முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நேசத்தின் அத்தாட்சிகள் - ஆர். அபிலாஷ்



உன்னை வெறுக்கும் தோறும்
மேலும் மேலும் நேசிக்கிறேன்
நேசிக்கும் தோறும்
நீ அந்நியமாகிறாய்

தொட்டால் உதிர்ந்து விடும் பூவைப் போல
பலவீனமாக இருக்கிறாய்
உன்னை முத்தமிட்டு
உதிர்த்து விட
விருப்பம் கொள்கிறேன்
நீ வாடிப் போகும் போது
கசியும் வாசனையை
உள்ளங்கையில் வைத்து முகர
ஏங்குகிறேன்
உன் கண்ணீரைத் தொட்டு
சுவைக்க
அது மெல்ல மெல்ல இனிப்பதை
விநோதமாய்
வியந்தபடி ரசிக்கிறேன்

இரவில்
உன் இதயத்துடிப்புகளை
கேட்டபடி படுக்கிறேன்
நான் தூங்க ஆரம்பிக்கும் போது
அவை நின்று போகின்றன
திடுக்கிட்டு விழிக்கும் போது
அவை படபடவென துடித்தபடி
ஒரு விடுபட விரும்பும் பறவையை போல
என்னிடம் இறைஞ்சுகின்றன
வெகுநேரம் அறியாது
ஒரு குழந்தையின் காலை
மிதித்து இருந்து விட்டது போல்
குற்றவுணர்வு அடைகிறேன்.

ஒரு பழம் அழுகிப் போன பின் தான்
கனிந்து விட்டது
என நம்புகிறாய்

தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு நினைவிழந்த
கோழியை
அப்படியே தோலுரித்து
மெல்ல நுகர்ந்து
அதன் சுவை அலாதியானது
என்றபடி
கழுத்தில் கத்தி வைக்கிறாய்
கிழித்து திருகி
தண்ணீரில் குருதி கரைவதைப்
பார்க்கிறாய்

நீ சமைக்கும் எல்லா அசைவப் பொருளிலும்
குருதி வாசனை
மேலிடுகிறது
குருதி தான் உயிரின் வாசனை
என்கிறாய்

காலையில் விழித்ததும் இரவில் தூங்கும் முன்னரும்
நாம் சேர்ந்திருக்கக் கூடாது
என்பதற்கு எத்தனை எத்தனை காரணங்கள்!
இடைப்பட்ட வேளையில்
நீ தரும் முத்தங்கள்
அரவணைப்பு
வியர்வை எச்சில் பாலுறுப்பு நீர்
அழுகைகள் கத்தல்கள் பெருமூச்சுகள் நடுக்கங்கள் ஏக்கங்கள்
அதற்கு மேல்
ஆயிரமாயிரம் காரணங்களைத் தருகின்றன
உன் நேசத்தின் ஒவ்வொரு அத்தாட்சியும்
நாம் பிரிந்திருப்பதற்கான நியாயங்களை
மீள மீள சொல்லுகின்றன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...