முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சைவ உணவு எனும் புதிர்



சைவம் மட்டுமே உண்டு வருவோர் வயதானதும் மிகவும் தளர்ந்து போவதை அதிகமாகக் காண்கிறேன். இது போக பல நரம்பியல் சிக்கல்கள், தோல் பிரச்சினைகள், தசையிழப்பினால் வரும் தளர்ச்சியும் ஏற்படுகின்றன. வைட்டமின் பி 12 இல்லாமை, omega-3 fatty acids, particularly eicosapentaenoic acid (EPA) மற்றும் docosahexaenoic acid (DHA) ஆகியற்றின் போதாமையால் இது நிகழும் என்கிறார்கள். இது ஏதோ நான் அரைகுறையாய் கவனித்துக் கண்டுபிடித்தது அல்ல. Impact of Vegan and Vegetarian Diets on Neurological Health: A Critical Review எனும் கட்டுரையில் இதைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்கள். வீகன் உணவுகள் இன்னும் மோசம் என்கிறார்கள்.

முக்கியமான காரணம்: நாம் வீடு, கார், பயணம் போன்ற உடைமைகள், வசதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணவுக்கு அளிப்பதில்லை. ஒருவர் பெரிய வீட்டில் வாழ்வார். வங்கியில் பணமிருக்கும். ஆனால் காலையில் உப்மாவோ இட்லியோ சாப்பிடுவார். வேக வைத்த காய்கறி, முட்டை, சிக்கன், பனீர், சீஸ் எல்லாம் அவருக்கு அதிகச் செலவாகத் தெரியும். அது மட்டுமல்ல சிலர் காரெடுத்துப் போய் வசந்த பவன் போய் இட்லி சாப்பிடுவார்கள். பொங்கலை முழுங்குவார்கள். அதற்கு ஆகும் பணத்தில் முட்டையும் கறியும் தாராளமாகச் சாப்பிடலாம். மீன் இன்னும் உன்னதமான உணவு. ஆனால் அதன் நாற்றம் காரணமாக சைவர்களுக்கு அதன் மீது ஒரு வெறுப்பு வருகிறது. ஆனால் மீனைத் தொடர்ந்து உண்டால் தோல் மினுமினுப்பாக இருக்கும். குழந்தைக்கு எட்டு வயதில் சோடாபுட்டி கண்ணாடி தேவையிருக்காது. நரம்புத் தளர்ச்சி வராது. என்ன பிரச்சினை என்றால் நாம் உணவை ஒரு கலாச்சாரமாகப் பார்க்கிறோம். இந்த சமூக மேல்நிலையாக்கம் சார்ந்த கலாச்சாரம் நம்மூரில் ஒரு பெரிய சிக்கல்.
என் நண்பர் ஒருவர் வேலை செய்யும் இடத்தில் சைவ உணவுக்காரர்கள் அதிகம். அவர் ஒருநாள் காலையில் மாட்டுக் கறி வறுவலை எடுத்துப் போய் காலையுணவாக அதைச் சாப்பிட கூடப் பணி செய்வோர் முகத்தை அஷ்டகோணலாக்க அவர் அதற்கு மேல் எடுத்துச் செல்ல வேண்டாம் என முடிவு செய்துவிட்டார். அறிவுள்ளவர்கள் இவர் சாப்பிடும் உணவில் எவ்வளவு புரதம், நல்ல கொழுப்பு உள்ளது, நாம் சாப்பிட்ட இட்லியில் என்ன இருந்தது என சத்துக்களின் அடிப்படையில் சிந்திப்பார்கள், ஆனால் கலாச்சார ரீதியாகப் பார்ப்பவர்கள் அடப்பாவி மாட்டையா காலையில் தின்கிறாய் என்பார்கள். இது நம் தட்டை காலியாக வைத்துக் கொண்டு பக்கத்தில் நன்றாகச் சாப்பிடுபவனைப் பழிப்புக் காட்டுவதற்குச் சமம். நல்ல உணவைத் தின்றால் உடலில் தினவு அதிகமாக இருக்கும், ஆற்றல் அதிகம் இருக்கும், நோய்கள் குறையும். உடற்பயிற்சியும் கூட இருந்தால் இத்தகைய அதிகப் புரத உணவுகள் 40 வயதுக்கு மேல் தசைகளை இழக்க அனுமதிக்காமல் வலுவாக வைத்திருக்கும்.

