முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு குப்பைத் தொட்டிக்குள்





ஒரு காலையை
சகஎழுத்தாளனை தூஷித்துக் கொண்டு
துவங்குகிறேன்
என் நாய்க் குட்டி
தன் பீப்பீ பொம்மையை
தொடர்ந்து கடித்து கதற வைக்கிறது

பகல் முழுக்க
வேலை செய்து கொண்டே
இருக்கிறேன்
நாய்க் குட்டி நன்றாக
தூங்கிப் போகிறது
பலமுறை
சிறுசிறு சத்தங்கள் அசைவுகள் வாசனைகளுக்கு
உடனடி விழித்து
சுற்றிப் பார்க்கிறது
கதவருகே ஓடிக் குலைக்கிறது
பதிலில்லாவிட்டால்
தனக்கு எட்டாத
ஒவ்வொரு ஜன்னல் பக்கமாய்
நின்று வினவுகிறது
பின் ஏதும் நடக்காதது போல்
தூங்கப் போகிறது
சிறுபெருமூச்சுடன்

மாலை வந்ததும்
எதற்கு வேலை செய்கிறோம்
என்று குழம்பி
எரிச்சலடைந்து
எழுகிறேன்
நாய்க்குட்டி சிறு கொட்டாவி விட்டு
அடுத்து என்னை கவனித்தபடி
பெரிய கொட்டாவியை விடுகிறது
ஓடுகிறது
வாலாட்டி உணவு கேட்கிறது
மூத்திரம் போக இடம் பார்க்கிறது

மொட்டைமாடிக்கு போகிறோம்
சுற்றிலுள்ள அடுக்குமாடி மொட்டைமாடிகளில்
சுற்றுச் சுவரில் பிடித்தபடி நின்று
ரயிலில் இருந்து பார்ப்பது போல்
வேடிக்கைப் பார்க்கும் பலரில்
யாரோ ஒருவர்
கீழே குதிக்கப் போகிறார்
என சட்டென்று நினைத்துப் பார்க்கிறேன்
மொட்டைமாடியில் நடைபயிற்சி
தியானம்
யோகா
தண்டால் எடுப்பது
புத்தகம் படிப்பது
தொலைதூரத்தில் யாருடனாவது சைகையில் பேசிப் பார்ப்பது
எங்கோ மங்கலாய் புலப்படும் ஒருவர்
நேரில் காண எப்படியிருப்பார்
என கற்பனை பண்ணுவது
என எல்லாமே
அதற்கான முன் தயாரிப்பு தான்
என்று நினைக்கிறேன்

நாய்க்குட்டி ஒரு தவளையை
துரத்திக் கொண்டு ஓடுகிறது
தவளை இடுக்குகளில் ஒட்டிக் கொண்டு
சற்று நேரம் ஆசுவசிக்க
நாய்க்குட்டி அதனை சுரண்டி
வீழ்த்துகிறது
இறுதியில் என் கால்களுக்குப் பின்னால்
ஒளிகிறது
நாய்க்குட்டி பரவசமாகி
மாடியை சுற்றி சிலமுறை
ஓடி வருகிறது

வெப்பக்காற்று வீசுகிறது
தூசுப்படலம் ஒரு சல்லாத்துணி போல் எழ
சருகுகள் சுழல்கின்றன
சலிப்பாகி
கால்களைத் தூக்கி
தவளையை விடுவிக்கிறேன்
நாய்க்குட்டி அதனை
முகர்கிறது
நக்கி சுவைக்கிறது
சில நொடிகள் வியந்து விட்டு
வாயில்
மிருதுவாய்
கவ்விக் கொள்கிறது

நான் அதன் பின்னே செல்கிறேன்
என்னிடம் தருகிறது
உருவழிந்த ரப்பர் பொம்மை போல்
தானற்று தெரிகிறது
கீழே வைத்து பார்க்கிறேன்
நிமிண்டுகிறேன்
சின்ன குச்சியால் தட்டுகிறேன்
ஒரு காகிதத்தில்
சுற்றி குப்பைத்தொட்டியில் இடுகிறேன்
திரும்பப் போகையில்
சலசலப்பு கேட்கிறது
மீண்டும் போய்ப் பார்க்கிறேன்
குப்பைத் தொட்டிக்குள்
பல பொருட்கள் அசைகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...