முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நேசத்தின் அத்தாட்சிகள் - ஆர். அபிலாஷ்



உன்னை வெறுக்கும் தோறும்
மேலும் மேலும் நேசிக்கிறேன்
நேசிக்கும் தோறும்
நீ அந்நியமாகிறாய்

தொட்டால் உதிர்ந்து விடும் பூவைப் போல
பலவீனமாக இருக்கிறாய்
உன்னை முத்தமிட்டு
உதிர்த்து விட
விருப்பம் கொள்கிறேன்
நீ வாடிப் போகும் போது
கசியும் வாசனையை
உள்ளங்கையில் வைத்து முகர
ஏங்குகிறேன்
உன் கண்ணீரைத் தொட்டு
சுவைக்க
அது மெல்ல மெல்ல இனிப்பதை
விநோதமாய்
வியந்தபடி ரசிக்கிறேன்

இரவில்
உன் இதயத்துடிப்புகளை
கேட்டபடி படுக்கிறேன்
நான் தூங்க ஆரம்பிக்கும் போது
அவை நின்று போகின்றன
திடுக்கிட்டு விழிக்கும் போது
அவை படபடவென துடித்தபடி
ஒரு விடுபட விரும்பும் பறவையை போல
என்னிடம் இறைஞ்சுகின்றன
வெகுநேரம் அறியாது
ஒரு குழந்தையின் காலை
மிதித்து இருந்து விட்டது போல்
குற்றவுணர்வு அடைகிறேன்.

ஒரு பழம் அழுகிப் போன பின் தான்
கனிந்து விட்டது
என நம்புகிறாய்

தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு நினைவிழந்த
கோழியை
அப்படியே தோலுரித்து
மெல்ல நுகர்ந்து
அதன் சுவை அலாதியானது
என்றபடி
கழுத்தில் கத்தி வைக்கிறாய்
கிழித்து திருகி
தண்ணீரில் குருதி கரைவதைப்
பார்க்கிறாய்

நீ சமைக்கும் எல்லா அசைவப் பொருளிலும்
குருதி வாசனை
மேலிடுகிறது
குருதி தான் உயிரின் வாசனை
என்கிறாய்

காலையில் விழித்ததும் இரவில் தூங்கும் முன்னரும்
நாம் சேர்ந்திருக்கக் கூடாது
என்பதற்கு எத்தனை எத்தனை காரணங்கள்!
இடைப்பட்ட வேளையில்
நீ தரும் முத்தங்கள்
அரவணைப்பு
வியர்வை எச்சில் பாலுறுப்பு நீர்
அழுகைகள் கத்தல்கள் பெருமூச்சுகள் நடுக்கங்கள் ஏக்கங்கள்
அதற்கு மேல்
ஆயிரமாயிரம் காரணங்களைத் தருகின்றன
உன் நேசத்தின் ஒவ்வொரு அத்தாட்சியும்
நாம் பிரிந்திருப்பதற்கான நியாயங்களை
மீள மீள சொல்லுகின்றன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.