தன்னை
பாராட்டவில்லை என்கிற காரணத்துக்காக அசோகமித்திரனுக்கு சாகும் வயது வந்து விட்டதென்றும்
அவர் சமகால வாசிப்பற்ற தாத்தா என்றும் சாரு பழித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அதுவும் சுஜாதாவின் “கனவித்தொழிற்சாலையுடன்” அசோகமித்திரனின் படைப்புலகை ஒப்பிடுவது
சுத்த அபத்தம். அசோகமித்திரன் தமிழ் நவீனத்துவத்தின் உச்சம் என நமக்கு நன்றாகவே தெரியும்.
சாருவுக்கும் கூடத் தான். சாரு ஒருவரை ஏற்பதிலோ நிராகரிப்பதிலோ எந்த விழுமியமும் பாராட்டதவர்.
நாளை மார்க்வெஸ் ஒரு பேட்டியில் “தமிழில் ஜெயமோகன் என்றொருவரது எழுத்தை மொழிபெயர்ப்பில்
படித்து வியந்தேன்” என்று கூறினால் (அப்படி கூறமாட்டார் என்றாலும் ஒரு உ.தா-வுக்கு)
சாரு அப்படியே பல்டி அடித்து ”மார்க்வெஸ் நன்றி அறியாதவர், அவரை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதே
நான், அவர் என்னோடு ஒப்பிடுகையில் படுமொக்கையான எழுத்தாளர்” என்றும் கூறுவார்.
சாரு
தான் பல புதிய எழுத்தாளர்களை, இயக்குநர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதாக கூறுகிறார்.
இது தான் அவரது பங்களிப்பு என்றால் அது இணையத்தின் வருகையோடு காலாவதியாகி விட்டது.
சாருவின் விமர்சனம் அல்லது அறிமுகங்களில் ஒரு சொந்தக் கருத்து கூட இருக்காது. ஒன்றை
படித்து அல்லது பார்த்து தான் எப்படி வியந்தேன் என சில !!! உதிர்த்து விட்டு அதை வேறொரு
படைப்போடு ஒப்பிட்டு காட்டி விட்டு விடுவார். இது ஏனென்றால் அவருக்கு அந்த படைப்பு
உணர்வு ரீதியில் எங்கோ பிடித்திருந்தது அன்றி அவருக்கு புரியவில்லை என்பதே. இதனால்
தான் எதைப் பற்றியும் அவருக்கு எந்த அவதானிப்பும் இருப்பதில்லை. இன்னொரு காரணம் அவரது
இயல்பே எந்த விசயத்தோடும் கோட்பாட்டு அல்லது கொள்கை அல்லது விழுமிய ரீதியான ஒட்டுதல்
இல்லாமல் இருப்பது தான். ஒட்டுதல் இல்லாதவர்களுக்கு சொந்த கருத்துக்களோ நிலைப்பாடுகளோ
இருக்காது.
சாரு
இந்த காரணங்களுக்காக தொண்ணூறுகளின் இறுதி வரை புறக்க்கணிப்பட்டவர். யாருமே அவரை பொருட்படுத்தவில்லை.
பின்னர் இணையத்தின் வருகை நேர்ந்தது. தினமலர் ரமேஷின் உதவியோடு இணையதளம் ஆரம்பித்தார்.
அப்போது நுண்ணுணர்வற்ற பலர் கும்பலாக இணைய வாசிப்பு நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு சாருவின் வெற்று அரட்டை வித்தியாசமாக சுவாரஸ்யமாக இருந்தது. ஏனென்றால்
இணைய உரையாடலின் ஆதர சுருதியே அரட்டை தான். சுவாரஸ்யம் தான். ஆக சாரு தன்னை இணையத்துடன்
மறுகண்டுபிடிப்பு செய்தார். நடுநிலை இதழ் வாசகர்களுடனான சாருவின் உறவையும் இப்படித் தான் பார்க்க
வேண்டும். நடுநிலை இதழ்களை
வாசிக்கும் வாரமலர் வாசகர்கள் சாருவின் நேரடியான அலசலோ அறிவார்த்தமோ அற்ற உணர்ச்சிகரமான
பதிவை விரும்பினார்கள். சாருவுக்கும் விகடன், வாரமலர் எழுத்தாளருக்குமான ஒரே வித்தியாசம்
கலாச்சாரம் தான். அவர் ஒரு எதிர்கலாச்சாரத்தை முன்வைத்தார். அதனால் ஜனரஞ்சக வாசகர்களுக்கு
தமக்கு பழக்கமான ஜாலி எழுத்தை வாசிக்கவும் முடிந்தது, அது மேலானது வித்தியாசமானது என்கிற
பெருமையும் தம்மீது தோன்றியது. பெரியவர்கள் சொல்லுவதை தூக்கி எறிந்து பேசும் ஒரு பக்கத்து
வீட்டு குழந்தையை போல அவரை ரசித்தார்கள். ரெண்டு விசயங்கள்: ஒன்று அவர் எல்லாவற்றையும்
எடுத்தெறிகிறார். அதை நாம் ஏற்க வேண்டியதில்லை, ஏனென்றால் அவர் குழந்தை. இப்படித் தான்
பலர் சாருவை சீரியஸாக ஏற்காமலே விரும்பி படித்தார்கள். ஆனால் தீவிர வாசகர்கள் என்றுமே
அவரிடம் அதிருப்தியாகத் தான் இருந்தார்கள்.
