Skip to main content

Posts

பிறந்தநாள் வாழ்த்துகள்

  பல்லவிக்கு இன்று பிறந்த நாள். அதை ஒட்டி சில சிந்தனைகள். அவளுடைய வருகை என் வாழ்வில் நிறைய ஒளியைக் கொண்டு வந்துள்ளதை உணர்கிறேன். இந்த ஆண்டும் அவள் அவ்வாறே இருக்க வேண்டுமென விரும்புகிறேன். நானும் அவளும் இருவேறான மனநிலைகளும், ஆளுமைகளும் கொண்டவர்கள் - எனக்கு என் நாவல் எழுத்து ஒழுங்காக நடந்தால் மட்டும் போதும். அவளுக்கு பல சின்ன விசயங்கள் ஒழுங்காக நிகழ வேண்டும். எனக்கு இத்தெளிவு உள்ளதால் வேறெதைக் குறித்தும் கவலையில்லை. வயதாகிறதா? நல்லது. இன்னும் சில பத்தாண்டுகள் கடுமையாக தினமும் எழுத்தில் உழைத்தால் போதும். எழுதும் திட்டங்களை நிறைவேற்றி விட்டுச் செத்தால் போதும். இதற்கு அப்பால் யார் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் பொருட்டில்லை. என் பணம், வேலை, சூழல் குறித்து அக்கறையில்லை. சுவற்றில் ஒரு ஆணியை அடித்து ஒரு படத்தைத் தொங்க விடுவோமே அதுதான் நான். என் ஆணி என் நாவல் எழுத்து. பல்லவி ஒரு பட்டம். அவளுக்கு எப்போதும் பறக்கிற ஒரு குதூகலமும், விழுந்துவிடுவோமே எனும் பயமும் உண்டு. அவளுடைய அணுகுமுறையில் ஒரு அனுகூலம் பல்வேறு சின்னச்சின்ன மகிழ்ச்சிகள் இருக்குமென்பது. எனக்கு நேரடி உலகில் அனைவருடனும் இணங்கிச் ...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...

இருவகை ஊழல்கள் - சாக்ரடீஸும் காந்தியும்

  என் நண்பர் ஒருவர். பெயர் சண்முகம். வயது 62. தமிழ்நாட்டில் பொதுப்பணித் துறையில் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றுகிறார். அவர் எதாவது ஒரு விசயத்தை சொல்லி அடிக்கடி என்னை ஆச்சர்யப்படுத்துவார். ஒருநாள் அவர் என்னிடம் தனியாருக்கு வந்தபிறகே தான் மகிழ்ச்சியாக இருப்பதாக சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை. தனியார் ஒரு எதேச்சதிகார நடைமுறை கொண்டது, அங்கு சுதந்திரமே கிடையாது அல்லவா என்றேன். அவர் அதற்கு அரசுத் துறைகள், குறிப்பாக பொதுப்பணி துறை, ஊழல் மலிந்தவை, அங்கு நிலைப்பதற்கு ஒன்று ஊழல் செய்ய வேண்டும் அல்லது ஒதுங்கி நிற்க வேண்டும். ஒதுங்கி நிற்பவர்களை ஊழலில் பருத்த உயரதிகாரிகளும் அவர்களுடைய ஊதுகுழல்களும் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருப்பார்கள் என்றார். சரி, ஊழல் செய்வோரும் நிம்மதியாக இருக்க முடியாது, அவர்களுக்கு ஒரு அரசியல்வாதியுடன் உடன்படிக்கை இருக்கும், அவருக்காக இவர் ஊழல் செய்து தொகையையும் குறிப்பிட்ட சதவீதம் பகிர்வார், அவர் தன்னைக் காப்பாற்றுவார் என்று நம்புவார், ஒருநாள் அவர் அதிகாரம் இழந்ததும் இவர் மாட்டிக் கொ...

ஏன் கலை, இலக்கிய, மானுடவியல் துறைகள் ஒழித்துக் கட்டப்படுகின்றன?

  "அகழ்" இணையதளத்தில் வந்த பேட்டியில் தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் பெங்களூரில் உள்ளதைப் போல கலைப்பாடங்களுக்கு போதிய கவனமோ முக்கியத்துவமோ இருப்பதில்லை எனக் கூறியிருந்தார். இது ஒரு முக்கியமான பிரச்சினை - தமிழ்நாட்டு அரசுகள் பொதுவாகவே மொழி, பண்பாடு ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகக் காட்டிக் கொள்ளும். இலக்கிய விழாக்கள், விருதுகள் போன்ற விசயங்கள் நிஜமாகவே ஆர்வமும் செலுத்தும். சிலநேரங்களில் இவற்றைத் தம் அரசுக்கான பிரச்சாரமாகவும் மாற்றிக் கொள்ளுமென்றாலும் இவை முக்கியமான செயல்பாடுகளே. ஆனால் இவ்வளவு புத்துயிருப்புடன் உயர்கல்வியில் கலைப்பாடங்களும், மொழிப்பாடங்களும் இல்லை; தொழில்நுட்ப, மருத்துவக் கல்விக்கு ஈடாக கலை மற்றும் மானுடவியல் படிப்புகளுக்கு சமூகமோ நிர்வாகமோ முக்கியத்துவம் அளிப்பதில்லை. குறிப்பாக இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது சமூகவியல், தத்துவம் போன்ற படிப்புகள்தாம். அவற்றை மொத்தமாக ஒழித்துவிட்டார்கள். மொழியும் இலக்கியமும் ஒண்டிக்கொண்டு இருக்கின்றன. பெருமாள் முருகன் சொல்வதை இரு கோணங்களில் பார்க்கிறேன்: 1) முதலில் நடைமுறைப் பிரச்சினை - பெங்களூர் மாதிரியான நகரங்களில்...

