முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவலாசிரியரின் குறிப்புகள் - 17

 

ஒரு நாவல் நம் விரல் நுனியில் இருந்து தோன்றவில்லை. அது நம் அனுபவச் சேகரிப்பில் இருந்து மட்டும் வரவில்லை. ஒரு நாவல் நம் மொழிக்குள் இருந்து அசலாக எழுந்து வருகிறது.
நம் மொழியே நம் மனம். ஆக, நாம் நாவலை எழுதுகையில் நம் மனத்தையே எழுதுகிறோம். மனத்தின் ஒரு பகுதியை நாவலாகக் கட்டமைக்கிறோம். அது தன்னையே படைக்கும் ஒரு படைப்பு. நாவலை அவ்விதத்தில் கனவுடன் ஒப்பிடலாம். நாம் ஒரு கனவைக் ‘காண்கிறோம்’.
ஆனால் கனவு எழும்போது அது தன்னையே படைக்க ஆரம்பிக்கிறது. அது ‘தான்’ அதுவரைக்கும் எப்படியெல்லாம் இருந்தோமோ எனக் கருத்திற்கொண்டு அப்படியெல்லாம் இருக்க முடியுமோ, இருக்கக் கூடாதோ அதையெல்லாம் பரிசீலித்துப் பார்த்து தன்னையே கற்பனை செய்து படைக்கிறது. அதனால்தான் நாம் ஒரு கனவில் சிக்கியிருக்கையில் அவ்வளவு திகைப்பாக அதை உணர்ந்தபடியே கவனிக்கவும் செய்கிறோம். நாம் கனவிலும் இருக்கிறோம், கனவு நம்மில் இருந்து வளர்வதையும் கண்டு திகைக்கிறோம். கனவு நம்மில் இருந்து தோன்றவும் செய்கிறது, அது நமக்குள் இருந்து நம்மையே படைக்கவும் செய்கிறது.
எனக்குள் இருந்து நாவலை எழுதுகிறவர் ஒரு படைப்பாளியா அல்லது என் நாவலே ஒரு ‘படைப்பாளிதானா’? என் நாவலே ஒரு படைப்பாளி எனில் நான் அங்கு என்ன செய்கிறேன்? நான் அவருக்காக என் உடலால் ஒரு பலிச்சடங்கைச் செய்கிறேனா? நான் என்னையே அதற்கு வார்க்கிறேனா?
இதை ஏன் சொல்கிறேன் என்றால் என்னதான் நாவலைத் தொடர்ந்து எழுதுவது என்னை ஒரு மிதமிஞ்சிய நிறைவுணர்வில் வைக்குமென்றாலும், அதில் ஒரு ஒப்பற்ற இன்பமும், உலகத்துப் பிரச்சினைகளும், அன்றாடத்தின் அழுத்தமும் என்னை அண்ட விடாத ஒரு அனுபூதி எப்போதும் இருக்குமென்றாலும் மொத்தமாக புத்தகத்தை நிறைவு செய்ததும் நான் என் மனத்தின் ஒரு பகுதியையும் என் உடல் நிலையின் ஒரு பகுதியையும் அதற்காக நேர்ச்சை வைத்துவிட்ட ஒரு குறைவான உணர்வே எனக்கு இறுதியில் இருக்கும். கடைசி அத்தியாயத்தை நான் எழுதி முடித்ததும் நான் நோயில் விழுவதில்லை. ஆனாலும் எதுவோ ஒன்றை இழந்திருக்கிறேன் - தூலமாக இதுதான் என்று சொல்ல முடியாத ஒன்றை, எனக்கு மட்டும் புலப்படுகிற, என்னால் பிறரிடம் விளக்க முடியாத ஒன்றை.
நாவலை நாமே படைக்கிறோம் என்றால் அதை எழுதி முடித்ததும் அதை இழப்பதாக உணர மாட்டோம். நாம் நம் நாவலை இழக்கவில்லை. அது நம் கணக்கில்தான் வருகிறது. புத்தகமாக வெளியானதென்றால் அது நம்முடைய சாதனைகளில் ஒன்றாகிறது. ஆனாலும் எதை இழந்ததாக உணர்கிறோம்? நாவலை எழுதுகையில் கிடைத்த ஒரு பெரும் போதையையா, அதன் மிதப்பையா? எனில் அந்த தக்கையான உணர்வு ஏன் வரவேண்டும்? அந்த தடுமாற்றம், எதிலும் பொருந்திப் போக முடியாத தத்தளிப்பு? நம் மனம் குறித்து நாம் உருவாக்குகிற கோட்பாடுதான் நாவல் எனில் நாம் அக்கோட்பாட்டையே இழக்கிறோம். மீண்டும் நம் மனத்தை எதையோ கொண்டு தூக்கி நிறுத்த வேண்டும். அதற்கு நீண்ட காலம் ஆகும். அதனாலே நாவலைத் தீவிரமாக எழுதி முடித்தவர்கள் சட்டென மன அழுத்தத்திற்குள் விழுகிறார்கள்.
நாவலை நாம் எழுதினால் இப்பிரச்சினை வராது. நாவல் நம்மை எழுதுவதாலே அது கழன்று சென்றதும் இவ்வளவு நம்மை அலைகழித்து ஒரு வெறுமையில் கொண்டு தள்ளுகிறது.
நாவல் நம்மையே எழுதுவதால்தான் அதில் நிகழும் பல மேஜிக்குகள் எப்படி வந்தன என்று நம்மால் சொல்ல முடியாமல் போகிறதா? அதனால்தான் அது ஏன் சரியாக அமைந்து வரவில்லை என்று தெரியவில்லையா?
நாவலாசிரியரும் நாவலும் ஒன்று எனில் வாசிப்பவர்? வாசிக்கையில் அவரிடத்து இருந்தும் வாசிப்பின் சமகாலத்தில் உருவாகும் ஒரு நாவல்தான் நாவலை வாசிக்கிறதா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...