Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சகிப்பின்மை பற்றி மற்றொரு பார்வை



Germaine Greer talking at the Hay Festival Cartagena in January 2011
இன்றைய ஹிந்துவில் ஹசன் சரூர் சகிப்பின்மை பற்றி ஒரு முக்கியமான கட்டுரை எழுதியிருக்கிறார் (Strident Sensitivity Gags Free Speech). சகிப்பின்மை என்றாலே நாம் அதை வலதுசாரிகளுடன் அடையாளப்படுத்துகிறோம். ஆனால் பிரிட்டனில் இன்று இடதுசாரிகள் எப்படி சகிப்பின்மை அற்றவர்களாய் மாறி வருகிறார்கள் என ஹசன் சரூன் பேசுகிறார். ஜெர்மெய்ன் கிரெய்ன் (Female Eunuch எழுதியவர்) எனும் பெண்ணியவாதி “பால்மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒரு ஆண் ஆணாகவே இருக்கிறான். அவன் பெண் அல்ல” என்று ஒரு கருத்து சொல்கிறார். உடனே அவரை எதிர்த்து கடுமையான பிரச்சாரம் செய்யப்படுகிறது. அவர் ஒரு “திருநங்கை வெறுப்பாளர்” என சித்தரிக்கப்படுகிறார். காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு அளிக்கவிருந்த கௌரவப் பட்டம் ஒன்றை ரத்து செய்கிறது. கார்டிப் பல்க்லைக்கழகத்தில் அவர் நிகழ்த்தவிருந்த உரையை நூற்றுக்கணக்கான முற்போக்காளர்கள் போராடி தடை செய்கிறார்கள். தன் மீதான துவேசமும் தாக்குதல் சாத்தியங்களும் அதிகமாகி வருவதால் இனி பாதுகாப்பு உறுதி செய்யப்படாத பட்சத்தில் தான் எங்குமே சென்று பேசப் போவதில்லை என கிரெய்ன் தெரிவித்துள்ளார். இதற்கும் புதிய தலைமுறையில் பா.ஜ.க விடுத்த மிரட்டலுக்கு பின் ஞாநி கூறியதற்கும் அதிக வேறுபாடில்லை.

 
டிம் ஹண்ட் 2001இல் நோபல் பரிசு வாங்கின விஞ்ஞானி. அவர் ஒரு விருந்தின் போது தன்னுடைய காதலிகளை லேசாய் கிண்டலித்து ஒரு ஜோக் சொல்கிறார். உடனே அவர் பெண்களை அவமதித்து விட்டார் என ஒரு சேதி காட்டுத் தீ போல் பரவுகிறது. அவரைப் பற்றி பெண்ணியவாதிகளின் நூற்றுக்கணக்கான புகார்களை அவர் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்புகிறார்கள். லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரி அவரை வேலை நீக்கம் செய்கிறது. அவர் பொது மன்னிப்பு கோரிய பின்னரே ராயல் அகாதெமியில் உறுப்பினராக நீடிக்க அனுமதிக்கப்படுகிறார். நம் நாடு இந்தளவுக்கு பயங்கரமாய் மாறவில்லை என்றாலும் அதை நோக்கித் தான் போய்க் கொண்டிருக்கிறோம்.
சமீபத்தில் விருது திரும்பத் தரும் சர்ச்சையில் நான் மாறுபட்டேன் என்பதற்காய் இடதுசாரி தோழர்கள் சிலர் என்னை “பா.ஜ.க” என அடையாளப்படுத்தி தாக்கினார்கள். ஒருவர் என் முனைவர் பட்ட நெறியாளரை தொடர்பு கொண்டு என்னைப் பற்றி புகார் செய்தார். அவர் நோக்கம் என்ன? என் ஆய்வை முடக்கி என்னை தண்டிப்பது. எதற்காய்? ஒரு மாற்றுக்கருத்து சொன்னதற்காக. (என்னுடைய கலை இலக்கிய பெருமன்ற நண்பர்கள் மட்டும் தான் இவ்விசயத்தில் மிகவும் கண்ணியமாய் நடந்து கொண்டார்கள்.)