இதனாலே எனக்கு இஸ்லாமிய பண்டிகைகள் மீது கூடுதலான மரியாதை. அவர்கள் அதிகமாகப் புரதச் சத்தை எடுக்கிறார்கள். அவர்களுடைய டீக்கடைகளில் கூட அசைவ உணவு வந்துவிடுகிறது. இது நல்லது. ஒரே பிரச்சினை சோற்றுக்கு ஈடாக அவர்கள் காய்கறிகள் சாப்பிடுவது இல்லை என்பது. ஆனாலும் அது வெறும் சோறாகத் தின்னும் இந்துப் பண்டிகைகளை விட மேல். இது என் தனிப்பட்ட கருத்து அல்ல. அறிவியல் ரீதியாகச் சொல்கிறேன். எங்கள் ஊரில் கோயிலில் பிரசாதம் எல்லாம் பிரமாதமாக இருக்கும். மறுக்கவில்லை. ஆனால் என்ன கொடுக்கிறார்கள் என்று நுணுக்கமாகப் பார்த்தால் பயமாக இருக்கும். எதாவது பண்டிகை என்றால் தினமும் ஒரு பாயசம். எதாவது ஒரு இனிப்புப் பண்டம். அங்கு தினமும் கோயில் போய் இதையெல்லாம் தின்றால் நீரிழிவு, ரத்தக்கொழுப்பு, மாரடைப்பு, ஸ்டுரோக் நிச்சயம். இதற்குப் பதிலாக ஒருநாள் மீன் கறி, இன்னொரு நாள் நூறு கிராம் மாட்டுக்கறி, அடுத்த நாள் 100 கிராம் சிக்கன் இதையெல்லாம் நம் கோயில்களில் கொடுத்தால் பக்தர்கள் ஆரோக்கியம் பெருகும். மீண்டும் சொல்கிறேன் - நான் இதை ஒரு நாத்திகனாகச் சொல்லவில்லை. அறிவியல் பூர்வமாகவே சொல்கிறேன்.

நல்ல சத்தான உணவின் மீது அருவருப்பே வரக் கூடாது. ஆனால் பௌத்தம், ஜைனத்தின் வளர்ச்சியின் விளைவாக இந்து மதமும் புலால் உண்ணாமையைத் தம் வசமாக்க அதன் மீது சாதியப் படிநிலையும் கட்டி எழுப்பப்பட இன்றுள்ள குழப்பமான சூழலில் வந்து நிற்கிறோம்.
இதன் பொருள் சைவ உணவே உட்கொள்ள முடியாது என்பதல்ல - வைட்டமின்னும் பிற ஊட்டச்சத்துக்களும் மாத்திரைகளாக உட்கொள்ளக் கூடியவைதாம். ஆனாலும் எந்தளவுக்கு உடலில் இவை சேரும் என்பதில் நிச்சயமில்லை. இது மட்டுமல்ல, இந்த ஊட்டச்சத்துக்கள் நம் குடலில் உள்ள நல்ல நுண்ணியிர்களையும் பெருக வைக்கும். நல்ல கொழுப்பும் நிறைய காய்கறிகளின் நார்ச்சத்தும் குடல் ஆரோக்கியத்துக்கு அவசியம். மாத்திரைகளால் அதைச் செய்ய இயலாது.

அதனால்தான் எனக்கு சைவ உணவுப் பழக்கம் நம்மூரில் முன்பு தோன்றிய சாதி, மதப் போட்டிகளின் விளைவாகவும் பஞ்சம் காரணமாகவும் விளைந்த ஒரு விபத்து என நினைக்கிறேன். அதைப் பிடித்துத் தொங்க வேண்டியதில்லை. மாட்டால் வெறுமனே புல்லையும் தழையையும் சாப்பிட்டு புரதத்தை உற்பத்தி செய்ய இயலும். அதற்கான ஆற்றல் அதன் உடலில் உண்டு. நமக்கு அது இல்லை. பண்பாட்டு மேலுருவாக்கத்துக்காக, அல்லது வெட்டி பந்தாவுக்காக, அல்லது சிறுவயதுப் பழக்கம் காரணமாக நம் உடலை ஏன் இப்படி வருத்துகிறோம் என்பது எனக்குப் புரியாத புதிர்.

பி.கு: மேற்சொன்ன வியாதிகள் சைவ உணவால் மட்டுமே வருகிறது என்று நான் கூறவில்லை.

மேலும் தெரிந்து கொள்ள
Clemente-Suárez VJ, Redondo-Flórez L, Martín-Rodríguez A, Curiel-Regueros A, Rubio-Zarapuz A, Tornero-Aguilera JF. Impact of Vegan and Vegetarian Diets on Neurological Health: A Critical Review. Nutrients. 2025 Feb 28;17(5):884. doi: 10.3390/nu17050884. PMID: 40077754; PMCID: PMC11901473.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...