Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

நித்தியகன்னி

அந்த பகுதியில் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. முகத்தில் அப்பின மண்ணும், உலோகமும் கலந்த துகள்களை அழுத்தித் துடைத்தான். கண்கள் எரிந்தன. இத்தனை பளிச்சென்ற பகல் இதற்கு முன் பார்த்ததில்லை. சாலை ஓரமாய் நெளிந்து சென்ற பெரிய கற்கள் பதித்த நடைபாதை மின்னியது. அவளை பின் தொடர்ந்து நடப்பதிலும் ஸ்பரிச இன்பம். சற்று காலகட்டி நடந்தாள். ஒவ்வொரு சுவடாக பதிந்தது. சொட்ட சொட்ட நடந்து கொண்டிருந்தாள். அவன் குனிந்து அந்த ஈர சுவடுகளை பார்த்தபடி அதில் தன் கால்கள் பதித்தான். செருப்பை உதறி விட்டு, அந்த சுவடுகளின் தடத்தை தொடந்தான், வாத்து போல கால்கள் அகட்டியபடி அவன் நடந்ததை தலையில் துண்டு கட்டி, சட்டை அணிந்திருந்த சிமிண்டை குழைக்கும் கட்டிட வேலைப் பெண்கள் விசித்திரமாய் பார்த்தனர். கறுத்த முகத்தில் வியர்வைக் கோடுகள்.



அவள் நைட்டி அணிந்து நூலகத்துக்கு வந்ததன் வியப்பு இன்னும் அடங்கவில்லை. அதை விட மற்றொரு அதிர்ச்சி இருந்தது. அதை அவன் ஆரம்பத்தில் அறிந்திருக்கவில்லை. நூலகத்தில் சந்திப்பது அவள் திட்டம் தான். வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து நடந்து இருவரும் பத்து நிமிடத்தில் அந்த பழைய இரும்பு சாமாங்கள் குவிந்து கிடக்கும் கடைக்கு வந்தார்கள். அவள் சற்றும் பதற்றத்தை காட்டிக் கொள்ளவில்லை. இரண்டு தெருக்கள் தள்ளி அவள் அண்ணன் வேலை செய்யும் பள்ளிக் கூட்டம். இரண்டாவது அண்ணனுக்கு நிறையப் பரிச்சயக்காரர்கள் இந்த தெருவிலே திரிந்தார்கள். அவன் ரோட்டின் வலதுசாரியில் சின்ன நடுக்கத்துடன் அவளைத் தொடர்ந்தான். கடையை ஒட்டின சின்ன சந்தில் திரும்பி நடந்தாள். நான்கு வீடுகள் கடந்ததும் கிம்பர்லி தனியார் நூலக பலகை. உள்ளே சென்று அவள் நூலகரிடம் பேசினாள். காசு செலுத்தி விட்டு அவனைக் காட்டி ஏதோ சொல்ல, நூலகர் மாமி அவனை நோக்கி புன்னகைத்தாள். அதில் சற்று சங்கடம் தெரிந்தது. அவன் வண்ண ஆங்கிலப் பத்திரிகைகள் சிதறிக் கிடந்த வரவேற்பறை மேஜையில் அமர்ந்தான். படித்த கொஞ்ச நேரம் அது ஆங்கிலம் அல்ல எனத் தோன்றியது. தலை நிமிராமலே அவனுக்கு அவள் உள்-அறைக்கு சென்று அங்குள்ள மாடிப்படியில் எறுவது தெரிந்ததது.

குளிர்பதனப் பெட்டி பேருக்கு முனகியதே அன்றி லேசான புழுக்கம்; கசகசத்தது. முன்னறையில் தினப்பத்திரிகை கிழவர்களும், காமிக்ஸ் குழந்தைகள் மொய்த்தனர். அகன்ற உள்ளறையில் ஒரு மெல்லிசான குழல் விளக்கு படபடத்து சிரித்தது. மற்றொரு குமிழ்விளக்கு அரைஜீவனில் உயிர்விட மறுத்தது. மங்கல் ஒளியில் மூன்று பேர் சிவப்புத் தோல் தடிமன் நூல்களை அலமாரிகளில் இழுத்து பக்கங்களுள் தேடினார்கள். உறக்கத்தில் போல் மூலைக்கு மூலை அலைந்தார்கள். ஏதோ ரகசியத்தை புதைத்து வைத்திருக்கும் தோற்றம் கொண்டிருந்தன நூலக் அறைகள்: அலமாரிகள் ஊடே மவுனம் வலுத்தது, மூச்சு காற்று நூல் கெட்டி அட்டைகளில் எதிரொலித்தது. அவனை நோக்கி எங்கும் ஒரு காலடி ஓசை வந்து நின்றது, அவனை ஒத்த, அதே தொனியில், கால இடைவெளிகளில் நடக்கும் ஓசை. அவர்கள் ஏதும் திட்டமிட்டிருக்க இல்லை. ஒரு உள்ளுணர்வில் மாடி அறைக்கு செல்ல விழைந்தான். அங்கு அவள் தனிமையில் மாடிப்படிகளை பார்த்தபடி பெருமூச்சுகளுடன் நிற்பதாய் கற்பனையில். அவனுக்கு மூச்சுத் திணறியது.