நாம் யாரும் ஒத்த கருத்து கொண்டவர்கள் அல்ல. கட்சி உறுப்பினர்களும் அல்ல. நாம் முரண்படுவோம். அதை வெளிப்படுத்தி உரையாடும் அவகாசம் நமக்கு மிகவும் அவசியம். இன்று நாம் அதிகமும் பொதுப் பிரச்சனைகளில் கருத்து சொல்வதால் ஏதாவது ஒரு அணி சார்ந்தே நிற்க நிர்பந்திக்கப்படுகிறோம். முன்பு எந்த அணியும் சாராது ஒரு எழுத்தாளனோ சிந்தனையாளனோ பேச முடியும். இன்று அப்படி பேச முடியாது. பேசினாலும் ஒருவர் உங்கள் மீது மை ஊற்றுவார். இன்னொருவர் உங்கள் மீது வலதுசாரி முத்திரை குத்தி பல்கலைக்கழகங்கள், அலுவலகங்களில் உங்களைப் பற்றி புகார் செய்து எதிர்காலத்துக்கு உலை வைக்க பார்ப்பார்.
 ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் ஒட்டின பார்வை இருக்கலாம். ஆனால் அப்பார்வையிலும் அவர் மாறுபடும் கோணங்கள் இருக்கும். ஒரு பிரச்சனையின் போது தன் மாறுபாடுகளை அவர் வெளிப்படுத்தினால் தம் தரப்பு பலவீனமாகும் என கருதி அவ்வணியினர் அவர் வாயை மூட சொன்னால் அதுவும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது தானே? ஒரே குரலில் ஒரே தொனியில் ஒன்றுசேர பேசும் ஆட்கள் போதுமென்றால் நாமெல்லாம் ஏன் படிக்கிறோம், சிந்திக்கிறோம், உரையாடுகிறோம்?
சரி, நம் சூழல் இப்படி சகிப்பின்மையின் விளிம்பில் வந்து தள்ளாடி நிற்பது ஏன்? ஊடகங்களின் வளர்ச்சியும், சமூக வலைதளங்களும் தான் பிரதான காரணம். முன்பு ஒருவருக்கு மாற்றுக்கருத்து இருந்தால் அவர் அதை தன்னுடைய அந்தரங்கமான நண்பர்களிடம் மட்டும் தெரிவிப்பார். எழுத்தாளர் என்றால் முன்னூறு பேர் படிக்கக் கூடிய கட்டுரையாக எழுதுவார். இன்று இதே மாற்றுக்கருத்து சுலபமாய் ஆயிரக்கணக்கானோரை போய் சேர்கிறது. பொது நீரோட்டத்தில் போய் கலக்கிறது. உடனே பொதுப்புத்தி கொண்டவர்கள் அவரை எதிர்த்து தாக்குகிறார்கள். வாயை மூடச் சொல்கிறார்கள். இந்த கடும் எதிர்வினைக்கு பயந்து இன்று சிந்திப்பவர்கள் ஒரு உத்தியை பின்பற்றுகிறார்கள். மாற்றுக்கருத்துக்களை தம் நெருங்கின நண்பர்களிடம் மட்டும் சொல்கிறார்கள். பேஸ்புக் போன்ற பொதுவெளியில் பொதுப்புத்திக்கு ஒத்த கருத்தை சொல்கிறார்கள்.

 இந்த இரட்டை நிலை தான் இன்று பலரின் கருத்து சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது. உதாரணமாய் ஒருவர் கடும் பெண் வெறுப்பாளராக இருப்பார். பொதுவெளியில் தன்னை ஆவேசமான பெண்ணிய ஆதரவாளராய் காட்டிக் கொள்வார். இந்த பாசாங்கு எந்த உரையாடலும் சாத்தியமற்ற ஒரு மரத்துப் போன நிலைக்கு நம்மை விரைவில் தள்ளி விடும். ஒருவர் தன் தவறான கருத்துக்களை கூட வெளிப்படையாய் சொன்னால் தான் அவை விவாதித்து திருத்தப்பட முடியும். இரு முரண் கருத்துக்களின் மோதல் தான் புது கருத்தாக்கங்களை தோற்றுவிக்கும். ஆனால் ஒத்த பொதுப்புத்தி கருத்துக்களே வெளியாகும் சூழலில் நாம் கிளிப்பிள்ளைகளாக மட்டுமே இருப்போம். ஆனால் பெரும் நிறுவனங்கள் மற்றும் கட்சிகளுக்கு இந்த இரட்டை நிலை கொண்ட கிளிப்பிள்ளைகள் தாம் வேண்டும். சமீபத்தில் ஸ்டாலின் ராஜாங்கமும் என்னிடம் இதைத் தான் குறிப்பிட்டார். ஒருவரின் சொல்லுக்கும் இதயத்துக்குமான தொலைவு அதிகரித்து வருகிறது என்றார்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...