தொகுதி மறுசீரமைப்பு குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே தி ஹிந்து போன்ற நாளிதழ்களில் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. அப்போதே இதன் ஆபத்துக்களைப் பற்றி எழுதினேன். கடந்த ஆண்டில் இருந்தே தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்புக் குரல்கள் கேட்கத் தொடங்கின. முதல்வர் ஸ்டாலின் ஒரு கட்டுரை எழுதினார். அண்மையில் அவர் இந்த சீரமைப்பு மசோதாவை எரித்து முழக்கமிடும் காணொளியைக் கண்டேன். இந்தப் பார்வையுடன் முழுக்க உடன்படுகிறேன். இந்தியா ஒரு வட-இந்திய-சார்பு தேசியமாக அலுவல்ரிதியாக, வெளிப்படையாக மாறப் போகிறது. அதேநேரம் இன்று எதிர்ப்பு ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்த்துதலாக மாறுவதால் நேரடியாக மக்களிடமிருந்து இதற்கு எதிர்ப்பு வருமா எனச் சந்தேகம் உள்ளது. தமிழ்நாட்டிலும் இது ஒரு தேர்தல் பிரச்சார வியூகம் மட்டுமே எனத் தோன்றுகிறது. இது எதிர்ப்பின் உண்மைத்தன்மையை கொன்றுவிடும். இப்படியான பிரச்சினைகளை மக்கள் தம்மிடம் இருந்தே ஒரு இயக்கமாகத் திரண்டு எதிர்க்கும்போதே (ரயில் மறிப்பு, விமான நிலைய முற்றுகை, மத்திய அரசு அலுவலக முற்றுகை) அதற்கு நல்ல பலனிருக்கும். இன்னும் சொல்லப்போனால் வேளண் சட்டங்களுக்கு எதிரான பஞ்சாப் விவசாயிகள் போ...