ஒரு நாவல் நம் விரல் நுனியில் இருந்து தோன்றவில்லை. அது நம் அனுபவச் சேகரிப்பில் இருந்து மட்டும் வரவில்லை. ஒரு நாவல் நம் மொழிக்குள் இருந்து அசலாக எழுந்து வருகிறது.
நம் மொழியே நம் மனம். ஆக, நாம் நாவலை எழுதுகையில் நம் மனத்தையே எழுதுகிறோம். மனத்தின் ஒரு பகுதியை நாவலாகக் கட்டமைக்கிறோம். அது தன்னையே படைக்கும் ஒரு படைப்பு. நாவலை அவ்விதத்தில் கனவுடன் ஒப்பிடலாம். நாம் ஒரு கனவைக் ‘காண்கிறோம்’.
ஆனால் கனவு எழும்போது அது தன்னையே படைக்க ஆரம்பிக்கிறது. அது ‘தான்’ அதுவரைக்கும் எப்படியெல்லாம் இருந்தோமோ எனக் கருத்திற்கொண்டு அப்படியெல்லாம் இருக்க முடியுமோ, இருக்கக் கூடாதோ அதையெல்லாம் பரிசீலித்துப் பார்த்து தன்னையே கற்பனை செய்து படைக்கிறது. அதனால்தான் நாம் ஒரு கனவில் சிக்கியிருக்கையில் அவ்வளவு திகைப்பாக அதை உணர்ந்தபடியே கவனிக்கவும் செய்கிறோம். நாம் கனவிலும் இருக்கிறோம், கனவு நம்மில் இருந்து வளர்வதையும் கண்டு திகைக்கிறோம். கனவு நம்மில் இருந்து தோன்றவும் செய்கிறது, அது நமக்குள் இருந்து நம்மையே படைக்கவும் செய்கிறது.
எனக்குள் இருந்து நாவலை எழுதுகிறவர் ஒரு படைப்பாளியா அல்லது என் நாவலே ஒரு ‘படைப்பாளிதானா’? என் நாவலே ஒரு படைப்பாளி எனில் நான் அங்கு என்ன செய்கிறேன்? நான் அவருக்காக என் உடலால் ஒரு பலிச்சடங்கைச் செய்கிறேனா? நான் என்னையே அதற்கு வார்க்கிறேனா?
இதை ஏன் சொல்கிறேன் என்றால் என்னதான் நாவலைத் தொடர்ந்து எழுதுவது என்னை ஒரு மிதமிஞ்சிய நிறைவுணர்வில் வைக்குமென்றாலும், அதில் ஒரு ஒப்பற்ற இன்பமும், உலகத்துப் பிரச்சினைகளும், அன்றாடத்தின் அழுத்தமும் என்னை அண்ட விடாத ஒரு அனுபூதி எப்போதும் இருக்குமென்றாலும் மொத்தமாக புத்தகத்தை நிறைவு செய்ததும் நான் என் மனத்தின் ஒரு பகுதியையும் என் உடல் நிலையின் ஒரு பகுதியையும் அதற்காக நேர்ச்சை வைத்துவிட்ட ஒரு குறைவான உணர்வே எனக்கு இறுதியில் இருக்கும். கடைசி அத்தியாயத்தை நான் எழுதி முடித்ததும் நான் நோயில் விழுவதில்லை. ஆனாலும் எதுவோ ஒன்றை இழந்திருக்கிறேன் - தூலமாக இதுதான் என்று சொல்ல முடியாத ஒன்றை, எனக்கு மட்டும் புலப்படுகிற, என்னால் பிறரிடம் விளக்க முடியாத ஒன்றை.
நாவலை நாமே படைக்கிறோம் என்றால் அதை எழுதி முடித்ததும் அதை இழப்பதாக உணர மாட்டோம். நாம் நம் நாவலை இழக்கவில்லை. அது நம் கணக்கில்தான் வருகிறது. புத்தகமாக வெளியானதென்றால் அது நம்முடைய சாதனைகளில் ஒன்றாகிறது. ஆனாலும் எதை இழந்ததாக உணர்கிறோம்? நாவலை எழுதுகையில் கிடைத்த ஒரு பெரும் போதையையா, அதன் மிதப்பையா? எனில் அந்த தக்கையான உணர்வு ஏன் வரவேண்டும்? அந்த தடுமாற்றம், எதிலும் பொருந்திப் போக முடியாத தத்தளிப்பு? நம் மனம் குறித்து நாம் உருவாக்குகிற கோட்பாடுதான் நாவல் எனில் நாம் அக்கோட்பாட்டையே இழக்கிறோம். மீண்டும் நம் மனத்தை எதையோ கொண்டு தூக்கி நிறுத்த வேண்டும். அதற்கு நீண்ட காலம் ஆகும். அதனாலே நாவலைத் தீவிரமாக எழுதி முடித்தவர்கள் சட்டென மன அழுத்தத்திற்குள் விழுகிறார்கள்.
நாவலை நாம் எழுதினால் இப்பிரச்சினை வராது. நாவல் நம்மை எழுதுவதாலே அது கழன்று சென்றதும் இவ்வளவு நம்மை அலைகழித்து ஒரு வெறுமையில் கொண்டு தள்ளுகிறது.
நாவல் நம்மையே எழுதுவதால்தான் அதில் நிகழும் பல மேஜிக்குகள் எப்படி வந்தன என்று நம்மால் சொல்ல முடியாமல் போகிறதா? அதனால்தான் அது ஏன் சரியாக அமைந்து வரவில்லை என்று தெரியவில்லையா?
நாவலாசிரியரும் நாவலும் ஒன்று எனில் வாசிப்பவர்? வாசிக்கையில் அவரிடத்து இருந்தும் வாசிப்பின் சமகாலத்தில் உருவாகும் ஒரு நாவல்தான் நாவலை வாசிக்கிறதா?
கருத்துகள்