எது ஜெயமோகனை இப்படி வன்மாஞ்சலி எழுத வைக்கிறது?

  /வாழும் தமிழ் அமெரிக்கா வரை போகாமல் இருந்திருந்தால் அந்த அஞ்சலி குறிப்பிற்கும் பெரியதாக எதிர்வினை வந்திருக்காது. // - ஒரு ஜெ.மோ ஆதரவாளர் அமெரிக்கா வரை போவதென்றால் என்ன? அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த இலக்கியப் பரப்பையும் நோக்கிச் செல்வதா? அங்குள்ள மக்களைத் திரும்பிப் பார்க்க வைப்பதா? இல்லையே. அங்குள்ள இவர்களுடைய நண்பர்களையும் அன்பர்களையும் வைத்து கூட்டம் நடத்துவதுதானே? எனக்குத் தெரிந்து வாசக சாலை அமைப்பினர் தொடர்ச்சியாக பெங்களூரில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில் நடத்துவதை விட பெங்களூரில் கூட்டம் நடத்துவது பல மடங்கு கடினம். அவர்களுக்கு இத்தனைக்கும் எந்த நிதி ஆதாரமும் இல்லை. வி.பு குழுவுக்கோ பணக்காரர்கள், வலதுசாரி தொழிலதிபர்கள், ஆர்.எஸ்.எஸ் ஆதரவு உண்டு. வாசக சாலையிடம் அப்படி ஒன்றுமே இல்லை ஆகையால் அவர்கள் செய்த விசயங்களே ஒரு சாதனைதான். அதற்காக அவர்கள் வாசக சாலை கர்நாடகா வரைச் சென்றுவிட்டது எனக் கோரவில்லை. ஏனென்றால் கர்நாடகாவில் ஒரு தமிழ்க் கூட்டத்தை நடத்தினால் அது கர்நாடக சமூகத்தையோ பண்பாட்டையோ இலக்கியச் சூழலையோ அசைத்ததாகாது. ஆனால் வி.பு குழுவினர் இப்படியெல்லாம் சொல்வ...

டி. ஐ அரவிந்தன்

  வரவர மரணச் செய்திகள் என்னை மிகவும் பதற்றமடையச் செய்கின்றன. பல நாட்கள் நிம்மதியிழக்க வைக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் ஒருவர் மரணமடைந்ததை நம்ப இயலவில்லை. மரணமானவர் என்னுடனே இருக்க மரணம் ஒரு செய்தியாக மட்டும் எஞ்சி நின்று என் பிரக்ஞையின் பரப்பில் இருந்து அகல மறுக்கிறது. இந்தக் குறிப்பு என்னை நிலைப்படுத்த உதவும் என நம்புகிறேன். அரவிந்தனை புரவி இலக்கியக் கூடுகையின்போது கடைசியாகச் சந்தித்தபோது தன் அறைக்கு அழைத்தார். அது குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி போதிக்கிற ஒரு ஆசிரமத்தின் கட்டிடம். நாங்கள் தங்கியிருந்த அறைகளில் மிக அடிப்படையான வசதிகள் மட்டுமே இருந்தன என்றாலும் சுதந்திரமாக உணர்ந்தோம். அது கோடைக்காலம். மாலையிலும் நாற்பக்கங்களில் இருந்தும் தகித்தது. அந்த அறையில் இரண்டு கட்டில்கள். இரு கட்டிலில் ஒன்றில் இருந்த பையையும் சில பொருட்களையும் ஒதுக்கி விட்டு அமர்ந்து கொண்டேன். எல்லா இலக்கிய சம்பாஷணைகளிலும் நிகழ்வதைப் போல நாங்கள் நேரடியாக ஒரு கத்தியை வயிற்றில் இறக்குவதைப் போல தீவிர விவாதங்களுக்குள் நுழைந்துவிட்டோம். எனக்கு எப்போதுமே அவரிடம் நல்ல அலைவரிசை இருந்தது. பேசும்போது அவர் மௌனித்தாலோ ...