உன்னை வெறுக்கும் தோறும்
மேலும் மேலும் நேசிக்கிறேன்
நேசிக்கும் தோறும்
நீ அந்நியமாகிறாய்
தொட்டால் உதிர்ந்து விடும் பூவைப் போல
பலவீனமாக இருக்கிறாய்
உன்னை முத்தமிட்டு
உதிர்த்து விட
விருப்பம் கொள்கிறேன்
நீ வாடிப் போகும் போது
கசியும் வாசனையை
உள்ளங்கையில் வைத்து முகர
ஏங்குகிறேன்
உன் கண்ணீரைத் தொட்டு
சுவைக்க
அது மெல்ல மெல்ல இனிப்பதை
விநோதமாய்
வியந்தபடி ரசிக்கிறேன்
இரவில்
உன் இதயத்துடிப்புகளை
கேட்டபடி படுக்கிறேன்
நான் தூங்க ஆரம்பிக்கும் போது
அவை நின்று போகின்றன
திடுக்கிட்டு விழிக்கும் போது
அவை படபடவென துடித்தபடி
ஒரு விடுபட விரும்பும் பறவையை போல
என்னிடம் இறைஞ்சுகின்றன
வெகுநேரம் அறியாது
ஒரு குழந்தையின் காலை
மிதித்து இருந்து விட்டது போல்
குற்றவுணர்வு அடைகிறேன்.
ஒரு பழம் அழுகிப் போன பின் தான்
கனிந்து விட்டது
என நம்புகிறாய்
தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு நினைவிழந்த
கோழியை
அப்படியே தோலுரித்து
மெல்ல நுகர்ந்து
அதன் சுவை அலாதியானது
என்றபடி
கழுத்தில் கத்தி வைக்கிறாய்
கிழித்து திருகி
தண்ணீரில் குருதி கரைவதைப்
பார்க்கிறாய்
நீ சமைக்கும் எல்லா அசைவப் பொருளிலும்
குருதி வாசனை
மேலிடுகிறது
குருதி தான் உயிரின் வாசனை
என்கிறாய்
காலையில் விழித்ததும் இரவில் தூங்கும் முன்னரும்
நாம் சேர்ந்திருக்கக் கூடாது
என்பதற்கு எத்தனை எத்தனை காரணங்கள்!
இடைப்பட்ட வேளையில்
நீ தரும் முத்தங்கள்
அரவணைப்பு
வியர்வை எச்சில் பாலுறுப்பு நீர்
அழுகைகள் கத்தல்கள் பெருமூச்சுகள் நடுக்கங்கள் ஏக்கங்கள்
அதற்கு மேல்
ஆயிரமாயிரம் காரணங்களைத் தருகின்றன
உன் நேசத்தின் ஒவ்வொரு அத்தாட்சியும்
நாம் பிரிந்திருப்பதற்கான நியாயங்களை
மீள மீள சொல்லுகின்றன
கருத்துகள்