இதைப் படிக்கையில் ஏற்பட்ட முதல் எண்ணம் இப்புத்தகத்தை அருந்ததி ராய் இப்படி எழுதியிருக்கக் கூடாது என்பது. இது ஒரு சுயசரிதை. தனக்கும் அவரது அம்மாவுக்குமான உறவை முன்வைத்து தன் வாழ்க்கையை எழுதுகிறார் அருந்ததி ராய்.
பயங்கர வெளிப்படையாக எழுதுகிறார் என்று சொல்ல முடியாது - அன்னையின் பிம்பம், அவரை மையமிட்டு எழுதுவதால் வரும் தயக்கம் தோளில் தட்டி எச்சரிக்கும் சமிக்ஞையாக அவருக்கு இருந்திருக்க வேண்டும். எதைச் சொன்னாலும் அது தன்னை நோக்கி மட்டும் வராது எனும் உணர்வு அவரைத் தடுக்கிறது என நினைக்கிறேன். ஆகையால் யாரையும் காயப்படுத்தலாகாது எனும் ஜாக்கிரதை அவரது எல்லா பக்கங்களிலும் தெரிகிறது. தன் அன்னையைக் குறித்த ஆழமான அலசலும் இல்லை. அன்னையைக் குறித்த ஒரு உணர்ச்சிகரமான நிலைப்பாட்டை ஆரம்பத்திலேயே எடுப்பதால் அதை மீறிப் போய் எதார்த்தமாக அவரைக் காண ராயால் முடிவதில்லை எனத் தோன்றுகிறது.
இதன் பலம் 'கேட்க' இனிமையான ராயின் நடை. மனத்தின் லயங்களுக்கு வடிவம் கொடுப்பதைப் போன்ற வாக்கிய அமைப்புகள். கவிதைக்கு அருகில் வருகிற நளினமும் மென்மையும் கொண்ட பல பகுதிகள். அதாவது இது 'கவித்துவம்' அல்ல. மொழியின் கவிதைத்தன்மை. நீரோட்டத்தில் தோன்றும் சிற்றலைகள் எப்படி உள்ளிருந்து எதையும் உணர்த்தாமல், வெளிப்படுத்தாமல் தன்னளவில் அழகைக் கொண்டிருக்குமோ அவ்வாறு செயல்படுவது ராயின் மொழி. அதனளவில் அது பல அர்த்தங்களைத் தரும்.
ராய் குறித்து நெருக்கமாக அறிந்து கொள்ள, அவரது சாதாரணத்துவத்தை எதிர்கொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது. ஆனால் அதுதான் இதன் பலவீனமும். அவரது "சிறிய விசயங்களின் கடவுள்" நாவலின் அழகே அது உண்மையை உருமாற்றுவதுதான். அதில் வரும் தகவல்கள் பிரதான பாத்திரங்களின் அகநெருக்கடியின் வழியாக புது வடிவம் எடுக்கின்றன. அந்த உண்மை மயக்கம் சுழல் வட்டப்பாதையொன்றை உருவாக்க அவருக்கு உதவியது. இரட்டைக் குழந்தைகளின் மனம் காலச்சுழலில் அகப்பட்டு வெளியேறாமல் தவிப்பது காலம் என்றால் என்ன எனும் கேள்விக்கு பதில் தேடும் சாத்தியங்களை அளித்தது. இப்பின்னணியில் ராய் ஒரு ஊறுகாய் தொழிற்சாலையைப் பற்றிச் சொன்னாலும், பூச்சியலாளரான தாத்தாவைப் பற்றிச் சொன்னாலும் ஒரு மேஜிக் நிகழ்ந்கது. அவை நாவலின் கருப்பொருளினால் ஒளியூட்டப்பட்டன. ஆனால் இதே தகவல்கள் இப்புத்தகத்தில் வரும்போது பொலிவிழக்கின்றன. அதனாலே இப்புத்தகத்தைப் படித்துவிட்டு "சிறிய விசயங்களின் கடவுள்" நாவலைப் படித்தால் அதன் குறியீட்டுத்தன்மை பலவீனமாகி விடும் எனத் தோன்றுகிறது.
அதற்காக வேறெப்படித்தான் எழுதியிருக்க முடியும்? உரைநடையையே புனைவு கலந்து எழுத முடியும் - மார்க்வெஸ் "Living to Tell a Tale" சுயசரிதையில் செய்வதைப் போல.
உரைநடையில் உண்மை பொய்யாகி விடுகிறது.
Comments