வி.சி.க தவெக அமைச்சரவையில் இணைந்ததை வரவேற்று எழுதியுள்ள டி. தர்மராஜ் வெற்றுக் குறிப்பானை நிரப்புவதற்கான சிறந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். அதாவது விஜய் ஒரு காலிக் குறிப்பான் என்று டி. தர்மராஜ் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். இப்போது அதை தலித் அரசியலால், அல்லது அயோத்திதாசரியத்தால், நிரப்ப வாய்ப்பு வந்துள்ளது, அதற்கான தகுதி விசிகவிடம் மட்டுமே உண்டு என்று அவர் கூறுகிறார். இங்குதான் ஒரு பிரச்சினை வருகிறது - ஒரு வெற்றுக் குறிப்பானை அவ்வாறு நிரந்தரமாக, சாராம்சமாக நிரப்ப இயலாது என்று பின்னை மார்க்ஸிய கோட்பாட்டாளர் எர்னெஸ்டோ லேக்ளோவ் (Laclau) சொல்கிறார். அவரது Hegemony and Socialist Strategy எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
"மூலகங்களில் இருந்து தருணங்கள் நோக்கிய நிலைமாற்றமானது எப்போதுமே நிறைவடைவது இல்லை."
“The transition from the ‘elements’ to the ‘moments’ is never complete.”
மூலகம் என்று அவர் சொல்வது வெற்றுக் குறிப்பானை. இந்த வெற்றுக் குறிப்பானை நேரடியாக நாம் ஒரு காலிக் கோப்பையாகப் புரிந்து கொள்ளலாகாது. இது ஒரு பொருள் அல்ல, ஒன்றை நாம் நம் இருப்பாக உணர்கிற நிலை. நான் ஒரு அரசியல் குறியீட்டைப் பார்க்கிறேன். அல்லது ஒரு கவிதையில் ஒரு வரியைப் படிக்கிறேன். அது இன்னதுதான் எனும் பொருளைக் கொண்டிருக்கும். ஆனால் அதையும் கடந்து அதற்குள் நுண்விபரங்கள் பொதிந்திருக்கும். ஒவ்வொன்றாக என் அனுபவத்தில் வெளிவரும். நான் அதை எதிர்கொள்ளும்போது அதை அல்ல, அதன் வெற்றுத்தன்மையைத் தான் அறிகிறேன். அதுவே என்னை மிகுந்த கிளர்ச்சியும் பரவசமும் (லக்கானிய பொருளில் jouissance) கொள்ள வைக்கிறது. இதனாலே டி. தர்மராஜ் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக் காளையை ஒரு வெற்றுக் குறிப்பான் உதாரணமாகக் காட்ட விரும்புகிறார். ஏனென்றால் காளை திமிறி ஓடிக் கொண்டே இருக்கும். வெற்றுக் குறிப்பானும் அப்படியே. ஆனால் அடுத்து தர்மராஜ் அவர்கள் ஒரு பிழையைச் செய்கிறார். இதை அவரது வேறு பல கட்டுரைகளிலும் நான் கண்டுள்ளேன். அவர் இக்காளையை ஒருவர் துணிந்து ஏறிக் கட்டுப்படுத்து முடிவதாகவும், 'அக்கணத்தை' இட்டு நிரப்புவதாகவும் கூறுகிறார். சரியான கருத்தியலைக் கொண்டு ஒருவரால் குறிப்பானை நிரப்பி சமூக விடுதலையைச் சாத்தியப்படுத்த இயலும் என அவர் நம்புகிறார். ஆனால் இது உண்மையல்ல. ஜல்லிக்கட்டு போட்டியில் அடங்காமல் திமிறி ஓடிக் கொண்டே இருக்குமே அக்காளைதான் வெற்றுக் குறிப்பான். அதில் நீங்கள் எதை நிரப்பினாலும் அது சில நொடிகளில் உதறிவிட்டு ஓடிவிடும். அடுத்தடுத்து நிரப்பிக் கொண்டே இருக்க மட்டுமே உங்களால் முடியும். குறிப்பான் இதனால் ஒரேசமயம் நிரப்பப்பட்டதாகவும் வெற்றாகவும் நீடிக்கும். அதாவது நிபந்தனைக்குட்பட்டு மட்டுமே அதை 'நிரப்ப' இயலும். சாராம்சமாக அல்ல.
