முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கைமாறும் நூல்கள்




திருவல்லிக்கேணி சாலையோர கடைகளில் தான் நான் பல நல்ல நூல்களை வாங்கி உள்ளேன். புத்தகக் கடைகளில் போலல்லாது பல தரப்பட்ட புதிய பழைய நூல்கள் வரும். இவ்வளவு விலைவாசி ஏறினாலும் அதே விலை தான். ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அதன் நிலை, கனம், அட்டை பார்த்து ஒரு விலை மனதுக்குள் போடுவேன். இதற்கும் தரத்துக்கும் சம்மந்தமில்லை. பின் கடைக்காரரிடம் விலை கேட்பேன். அவர் எப்போதும் ஒரு ஐம்பது நூறு கூட்டி கேட்பார். ஆனால் பேரம் நிச்சயம் என் கணக்கில் படிந்து விடும். நேற்று உம்பர்த்தோ ஈக்கோவின் How to Travel with Salmon என்கிற பத்தி தொகுப்பு வாங்கினேன். 2008இல் லஷ்மி என்பவர் வாங்கி பெயரெழுதி இருக்கிறார். 


ஈக்கோவை வாங்கும் அளவுக்கு அவர் வாசிப்பு முதிர்ச்சியோ குறைந்தது உலக இலக்கிய பரிச்சயமோ கொண்டவராக இருந்திருக்க வேண்டும். இலக்கிய வெறியராக இருந்திருக்க வேண்டும். பொதுவாக இப்படியான உலக மகா எழுத்தாளனின் நூல்களை கைவிட மனம் வராது. ஆனாலும் அவர் எப்படி இந்த நூலை தூக்கி விலைக்கு போட்டிருக்க முடியும் என யோசித்தேன். அதுவும் பழைய நூல் வியாபாரிகள் கிலோ கணக்கில் தான் விலை நிர்ணயிப்பார்கள். இந்த நூலுக்கு ஐந்து ரூபாய் கிடைத்திருக்குமா? ஆனால் அசல் விலை 800. நான் வாங்கினது ஐம்பது. ஒருவேளை அவரது வீட்டில் யாராவது தூக்கி போட்டிருக்கலாம். ஏதாவது ஒரு காகித குவியலில் விழுந்து கிடந்து தெரியாமல் செய்தித் தாள் விலைக்கு போடும் போது கொடுத்திருக்கலாம். அல்லது அவர் வீடு மாறி போகும் போது வேறு வழியில்லாமல் தன் அரிய நூல்களை விற்க வேண்டி வந்திருக்கலாம். இன்னொரு சாத்தியம் யாராவது நண்பர் வாசிக்க வாங்கி திரும்ப கொடுத்தாமல் கைமறதியாய் வைத்து பின்னர் அவரே தெரியாமல் விலைக்கு போட்டிருக்கலாம்.
அப்போது இன்னொன்றும் தோன்றியது. ஏன் இவ்வளவு நல்ல விலைமதிப்பான நூல்களை கிலோ கணக்குக்கு கொடுக்க வேண்டும்? நம் புத்தகக் கடைகளிலே பழைய நல்ல நூல்களை வாங்கி தனியாய் ஒரு பிரிவில் விற்பனைக்கு வைக்கலாம். நாம் படிக்கிற அத்தனை நல்ல நூல்களும் திரும்ப திரும்ப படிக்க வேண்டியவை அல்ல. ஒரு தடவைக்கு மேல் திறக்கப்படாமல் பல புத்தகங்கள் வருடக்கணக்கில் ஏதாவது அட்டைப்பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கும். அவற்றை பாதி விலைக்கு விற்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதை புதிதாய் புத்தகக்கடை திறந்திருக்கிற வாசுதேவனிடம் சொன்னேன். அவர் இது போல் பழைய நூல்களை வாங்கி புது நூல்களை கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்தலாம் என்றார்.
ஐநூறு ரூபாய்க்கு மேல் கொடுத்து நீங்கள் வாங்கின சில ஆயிரம்பக்க நாவல்கள் இருக்கும். அவை உங்களுக்கு வாசிக்க ஆரம்பித்து பிடிக்காமல் போயிருக்கலாம். என்னிடம் சல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை”, பா.வெங்கடேசனின் “தாண்டவராயன் கதை” போன்ற வாதை புகுந்த நாவல்கள் பல இருக்கின்றன. அவற்றை படிக்க முயன்ற போதெல்லாம் ஒரு கூட்டு பலாத்காரத்துக்கு ஆளாகும் உணர்வு ஏற்பட்டு மூடி வைத்து விடுவேன். ஆனால் தூக்கி போடவும் மனம் வராது. பார்க்கும் போதெல்லாம் ஐநூறு ரூபாய் வீணாகி விட்டதே என கடுப்பாக இருக்கும்.
அவற்றை எல்லாம் வாங்கி ஒரே வாரத்தில் திரும்ப கொடுத்து வேறு ஒரு நானூறு ரூபாய் புத்தகமாக வாங்கிச் செல்ல முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஏனென்றால் நமக்கு கழுத்து வலி ஏற்படுத்தும் தலையணை நூல்கள் வேறு சிலருக்கு மயிலிறகாய் தோன்றலாம். மனுஷ்யபுத்திரன் இத்தகைய வாசகர்களை புற்றுக்குள் கைவிட்டு பாம்பு பிடிப்பவர்கள் என்பார். இவர்கள் எத்தகைய சுயவதை நூல்களையும் பதறாமல் பல் படாமல் படித்து விடுவார்கள். இந்த நூல்கள் அவர்களிடமே போகட்டுமே! நாம் புல்லாங்குழலை எடுத்துக் கொண்டு மகுடியை கொடுத்து விடுவோம். அது தானே சரியான ஜனநாயகம்.

கருத்துகள்

சேக்காளி இவ்வாறு கூறியுள்ளார்…
புல்லாங்குழல் x மகுடி. நல்ல உதாரணம் தான். ஆனால் நீங்கள் சொன்னது போல் "கழுத்து வலி ஏற்படுத்தும் தலையணை நூல்கள் வேறு சிலருக்கு மயிலிறகாய் தோன்றும்" போது மகுடி அவர்களுக்கு புல்லாங்குழலாய் தோன்றாலாமல்லவா?. எப்படியோ சிந்தனை (புத்தகங்கள் மாற்றம்) சிறப்பானது. கொடுப்பவனுக்கு மனநிறைவை(சிறிதளவேனும்) தரும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...