Skip to main content

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா



 

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா (CIBF) சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒன்று என்பதை வெளியில் இருந்து பார்க்கையில் புரிந்துகொள்ள முடியாது. நானே அதை நிதி வீணடிப்பு என்றே ஆரம்பத்தில் கருதினேன். ஆனால் இந்த ஆண்டு அதில் கலந்து கொண்டபோது என் எண்ணம் மாறியது. குறிப்பாக அரசின் நடவடிக்கை மீது பதிப்பாளர்களுக்கு உள்ள மரியாதையினால் எழுத்தாளர்களுக்கு சில பயன்கள் கிடைக்கின்றன. ஒரு சின்ன விசயத்தைக் குறிப்பிடுகிறேன் - பதிப்பாளர்கள் முன்வைக்கும் நூல்கள் அரசின் நூற்பட்டியலில் வண்ணப்படங்களுடன் வழவழ தாளில் வெளியிடப்படுகின்றன. இந்த பட்டியல் நூலில் படைப்புகள் அந்தந்த எழுத்தாளர்களின் முகவர்களின் கீழ் பகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளார்கள். இந்த படைப்புகளை நூலில் பார்க்கும் அயல்மொழி, அயல்நாட்டுப் பதிப்பாளர்கள் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்கிறார்கள். அவர்கள் அப்படைப்புகளை மொழிபெயர்க்க முன்வருகிறார்கள். நீங்கள் அவர்களிடம் உங்கள் புத்தகங்களைக் காட்டி விளக்கினாலும் அவர்களுக்கு உங்கள் படைப்பின் முக்கியத்துவம் விளங்காது. ஏனென்றால் அவர்கள் வேறு ஊரை, மொழியைச் சேர்ந்தவர்கள். தமிழ் இலக்கியத்தில் நடப்பன வெளியாட்களுக்கு மர்மமாக உள்ளன. இந்தப் போதாமையைத் தாண்ட அரசின் அங்கீகாரம் வெகுவாக உதவுகிறது.