யோசித்துப் பாருங்கள் - விஜய்யின் மீது தொடர்ந்து பல்வேறு முரண்பட்ட கருத்தியல்கள் நிரப்ப்படும். அதனால் விஜய்யின் மீது பொருளியல் முதலீட்டை செய்வோருக்கு மட்டுமே லாபமிருக்கும். சமூக மாற்றம் விளைய முடியாது. ஏனென்றால் அதன் இயல்பே நீர்மைதான். அதனாலே லேக்ளோவ் நிலைமாற்றம் முடிவற்றது என்கிறார். அதாவது பத்தாண்டுகள் இப்படி, அதன்பின் அப்படி எனும் காலமாற்றத்தை அவர் சொல்லவில்லை. கணப்பொழுதின் மாற்றங்களை அவர் குறிப்பிடுகிறார்.
சொல்லப் போனால், இது ஒரு அசல் பின்நவீனத்துவ நிலை. இதனாலே பின்நவீனத்துவ எதிர்ப்பாளர்கள் இது நவ-பாசிசத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்கிறார்கள். அதை விடுவோம். டி. தர்மராஜ் முன்வைப்பது ஒரு கற்பனை மட்டுமே என நான் நினைக்கிறேன். அவர் சொல்வதில் பாதி மட்டுமே சரி. நிரப்பலாம், ஆனால் நிரப்பி முடித்ததும் அது அங்கிருக்காது, மற்றொன்று வந்துவிடும்.
லேக்ளோவ் இன்னொன்றையும் குறிப்பிடுகிறார் - பல்வேறு தரப்புகளின் மாறுபட்ட கோரிக்கைகளை (இஸ்லாமியர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தலித்துகள், தமிழ்ச் சூழலில் என்றால் 'திராவிடத்தால் கைவிடப்பட்டதாக உணரும் பிராமணர்கள்', மூடுண்ட கோபத்தில் தவிக்கும் ஜென் ஸி தலைமுறை, இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக ஆதரவு அதிமுகவினர்) ஒன்றாக இணைக்கும் பாலமாக வெற்றுக் குறிப்பான் இருக்கும். இவர்கள் இடையே பொருத்தப்பாடின்மை இருக்கலாம். கொள்கை அளவில் அவர்கள் பரஸ்பரம் எதிர்க்கலாம். ஆனால் குறிப்பான் வெற்றாக உள்ளதாலே (அது எதையும் அறுதியாக ஏற்காததால்) இந்த முரண்களை அதனால் ஏற்றுக் கொள்ள முடியும். வடநாட்டில் இப்போது கரப்பான்பூச்சி கட்சி என ஒரு பகடிக் கட்சி தோன்றியுள்ளது. அதுவும் ஒரு வெற்றுக் குறிப்பானே.
இது நாம் வழக்கமாகப் புரிந்துகொள்ளும் 'கூட்டணி' அல்ல - ஒரு கணத்தில் விஜய் அயோத்திதாசர் ஆவார், அடுத்து பெரியார், அடுத்து மும்மொழிக் கொள்கை எதிர்ப்பாளர், உடனே புதிய கல்விக் கொள்கை ஆதரவாளர், அடுத்து ரௌடியை அமைச்சராக்கியவர், அதற்கு அடுத்து போலிச் செய்திகளைப் பரப்புபவர், அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை ஒழிப்பவர், அதற்கு அடுத்து தமிழ்நாட்டின் ஒரே காவலர், மொழிக் காதலர், தமிழ் மண்ணின் கார்ல் மார்க்ஸ், இஸ்லாமிய சகோதரர், இந்துத்துவ ஆதரவாளர் இப்படியே போய்க் கொண்டிருப்பார். பத்து தலைகளுடன் நிற்கும் ராவணனாக இருப்பார். இத்தலைகளும் அடுத்தடுத்து கழற்றி வைக்கப்பட்டு புதிதாக தலைகள் வைக்கப்படும். மக்களாட்சி அரசியல் இனி இப்படியே இருக்கும் என்கிறார் லேக்ளோவ்.
இதன் சிக்கல் ஒரு நீடித்த வலுவான மாற்றம் இதன் இயல்பிலேயே சாத்தியமில்லை. ஏனென்றால் இதில் சாராம்சமான தலித் அடையாளமே இருக்க முடியாது (எந்த அடையாளமுமே இருக்க இயலாது). அயோத்திதாசர் ஒரு "வாம்மா மின்னல்" ஆகிவிடுவார். அந்த வந்து போகும் கணத்தில் சில விசயங்கள் சாத்தியமாகும். மறுக்கவில்லை. ஆனால் கூடவே "இடி மழையும்" தாம் வரும். சகோதரத்துவ சக்திகள் இணைந்து பேசும்போதுள்ள ஆற்றல் இருக்காது.
