப்பிராயங்களும் என்னை அன்றிரவு முழுக்க தொந்தரவு செய்தன. அன்றிரவே எனது எண்ணங்களை சிறுகுறிப்புகளாக எழுத ஆரம்பித்து அது ஒரு கட்டுரையாக வளர்ந்து விட்டது. அதை எழுதும் போது அச்சர்ச்சையின் நிழல் கூட என்னை அண்டியிருக்க இல்லை. காரணம் ஜெ.மோவின் பக்கங்களை சாரு கிழித்து விமர்சித்த போது நான் எலும்பு முறிவு காரணமாக மருத்துவ ஓய்வில் இருந்தேன். “கடவுளற்றவனின் ...” கட்டுரை இலக்கிய வெளியில் ஏற்படுத்தி இருந்த மன-அலைகளை அறியாமல் மிக அப்பாவித்தனமாக நான் மனுஷ்யபுத்திரனுக்கு இப்படி ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். சாராம்சமாக:

”அன்புள்ள மனுஷ்யபுத்திரனுக்கு
...ஒரு அடைப்பு குறியின் வெற்றிடத்தில் நீங்கள் மூடப்பட்டு பெயர்ப்பட்டி ஒட்டப்பட்டது குறித்து சற்று வருத்தம் எனக்கு”.

இதைத் தொடர்ந்து மனுஷ்யபுத்திரன் என்னிடம் பேசினார் என்றாலும் கட்டுரை எழுதியுள்ளதை நான் அவரிடம் குறிப்பிடவே இல்லை. காரணம் ஏற்கனவே நான் ஜெயமோகனை விமர்சித்து எழுதியதை பிரசுரிக்க அவர் மறுத்துள்ளதே. வார இறுதியில் கட்டுரை அனுப்பும் முன் மட்டும் அவரிடம் உறுதிப்படுத்திக் கொண்டேன். அவர் என்னை ஊக்குவிக்கவோ தடுக்கவோ இல்லை. ஏனென்றால் அன்று அக்கட்டுரை பொதுவிவாதத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டிய கட்டாயம். அந்த குறிப்பிட்ட மாதம் முழுக்க நான் உயிர்மை கூட்டங்களுக்கோ அலுவலகத்துக்கோ செல்லவில்லை. ஆனால் ஜெ.மோ என்ன எழுதுகிறார் பாருங்கள்.

”அக்கட்டுரை எப்படி எழுதப்பட்டது, எப்படி உயிர்மை அலுவலகத்தில் விவாதிக்கப்பட்டு ‘மெருகேற்ற’ப்பட்டது என்றெல்லாம் நான் கேள்விப்பட்டேன்.”
நிஜத்தில் ஜெயமோகன் பற்றின எழுத்து விவாதம் எனக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் ஒரு முறையே அவரது அலுவலகத்தில் நடந்தது, அதுவும் நேர்மறையாக. கடந்த மாதம் அவரது ”புல்வெளி தேசம்” நூல் பிடித்து போய் அதனை குறித்து உயிர்மையில் பிரசுரிக்க கட்டுரை எழுதி வைத்திருந்தேன். சில குறைகளை சுட்டிக் காட்டினாலும் நூலுக்கு மிக ஆதரவான விமர்சனம் அது. மனுஷ்யபுத்திரன் தன்னை வசை பாடி, உறவை துண்டித்துக் கொண்ட ஒரு எழுத்தாளரின் நூலைப் பற்றின ஒரு விமர்சனத்தை உயிர்மையில் பிரசுரம் செய்வதற்கு தயாராக இருந்ததோடு, அவரது மற்றொரு நூலான விமர்சன நூலை தமிழவனுக்கு அனுப்பி அதற்கொரு மதிப்புரை எழுத வேறு கேட்டுக் கொண்டார். உயிர்மை உள்வட்டத்தில் தீவட்டி வெளிச்சத்தில் பாதுகாவலர் சூழ தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுவதாக ஜெயமோகன் கற்பித்து உளறிக் கொட்டும் போது நிஜத்தில் நடப்பது இத்தகைய நேர்மையான செயல்பாடுகளே. காலச்சுவடில் இது நடக்குமா சொல்லுங்கள்?

