டேனியல் கெல்மானின் "இயக்குநர்" நாவலைப் படித்தபோது ஏற்பட்ட முதல் இப்படி ஒரு நாவலை யாராவது தமிழில் எழுதியிருந்தால் என்னவாகி இருக்கும்? ஒன்றும் ஆகியிருக்காது. பெரிய சலனங்கள் எழுந்திருக்காது. ஐரோப்பாவிலும் ஆங்கிலத்திலும் இந்நாவல் பெரிதாக விவாதிக்கவும் பாராட்டவும் படுகிறது. புக்கர் குறும்பட்டியலில் நுழைந்திருக்கிறது. இவ்விதத்தில் ஐரோப்பிய படைப்பாளிகள் அதிர்ஷ்டசாலிகள். இந்தியாவில் பிறந்து இந்திய மொழிகளில் எழுதுவது பிறக்கும் முன்னே இறப்பதற்கு சமானமானது. அடுத்து இத்தகைய நாவலைத் தமிழில் எழுத வாய்ப்புண்டா எனக் கேட்போம். குறைவே. பொதுவாக தமிழில் நாம் நிறைய ஆராய்ச்சி செய்து வரலாற்றுத் தகவல்களைச் சேகரித்து நாவல் எழுதுவதில்லை. தமிழில் நவீனத்துவ காலம் முதற்கொண்டே உள்ள இலக்கியப் போக்கு ஒருவரது தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் வரலாற்று நிகழ்வுகளைத் தொகுப்பதுதான். வெகுஜன நாவல்களில் உள்ள போக்கு அரசர்களை தமிழ்தேசிய அடையாளமாக, சாகசக்காரர்களாக, சாதனையாளர்களாகச் சித்தரிப்பது, அவர்களை நம்மூர் தேசியத் தலைவர்களுடன் இணைவைக்கும்படியாக எழுதுவது(நேரு-இந்திரா - "கல்கியின் பொன்னியின் செல்வன்"...