Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

யானை வந்தால் ஆளைக் கொல்லும்…அவ்வளவு தானே!




”பூதக்கண்ணாடி” லோஹிததாஸின் இயக்கத்தில் மிக அதிகம் பேசப்பட்ட படம். நல்ல இசை, மம்முட்டியின் அற்புத நடிப்பு, பாம்பு குறியீடுகள் என பல விசயங்கள் இருந்தாலும் படம் எனக்குள் தூண்டிய கேள்வி பைத்தியம் சம்மந்தப்பட்டது. 


பொதுவாக பைத்தியமாதலை ஒரு கடும் அதிர்ச்சியால் மனம் மீள முடியா வண்ணம் கலங்கிப் போவதாக படங்களில் காட்டுவார்கள். அல்லது பைத்தியம் கொண்டவர்கள் பல்வேறு பிரமைகளில் சிக்கி இருப்பார்கள்; விளைவாக தனிமைப்படுவார்கள், அல்லது கொலை செய்வார்கள். நிஜவாழ்க்கையில் நிறைய பேர் தற்கொலை செய்வார்கள்.
அறிவியலில் நமக்கு பொதுவாக உள்ள விளக்கம் பைத்தியம் என்பது ஒரு விஷயத்தை வேண்டுமென்றே சிக்கலாக்கி குழப்பிக் கொள்வது அதனால் அவஸ்தைப்படுவது; பைத்தியமற்றவர்கள் விஷயங்களை தெளிவாக்கி தர்க்கரீதியாக பார்ப்பார்கள். பொதுவாக நாம் இரண்டுக்கும் இடைப்பட்டு இருக்கிறோம்.
இன்னும் சொல்வதானால் பைத்தியம் ஒருவனை வாழ்வின் ஏமாற்றங்களை, அதன் வலியை தாங்க முடியாதவனாக்குகிறது. அவர்கள் வலியை தாமாக பன்படங்கு பெருக்குகிறார்கள். வலியை பெருக்கி எங்கிருந்தோ தப்பித்து போக பார்க்கிறார்கள். எதனிடம் இருந்து? வலியிடம் இருந்து தான். அதாவது நமக்கு காமம் போதவில்லை என்றால் போர்னோ அல்லது பகற்கனவு மூலம் மிகையான காமத்தை நாடுவோம். அதே போல் அரசியலிலும் எதார்த்தம் தாங்க முடியாத நிலையில் நாம் கருத்தாக்கங்கள், இலக்குகளை மிகையாக்கி லட்சியவாதத்தில் நிழல் தேடுவோம். ஒவ்வொரு முறையும் மிகைப்படுத்துகையில் தப்பிக்கவே முயல்கிறோம்.
வலியை தீர்க்க வழி உண்டு. ஒன்று தர்க்கரீதியாய் தீர்வை தேடலாம். அல்லது தானே சரியாகும்படி விட்டு விடலாம். இந்தியர்கள் பொதுவாக ரெண்டாவது வழியை தான் தேர்கிறார்கள். தானே சரியாகும் வரை நாம் கடுமையான மன நெருக்கடியை, ஸ்திரமின்மையின் பதற்றத்தை சந்திக்க வேண்டி வரும். அப்போது நாம் மதம், சடங்குகள் வழி இறைவனிடம் பணிய முனைகிறோம். இந்தியாவில் மதம் இவ்வளவு வலுவான இடத்தை பெற்றிருப்பதற்கு காரணம் அது ஒரு ”பைத்தியக்கார ஆஸ்பத்திரியாகவும்” இருப்பதால் தான். பொதுவாக மனநலம் பாதிக்கப்படுபவர்களுக்கும் திடீரென்று மத ஈடுபாடு அதிகமாவதுண்டு. சமீபமாக வடக்கிந்தியாவில் இருந்து பைத்தியம் பிடித்த ஒரு இளைஞர் பல கோயில் புண்ணிய தலங்களில் அலைந்து இறுதியாக கேரளாவில் அமிர்தானந்தமயியின் ஆசிரமத்தில் சரணடைந்து அங்குள்ள பாதுகாவலர்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
ஆக தானே சரியாகும் என விடுவதற்கும் ஒரு மன வலு தேவைப்படுகிறது. அது இல்லாதவர்கள் மனநோயின் மீளாப்பள்ளத்தில் விழுகிறார்கள். மன வலு ஏன் இல்லாமல் போகிறது என கேட்க வேண்டும்.
உளவியலாளர்கள் இதற்குக் காரணம் மரபியல் மற்றும் ஆளுமைக் கோளாறு என்கிறார்கள். ஆனால் மனிதனுக்கு என்றுமே இதையிரண்டையும் கடந்து மேலெழும் சக்தியை இயற்கை வழங்கி உள்ளது. இங்கு தான் நாம் பொதுவாக உளவியலில் இருந்து மாறுபட வேண்டும். மனிதன் சுயமுனைப்பற்ற ஆட்டுக்குட்டி அல்ல.