”இன்றிரவு நிலவின் கீழ்” முன்னுரையில் ஜெ.மோவுடனான என் உறவை விரிவாகவே பேசி இருந்தேன். ஆனால் ஜெ.மோவின் கற்பனையில் நான் அவருக்கு துரோகம் இழைத்து விட்டேன். ’அவரை தாக்கி எழுதுவதன் மூலம் ஒரு இலக்கிய ஸ்தானம் பெற்று விடலாம் என்பதே என் உத்தேசம்; முன்னுரையில் பாராட்டிய நபரை இப்போது தாக்கி விட்டோமே என்று நான் ஒரு தர்மசங்கடத்தில் இருப்பதாக’ எல்லாம் ஜெ.மோ குறிப்பிடுகிறார். இங்கு இரண்டு விசயங்களை தெளிவுபடுத்த வேண்டும். “ஜெயமோகன் கிளி ... ஊனம்” கட்டுரை ஒரு தனிநபர் தாக்குதல் அல்ல. ஒரு தர்க்கபூர்வமான, புறவய நோக்கில் எழுதப்பட்ட விமர்சனம் அது. அக்கட்டுரையை படித்த எவருக்கு அது புரியும். ஒரு விமர்சகன் துரோகியவாகவோ ஆதரவாளனாகவோ இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதே அசட்டுத்தனம். அடுத்து எனக்கு ”ஆன்மா, விசுவாசம், நேர்மை, உண்மை” போன்ற பண்புகள் இல்லை என்கிறார் ஜெயன். இந்த நிலப்பிரபுத்துவ கூறுகள் என் ஆளுமையில் இல்லை என்பது எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன். ஜெயமோகன் சமகால வாழ்வை இன்னும் உள்வாஙக்வில்லை என்பதையே இந்த குற்றச்சாட்டு சுட்டுகிறது. அவரது புதினங்களில் நாயகர்களின் வீழ்ச்சி லட்சியங்கள் தகர்வதனால் தான் நிகழும். நிஜத்தில் இத்தகைய மனிதர்கள் காந்தியுடன் மடிந்து விட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் “ஆன்மாவை கூவி விற்பது” Dr. Faustus நாடகம் எழுதப்பட்ட பதினாறாம் நூற்றாண்டுடனே அரதப்பழசாக தொடங்கி விட்டது. சமகால வாழ்வின், அழகியலின் நுண்ணுணர்வு சாருவின் எழுத்தில் தான் உள்ளது. இன்றைய தலைமுறையினர் சாரு பின்னால் செல்வதற்கான முக்கிய காரணம் இதுவே. ஜெயமோகன் என் குருநாதராக இருந்ததை ஏற்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை. ஒரு வாசகனான அவரிடம் இருந்து விலகின பின்னரே விமர்சகனான அவரை தாண்டி வர நேர்ந்தது. ஒரு காலத்தில் நிறைய ஷக்கீலா படம் பார்த்திருக்கிறேன் என்பதை போன்று இதை சொல்வதிலும் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

அடுத்து மாஜி குருவின் மேலும் ஒரு சறுக்கல். இப்படி சொல்கிறார்.
”இந்த நண்பரிடம் இக்கட்டுரைக்கு இரண்டுநாட்கள் முன்பு உரையாடியபோதுகூட எந்த உரசலையும் நான் உணரவில்லை.”

உரையாட எல்லாம் இல்லை. மிக சமீபமாக நடந்த நிகழ்வுகள் கூட குருநாதரின் நினைவில் எப்படி வழுக்கி மறைகின்றன பாருங்கள். கட்டுரை பிரசுரமாவதற்கு முன்னர் நான் அதை எழுதியுள்ளது மற்றும் அதற்கான புறவயமான உத்தேசம் பற்றி மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். பாருங்கள்:

abilash chandran
to jeyamohan_ B

date Mon, Jan 4, 2010 at 8:41 PM
subject ஒரு இலக்கிய நிகழ்ச்சியின் கதை குறித்து
mailed-bygmail.com



அன்புள்ள ஜெயனுக்கு
மேற்சொன்ன கட்டுரை நன்றாக உள்ளது. அப்புறம் மனுஷ்யபுத்திரன் குறித்த உங்கள் கட்டுரைக்கு உயிரோசையில் ஒரு எதிர்வினை எழுதுகிறேன். தனிப்பட்ட காழ்ப்போ வெளித்தூண்டுதலோ இல்லாமல் எழுதியிருக்கிறேன். எனக்கு இழப்புணர்வோ குற்றவுணர்வோ பதற்றமோ இல்லை. ஆனாலும் நான் இதை ஏன் எழுதுகிறேன் என்று உங்களுக்கு புரியும்.

அன்புடன்
ஆர்.அபிலாஷ்”

அதற்கு அவர்

“ jeyamohan_ B
toabilash chandran

dateMon, Jan 4, 2010 at 10:46 PM
subjectRe: ஒரு இலக்கிய நிகழ்ச்சியின் கதை குறித்து
mailed-bygmail.com
signed-bygmail.com



i am not interested on it anymore
j”

நான் கமுக்கமாக, அவர் சற்றும் எதிர்பாராவிதமாக அக்கட்டுரையை எழுதவில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அவருக்கு மீண்டும் நினைவு பிசகி விட்டது. அவ்வளவுதான். வள்ளுவர் நட்பை காப்பாற்ற நண்பன் தரும் விடத்தையே குடிக்கலாம் என்கிறார். ஆனால் ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் சதிகாரர்களுடன் இணைந்து சீசரை புரூட்டஸ் குத்துகிறான். ஒரு நண்பனை எப்படி புரூட்டஸ் குத்தலாம்? அதற்கு புரூட்டஸின் பிரபல விளக்கம் இங்கும் பொருந்தும்

Not that I loved Caesar less, but that I loved Rome more.
As Caesar loved me I weep for him
As he was ambitious I slew him.