மாடிபடி நெருங்கிட நூலகர் நான்கு பெரும் புத்தகங்களை மார்போடு அணைத்தபடி அவனை கடந்து சென்றார். இல்லை கடக்கவில்லை. அவன் கண்களை சந்தித்து நின்றார். கண்காணிப்புப் பார்வை. அவனது படிப்பு, பெற்றோர் விவரங்கள் விசாரித்தார். அவர் பகுதி நேர பள்ளி ஆசிரியை என்றார். பிறகு "மாணவர்களின் நன்னடத்தை மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு. அத்னாலே மாணவரகளுடன் என்னால் இளமையுடன் பழக முடிகிறது. நட்பு பரிசுத்தமானது. மனதை கட்டுப் படுத்தி அதைக் காப்பாற்றிட வேண்டும்" இப்படி சொல்லிருக்க வேண்டும். சில நொடிகள் அவரிடம் மௌனமாக அவனது பதில் எதிர்பார்ப்பது போல் புன்னகையை வழிமறித்த பாவனை. அந்த நொடிகளில் அவர் நிஜமாகவே தான் பேசினாரா என்று சந்தேகம் நேர்ந்தது. அசடாய் சிரித்தபடி மாடிப்படியை கடந்து தத்துவ நூல் வரிசைப் பக்கமாய் நடந்தான். பிறகு சட்டென திரும்பி மாடிப்படிகளில் தாவி ஏறினான. அவனது செய்கை எண்ணி அவனுக்கே சிரிப்பு வந்தது.



மாடி நூலக அறை விஸ்தீகரமானது. இருபெரும் ஜென்னல்களில் பக்கத்து கட்டிட வெயில் ஜொலிக்கும் மொட்டை மாடியின் பரப்பு விரிந்தது. இருப்பதிலேயே பழசான, கிழிந்து வீணான நூலகளை சீரற்று அடுக்கியிருந்தார்கள். மின்விசிறி ஓட வில்லை. ஆனால் திறந்த ஜன்னல் காற்றில் புத்தக காகிதங்கள் படபடத்து நொறுங்கின, காலடிகள் திம் திம்மென எதிரொலித்தன. அவன் வாழ் நாளின் ஆசை அது. ஒரு பெண்ணை தனியாக சந்திக்கப் போகிறான். முதல் முறையாக மறைக்கப்பட்ட பெண்ணூறுப்புகளை பார்க்க ஸ்பரிசிக்க போகிறான். அவர்கள் எதையும் திட்டம் இடவில்லை. ஆனால் அவனுக்கு அது நடக்கப் போவதாக திண்ணமாகத் தோன்றியது.

அவள் பெயரை அழைக்க கூசியது. ஒரு நம்பிக்கையில் அங்குள்ள ஒரே உள்ளறைக்குள் நுழைந்தான். பழைய காகிதங்கள் பொடிந்து அழுகும் நெடி. அங்கு நாற்காலி இல்லை, அலமாரி கூட இல்லை, புத்தகங்கள், குறிப்பாய் என்சைக்குளோபீடியாக்கள், இறைந்து கிடந்தன. முக்கியமாய் அவள் அங்கு இல்லை. நெஞ்சுக்குள் மிதிக்கும் ஓசை. அவள் பெயரை காற்றுக்கு மட்டும் கேட்கும் படி அழைத்தான்: "கதீ.." நீண்டு செல்லும் மௌனம். அலமாரி வரிசைகளில் ஒவ்வொன்றாக தேடினான். புரியாத பீதி அடிவயிற்றைக் கவ்வியது. தடுமாறினான். அலமாரி ஒன்றில் சாய்ந்து நிதானித்திட குளுக்கென அவள் சிரிப்பது கேட்டது. எதிரில் நின்று விளம்பரப் பெண் போல் முழுப்பல் வரிசையும் காட்டி சிரித்தாள். வாசலை கவனித்தபடி நெருங்கினான். அவளது வாசனை கிறங்க வைத்தது.