என்னைப் பொறுத்த வரையில் முக்கிய காரணம் பயம் தான். பயம் எங்கிருந்தோ வந்து நம்மில் தொற்றிக் கொள்கிறது. “பூதக்கண்ணாடி” படத்திலும் நாயகன் சதா எதைக் கண்டும் பயப்படுகிறவனாக இருக்கிறான். பயம் அவனை பலவீனப்படுத்துகிறது.
பூதக்கண்ணாடி என்றால் நுண்பெருக்கி. நாயகன் கைக்கடிகாரம் பழுதுபார்ப்பவன். அவன் ஒரு கண்ணில் மாட்டுகிற நுண்பெருக்கியை பயன்படுத்துகிறான். ஒரு கட்டத்தில் அச்சம் காரணமாக அவன் வாழ்வின் எல்லா அம்சங்களையும் நுண்பெருக்கி கொண்டு பார்க்க விழைகிறான். ஒரு நுண்பெருக்கியை வைத்து புத்தகம் வாசிப்பது போல இது. களைத்து விடுவீர்கள். அதே நுண்பெருக்கியை வைத்து உலகை பார்க்க முயன்றால் நாம் ஒரு ஒட்டுமொத்த சித்திரத்தை இழக்கிறோம். இறுதியில் நாயகன் பைத்தியம் முற்றி தன்னையே மறந்து சதா நுண்பெருக்கி வழி உலகை பார்த்தபடி இருக்கிறான்.
வாழ்வை புரிவதன் முக்கிய இலக்கு தெளிவு. வாழ்வை நுண்மையாக பார்க்கையில் தெளிவை இழக்கிறோமா? இது முக்கிய கேள்வி. ஆழமான விவாதங்களுக்கு இட்டுச் செல்லக் கூடியது. விசயங்களுக்குள் நுட்பத்துக்குள் நுட்பத்துக்குள் செல்வது அவசியம். அது உங்களை பைத்தியமாக்காது. ஒரு துறை சார்ந்த சிந்தனை, ஆய்வில் இதை செய்யலாம். வாழ்விலும் மிக மிக நுட்பமாக எல்லாவற்றையும் ஆராயலாம். அதனால் வழி தவற மாட்டீர்கள். ஆனால் இதன் முக்கியமான அடிப்படை என்னவென்றால் கவலை, அச்சம் ஆகிய உணர்ச்சிகள் உங்களை வழிநடத்தக் கூடாது என்பது. கராறான தர்க்கமும் தோல்வியை ஏற்கும் மனநிலையும் இருந்தால் நுட்பமான பார்வை உங்களுக்கு பெரும் வரமாகவே இருக்கும். நீங்கள் சித்தராகி விடுவீர்கள்.
மரணமடைய கற்பவன் தான் சிறந்த வீரன், அவனை தோற்கடிக்க இயலாது என்பார் புரூஸ் லீ. அதாவது மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல, ஒரு பகுதி. வாழ்வு ஒரு பெரும் ஆட்டம். அது மரணத்தோடு முடிவதில்லை. இந்த அமைதியும் தெளிவு இருந்தால் ஒரு சண்டையில் உங்களை தோற்கடிக்கவே முடியாது. இது ஒரு உயர் தத்துவ நிலை. இது கூட வேண்டாம். தோனி தோல்வியை கையாள்வதில் உள்ள அலட்டிக் கொள்ளாத அணுகுமுறை கூட போதும்.
சேம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியின் விளிம்பில் இருந்தது. மிக முக்கியமான கட்டத்தில் தோனி பந்தை இஷாந்திடம் கொடுத்தார். இஷாந்த் அன்றைய ஆட்டத்தின் மிக மோசமான வீரராக இருந்தார். வர்ணனையாளர்களும், பார்வையாளர்களும் தோனிக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என வியந்தனர். ஏனென்றால் தர்க்கப்படி அவர் பந்தை அன்று இஷாந்தை விட மேலாக வீசிய உமேஷ் யாதவ் அல்லது புவனேஷ்வர் குமாரிடம் அளித்திருக்கலாம். ஏன் இஷாந்திடம் கொடுக்க வேண்டும்?
