இன்று காலையில் இந்தியா-இலங்கை டெஸ்டின் ஐந்தாவது நாள் ஆட்டத்தை பார்க்கும் போது இந்த கேள்வியே என்னை குழப்பியது.
அணியின் பலவீன கண்ணியான வலெக்திராவைக் கொண்டு பந்து வீச்சை துவங்கியது, அஜெந்தா மெண்டிஸை ஒரு மணிநேரத்துக்கு பிறகு பொறுமையாக அறிமுகப்படுத்தியது முதல் எதிர்மறையான கள அமைப்பு வரை சங்கக்காராவின் திட்டமுறைகள் படு பேத்தல். மெண்டிஸின் திறன் மீது அணித்தலைவருக்கு உள்ள நிச்சயமின்மை இலங்கைக்கு ஆரோக்கியமில்லை. எதிர்காலத்தில் இலங்கை டெஸ்டு தொடர்களை வெல்ல வேண்டுமானால் மெண்டிஸின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். முரளி கார்த்திக்கிற்கு நடந்தது மெண்டிஸின் வாழ்விலும் நேரக் கூடாது.
மலிங்கா தாமதமாக வந்தது ரிவர்ஸ் ஸிவிங்கை பயன்படுத்துவதற்காக இருக்கலாம். அவரது வேகம் 130களுக்கு உள்ளாகவே இருந்தது. காயம்? ஆனால் சங்கக்காரா நினைத்தது நடக்கவில்லை. எதுவும் திருப்தியளிக்காத பட்சத்திலும் அவர் இந்தியாவை தாக்க தயங்கியபடியே இருந்தார். ஒற்றை இரட்டை ஓட்டங்களை அள்ளி வழங்கினார். நானிதை எழுதும் போது இந்தியாவுக்கு வெற்றி பெற இன்னும் 86 ஓட்டங்களே தேவை. தனது ஐந்தாவது விக்கெட்டாக ரந்திவ் சச்சினை வெளியேற்றி விட்டார்.
ஒருவேளை இந்தியா வெற்றி பெற்றால் பெருமையில் பாதி சங்கக்காராவுக்கே செல்ல வேண்டும்.