கழுத்தில் முகம் பதித்து முகர்ந்தான். வியர்வை கசத்தது. உதடுகளை முத்தினான். நாக்கால் அவள் நாக்கை நெருடினான். உதடுகளால் அதைப் பற்றி உறிஞ்சி எச்சில் முழுங்கினான். மாறி மாறி முத்தியபின் பொம்மைகளை பரிமாறின குழந்தைகள் போல் சிரித்தனர். சால்வையை விலக்கி மார்பை நோக்கினான். கண்களை தாழ்த்தி சிரமப்பட்டு வெட்கினாள். கைகள் அவள் வலுவான இடை மற்றும் வடிவான புட்டத்தை மாறிமாறி பற்றின. அவன் அப்போது செய்யப் போவதை அவள் அக்கணம் எதிர்பார்க்கவில்லை; ஆனால் முற்றிலுமாக அல்ல.

நைட்டியை இழுத்து தூக்கி இடது தொடையை வருடியபடி மேல் வந்தான். ஜட்டி அணிந்திருக்கவில்லை என்பதை அவன் எண்ணிப் உணரவில்லை. மயிடர்ந்த பகுதிக்கு வந்தான். அவன் தோளில் வெப்பமான மூச்சுக் காற்று. ஈரம். அவள் தொடை இடுக்கு வரை ஈரம். விரல் நுழைக்க வழுவழுவென்றது. புசுக்கென்று உள்ளே போனது. அவள் குறியை அழுத்தி கீழாக வருடினான்; தோளில் அவள் தலை புரண்டது. கிச்சுகிச்சு. "கிளிட்டொரிஸ் எந்த பகுதி?" என யோசிக்க, அவன் கைகள் மேலும் ஈரமாகின. வழவழப்பான திரவத்தில் அவள் புட்டம் வரை நனைத்திருந்தது. விரலில் ஒரு துளி இறங்கி அவன் உள்ளங்கையை அடைந்தது. அல்குல் மயிர்களின் முனையில் துளிகள் சில்ர்த்து நிற்பதாக கற்பித்தான். மரப்படிகளில் கனத்த காலடிகள் ஏறி வந்தன.

சட்டென பின்பாய்ந்தாள். அவன் சுழன்று திரும்பி ஒரு நாற்காலியில் விழுந்து கெட்டி அட்டை நூலொன்றை உருவினான். அட்டையும், முதல் பக்கங்களும் வந்தன. பாரெடைஸ் லாஸ்டு -- இழந்த சொர்க்கம். ஜான் மில்டன். அவன் மனம் அமைதியாக பெயர் மற்றும் முன்னுரையை படித்தன. மாடிப்படி முகப்பில் நூலகர் நின்றார். அருகில் புத்தகங்களை ஏந்தியபடி சென்றாள். சால்வையை எடுத்துப் போட மறந்திருந்தாள். "நீங்கள் ரெண்டு பேரும் தனியே இங்கே வரக்கூடாது"

"இல்லை புத்தகம் எடுக்கவே வந்தேன்"

"தெரியும்; என்னைப் போல் மற்ற்வர்கள் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் யாராவது ஒருவர் கீழே சென்று படியுங்கள்"

தலையாட்டினாள். அவர் திரும்பும் போது கீழே கிடக்கும் சால்வையை கவனித்தார். சலனமின்றி முகந்திருப்பி இறங்கினார். கூடவே அவளும் இறங்கினாள். அவர் அவனை விசாரிக்காதது அவனுக்கு உறுத்தியது; மேலும் படிக்க முடியவில்லை.

