முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிகாரக் குவிப்பு, செலிபிரிட்டி கலாச்சாரம் - அழியும் இந்திய கிரிக்கெட் அணி





தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய பயணத்தொடரில் இந்திய அணி ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களை நிச்சயமாய் இழக்கும் என முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவரான மைக்கேல் வாஹ்ன் சொல்லியிருக்கிறார். இதை ஏற்கிறேன். முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா காலங்காலமாய் சொதப்பியே வந்துள்ளது. டிரா செய்ய முடிந்தால் சிறப்பு. ஒட்டுமொத்தமாய் இந்த ஆஸி தொடர் ஒரு நேரவீண். 

இதை கோலியும் அறிவார். ஆனால் அவர் மனமெல்லாம் பிறக்கவிருக்கும் தன் குழந்தை மீதே இருக்கும். வேறெந்த நம்பிக்கையூட்டும் நற்செய்தியும் அவருக்கு வரும் மாதத்தில் இல்லை. ஏனென்றால், இந்த தொடர் அவசரமாய் திட்டமிடப்பட்டு, மோசமாய் அணி தேர்வு செய்யப்பட்டு மோசமாய் எடுக்கப்பட்ட அட்லி படத்தைப் போல உள்ளது. 


ஷாமி, சஹல், சாஹா நல்ல உடல் தகுதியுடன் இல்லை. ஆனால் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்த கிரிக்கெட் வாரியம் ரோஹித் ஷர்மா மட்டும் இந்தியாவில் அவர் பாட்டுக்கு திராட்டில் விட்டது ஏன் எனப் புரியவில்லை. ஒவ்வொரு வீரருக்கு ஒவ்வொரு நியாயமா எனும் கேள்விக்கு விடையில்லை. கோலி வழக்கம் போல இந்த அரசியலுக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என நழுவப் பார்க்கிறார். வீரர்கள் இன்னொரு பக்கம் ஐ.பி.எல்லில் தொடர்ந்து ஆடின களைப்பில் இருக்கிறார்கள். மீண்டும் ஒரு பெரிய தொடரை எதிர்கொள்வதற்கான மன ஊக்கம், ஆற்றல் அவர்களுக்கு இருப்பதாய் தோன்றவில்லை. அணித்தலைவரான கோலி முன்பு தன் அப்பா காலமான போது ஈமச்சடங்குக்கு செல்லாமல் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டவர். சச்சினும் அப்படி உலகக்கோப்பைத் தொடருக்கு திரும்ப வந்து ஆடியதைப் பார்த்துள்ளோம். ஆனால் இப்போதைய கோலியோ இந்த முக்கியமான தொடரின் டெஸ்ட் போட்டிகளுக்கு முழுமையாக இருக்காமல் இந்தியாவுக்கு தன் குழந்தைப்பிறப்புக்காக திரும்பும் முடிவில் இருக்கிறார். இது பிற அணி வீரர்களுக்கு அளிக்கும் சேதி என்னவாக இருக்கும், ‘இத்தொடர் ஒருவித விடுமுறை கொண்டாட்டம் தவிர வேறொன்றும் இல்லை’ என்பதன்றி.

 நியாயமாக கோலிக்குப் பதிலாக ரஹானேவை டெஸ்ட் தொடரின் தலைவராக ஆரம்பத்திலேயே அறிவித்து, கோலியை வெறும் மட்டையாளராக மட்டுமே முதல் போட்டியில் ஆடச் சொல்லியிருக்க வேண்டும். அத்துடன் அணியைத் தேர்வு செய்வது, தொடரின் வியூகங்களைத் திட்டமிடுவது ஆகிய பொறுப்புகளை முழுமையாக ரஹானேவிடம் ஒப்படைத்திருக்கலாம். அப்போது டெஸ்ட் தொடரில் உன்னிப்பாக உத்வேகமாய் இந்திய அணி ஆட வாய்ப்பு இருந்திருக்கும்.

 ஆனால் இது ஏதோ குழந்தை பாதி கக்கா போய் விட்டு அதில் படுத்து புரண்டு விளையாடுவதைப் போல ஒரு போட்டியில் இவர் தலைவர், மற்ற போட்டிகளில் இன்னொருவர் தலைவர் என்றால் அது எப்படியான குழப்பத்தை, கவனச்சிதறலை ஏற்படுத்தும்? போட்டித்தொடரை இழந்தோமெனில் பழி யாருக்குப் போகும்? வென்றோமெனில் பெருமை யாருக்கு?

அணித்தலைவருக்கு மிதமிஞ்சிய அதிகாரத்தை அளிப்பது, தேர்வாளர்கள், வாரிய தலைவர் என அனைவரையும் அணித்தலைவர் தன் உள்ளங்கையில் வைத்து செல்ல நாய்க்குட்டியைப் போல நடத்துவதானது தோனியின் காலத்திலேயே தொடங்கி விட்டது. கோலி இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று விட்டார். இப்போது அணித்தலைவரானவர் இந்தியாவின் பிரதமரைப் போல. அவரது செயலுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டியதில்லை. மாறாக அவருக்கான பெயரும் புகழும் மட்டும் தொடர்ந்து கட்டமைக்கப்படும். ஒரு நட்சத்திர பிம்பத்தை இப்படி உருவாக்கி அதை வைத்து அறுவடை செய்வதன்றி உலகக்கோப்பைகளை வெல்லும் இலக்குடன் அணி இப்போது வழிநடத்தப்படுவதில்லை. இவ்விசயத்தில் கங்குலி, ஷா ஆகியோரின் தலைமையில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஶ்ரீனிவாசனின் தலைமையிலான வாரியத்தைப் போன்றே நடந்து கொள்கிறது.


விரைவில் இந்திய அணியின் பயிற்சியாளராக அனுஷ்கா ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட மாட்டேன். அந்தளவுக்கு குடும்ப அரசியல், தனிமனித வழிபாடு, அதிகாரக் குவிப்பு இந்திய கிரிக்கெட்டை நாசமாக்கி வருகிறது. எதிர்காலத்தில் இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர அரசியல்வாதிகள் கிரிக்கெட் வாரியத்தில் பதவி வகிப்பதை, அணித்தலைவரை நிரந்தரமாய் அன்றி நான்கு வருடங்களுக்கு மட்டுமே நியமிப்பதை, ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒரு அணித்தலைவரை நியமிப்பதை வழக்கமாக வேண்டும், வீரர்களின் மனைவி, குழந்தைகள் அவர்களுடன் ஓட்டலில் தங்குவது, கொண்டாட்டங்களில் பிற வீரர்களுடன் கலந்து கொள்வது, மனைவிகள் சமூகவலைதளங்களில் கிரிக்கெட் பற்றி கருத்து சொல்வது தடை செய்யப்பட வேண்டும். இதன் மூலம் அதிகாரம் ஒரு புள்ளியில் குவிந்து செலிபிரிட்டி கலாச்சாரம், அரசியல் அதிகாரம் என அது வளர்வதை தடுக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...