மற்றொரு
விசயம் பேதைமை. ரஜினியின் படங்களில் அவர் அப்பாவியாக தொடர்ந்து வருவார். சகல திறமைகளும்
சக்தியும் கொண்டவர் ஆனாலும் பேதை. சாருவின் இலக்கிய பாத்திரமும் அப்படித் தான். சாருவை
பற்றின பொதுவான பிம்பம் சாரு அறிவாளி அல்ல, அதனாலே எதையும் ஒளிக்க தெரியாது; அவர் பொய்
சொல்ல முயன்றாலும் பட்டவர்த்தமாக புலப்பட்டு விடும். இந்த பேதை நேர்மை சாருவின் முக்கிய
வசீகரம். ஆனால் இந்த அபத்த நேர்மையை தாண்டி அவரிடம் எதிர்பார்த்தவர்கள் அதிருப்தியே
உற்றார்கள்.
மேலும்
சாருவின் மன அமைப்பும் மிக எளிமையானது. இலக்கியம் சிக்கலானது. ஆனால் சாரு எளிய உணர்ச்சிகளைக்
கொண்டு சிறு சிறு கவித்துவ தெறிப்புகளை நிகழ்த்துபவர் மட்டுமே. அதனாலேயே அவரது எழுத்தும்
வெறும் அரட்டையாக இருக்கிறது. அவருடைய நாவல்களில் நாம் சில அருமையான தருணங்களை பார்க்கலாம்.
ஆனால் 500 பக்கங்களில் மின்னஞ்சல், காதல் கடிதங்கள் போன்ற ஜல்லியடிப்புகள் போக நாவலே
ஐம்பது பக்கமிருக்க இந்த சிறந்த தருணங்களை நாம் ஐந்து பக்கங்களில் தான் காண முடியும்.
இதனால்
தான் அசோகமித்திரன் சாருவை ஒரு அறிவார்ந்த ஆளுமை என குறிப்பிடவில்லை. இது சாருவுக்கும்
அவரது வாசகர்களுக்கும் அவரது வட்டத்தில் உள்ள கலாச்சார ஒட்டுண்ணிகளுக்கும் போலிகளுக்கும்
தெரியும். இதிலென்ன பிரச்சனை?
சாருவின்
கட்டுரைகள் அரட்டைகள் மற்றும் தகவல்கள் என பிரிக்கலாம். அரட்டை கிட்டத்தட்ட முகநூல்
வகை. தகவல் விக்கிபீடியா வகை. முகநூல் + விக்கிபீடியா = சாரு என கட்டுரையாளர். பெர்க்மேன்
அல்லது மார்க்வெஸ் பற்றி விக்கிபீடியா சொல்வதை விட சாரு என்ன அதிகமாய் சொல்லி விட்டார்?
அறிவார்ந்து
யோசிப்பதும் எழுதுவதும் மட்டுமல்ல அத்தகைய விசயங்களில் ஈடுபடுவதற்குமான ஆற்றல் சாருவுக்கு
இல்லை என நாம் அனைவருக்கும் தெரியும். அப்படி செய்வதை ஒரு பக்கம் “போர்” என சாருவே
மறுதலிப்பார். இன்னொரு பக்கம் தான் அறிவார்ந்த கலைசேவையை தமிழுக்கு செய்ததாய் மார்
தட்டுவார். சாரி சாரு, நீங்கள் தமிழுக்கு செய்ததெல்லாம் ஒரு டி.வியாகவும் பிரிண்டராகவும்
விளங்கியது தான். நீங்கள் இன்றும் நல்ல பொழுதுபோக்கு தரும் டி.வி தான். ஆனால் விக்கிபீடியா
தகவல்களை அச்சடிக்கும் பிரிண்டர் வேலை காலாவதியாகி விட்டது. உங்களது இசை பற்றிய நூல்
ஒரு சிறு மொழிபெயர்ப்பு முயற்சி மட்டுமே.
