Skip to main content

சிறந்த பதிவருக்கான முதல் சுஜாதா விருது லேகாவுக்கு

இணையபதிவருக்கான சுஜாதா விருதுக்கு லேகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது இணையதளம் yalisai.blogspot.com. தேர்ந்தெடுத்துள்ளவர் எஸ்.ராமகிருஷ்ணன். லேகா இந்த விருதுக்கு தகுதியானவரா? இயல்பாகவே எந்தவொரு விருதின் போதும் எழுப்பப்படும் இந்த கேள்வி எப்போதும் போலவே இங்கும் அனாவசியமானதே. தீர்ப்பை விமர்சிப்பதை விட நாம் லேகாவின் தளத்தை ஆய்ந்து விமர்சிக்கலாம்.



எஸ்.ராவுக்கு தமிழ்ப்பதிவர்களின் எழுத்து உத்தேசம் குறித்து என்றுமே ஒரு எதிர்மறை விமர்சனம் உண்டு என்று ஊகிக்கிறேன். அவருக்கு இப்போட்டியில் பங்குபெறுவதற்காக அனுப்பப்பட்ட வலைப்பக்கங்கள் பெரும்பாலானவை வழக்கமான ஜனரஞ்சக பத்திரிகைகளை ஈ அடித்த கேளிக்கை எழுத்துக்களாகவே இருந்திருக்கும். இதுவும் ஊகமே. (நான் பங்குபெற இல்லை. விருதை விட பெரிய அங்கீகாரம் உயிர்மையில் எழுதுவது தான்). இந்த போட்டியாளர்களில் மாற்று சினிமா மற்றும் தீவிர இலக்கியம் பற்றி நிறையவே எழுதி உள்ள லேகாவை தேர்ந்தெடுத்ததன் மூலம் எஸ்.ரா பதிவர் உலகத்துக்கு ஒரு சேதி விடுக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

லேகாவின் யாழிசை தளம் எனக்கு முன்பாகவே பரிச்சயம் உண்டு. எஸ்.ரா சொலவது போல் லேகாவின் வாசிப்பு விரிவு வியப்பளிப்பது. இணைய வாசகர்களுக்கு லேகாவின் எழுத்துக்கள் தீவிர இலக்கிய நூல்களுக்கான சிறந்த சுட்டிகள்.

தீவிர இலக்கிய வாசிப்பும், அத்தகைய நூல்களை எழுத்துவழி அறிமுகப்படுத்தும் தொடர்ச்சியான அக்கறையும் கொண்ட ஒருவர் இவ்விருதை பெறப்போவதில் பளிச்சென்ற மகிழ்ச்சியே. தொடர்ந்தும் தீவிரர்களே இவ்விருதை பெறட்டும்!

Comments

என் பார்வையில் இது மிகக் சரியான தேர்வே.
சுஜாதா பெரும்பாலும் வாசிப்பையே விரும்புவார். அவர் ஒரு சிறந்த எழுத்தாளராக இருந்தாலும், எழுதுவதை காட்டிலும் வாசிப்பதில் தான் சுஜாதாவிற்கு அதிக ஆர்வம், ஆசை பிரியம்.

சுஜாதா போலவே லேகா வும், அதிகம் வாசிப்பார், தன வாசிப்பு அனுபவங்களை மற்றவரும் பெற வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை உடையவர் லேகா.

தமிழ் இணையத்தில் சுஜாதா மற்றும் எஸ் ராமகிறிஷ்ணனின் பங்கு மிக சிறப்பானது, அம்பலம் இணைய இதழில் எஸ் ரா மிக முக்கிய பங்கு ஆற்றி உள்ளார். எனவே எஸ் ரா விற்கு இணைய எழுத்து பற்றி மிக விரிவாக தெரியும்.

