முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்களின் துப்பறியும் நாவலில் உள்ள பெண்மை




கேரின் ஸ்லாட்டரின் Fractured எனும் துப்பறியும் நாவல் படித்தேன். அதிக பரபரப்பில்லாத மென்மை கொண்ட குற்றவிசாரணை எழுத்து. ஒரு ஆண் மற்றும் பெண் விசாரணை அதிகாரியின் கண்ணோட்டத்தில் இருந்து பிரதானமாய் கதை நடக்கிறது.  


பெண்களுக்கு வலிமையான அதே சமயம் மென்மையான எளிதில் ஈகோவை துறந்து அழத் துணிகிற ஆண்களை பிடிக்கிறது. ஸ்லாட்டர் தன் நாயகனான வில் டிரண்டை அப்படித்தான் சித்தரிக்கிறார். எளிதில் மன்னிகிற, வன்மம் இல்லாத, குற்றவுணர்வு கொள்கிற, கூச்சம் மிக்க துப்பறியும் அதிகாரி. அதாவது கிட்டத்தட்ட பெண் போன்ற ஆண். பெண் அதிகாரியான பெயித்தின் கண்ணோட்டத்தில் பெண் பாத்திரங்கள் நிறைய விமர்சனத்துடன் குற்றம் குறைகளுடன் தோன்றுகிறார்கள். ஆண் எழுத்தாளர்கள் எப்படியும் கொஞ்சம் தேவதைத் தன்மை கொண்ட பெண் பாத்திரங்களை உருவாக்குவார்கள். ஆனால் பெண்கள் எழுதும் போது பெண் பாத்திரங்கள் மீது தான் அதிக விமர்சனங்களை வைக்கிறார்கள். நம்முடைய சிவசங்கரி, அனுராதா ரமணன்கள் ஆண்களின் பார்வையில் இருந்து பெண் பாத்திரங்களை உருவாக்கினார்கள் என்பது வேறு விசயம்.
நாவலில் ஓரிடத்தில் ஒரு விடுதிக்குள் நுழைகையில் ஏற்படும் பிரத்யேக பதின்வயது பையன்களின் வாசனை பற்றி எழுதுகிறார். அது போல் பெண் அதிகாரி பெயித்துக்கு தன் பதின்வயது மகன் மற்றும் காதலன் ஆகியோரை எதிர்கொள்கையில் வரும் குழப்பங்கள், தோன்றுகிற புதிர்கள் மேற்சொன்ன பெண்மை தீற்றல்களை அழுத்தமாய் கொண்டவை. எனக்கு நாவலில் பிடித்த இன்னொரு விசயம் பொதுவாக விசாரணையில் உள்ள சலிப்புத் தன்மையை சித்தரிக்க முயன்றுள்ளது. ஒரு போலியான விறுவிறுப்பு இல்லை. ஒரு முறையான அறிவியல்பூர்வமான விசாரணையில் உள்ள கையாகாத தன்மை, விசாரணை அதிகாரிகளுக்கு உள்ள அழுத்தங்களை நாவல் காட்டுகிறது. தொடர்ந்து கவனம், உழைப்பு, அக்கறை மற்றும் கொஞ்சம் அதிர்ஷ்டம் எப்படி ஒரு வழக்கு விசாரணையை முடிக்க உதவுகிறது எனவும் காட்டுகிறது. வழக்கம் போல ஒரு அதிகாரியின் அட்டகாச புத்திசாலித்தனத்தால் வழக்கு தீர்வாகிற நாயகத்தனம் எதுவும் இல்லை. இவையெல்லாம் சாதக அம்சங்கள். பொதுவாக வணிக நாவல்களில் உள்ள வலிந்து சொல்லப்பட்ட முடிவு, சைக்கோ கொலைகாரன் ஆகியவை பலவீனங்கள்.
இந்நாவல் குழந்தை பலாத்காரம் பற்றி நாவல் பேசும் போது கேட்க வேண்டிய பல தொந்தரவான ஆழமான கேள்விகளை தவிர்த்து விடுகிறது. வசதியாக குற்றவாளியை ஒரு கொடூரனாக காட்டி தாண்டி போகிறது. நல்ல வணிக நாவலுக்கும் சுமாரான இலக்கிய நாவலுக்குமான வித்தியாசமே இது தான். வணிக நாவல் வாளி. இலக்கிய நாவல் பாதாள கரண்டி. கிணற்றுக்குள் போய் வரும் போது பாதாள கரண்டி நாம் எதிர்பார்க்காத பல கசப்பான விருப்பமில்லாத ஆனால் முக்கியமான பொருட்களை ஆழத்தில் இருந்து நமக்கு எடுத்து காட்டும். ஆனாலும் தாகம் எடுக்கும் போது வாளியை இறக்கி நல்ல தண்ணீர் மொண்டு குடிப்பதும் அவசியம் தான். Broken அப்படி நல்ல சுவையான நீரை தருகிறது.

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
போலியான விறுவிறுப்பு இல்லை....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...