முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வண்ணதாசனுக்கு வாழ்த்துக்கள்!

Image result for வண்ணதாசன்

தமிழ் கவிதைக்கான மொழி. இங்கு மிகச்சிறந்த புனைகதையாளர்கள் குறைவு. ஆனால் மிகச்சிறந்த கவிஞர்கள் ஏராளம். ஒரு கவிதை மூலம் தமிழனின் மனதை தொட்டு விடுவது போல் உரைநடையினால் முடியாது. கவிதை நம் உயிர்நாடி. அதனாலே ஒரு நவீன கவிஞருக்கு சாகித்ய அகாதமி எனும் போது தித்திக்கிறது. மேலும் வண்ணதாசனுக்கு எனும் போது கூடுதல் இனிக்கிறது.

 நம் பால்யத்தின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி வண்ணதாசன். வாழ்க்கையை நுண்வியப்புகளால் ஆனதாய் நாம் உணரும் பருவத்தில் வண்ணதாசன் நம் தலை கோதும் நீளமான விரல்களாய் இருந்தார். ஒவ்வொன்றையும் இன்னும் இன்னும் நுணுகி லயித்து அணுக கற்றுத் தந்தார்.
 வண்ணதாசன் ஒரு வித்தியாசமான கலவை – ரொமாண்டிக்கான, நெகிழ்வான, ஒவ்வொரு சொல்லையும் நுண்பெருக்கியாய் மாற்றும் எழுத்து. கூடவே வாழ்க்கையின் நெருடலான, அதிர்ச்சியான, கசப்பான எதார்த்த உலகையும் அவர் சித்தரித்தார். ஒரு விகாரத்தை கூட ரொமாண்டிக்காய் அழகாய் பார்ப்பவர் அவர். அவரது கதையொன்றில் வீட்டுக்கு வரும் உறவினர் ஒருவருக்கு ஆறாவதாய் ஒரு விரல் இருக்கும். கதைசொல்லியின் நினைவுகளில் முழுக்க அந்த ஆறாவது விரல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். ஒரு அழகான பெண்ணின் மூக்கின் மேலுள்ள மருவையும் ஒரு மனிதனின் கையில் துருத்தித் தெரியும் ஆறாவது விரலையும் வண்ணதாசன் ஒன்றாகப் பார்ப்பார். வானம்பாடிகளில் இருந்து வண்ணதாசனை மாறுபடுத்திக் காட்டுவது இந்த ஆறாவது விரல் தான். நெருடலான, ஜீரணிக்க முடியாத, வெறுமையான உலகை அவர் ஒரு சிலாகிப்பான, மிகையுணர்ச்சி நிரம்பிய வாழ்க்கைபார்வையுடன் அணுகினார். இந்த ரொமாண்டிக் வண்ணமூட்டல் இல்லாவிட்டால் வண்ணதாசன் கலாப்ரியா, சுகுமாரன் போல் ஆகி விடுவார்.
 வண்ணதாசனின் சிலாகிப்பு என்பது வெறும் ஒரு அணுகுமுறை மட்டுமல்ல. அது நெல்லை மாவட்ட மண்ணின் குணம் என தோன்றுகிறது. நெல்லையின் கணிசமான எழுத்தாளர்களிடம் இந்த தாவணி காற்றில் பறக்கும் மொழிநடை உள்ளது. பாகாய் உருகுவார்கள். ஆனால் இனிப்பு உள்நாக்கில் பட்டதும் ஒரு கசப்பு உறைய ஆரம்பிக்கும். ஒரு சிறந்த உதாரணம் போகன் சங்கர். போகனின் கதைகள் ஜெயமோகன் மற்றும் வண்ணதாசனின் ஒரு அபூர்வமான கலவை. நெகிழ்விலும் கண்ணீர் மல்கலிலும் வண்ணதாசனையும், உடல் விகாரங்கள், சீரழியும் இச்சைகளை பேசுவதில் ஜெயமோகனையும் அவர் எடுத்துக் கொள்கிறார். போகன் என ஒரு உதாரணத்திற்கு தான் சொன்னேன். நெல்லை மண்ணில் இருந்து தோன்றும் எந்த புதுப் படைப்பாளியிடமும் வண்ணதாசனின் குரலை கேட்க முடியும். புதுமைப்பித்தன், அழகிரிசாமி, கி.ரா, விக்கிரமாதித்யன் ஆகியோரின் பாணியை பின்பற்றும் எழுத்தாளர்களை கூட அதிகம் காண முடியாது. ஆனால் வண்ணதாசனுக்கு எனும் நதிக்கு கிளைகள் ஆயிரம். நெல்லை பண்பாட்டின் ஒரு முக்கியமான கூறை வண்ணதாசன் பிரதிபலிக்கிறார். வண்ணதாசனை வாசிக்காத இளம் எழுத்தாளர்களின் மொழியில் கூட அவரது மொழியை, ஆளுமையை, அந்த தனி வாசனையை நாம் அடையாளம் காண முடிகிறது. அது தான் காலம் அவருக்கு அளித்த மகத்தான பரிசு. இது இரண்டாம் பரிசு! அவருக்கு மீண்டும் என் வாழ்த்துக்களும் அன்பும்!

வண்ணதாசனைத் தொடர்ந்து விக்கிரமாதித்யன், கலாப்ரியா, சுகுமாரன், தேவதச்சன், தேவதேவன், யுவன், மனுஷ்ய புத்திரன் போன்று மேலும் முக்கிய கவிஞர்களை சாகித்ய அகாதமி கௌரவிக்க வேண்டும். உரையநடை எழுத்தாளர்களை தேவைக்கு அதிகமாய் கொண்டாடி விட்டோம். இனி வரும் சில பத்தாண்டுகள் கிரீடத்தை தமிழ்க்கவிஞர்களின் தலையில் வைத்து அழகு பார்ப்போம்! உண்மையில் அது அவர்களுக்கு உரியதே!

கருத்துகள்

'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
Thiru. Vannathasan avargalukku vazhththukkal.

avari SIRUKATHAI Thoguppuguthaaney viruthu kidaiththathu... kalyanji endru avar ezhuthum kavithaikalukku illaiyey.

irunthum thangalin kadaisi varigalai naanum solkirean... tamil kavigner kalukku viruthugal kidaikkattum....


Nanri.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...