முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொமாலாவில் தமிழ் எழுத்தாளன்


 

சென்னைக்கு வந்து புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ள ஆசைதான். மைசூரில் இருந்து கிளம்பி சென்னையை அடைந்து ஒருநாள் சுற்றித் திரிந்து அடுத்த நாள் கிளம்பி வந்து சேர வேண்டும். அதற்கு மூன்று நாட்கள் வேண்டும். ஆனால் கர்நாடகாவில் பொங்கலுக்கு ஒருநாள்தான் விடுப்பு. நடுவே ஒரு சனிக்கிழமை வந்தாலும் அன்று அலுவல்ரீதியான பணியுள்ளது. அதற்கும் அனுமதி பெற்று விடுப்பெடுக்கலாம் என்றாலும்கூட என் இரண்டு புத்தகங்களும் இன்னும் அச்சாகி வரவில்லை.

வரவர வாழ்க்கையில் நிராசையும் அவநம்பிக்கையும் பெருகுகிறது. எதுவும் உருப்படவில்லை, எதிர்காலம் இருட்டாகத் தெரிகிறது. மைசூர் அழகாக இருந்தாலும் "பெட்ரோ பரோமாவில்" வரும் கொமாலாவைப் போல ஒரு இறந்த நகரமாக உள்ளது. எப்போதுமே சிறு உறக்கக் கலக்கத்துடன் பாதி விழிப்புடன் இருக்கும் மக்கள். மூச்சுவிடும் தொனியும் பேசுகிறவர்கள். ஏதோ ரகசிய நடவடிக்கைகளைப் போல சிறிய அளவில் வணிகம், வேலை, உரையாடல் என இருக்கிறார்கள். புத்தாண்டு கூட இங்கு ஏதோ பக்கத்து நாட்டு சுதந்திர தினம் போலத்தான் பார்க்கப்படுகிறது. தசரா அன்று மட்டுமே விழித்துக் கொள்ளும் இந்நகரம் "எங்களை இன்னும் 100 ஆண்டுகள் தூங்க விடுங்கடா" எனும் கணக்கில் உள்ளது. இந்த ஊரில் எதாவது ஊர்வலம் நடந்தால்கூட சாமியார்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகளை அழைத்துக் கொண்டு அமைதியாகத் தான் போகிறார்கள். மாலையானால் ஸ்னேக் சாப்பிடுவோம் என்று கடைக்குப் போய் ஒரு தட்டில் சிறிய வெடிகுண்டுகளைப் போல ஐந்து போண்டாக்கள், ஐந்து பஜ்ஜிகளை வைத்து கண்ணைப் பிதுக்கிக் கொன்டு தனியாளாகச் சாப்பிடுகிறார்கள். அப்போ இரவுணவுக்கு என்னதாண்டா சாப்பிடுவீங்க எனக் கேட்கலாம் என்றால் போண்டா தொண்டையில் சிக்கிக்கொண்டு விபரீதமாகி விடுமோ என்று பயமாக இருக்கிறது. பெங்களூரிலாவது நான் வேலை செய்த இடத்தில் தமிழர்களும் மலையாளிகளும் அதிகம். நான் வாழ்ந்த பகுதிகளிலும் கூடத்தான். பெங்களூர் ஒரு குட்டிக் கேரளாதான். ஆனால் மைசூர் ஒரு அசல் அந்நிய நகரம். பெருங்கூட்டத்தையும் ஜன நெரிசடியையும் இடையறா உரையாடல்களையும் விரும்பும் எனக்கு ஏதோ இடுகாட்டில் சமாதிகள் மத்தியில் அமர்ந்திருப்பதைப் போல இருக்கிறது. என் தலையெழுத்து வேலைக்காக இப்படி கொமாலா கொமாலாவாகப் போய்க் கொண்டிருக்கிறேன். எங்கு போனாலும் பல நூற்றாண்டுகள் பழைய ஆவிகள் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. எதாவது ஒசூரில் வேலை கிடைத்திருந்தாலும் தப்பித்திருத்திருக்கலாம். ம்ஹும். கடந்த ஜென்மத்தில் கடாமுடா மீசை வைத்துக் கொண்டு அபலைகளைக் கடத்திப் போய் கொன்று தூக்கில் போட்டு பத்து பதினைந்து குழந்தைகளை நான் கிணற்றில் தூக்கிப் போட்டிருக்க வேண்டும். இப்படியெல்லாம் இடைவிடாமல் துன்பப்படுகிறேன்.
அதனால்தான் என்ன வாய்ப்பு கிடைத்தாலும் இந்த கொமாலாவில் இருந்து பைக்கை எடுத்துக்கொண்டு ஓடித் தப்பிப்பதற்காகத் தவிக்கிறேன். திரும்ப வரும்போது கூட கர்நாடக எல்லையில் வைத்து "உள்ளே போகக் கூடாது" என்னைத் தடுத்து திரும்ப அனுப்பிவிட மாட்டார்களா என்று ஒவ்வொரு முறையும் ஆசையாக இருக்கும். ஆனால் படுபாவிகள் அதை மட்டும் பண்ண மாட்டார்கள். இம்முறை தப்பித்து மூன்று நாட்களாவது இருக்கலாம் என்றால் முகாந்திரம் இல்லை.
தமிழ் எழுத்தாளர்கள் யாரும் கர்நாடகாவில் இருக்கக் கூடாது என்று கர்நாடக அரசு எதாவது சட்டம் போட்டால் ஜாலியாக இருக்கும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...