கனிமொழியின் ஜெயில் வாசத்தின் போது வரும் எதிர்வினைகளும் நக்கல்களும் வக்கிரமாக உள்ளன. அவர் பாலியல் ரீதியாய் ஒழுக்கங் கெட்டவர் என்பதில் இருந்து அவரது குளியலறை ஜெயிலுக்குள் எங்கிருக்கும் என்று வினவுவதை வரை இவை கனிமொழியை ஒரு விபச்சாரி போல் சித்தரிக்கின்றன. 200 கோடி திருடின கனிமொழி மட்டும் பாலியல் விமர்சனத்துக்கு உள்ளாவது நமக்குள் இருக்கும் பெண்களை ஒழுக்க குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பார்க்கும் விருப்பத்தை காட்டுகிறது. ஒரு பெண் தவறு செய்தால் அவளது பாலியல் ஒழுக்கத்தை விசாரணை செய்து தொடர்ந்து அதே மர்மத்தில் தொடர்ந்து தாக்குவது ஒரு பொதுப்புத்தி. இலக்கியம் படிப்பவர்கள், எழுதுபவர்கள், இணையத்தில் புழங்கும் பண்பட்ட பன்னாட்டு குமாஸ்தாக்கள் அனைவரிடமும் வேறுபாடின்றி நாம் காண்பது தன்னை மேலாக நினைக்கும் ஒரு சட்டாம்பிள்ளையைத் தான். பண்பாடும், வாசிப்பும், அது சார்ந்த உரையாடல்களும் வெறும் பொழுதுபோக்கோ என்ற ஐயத்தை இது ஏற்படுத்துகிறது. முன்பு கற்காலத்தில் இருந்து இரும்புகாலத்திற்கு மனிதன் பரிணமித்தான் என்றால் அது வெறும் இரும்பை பயன்படுத்தினதால் மட்டுமல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கருத்துகள்