ஜல்லிக்கட்டுக் காளை தன்னைக் கைப்பற்றியவரை சில நொடிகள் பார்வையாளரிடம் காட்டுவது (அமைச்சர் பதவி அளித்தல்) ஒரு டோக்கனிஸமாக மாற சாத்தியம் உண்டு. இதைக் குறித்து ஸிஸெக் சொல்வது கவனிக்கத்தக்கது - என்னதான் ஒரு ஒற்றைக் குறிப்பான் முரண்பட்ட கருத்தியல்களை உள்வாங்கி சமநிலையைத் தரும் என்று லேக்ளோவ் நினைத்தாலும் பல சமயங்களில் பன்மைக் கலாச்சார அரசியல் ஒரு ஒற்றை அடையாளத்தின் (அதிகார மையத்தின் நீட்சி) தொடர்ச்சியை மறைக்கவே முன்வைக்கப்படுகிறது என்கிறார் அவர். தவெகவுக்கு பல்வேறு முரண்பட்ட நிலைப்பாடுகள் இருப்பினும் அது தொடர்ச்சியாக ஓடுகிற ஒரு பாதை இருக்கும். அது சென்று சேரும் இலக்கு இருக்கும் (மதவாதம், சாதிய மேலாதிக்கம், இந்து ராஷ்டிரம்). ஒருவேளை அப்படி இருக்கும்பட்சத்தில் இந்த வெற்றுக்குறிப்பான் என்பதே ஒரு உருமறைப்பு (camouflage) தானோ? தொடர்ந்து தலித்துகளுக்கு உச்ச பதவிகளில் இடமளிக்கும் பாஜக இதற்குச் சிறந்த உதாரணம். மதத்தின் அடிப்படையில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வர பாஜக முயன்ற போது அவர்கள் அமைதியாகத்தானே பார்த்திருந்தார்கள்? தலித்துகளின் பூர்வமதம் இந்து மதம் என்பதே மோடி, அமித் ஷாவின் நம்பிக்கை. அதையே அவர்கள் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார்கள். தலித்தியம் இதை எதிர்த்துத் தோன்றிய ஒரு இயக்கம். குடியுரிமைச் சட்டம் இதை இன்னும் வலுவாக நிலைநிறுத்தும். வெற்றுக் குறிப்பான் அரசியலில் நியாயமாக இதையெல்லாம் பேசுவதற்கு, மேலாதிக்கத்தை சமரசம் பண்ண வைப்பதற்கு சாத்தியம் இருக்க வேண்டும். ஆனால் எதார்த்தத்தில் அப்படி ஒன்றும் நடப்பதில்லை. வெற்றுக் குறிப்பான் அரசியல் மற்ற எல்லா அரசியல்களையும் போல அதிகாரத்துக்காகவும் பணத்துக்காகவும் தனிநபர்கள் மௌனம் காக்கிற அரசியலாகவே நடைமுறையில் உள்ளது.
வெற்றுக் குறிப்பானாக நீடிக்க இயலாத சிக்கலை மட்டுமல்ல, ஒரேயடியாக சில காலம் உறைந்து போவதை அல்லவா இது காட்டுகிறது? ஒருவர் அதிகாரத்தை அடையும்போது அவரது நோக்கம் விடுதலை அல்ல, மேலாதிக்கத்தை தன் வசப்படுத்தி மேலாதிக்கமாகவே மாறுவதுதான். அப்போது கருத்தியல் நெகிழ்வுத்தன்மை சந்தர்ப்பவாதம் ஆகக் கூடும் அல்லவா? அங்கு வெற்றுக் குறிப்பான் மேலாதிக்கத்தை அடைவதற்கான கருவியாகக் கூடும் அல்லவா?
இச்சிக்கலை லேக்ளோவ்வும் மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார் - தொடர்ச்சியான மாற்றங்களும் முடிவின்மையுமே மேலாதிக்கத்தை எதிர்கொள்ளும் போராட்டம் என்கிறார்.
பி.கு: நான் ஏன் இக்கேள்வியை விசிகவிடம் வைக்கிறேன் என்றால் விசிக மட்டுமே அறத்தை, நீதியை, அறிவார்ந்த சிந்தனையைத் தன் இலக்காக வைத்துப் பயணிக்கிறது. அதுவே அக்கட்சிக்கு ஒரு ஒளியூட்டத்தைக் கொடுக்கிறது. நாம் அந்த ஒளியைக் கண்டதும் கைகூப்புகிறோம். இதுவே விசிகவின் சிறப்புத் தகுதி. இதுவே தொடர்ந்து திருமா முதல்வராக வேண்டும் என்று அறிவுத்தரப்பில் சிலர் கோருவதற்குக் காரணம். இயல்பாகவே, இதுவே அவர்களின் பலவீனமும்.
கருத்துகள்