அடுத்து, எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் சந்திப்பதற்கான ஒரு களத்தை அமைத்துத் தருகிறார்கள். பெரும்பாலும் நம்மால் இவர்களை நேரில் போய்ப் பார்த்துப் பேச முடியாது. பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் அரசின் நிகழ்வு என்பதால் அங்கு ஒரு சமத்துவம் ஏற்படுகிறது. இது முக்கியமானது.
நான் கடந்த இரு ஆண்டுகளாக இங்கு வராதது தவறு என்று இம்முறை சென்றபோது புரிந்துகொண்டேன். ஏனென்றால் நான் ஒரே ஒரு தளத்தில்தான் இரு மணிநேரங்கள் இருந்தேன். அதுவும் இந்தியப் பதிப்பாளர்களுக்கான தளம். அங்கு சொற்ப பதிப்பாளர்களே இருந்தார்கள். நான் கண்ணனுடன் சென்றிருந்தேன். முதலில் நானும் கண்ணனும் அரட்டையடித்து காபி, நொறுக்குத்தீனி சாப்பிட்டுவிட்டு இருந்தோம். கண்ணன் வழக்கம்போல புலப்படாத வடிவமெடுத்தார். நான் ராம் தங்கம், இமையம் போன்றோரைப் பார்த்துப் பேசிவிட்டு என் கணினியில் நாவலொன்றை விட்ட இடத்தில் இருந்து எழுத ஆரம்பித்தேன். மாலை ஆறரை மணி வரைக்கும் நான் எழுதிக் கொண்டே இருந்தேன். திரும்பிப் பார்த்தால் அரங்கு முழுக்க காலி. பணியாளர்கள் அரங்கைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். நான் இதையெல்லாம் கவனிக்கவில்லை. முழுக்க என் நாவலில் வரும் சூழலில் மூழ்கி இருந்தேன்.
எனக்கு அங்கு இருக்கும் பதிப்பாளர்களிடம் போய் என்னை அறிமுகப்படுத்த ஆர்வம் இருக்கவில்லை. திமிர்தான். நீயே என்கிட்ட வா எனும் மனப்பான்மைதான். ஆனாலும் ஒரு சில பதிப்பாளர்களிடம் உரையாடும் வாய்ப்பு அமைந்தது. அதனால் சில நற்பயன்கள் அமைந்தன. நற்செய்திகளை அவை முழுமையாக அமைந்து உருப்பெற்ற பின்னர் சொல்கிறேன். ஒன்றை மட்டும் சொல்கிறேன்:
என்னதான் இலக்கிய முகவர்கள் வேலை பார்த்தாலும் எழுத்தாளர்கள் நேரடியாகச் சென்றால் ஏற்படும் தாக்கம் இருக்காது. ஒரு எழுத்தாளர் நேரில் போய் பத்து நிமிடங்கள் பேசினாலே டீல்கள் அமைந்து விடுகின்றன. முகவர்கள் மாதக்கணக்கில் முயன்றாலே அது நடக்கும். நமக்கு அதிர்ஷ்டம் இருந்து நம்மை யாராவது அப்பதிப்பாளரிடம் பாராட்டிப் பேசினால் அவர்கள் தம் மகளைக் கூட நமக்குக் கட்டி வைத்து விடுவார்கள். அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் புத்தகத்தை வேறு மொழியில் கொண்டு வருவதற்காக பதிப்பாளர்களையும் முகவர்களையும் நாடியவர் என்றால் நான் சொல்வதன் பொருள் விளங்கும்.
அரசு பதிப்பிற்காகவும் மொழிபெயர்ப்புக்காகவும் அளிக்கும் நிதியை வாங்க சில ஐரோப்பிய மோசடிப் பதிப்பாளர்கள் செயல்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இருக்கலாம். ஆனால் நிதியே கேட்காமல் சொந்தப் பணத்தில் நல்ல புத்தகங்களைக் கொண்டு வர விரும்பும் பதிப்பாளர்களும்தாம் அங்கு வருகிறார்கள்.
அப்படியே எந்த ஒப்பந்தமும் அமையாவிடினும் அங்கு ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடி எழுதலாம். நல்ல அமைதியான இடம்.
திமுக அரசு இதை இன்னும் மேம்படுத்தலாம். முக்கியமான மாநில, தேசிய, சர்வதேச பதிப்பாளர்கள் சிலரிடம் அரசே நேரடியாக ஒப்பந்தம் போட்டு அவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நூல்களைக் கொண்டு வர வேண்டும் என்றும், நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கலாம். இன்று தனியார் பல்க்லைகளிலே ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், எல்சிவியர் போன்ற நிறுவனங்களுடன் இத்தகைய ஒப்பந்தங்களைப் போடும்போது அரசால் சுலபத்தில் செய்ய முடியும். அப்போது சில்லறைப் பதிப்பகங்களை இரண்டாம் இடத்திற்குத் தள்ளிவிட இயலும். மேற்சொன்ன முக்கிய பதிப்பகங்களுக்கு எடிட்டர்கள் உள்ளூரிலேயே இருப்பதால் விமானச் செலவு செய்து ஐரோப்பாவில் பெட்டிக்கடைப் பதிப்பகம் நடத்தும் வெள்ளைக்காரர்கள் இலவசமாக இங்கு வந்து ஊர்சுற்ற செலவு செய்ய வேண்டியிருக்காது. அரசு இதை அறியும் என்றும். இதை நோக்கி விரைவில் செல்லக் கூடும் என எதிர்பார்க்கலாம்.
சுகிர்தராணி தன் பதிவில் சொல்லியிருப்பதைப் போல எழுத்தாளர்கள் தங்குவதற்கும், எழுதுவதற்குமான இடங்களை அரசு அமக்கலாம். எவ்வளவோ செய்யலாம்.
இப்போதைக்கு அடுத்த ஆண்டும் சர்வதேச புத்தகக் காட்சியில் கலந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்திருக்கிறேன்.
இந்நிகழ்வை ஒருங்கிணைத்த பொது நூலகத் துறைக்கும், பாடநூல் கழகத்துக்கும் பாராட்டுகள்.
பி.கு - CIBFஇன் ஒரே இழுக்கு கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழியாக்கத்தை வெளியிட்டதுதான். அதைவிடக் கொடுமை அந்நூலுக்கான பதாகையை வாசலிலே வைத்திருந்தது. அதையெல்லாம் ஆங்கிலத்தில் படித்து நம்மைக் கேவலமாக நினைக்க மாட்டார்களா என்று ஒரு நண்பர் கேட்டார். என்ன செய்வது? கனியிருப்ப காய் கவர்ந்தற்று.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...