நேற்று இரவு ஒரு அரசியல் நேர்முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆளுங்கட்சியின் ஆலோசகரும் அமைச்சருமான ஒருவரைக் குறிப்பிட்டு அவர் ஒரு குட்டிச்சாத்தான், அவருக்கு தொடர்ந்து வேலை கொடுக்கவில்லை என்றால் அவர் உங்களை முழுங்கிவிடுவார் என்று சொன்னார். எனக்கு அந்த உருவகம் ரொம்ப உயிர்ப்பாக, வித்தியாசமாகத் தோன்றியது. நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் வரும் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்துக்கு அந்த குட்டிச்சாத்தனின் இயல்பு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கலாம், கதையமைப்பையும் அது வலுவாக்கும் எனத் தோன்றியது.
உடனே இரவுணவை முடித்துவிட்டு அதை எழுத வேண்டும் எனத் தீர்மானித்தேன். கொஞ்ச நேரம் வேறென்னென்னமோ செய்திருந்துவிட்டு சட்டென நாவலைத் திறந்து எழுத ஆரம்பித்ததும் கடும் புயல் மழையில் வீட்டின் சுவர்களைப் பெயர்த்துக் கொண்டு வெள்ளம் பாய்வதைப் போல சொற்கள் பெருக்கெடுத்து ஓடின. விடியும்போதுதான் எழுதுவதை நிறுத்தினேன். எழுதும்போதே அது நன்றாக வந்துள்ளதாக உணர்ந்தேன். ஒரு அரசியல் நேர்முகத்தில் இருந்து என் நாவலுக்கு ஒரு திறப்பு வருமென யாராவது சொல்லியிருந்தால் கட்டாயம் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் நாம் எதைச் செய்தாலும், படித்தாலும், பார்த்தாலும், கேட்டாலும், நுகர்ந்தாலும், ஸ்பரிசித்தாலும் மனம் நாவலையே ஒருபுறம் சிந்தித்துக் கொண்டிருக்கிறது. நாம் நாவலை எழுதாத போதும் அதை நம் ஆழ்மனத்தில் எழுதிக் கொண்டே இருக்கிறோம். அதனாலே எனக்குச் சில நேரங்களில் ஒரு படைப்பாளி எதையும் எழுதாமல், செய்யாமல் நேரத்தை வீணடிப்பது, வெட்டியாய் பொழுதைக் கழிப்பது நல்லது என்று தோன்றும். அப்போது அவர் தன் மனத்தை மட்டும் தீவிரமாக, ஒரு கொதி நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒரு நாள் முடியும்போது அவர் ஒன்றையும் எழுதாவிட்டாலும் மிகவும் களைப்பாக உணர்வார். அவரது படைப்பு மனம் அவர் எழுதாத போழுதை விட அப்போது மிகத்தீவிரமாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை அவர் அறிய மட்டார். அவர் அறியாதபோது மட்டுமே அது நிகழும்.
கருத்துகள்