எதிர்பார்த்தது போன்றே இஷாந்த் ரெண்டு நான்கு ஓட்டங்களை தொடர்ந்து அணித்து தோல்வியின் விளிம்பில் இருந்து கிட்டத்தட்ட கீழே தள்ளியே விட்டார். பின்னர் அடுத்து ரெண்டு வைடுகள் போட்டார். ஆனால் எதிர்பாராமல் அதே ஓவரில் ரெண்டு விக்கெட்டுகளை சட்டென எடுத்து ஆட்டத்தை திசை திருப்பினார். அவரால் தான் இந்தியா சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. ஒரே ஓவரில் அவர் வில்லனில் இருந்து ஹீரோவானார். சொல்லப் போனால் தோனி செய்தது ஒரு இயக்குநர் திரைக்கதையில் தன் கதாபாத்திரத்தை வைத்து விளையாடுவது போல் இருந்தது.
எனக்கு ரெண்டு விசயங்கள் தோன்றியது. உண்மையில் தோனியின் முடிவு தர்க்கரீதியானது. ஆனால் எதிர்கால பத்திரமின்மையால் பாதிக்கப்படாத தர்க்கம். தோல்வியை ஏற்றுக் கொள்ளும் தர்க்கம்.
இஷாந்த் மோசமான ஆட்டநிலையில் இருந்தார் தான். ஆனால் அவர் அனுபவஸ்தர். இது போன்ற பல சூழல்களில் வீசியவர் என்பதால் அவருக்கு தன்னிச்சையாகவே இதைக் கையாளும் நுட்பங்கள் தெரியும். அந்த இரு பந்துகளும் வேறு இடங்களில் சென்று விழுந்து விக்கெட் விழாமல் போயிருக்கலாம். அதற்கும் தோனி தயாராகவே இருந்திருப்பார். ஒருவேளை இந்தியா இப்போட்டியில் இக்காரணத்தால் தோற்றிருந்தாலும் அடுத்த ஆட்டத்தில் இது போல் முக்கியமான கட்டம் வரும் போது தோனி இஷாந்திடம் தான் பந்தை ஒப்படைப்பார். அது தான் தோனியின் தர்க்கம் மற்றும் அணுகுமுறை.
நாம் பொதுவாக எதிர்கால முடிவுகளை தர்க்கரீதியாய் எடுக்கையில் கூட ஆபத்துகளை அதிகம் கருத்தில் கொண்டே செய்வோம். ஆபத்தில்லாத பத்திரமான முடிவுகள் தர்க்கரீதியாய் இருந்தாலும் கொஞ்சம் பலவீனமாய் தான் இருக்கும். இவற்றை iffy முடிவுகள் என்கிறோம். இதற்கும் நாணயம் சுண்டிப் போடுவதற்கும் அதிகம் வித்தியாசம் இல்லை. ஆனால் தோனி ஆபத்தான, அபத்தம் என பிறருக்கு தோன்றுகிற முடிவுகளை எடுக்க தயங்குவதில்லை என்பது தான் அவரது பலம். ஒரு முடிவை எடுப்போம். அப்படியே சொதப்பிப் போனால் போகட்டும். அடுத்த முறை திருத்திக் கொள்ளலாம். என்ன உயிரா போய் விடும் என்பது அவரது தர்க்கம். விதிவசம் வாழ்வை ஒப்படைக்கும் இந்திய மனமும் கராறாக தர்க்கரீதியாக சிந்திக்கும் ஐரோப்பிய மனமும் தோனியிடம் சரியாக ஒன்றிணைகிறது எனலாம்.
முழுக்க முழுக்க நமக்கு சாதகமான ஒரு எதிர்கால முடிவை எடுக்க முடியுமா? முடியாது தான். தெ.மு.தி.கவை அழிக்க வேண்டுமா கனிமொழி எம்.பி ஆவதை அனுமதிக்க வேண்டுமா? ரெண்டாவது எதிரியை அழிக்கும் பட்சத்தில் முதல் எதிரி வளர்ந்து விடுவானா? சிக்கலான கேள்வி. ஆனால் கொஞ்சம் ஆபத்தை உள்ளடக்காத நல்ல முடிவுகளை தர்க்கரீதியாக கூட எடுப்பது சாத்தியமில்லை.
கொஞ்சம் தோல்விக்கு தயாராக நாம் முடிவுகள் எடுப்பதானால் பயம் மறையும். தெளிவு கிடைக்கும். வலி குறையும். எங்களூரில் ஒரு பழமொழி உண்டு. பிரச்சனைகளின் போது அடிக்கடி அதை நினைத்துக் கொள்வேன்: “யானை வந்தால் ஆளைக் கொல்லும் மயிரையா பிடுங்கும்”.
பயம் என்பது ஒவ்வொரு மயிராய் பிடுங்கப்பட்டு சித்திரவதையில் சாவதற்கு இணை. அதற்கு ஒரே மிதியில் சாகலாம்.
("அமிர்தாவில்" எழுதி வரும் “அறிந்ததும் அறியாததும்” பத்தியில் இம்மாத கட்டுரை)

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...