எழுத்தின் நேர்மை மீது நட்பை பலியிட தயாராகவே நான் அக்கட்டுரையை எழுதினேன்.
பிறகு என்னை காயப்படுத்தும் நோக்கோடு இதை சொல்லுகிறார். ”ஆர்.அபிலாஷ் உயிரோசையில் நிறையவே எழுதிவருகிறார். ஓர் எழுத்தாளனாக பொருட்படுத்தத்தக்க எதையும் அவர் எழுதவில்லை என்றே நினைக்கிறேன்”
ஆனால் இதே மனிதர் சமீபத்தில் கோவையில் நடந்த வாசகர் சந்திப்பில் என் நண்பர் வா.மணிகண்டனை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசும் போது “அபிலாஷ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் ஓரளவு வாசிக்க கூடியவர். அவர் கட்டுரையை மட்டும் தான் நான் பொருட்படுத்தி படித்தேன்.” என்று வாய்தவறி உண்மையை சொல்லி உள்ளார். இப்போது இப்பதிவில் முரண்பட்டு நான் ஒரு பொருட்படுத்தத்தகாத எழுத்தாளன் என்று முத்திரை வைத்து கோப்பை மூடப் பார்க்கிறார். மன்னியுங்கள் குரு, அடி மிஸ்ஸாயிருச்சு.

ஆனால் ஜெயமோகனை நான் மீண்டும் தொடர்பு கொள்ள நேர்ந்தது. ஜெயமோகனை தனிப்பட்ட முறையில் நான் இதுவரை தாக்கியதில்லை. அடிப்படை அற்ற வசைகளையும் அவதூறுகளையும் சொன்னதில்லை. ஆதாரபூர்வமான விமர்சனமே நான் முன்வைத்தது. இதே முறையில் நான் சாருவையும் தான் விமர்சித்திருக்கிறேன். ஆனால் அவர் மிகவும் நட்பார்ந்த முறையிலே இன்றும் பழகி வருகிறார். இந்த மனமுதிர்ச்சியை நான் ஜெயமோகனிடமும் எதிர்பார்த்தேன். பங்களூரில் வசிக்கும் வினயசைதன்ய யதி எங்கள் இருவருக்கும் பொது நண்பர். அவரது தொடர்பு எண்ணை தொலைத்திருந்தேன். எண்ணை பெற ஜெ.மோவை அழைத்தேன். என் குரலைக் கேட்டதுமே மறுமுனையில் திகைப்பு. குரலில் நடுக்கம் மற்றும் குழறல். அவர் அப்படி பதற்றத்துடன் என்னிடம் என்றுமே பேசியதில்லை. எண்ணை கேட்டேன். தொடர்பை துண்டித்தார். அடுத்து நான் பத்தாம்பசலியாக அவரை தொடர்ந்து முயன்றேன். அதற்கு உன்னிடம் எனக்கு ஆர்வமில்லை. இனி அழைக்காதே என்று குறுஞ்செய்தி அனுப்பினார். இரண்டு விசயங்கள் எனக்கு வருத்தம் அளித்தன. ஒரு வளர்ந்த மனிதரை இப்படி பேச்சு வராதபடி பதறடித்து விட்டோமே என்ற குற்றவுணர்வு. அடுத்து, போட்டு வாங்குகிறோமே என்று. ஆனால் குருநாதரின் மூளை நரம்பணு இணைவுகளில் மீண்டும் லூஸ் கனெக்சன். மேற்சொன்ன பதிவில் தொலைபேசி உரையாடல் பற்றின குறிப்பு வலையுரையாடலாகி விட்டது:

”அதன்பின் என்னை சமாதானம் செய்யும்பொருட்டு என்நுடன் வலையுரையாடலுக்கு அபிலாஷ் வந்தார். மேற்கொண்டு என்னை தொடர்பு கொள்ள வேண்டாம், அவர் மீது என் ஆர்வம் முற்றாகவே இல்லாமலாகிவிட்டிருக்கிறது என்று பதில் அளித்தேன். ”

ஒரு எண்ணை தருவதற்கு தனிப்பட்ட ஈடுபாடு எதற்கு என்று எனக்கு இன்னமும் விளங்கவில்லை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...