ஜெயமோகனின்
கருத்துக்களோடு எங்களில் பலருக்கும் உடன்பாடில்லை. ஆனாலும் அவர் தப்பு தப்பாய் சொன்ன
பல விசயங்களும் கூட சொந்த கருத்துக்கள் தாம். அவருக்கு சொந்தமாக சொல்ல ஏதோ ஒன்று உள்ளது.
ஒரு கற்பனை உண்டு. ஒரு கட்டுரையாளர் என்ற அளவில் அவர் உங்களை விட அறிவு படைத்தவர்.
கடுமையாக உழைக்கக் கூடியவர். நீங்கள் செய்ததெல்லாம் வெறும் பெயர்கள் உதிர்ப்பதே. அதை
இன்று மாதம் நூறு ரூபாய்க்கு இணையம் உள்ள ஒரு மொபைல் போன் செய்யுமே!
சாரு
தொடர்ந்து தன்னை உலகின் ஆகப்பெரிய அறிவாளியாகவும் எழுத்தாளனாகவும் மிகைப்படுத்துவது
ஒரு சந்தைப்படுத்தல் உத்தியும் தான். ஒரு கொக்கோ கோலா விளம்பரத்தை பாருங்கள். கோக்
குடித்தால் தான் நீங்கள் இந்த கால பண்பாட்டை சேர்ந்தவர் என்கிற எண்ணத்தை தோற்றுவிக்கும்.
நீங்கள் பத்து ரூபாய்க்கு வாங்கி பொதுவில் ஸ்டைலாக குடிப்பீர்கள். சாருவின் வாசகர்களும்
அவரை இப்படித் தான் பயன்படுத்துகிறார்கள். அதற்கு அவரும் வழிவகை செய்கிறார். அவர் தன்னை
உச்சத்தில் ஏற்றி வைக்கும் போது அவரை படிக்கும் வாசகனுக்கு ஒரு கிளுகிளுப்பு கிடைக்கும்.
இந்த கிளுகிளுப்பு இருக்கும் வரை தான் அவனும் படிப்பான். அவன் அடிப்படையில் ராஜேஷ்குமார்,
பாலகுமாரன் வாசகன். ஆனால் இன்று ராஜேஷ் குமார் படித்தால் அந்தஸ்து இல்லை. ஆனால் சாரு
வாசகன் என்றால் படிப்பதும் எளிது, அந்தஸ்தும் கிடைக்கும். கோக்குக்கு பத்து ரூபாய்
செலவு செய்வது போலத் தான் இதுவும்.
சாருவின்
கட்டுரையில் அசோகமித்திரனை பற்றி மிக மோசமான வசைகள் உள்ளன. அவரை சாகக் கிடக்கும் கிழவர்
என்றும், அடக்கப்பட்ட பாலியல் இச்சையை மட்டும் எழுதிய மத்தியவர்க்க தாத்தா என்றும்
தொனிக்கும் ரீதியில் எழுதி இருக்கிறார். இதையெல்லாம் படிக்கும் போது ஒரு இலக்கிய வாசகனாக நமக்கு மிகுந்த மனவேதனை ஏற்படுகிறது.
என்னுடைய தோழி ஒருவர். உளவியல் மருத்துவர். நல்ல வாசகர். இங்கிலாந்தில் வாழ்கிறார். அவர் சாருவின் கட்டுரைகளை படித்து விட்டு “இவருக்கு narcisistic personality disorder” என உறுதியாக சொன்னார். இத்தகையவர்கள் ஒரு மலையுச்சியில் தனியாய் திரியும் பைத்தியம் போன்றவர்கள். ஒரு கலைஞர் அப்படி இருப்பதில் அனுகூலமும் உள்ளது. சாருவின் பிரச்சனை அவர் யார் கிடைத்தாலும் தூக்கி கிலி காட்டி விட்டு “கீழே போட்டிருவேன்” என பயமுறுத்துகிறார். அவருக்கு தெரியாது அவர் நிற்பது மலை முகடல்ல தன் வீட்டு படுக்கையறை கட்டில் என்று.