அவன் விரல் இன்னும் ஈரத்தில் மினுமினுத்தது. முகர்ந்தான். சுவைத்தான். உள்-நாக்கில் அது ஒட்டிக் கொண்டது. ஒவ்வொரு நினைவாக ஆனால் முன்பின்னாக அசை போட்டபடி உலாத்தினான். நெஞ்சே வெடிக்கும் போல் தோன்றியது. நிதானித்திட மூச்சு முட்டியது. பெண்ணுக்கு விந்து வரும் என்று அம்பட்டன் ரமேஷ் சொன்னதை நம்பவில்லை.கிளரர்ச்சியடைந்தால் பெண் குறியில் வழவழப்புக்கான நீர் சுரக்கும் என்று தான் படித்திருந்தான். "அப்படியென்றால் ... எப்படி நான் தொட்டதும் கிளர்ச்சியில் ஈரமாகி விட்டாளா? கன்யாகுமரியில் சரக்கு தள்ளிப் போன சுந்தரேசன் இந்த கதை சொல்லவில்லையே. எச்சில் தொட்டு ஈரப்படுத்தியாக அல்லவா கூறினான்; எது உண்மை?" அவனுக்கு குழம்பியது. அலமாரி வரிசை முழுக்க கறுப்பு ரெக்சின் அட்டைகளில் இருனூறு முன்னூறு ஆண்டுகளுக்கு முன் பரிச்சயமற்ற மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள். எடுத்து புரட்டி படம் பார்த்தான். ஒரு ஜேனட் புகைப்படத்தில் மிக இளமையாக தோன்றினாள். கறுத்த கவுன் போட்டு இறுக்கமாக முக்காலியில் அமர்ந்திருந்தாள். நேரான பார்வை. அங்கங்காய் புரட்டினான். அறுபது வயதில் சாவு. இசை, தோட்டக்கலை ஈடுபாடு. மணமுடிக்க வில்லை. ஏன்? சகோதரிகளின் குடும்பத்துடன் அவர்கள் பிள்ளைகளை வளர்த்து, ஐம்பதாவது வயதில் லெசான கிறுக்கின் அறிகுறிகள். அவளை முதுமையாக அவனால் கற்பனை செய்யமுடியவில்லை. கடைசி காலத்தில் தனியறையில் அடைத்து சாவு. பெட்டி பெட்டியாய் நாட்குறிப்புகள் எழுதியிருக்கிறாள். குறிப்பாய் சிறு குழந்தைகளை குளிப்பாட்டுவதை துல்லியமான, அலாதியான விருப்பத்துடன் வருணிக்கும் ஏராள பக்கங்கள். இதை நூலாசிரியர் நீள்வாக்கியங்களில் சுற்றி சுற்றி வந்து வியக்கிறார். "ஏதோ மனசாந்திக்கு எழுதுகிறாள், விடேன்". அவனுக்கு மீசை, கண்ணின் சுருக்கங்களில் வியர்த்தது. முக வியர்வையை ஒரு சைக்கோ-தீவிரத்துடன் இம்மி விடாமல் துடைக்கும் பழக்கம் சின்ன வயதிலிருந்து. மாடிப்படிக்களில் ஓடி வரும் அதிர்வு. காற்றடிப்பது நின்றது. புழுக்கம் ஒரேயடியாக ஏறியது.

அவள் வந்து சால்வையை எடுத்து அவசரமாக சுற்றிக் கொண்டாள். அவன் அசையவில்லை. அவனைப் பார்க்காது புத்தகங்களை அதனதன் இடத்தில் அடுக்கினாள். நிமிர்ந்து பளிச் சிரிப்பு சிரித்தாள். மூச்சு தளர்த்தி நெருங்கினான்; பசு காடிக்குடத்தை முகர்வது போல் உடை மேலாக மார்புகளை முத்தினான். கணு இருந்த இடமென்று உத்தேசமாக கடித்தான். முகத்தில் வலியாக பரவும் சிவப்பு. சில கணங்கள் தாமதமாக "ஆவ்" என்றாள். வேகமாக மாடிப்படிகள் இறங்கின பாணியில் அவளுக்கு வயதுக்கு மீறின மூப்பு தெரிந்தது. ஒரு தலை நரைத்த பெண் சிசுவை டப்பில் போட்டு குளிப்பாட்டும் காட்சி நினைவில் தோன்றியது.


