Skip to main content

பகடியை வெறுக்கும் மனநிலை

சமீபத்தில் புத்தக புரொமோஷனின் சங்கடங்களையும் அதில் எழுத்தாளனுக்கு உள்ள பிரச்சனைகளையும் பகடியான தொனியில் எழுதியிருந்தேன். அதில் இணையத்தில் எழுதுகிறவர்கள் புரொமோஷன் செய்யும் முறையும் இணையத்தில் ஜனரஞ்சகமாய் எழுதுபவர்களுக்கு புரொமோஷன் எப்படி சுலபமாய் அமைகிறது என்பதையும் சொல்லி இருந்தேன். அதை ஒரு பதிவர் நான் அவரை கேலி பண்ணினதாய் கருதிக் கொண்டு ராப்பகலாய் என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டார்.
 பொதுவாய் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் hyper sensitive ஆக இருப்பார்கள். அவர்களைப் பார்த்து புன்னகைத்தாலே கேலி செய்கிறோமோ என வெகுண்டெழுவார்கள். அந்த பதிவர் என் மொத்த பதிவுமே தன்னைப் பற்றியது எனும் சித்திரத்தை உருவாக்கி தன் மீதே சேற்றை வாரி இறைத்துக் கொண்டார்.
 இலக்கியத்தில் இல்லாத கேலியா? சு.ராவுக்கு நகுலனுக்கும் இடையிலான “நாய்” கவிதை பரிமாற்றங்கள் பிரபலம். அதை ஒட்டி நாற்பதுக்கு மேல் நாய்க் கவிதைகள் எழுதப்பட்டிருக்கும். யாரும் கெட்டவார்த்தையால் திட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பேஸ்புக் போன்ற சமூக வலைதள நடவடிக்கைகளால் மனிதர்கள் சிறிதும் கிண்டலை பொறுக்க முடியாதவர்கள் ஆகி விட்டார்கள். நாயே பேயே எனத் திட்டிக் கொள்கிறார்கள். கிண்டல் பண்ணுவதென்றால் தமமுடன் நேரடிப் பழக்கமில்லாத கேப்டன் போன்ற பிரபலங்களை வச்சு செய்கிறோம். ஆனால் கூட இருப்பவர்களை மாறி மாறி காது புளிக்கும் வரை புகழ்கிறோம். இது பேஸ்புக் அளிக்கும் மிதமிஞ்சிய சுயபிரக்ஞையால் விளைந்துள்ள வியாதி.
சமீபமாகவே மனுஷ்யபுத்திரன் என்னை “மூத்த எழுத்தாளர்” என பகடி செய்து வருகிறார். என் நூல் வெளியீட்டு விழாவில் கூட இதை சொல்லி “உன் வாரிசு யார்?” என கேள்வி கூட கேட்டார். இதை நானும் ரசித்தேன். பார்வையாளர்களும் சிரித்து ரசித்தனர். ஜெயமோகனுடன் உள்ளவர்கள் அவரை பகடி செய்வதை பார்த்திருக்கிறேன். சாருவுடன் உள்ளவர்களும் அவரை ஓட்டும் போது மனிதர் குழந்தை போல் சிரிப்பார். இன்று நட.சிவகுமார் ஊரில் இருந்து என்னை பார்க்க வந்திருந்தார். அப்போது ஊரிலுள்ள இன்னொரு கவிஞரான ஹமீம் முஸ்தபா அவரை போனில் அழைத்தார். இவர் உடனே “தமிழில் உள்ள மிக முக்கியமான எழுத்தாளனுடன் இருக்கிறேன் தெரியுமா?” என்று விட்டு போனை கொடுத்தார். அது ஒரு கிண்டல். அதன் பொருள் நேர்மாறானது என எனக்குத் தெரியும். சிரித்தபடியே முஸ்தபாவிடம் பேசினால் அவர் இன்னொரு படி மேலே போய் “நீ ஒரு legend. உன்னைப் போய் முக்கிய எழுத்தாளன் என்கிறால் எப்படி?” என ஓட்ட ஆரம்பித்து விட்டார். இது தான் எங்களுக்குள் உறவை லகுவாக்குகிறது. ஆனால் இதையே பேஸ்புக்கில் செய்தால் அங்கு இனக்கலவரமே நடக்கும்.
 எழுத்தாளர்கள் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள். அவர்களுக்கு பகடியும் சுயபகடியும் ஒரு ஆசுவாசம் தரும் விளையாட்டு.
தன்னை பிறர் பகடி செய்வதை தாங்கிக் கொள்ள இயலாதவர்கள் பண்பாட்டு நுண்ணுணர்வு இல்லாதவர்கள் என நினைக்கிறேன். இனி எல்லாரும் எல்லாரையும் பற்றி நேரடியாய் பேர் தேதி இடம் குறிப்பிட்டு மிக உயர்வாக மட்டுமே எழுத வேண்டும். அப்படியான இடத்துக்கு வந்து விட்டோம். மேற்சொன்ன பதிவரிடம் “நீங்கள் திட்டி அளிக்கும் பப்ளிசிட்டி அருமை. தொடர்ந்து செய்யுங்கள்” என உள்பெட்டியில் கிண்டலாய் செய்தி அனுப்பினேன். அவர் அதையும் நேரடியாய் புரிந்து கொண்டு ஆசிடாய் கொப்புளிக்க ஆரம்பித்து விட்டார். அவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இப்படித் தான் புரிந்து கொள்வார் போல. ”உன்னால ரொம்ப தலைவலியா போச்சே” என்றால் உடனே அனாசின் வாங்கி வந்து தருவார் என நினைக்கிறேன்.
அவரது கோபம் தன்னை அடுத்தவன் தாழ்வாய் நடத்துகிறான் எனும் பயத்தில் இருந்து வருகிற கோபம். தான் செய்வது தாழ்வானது எனும் குற்றவுணர்வில் இருந்து வருகிற கோபம். தன் பெயரை குறிப்பிடாவிட்டாலும் அது தான் தானோ எனும் பதற்றம். மகாபாரதத்தில் துரியோதனனை நோக்கி த்ரௌபதி விளையாட்டுக்கு சிரித்ததனால் தானே துகிலுரியும் படலமே நடந்தது. இதனால் அந்த பதிவருக்கு சொல்ல வருவது என்னவென்றால் என்னையெல்லாம் துகிலுரியாதீர்கள். பார்க்க நல்லாவே இருக்காது. 

(இதையும் அவர் வரிக்கு வரி எடுத்துப் போட்டு என்னை காறி துப்புவார் எனத் தெரியும். அது தன் மீதே விழுகிறது என அவர் உணர்கிற வரை செய்யட்டும். வேறு தீர்வே இல்லை)

Comments

Unknown said…
//என்னையெல்லாம் துகிலுரியாதீர்கள். பார்க்க நல்லாவே இருக்காது.// - :D :D

Finishing-touch super :)

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...