ஒரு சிறந்த இனிய எழுத்தாளர் ஒரு சிறந்த வாசிப்பு சார்ந்த பதிவரை தேர்ந்து எடுத்து உள்ளது மிக சிறப்பாக படுகிறது எனக்கு.
எனக்கும் உங்களுடன் உடன்பாடே!
மரா said…
நான் உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன். நானும் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தளத்தை வாசித்திருக்கிறேன்.புத்தக அட்டை புகைப்படமும் ஒரு சிறுகுறிப்புமே இருக்குமே ஒழிய தான் அப்படைப்பின் வழியே என்ன கண்டார் என்பது எங்கும் இருக்காது....இதில் நிறைய அரசியல் இருக்குமென்பது என் ஊகம்.உங்களுக்கு புரிய வாய்ப்பிருக்கிறது.நன்றி.
butterfly Surya said…
வாழ்த்துகள் லேகா.

பகிர்விற்கு நன்றி அபிலாஷ்.
நன்றி சூர்யா
மயில்ராவணனுக்கு
எஸ்.ரா சம்மந்தப்பட்ட எந்த தேர்விலும் அரசியல் புகாது என்பது என் நம்பிக்கை. அவர்தன் மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட மாட்டார். லேகாவின் நல்ல முயற்சிக்கு இது ஒரு ஊக்கியாக அமையட்டும்.
மரா said…
சரிங்க........நீங்க சொன்னா. என் எண்ணத்தை மாத்திகிறேன்.லேகாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இன்றுதான் இப்பதிவைப் பார்வையிட்டேன்.

1. சிறந்த பதிவரைத் தேர்தெடுக்கும் போட்டியல்ல இது. சிறந்த இணையம் அல்லது வலைப்பதிவு என்றவாறே அறிவிக்கப்பட்டிருந்தது.
http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=2565 இல் குறிப்பிட்டபடி \\ தேர்வு முறை குறித்த தகவல்கள் பகிரங்கமாக வெளியிடப்படும்.\\ என்பதை உண்மை என்று நம்பி www.viruba.com ஐயும் யான் போட்டிக்கு அனுப்பியிருந்தேன்.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் லேகாவின் வலைப்பதிவைப் பார்த்தேன். அதில் பல இடங்களில் எஸ்.ரா படத்தையும், மனுச புத்திரன் படத்தையும் போட்டு பதிவுகள் எழுதியிருந்தார். கூடுதலாக அவர் விரும்பி வாசிப்பவை!! பட்டியலில் எஸ்.ரா முதலிடத்தில் இருந்தார், காலச்சுவடு கடைசி இடத்தில் இருந்தது. இப்பவும் அப்படியே. லேகா பெரிதும் எஸ்.ராவை வாசிப்பவர். இவை எஸ்.ராவுக்கும், மனுச புத்திரனக்கும் போதுமான காரணங்கள்.

2. \\ தேர்வு முறை குறித்த தகவல்கள் பகிரங்கமாக வெளியிடப்படும்.\\ என்பதற்கமைய போட்டியில் கலந்துகொண்ட இணையங்களின் பட்டியலை வெளியிடமுடியுமா என்று மனுச புத்திரன், எஸ்.ரா இருவருக்கும் மின்-அஞ்சல் அனுப்பினேன். அதற்கு இன்றுவரை உரிய பதில் அவர்களிடமிருந்து வரவில்லை.

பின்னர் உயிரோசையில் ஒருவர் \\ தமிழ்நாட்டில் பெரும்பாலான இலக்கிய விருதுகள் அதிகாரத்தரகர்களால் கையகப் படுத்தப்பட்டுவிட்டதாக \\ எழுதியிருந்தார்.

அவ்வாறே நடந்துள்ளது.
விருபா, எந்த விருதின் நேர்மையை சந்தேகிப்பதனாலும் பயனில்லை. விருதுகள் சின்ன ஊக்குவிப்புகள். அவை இல்லாமலும் நம் பயணம் தொடரும். சொல்லப்போனால் விருதுகளை நாடும் போது அதைப் பற்றியே சர்ச்சிக்கும் போது நாம் பலவீனமாக இருக்கிறோம் என்று பொருள். அதனாலே தானோ என்னவோ பொதுவாக முதியவர்களுக்கே விருதுகள் வழங்கப்படுகின்றன. பதிவர்கள் பொதுவாக இளைஞர்கள். அதனால் இவ்விசயத்தில் சின்ன விதிவிலக்கு என்று நினைக்கிறேன் :)

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...