மக்களாட்சியில் ஒரு நிலைகுலைவு - தேர்தல் மோசடி, வாக்கு எந்திர மோசடி, சினிமாக்காரர்களை வைத்து அரசியலைக் கைப்பற்றும் லாட்டரித் தொழிலதிபர் மோசடி - வரும்போது கிடைக்கிற ஊடகங்களைப் பயன்படுத்தி மக்கள் அரசியல் பேசுவது நல்லது - அதனால் மக்களுக்கு நேரடியாகப் பணம் வரப் போவதில்லை. மக்கள் அரசியல்வாதிகள் அல்லர். அரசியல் அவர்களுக்குத் தொழில் அல்ல. ஆனாலும் அரசியல் அவர்களுடைய வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கிறது. உதாரணமாக, ஒரு அரசாக நீங்கள் அமெரிக்க சார்பா, ரஷ்ய சார்பா என்பது உங்கள் நாட்டின் எண்ணெய் இறக்குமதியை பாதிக்கும். அது பொருளாதார நெருக்கடிக்கு, விலைவாசி உயர்வுக்கு இட்டுச் செல்லும். அண்மையில் நாட்டின் பிரதமரே இதை ஒப்புக் கொண்டார். மக்கள் மட்டும் அரசியல் பேசாமல் தம் போக்கு இருந்தால் அவர்கள் வேறு நாட்டுக்குத்தான் குடிபெயர வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாதபோது மக்கள் பேசியே ஆக வேண்டும்.
மக்களாட்சி ஒழுங்காக நடக்கும்போது மட்டுமே மக்களால் - பொழுதுபோக்கு, படைப்பாக்கம், வாசிப்பு என - கொஞ்சம் சுயநலமாக இருக்க ஈயலும்.
சினிமா அரசியலுக்குள் வரும்போதெல்லாம் சாக்கடை நம் தண்ணீரில் கலக்கிறது, பின்வாசல் வழியாக பொருளாதார குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளைக்காரர்கள், மோசடிக்காரர்கள் வந்து பிரதிநிதிகளையும் ஊடகங்களை விலைக்கு வாங்கி மாநிலத்தை கைப்பற்றப் போகிறார்கள் எனப் பொருள். அவர்களுக்கு அரசியல் என்பது நீண்ட காலத் தொழில் அல்ல. அது தற்காலிக அஸைன்மெண்ட். ஒரு கொள்ளைக் கூட்டம் வந்து உள்ளே புகுந்து பல ஆயிரம் கோடிகளை அபகரித்து விட்டுப் போய்விடுவார்கள். அவர்கள் இவ்வாறு ஏற்படுத்தும் பாதிப்பு மோசமாக இருக்கும். அவர்கள் யாருக்கும் கடமைப்பட்டவர்கள் அல்லர் என்பதால் நீங்கள் அவர்கள் மீது குற்றம் சுமத்தி நடவடிக்கை எடுப்பது கடினம். குரோனி தொழிலதிபர்கள் ஊழல் அரசியல்வாதிகளை விட ஆபத்தானவர்கள். குரோனி தொழிலபதிபர்களே (மார்ட்டின் குடும்பத்தினர்) இன்று தமிழ்நாட்டை நேரடியாக ஆள்கிறார்கள்.
லாட்டரியின் விளைவுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்: ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவரது அப்பா தினசரி லாட்டரி வாங்கும் போதைக்கு ஆட்பட்டிருந்தார். சில ஆயிரங்களைத் தவிர அவர் எதையும் லாட்டரி மூலம் வெல்லவில்லை. பல லட்சங்களை இழந்துவிட்டார். அப்பணம் இருந்திருந்தால் அவர் ஒரு வீடு கட்டியிருக்கலாம், தன் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்திருக்கலாம். இம்மாதிரி குடும்பங்களை ஏமாற்றிப் பறித்த பல லட்சம் கோடிகளையே மார்ட்டின் இன்று அரசுகளை விலைக்கு வாங்கப் பயன்படுத்துகிறார். அவர் மீது பல ஆயிரம் கோடி முறைகேடு குற்றச்சாட்டுகள், வழக்குகள் உண்டு. ஆனால் பணத்தை அள்ளி இறைத்து தப்பித்து விடுகிறார். ஒரேயடியாக அதிகாரம் தம் வசம் இருந்தாலே வழக்குகள் இன்றி கொள்ளையடிக்க முடியும் என்றே அவர் அரசையே கைப்பற்றுகிறார். அவரது பணத்தின் துணிச்சலைக் கொண்டே இன்று ஆதவால் ஒரு கட்சியைத் துவங்கி, அதில் விஜய்யை பொம்மைத் தலைவராக்கி ஆட்டுவித்து, அப்பணத்தைக் கொண்டே விகடன், தந்தியையே வாங்க முடிந்தது என்கிறார்கள். யோசித்துப் பாருங்கள் - எப்படியான ஊடக நிறுவனங்கள் இவை. அப்பணத்தைக் கொண்டே அவர் திமுக கூட்டணிக் கட்சிகளை வாங்குகிறார். அதிமுக எம்.எல்.ஏக்களை பதவி விலக வைக்கிறார். ஊழல் பணத்தை வைத்து அரசியல் செய்வதை விட லாட்டரிப் பணமான மக்களின் குருதிப் பணத்தை வைத்து ஆட்சி நடத்துவது கொடூரமானது. எத்தனையோ கோடி பேர்களின் சாபம் அப்பணத்தின் பின் உள்ளது.
ஒரு குற்றவாளி வந்து மிகச் சுலபமாக இதையெல்லாம் சாதிக்கிறார். மக்கள் விஜய், விஜய் என்று சாதாரணமாக இதைக் கண்டு ஏமாறுகிறார்கள். அறிவுஜீவிகள் இது இளைஞர் புரட்சி, வெகுமக்களின் வருகை, தூய லட்சியவாதம் என மயங்குகிறார்கள்.
பாதிக்கப்படும் மக்கள், பொறுப்புணர்வுள்ள குடிமைச் சமூகம் எச்சரிக்கையாகி இதை எதிர்க்க வேண்டும். நான் எழுதினால், பேசினால் என்ன நடந்துவிடும் என நினைக்கலாகாது. சார்த்தர் சொன்னதைப் போல ஒரு தனிமனிதர் ஒன்றைக் குறித்து நினைப்பது, அதை நோக்கிச் செயல்படுவது, ஒரு சொல்லைச் சொல்வது, ஒரு விரலை அசைப்பது கூட அரசியல்தான். அது ஏதோ ஒரு சலனத்தைச் சமூகத்தில் ஏற்படுத்தும். ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்கு அது மேல்.
கருத்துகள்