பாதசாரிகள் நடைபாதையின் பெரிய பாராங்கற்களை இரண்டு பேர் சேர்ந்து பெயர்த்து நகர்த்திக் கொண்டிருந்தனர். வலது புறமாய் சிமிண்டு நடைபாதை இடும் வேலை பக்கத்தில். சிமிண்டு சட்டி சுமந்து வந்த பெண் சட்டென அசௌகரியமாக பாதி நிமிர்ந்து "பிள்ளே என்ன இந்த பக்கம்?" என்று இழுத்தாள். "புஸ்தகம் வாங்க வந்தேன்". அவன் வீட்டுக்கு மூன்று வீடுகள் தாண்டின வீட்டில் தாய்க்கிழவி செத்த பின் தனியாக குடியிருந்தாள் மேரி. அவன் பள்ளியில் கொஞ்ச காலம் சத்துணவுக் கூடத்தில் வேலை செய்திருந்தாள். ஊர்ப்பக்கமாய் அதிகம் பேசிக் கொள்ள மாட்டார்கள். சாப்பாடு முடிந்த பின் ரெண்டு முட்டை தனியாக அழைத்து முந்தானை மறைப்பில்ருந்து எடுத்து தருவாள். குட்டையானவள். ஆனால் தொப்புளுக்கு கீழே சேலை கட்டி, குட்டையான ரவிக்கை அணிந்து இடை பாம்பு போல் நீண்டிருக்கும். சத்துணவிலிருந்து நின்று பின் கடனில் வெற்றிலை பாக்கு குடிசைக்கடை நடத்தினாள்; அவ்வப்போது கட்டுமானப் பணிக்கும் வருவாள். மெலிந்திருந்தாள். மார்பில் பாக்கெட்டுகள் கொண்ட ஆண்களின் வெள்ளை சட்டை, பாவாடையில் கருமை பளபளப்பு தனித்து நின்றது. "வரெச்சில கூட பார்த்தேன்; கூப்பிடேல, வரட்டும்னு பா...த்தேன்". அருகே சிமெண்டு குழைத்து ஜல்லி அள்ளின மூன்று ஆண்கள் நின்று எதிரில் பார்த்து குசுகுசுத்தனர். ஒருவர் இளித்தபடி பக்கவாட்டாய் கண்சிமிட்டினார். அவனுக்கு வயிற்றைக் கலக்கியது. அவர்களைத் தவிர அந்த ஓய்வு தினத்தில் சாலை வேறிச்சோடியிருந்தது. நடமாட்டமற்ற வெளியில் யாருமற்று இரண்டு பேர் இடைவெளி விட்டு நடந்தாலும் சந்தேகம் வரும் என்று தனக்கு ஏன் முன்பு தோன்றவில்லை.

கேலியும், கொச்சையும் முன்னே செல்பவளைப் பற்றி என ஊகித்தான். மேரியின் பார்வையில் பரிவு: "பிள்ளே போணும்". அவன் கிளம்பிய போது பார்த்தான்: அவள் அவனுக்காக பாதை திருப்பத்தில் நின்றிருந்தாள்.

நடைபாதை திருப்பம் கட்டுமான உடைவுகளால் ஒருவர் மட்டுமே நடக்குவண்ணம் குறுகலாகியிருந்தது. முதன்முதலாய் வெளியிடத்தில் அவளை அத்தனை நெருக்கத்தில் சந்தித்தான். முட்டியபடி கடந்தான்: "என்ன வளியில நின்னு பேச்சு?"

"நீ எதுக்காவ ஜட்டி போடாம வந்தேன்னு தெரியுமே"

அவள் அவனைத் தாண்டி ஓடினாள். மெயின் ரோடு ஜனங்களிடையே கலக்க ஆசுவாசம் ஆகியது. பேருந்து நிறுத்த தூணில் சாய்ந்து பின் நின்று அவளிடம் பேசினான். கைத்தூண்டால் வாய் மூடி பேசினாள். அவளுக்கு தெரிந்த ஒரு குறுந்தாடி குல்லா மாமா வர, நிறுத்ததின் எதிர்ப்பக்கமாய் நகர்ந்து நின்று அவளை பார்த்தபடி, நினைவுகளை மீட்டினான். அவள் நான்கைந்து பேருந்துகளை தவற விட்டாள். செருப்பு ஈரத்தில் மினுமினுத்தது. உதறிப் போட்டுக் கொண்டாள். சால்வை தளர்த்தி கழுத்தை அழுத்தித் துடைத்தாள். வியர்வையின் வீச்சமும், அழுக்கின் சுவையும் அவன் நாவில் சுரந்தன. காற்று பலமாக வீசியது. பக்கத்து ஆல்மரத்திலிருந்து குருவிகள் கலைந்து பறந்தன. நைட்டி அவள் தொடையோடு ஒட்டிக் கொண்டது. விடுத்து சீராக்கினாள்; தொடை படிந்த இடங்களில் நீலம் கரு நீலமாக படிந்தது. கடைசி பேருந்தில் ஏற முயன்ற போது அவளது நனைந்த ஒருகால் செருப்பு வழுவியது. சுதாரித்து ஏறினாள். கூட்டத்தில் முகம் திணித்து வெளிப்பட்டு சிரித்து, கையசைக்கும் பாவனை காட்டினாள். உடனே அவன் பார்த்திருக்கையிலே முகம் பரிச்சயமற்ற பாவனைக்கு மாறியது; அவன் மேலும் ஆவேசமாக கையசைத்தான்; எதிர்வினையின்றி முகத்தை கூட்டத்துள் இழுத்துக் கொண்டாள்.

