கிளர்த்திய தூசுகளாய்
எங்கும் அலைந்து திரியும் பூனை
சில நேரங்களில் கேட்டும் கேட்காத மாதிரி பார்த்து
பல நேரங்களில் பார்த்தபடி உதாசீனித்து
என் கவனம் கிடைக்காத வேளைகளில்
வேண்டுதல், கெஞ்சல், தேம்பல், கோபம், சுயவிவாதம், நியாய விசாரணை என
ஒவ்வொரு தொனியிலாய் முடிவற்ற அழைப்புகள் செய்து
யாருக்கும் புரியாத செல்ல விசாரிப்புகளுக்கு மட்டும்
அரைத்தூக்கத்தில் ங்...ம் என முனகி
சில வரிகளில் அடங்கும் பூனை வாழ்வு
தூக்கம், உணவு தவிர்த்த
தேவை:
விளையாட்டுக்கள்
தொந்தரவற்ற இடங்கள்
அடையாத தொலைவுகளை நோட்டமிட உயரங்கள்
வேறு புகார்கள் இல்லை
லோசன் ஊற்றி துடைத்து
நுண்ணியிர்கள் வெளியேற்றி சுத்தம் செய்த நாளொன்றில்
வீட்டுக்குள் வரமறுத்தது
பூனை
