முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவலாசிரியரின் குறிப்புகள் 16

 


நேற்று இரவு ஒரு அரசியல் நேர்முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆளுங்கட்சியின் ஆலோசகரும் அமைச்சருமான ஒருவரைக் குறிப்பிட்டு அவர் ஒரு குட்டிச்சாத்தான், அவருக்கு தொடர்ந்து வேலை கொடுக்கவில்லை என்றால் அவர் உங்களை முழுங்கிவிடுவார் என்று சொன்னார். எனக்கு அந்த உருவகம் ரொம்ப உயிர்ப்பாக, வித்தியாசமாகத் தோன்றியது. நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் வரும் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்துக்கு அந்த குட்டிச்சாத்தனின் இயல்பு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கலாம், கதையமைப்பையும் அது வலுவாக்கும் எனத் தோன்றியது.

உடனே இரவுணவை முடித்துவிட்டு அதை எழுத வேண்டும் எனத் தீர்மானித்தேன். கொஞ்ச நேரம் வேறென்னென்னமோ செய்திருந்துவிட்டு சட்டென நாவலைத் திறந்து எழுத ஆரம்பித்ததும் கடும் புயல் மழையில் வீட்டின் சுவர்களைப் பெயர்த்துக் கொண்டு வெள்ளம் பாய்வதைப் போல சொற்கள் பெருக்கெடுத்து ஓடின. விடியும்போதுதான் எழுதுவதை நிறுத்தினேன். எழுதும்போதே அது நன்றாக வந்துள்ளதாக உணர்ந்தேன். ஒரு அரசியல் நேர்முகத்தில் இருந்து என் நாவலுக்கு ஒரு திறப்பு வருமென யாராவது சொல்லியிருந்தால் கட்டாயம் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் நாம் எதைச் செய்தாலும், படித்தாலும், பார்த்தாலும், கேட்டாலும், நுகர்ந்தாலும், ஸ்பரிசித்தாலும் மனம் நாவலையே ஒருபுறம் சிந்தித்துக் கொண்டிருக்கிறது. நாம் நாவலை எழுதாத போதும் அதை நம் ஆழ்மனத்தில் எழுதிக் கொண்டே இருக்கிறோம். அதனாலே எனக்குச் சில நேரங்களில் ஒரு படைப்பாளி எதையும் எழுதாமல், செய்யாமல் நேரத்தை வீணடிப்பது, வெட்டியாய் பொழுதைக் கழிப்பது நல்லது என்று தோன்றும். அப்போது அவர் தன் மனத்தை மட்டும் தீவிரமாக, ஒரு கொதி நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒரு நாள் முடியும்போது அவர் ஒன்றையும் எழுதாவிட்டாலும் மிகவும் களைப்பாக உணர்வார். அவரது படைப்பு மனம் அவர் எழுதாத போழுதை விட அப்போது மிகத்தீவிரமாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை அவர் அறிய மட்டார். அவர் அறியாதபோது மட்டுமே அது நிகழும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...