மழை பலமாக கொட்டியது. மின்-கம்பிகளில் இருந்து காகங்கள் விடுவித்து சிதறின. மரக்கிளைகள் முறிவது போல் மோதின. சில நிமிடங்களில் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. கட்டிடத்தொழிலாளர்கள் பிளாஸ்டிக் கவர்களை போத்தியபடி ஓடிக் கடந்தனர். வாகனங்கள் சேறு இறைப்பது பொருட்படுத்தாது அவன் சாலை விளிம்பில் நின்று பார்த்தான். அவனுக்குள் அப்போதும் வெப்பம் மீதமிருந்தது.

சாரலாக குறைந்த பின் நெடு நேரமாகியும் பேருந்து வரவில்லை. பதினைந்து நிமிடம் நடந்து அடுத்த முக்கிய நிறுத்தத்துக்கு போகலாம். அல்லது பக்கத்தில் நண்பன் மணியின் வீட்டுக்கு போகலாம்; அவன் அம்மா சூடாக தோசை தேங்காய் சட்னியுடன் பாயசம் போல் டீ தருவாள். கூட ஐந்து நிமிட நடை என்றால் பிரின்ஸ் தியேட்டரில் ஒரு மணி நேரம் முடிந்த புரூஸ்லீ ஓடும். அவன் திரும்பி நடந்தான்.

நூலக வாசலில் குடை தொப்பிகள் சகிதம் கூடி நின்றார்கள். நெருக்கினபடி உள்ளே நகர்ந்தான். வேளி, உள்-அறைகள் காலி. நூலகர் அறை பூட்டியிருந்தது. மேலும் உள் நகர்ந்தான். ஒவ்வொரு விளக்காக போட்டான். ஒரு பழங்கால வீட்டை மாற்றியைமைத்திருக்கிறார்கள் என்ற விசயம் அவனுக்கு அப்போது உறைத்தது. ரொமான்ஸ் நாவல்கள் வைத்திருந்த அலமாரியின் பக்கவாட்டாக இடுப்புயரத்துக்கு கீழாக ஸ்விட்சு போர்டு. "இது படுக்கை அறை", யூகித்தான். நூலகர் அறையின் ஜன்னலை வெளியிலிருந்து தள்ளித் திறந்தான். அங்கு மேரிமாதாவின் கருணை விழிகளுக்குக் கீழே அடுப்படி திண்டு. சில தின்பண்ட டப்பாக்களும், தண்ணீர்க் கூஜாவும் வைத்திருந்தார். ஒவ்வொரு அறையாக விளக்குகளை அணைத்தபடி நடந்தான். காலையில் இருந்த பதற்றம் அறவே இப்போது இல்லை. அந்த பெண்ணின் நினைவு வந்தது. அந்நூலை பிறர் எடுக்காத மட்டில் வரலாற்று பகுதி அலமாரி அடுக்கில் ஒளித்து வைத்திருந்தான். படிக்கும் நோக்கத்தில் அல்ல, பதுக்கும் திகிலுக்காக.

சுதந்திரமாக மரப்படிகளில் ஏறினான். மொத்த கட்டிடமும் எதிரொலித்தது. மேலே சென்றதும் ஜன்னல் பக்கமாய் அமர நாற்காலியை தேடினான். விட்ட இடத்தில் இல்லை. உள்ளே அலமாரிகள் இடைவெளியில் மென்வெளிச்சத்தில் இருந்தது. அங்கு முகத்துக்கு நேராய் அப்புத்தகத்தை தூக்கிப் பிடித்து வாசித்தபடி இருந்தாள் ஒரு சிறுமி.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...