முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வந்து பிரிவதும் சென்று பிரிவதும்


வந்து வந்து பிரிபவர்களின்
இருப்புகள்
நமக்கான தண்டனைகள்

ஒருவர்
கூட இருப்பதும்
சட்டென்று விலகுவதும்
ஒரு முட்டை ஓட்டைப் போல்
நம்மை
நொறுக்கி விடுகின்றன


ஒரு கூழாங்கல் போல்
அழைப்புகளையும் வெறுப்புகளையும்
எதிர்த்து கிடக்கவே
விரும்புகிறோம்

ஆக
நாம் சென்று சென்று பிரிபவர்களாக
இருக்க உத்தேசிக்கிறோம்

நாமாக
பிரியும் போது
நம் குற்றவுணர்வை
சுய பொறுப்பு வென்று விடும்
அப்போது
கணக்கு புத்தகங்கள்
நம் பக்கமிருந்து எழுதப்படுகின்றன
வெட்டல்கள் திருத்தல்கள் தாராளமாய் செய்து
இழப்புகளை மிகையாக்கி
காட்டுகிறோம்

நாம் பிரிபவர்களாக இருக்கவே
விரும்புகிறோம்

வந்தவர்கள் போன பின்
சொந்த வீட்டின் நிறைகளும்
பிரிந்து திரும்ப வந்த பின்
அதே வீட்டின் குறைகளும்
பூதாகரமாகி நம்மை
ஆசுவாசப்படுத்து கின்றன

ஒரு உடைந்த நாற்காலியில்
இருக்க கற்ற பின்
குறைந்த காற்றில்
சுவாசிக்க பழகிய பின்
போதாமைகளை அசை போட்டு புளித்த பின்
வீடுகளை தூய்மையாக்கி
ஒவ்வொன்றாய்
தூசுக்கும் இருளுக்கும் விட்டுச் சென்ற பின்

சிலகாலம்
யாருடனாவது இருக்க

யாராலாவது ஒரு காற்றுக் குமிழி போல் விழுங்கப்பட

இருக்க முடியாத தொடர் வெளிச்சத்தில் இருக்க

பூதக்கண்ணாடிக்கு கீழான காட்சிகளுடன் வாழ

பிரியப்படுகிறோம்


எளிதில் நொறுங்கக் கூடிய
லகுவான ஒன்றாய்
மாறுகிறோம்
அதன் அபாயங்களை
பொருட்படுத்தாமல்

அழும் குழந்தையை
பொறுப்பெடுத்துக் கொண்டவரிடம் போல்
கைமாறி கைமாறி போகிறோம்
கொஞ்சல்களும் மிரட்டல்களும்
நம்மை அழ வைக்கின்றன
மேலும் மேலும்

இத்தனை தேவைகள் விருப்பங்களுக்கு
மத்தியில்
தொடர்ந்து பிரிய பாத்தியப்பட்டு இருக்கிறோம் -
ஒரு சிறுகதையின் இறுதிப் பத்தியை போல்
மாயமாய் மறைந்த நபரின்
ஒரே ஒரு கவனமற்ற சொல்லை போல்
மறந்து போன சொல்லின்
முதல் எழுத்தைப் போல்
அது தான்
புரிந்து கொள்வதற்கான துவக்கமாக இருக்கிறது

அதனாலே
எப்போதும் இரு வாசல்களையும்
திறந்து வைத்திருக்கிறோம்
யார் முதலில் வெளியேறுவது
என்று போட்டி போடுகிறோம்

வெளியேறுபவரின் பக்கமே
நியாயம் அதிகம் கனக்கும்
அவர்களின் பக்கம்
என்றுமே தூய்மையானதாக இருக்கும்

அவர்கள் கோபிக்கலாம் கடிந்து கொள்ளலாம் தீர்ப்பெழுதலாம்
இணைந்து இருப்பதன் நியாயங்களை
சொன்னவாக்கில் மறந்து விடலாம்

அவர்களின் கோணலான தர்க்கங்கள்
நிமிர்ந்து கொள்கின்றன
வரலாறு ஒரு பக்கமாய் சாய்கிறது

நாம் எல்லோரும்
அவசரமாய் வியக்கிறோம்
கைகுலுக்கிய கரங்கள்
ஏன் கருணையற்று
கைவிடுகின்றன என

அவர்கள் கடந்து போகிறார்கள்
நிமிர்ந்து பெருமிதமாய் -
விழுந்து உடையும் கண்ணாடிப் பொருளின்
பலகீனத்தை
குற்றம் சாட்டும் ஓராயிரம் வார்த்தைகளுடன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...