முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வந்து பிரிவதும் சென்று பிரிவதும்


வந்து வந்து பிரிபவர்களின்
இருப்புகள்
நமக்கான தண்டனைகள்

ஒருவர்
கூட இருப்பதும்
சட்டென்று விலகுவதும்
ஒரு முட்டை ஓட்டைப் போல்
நம்மை
நொறுக்கி விடுகின்றன


ஒரு கூழாங்கல் போல்
அழைப்புகளையும் வெறுப்புகளையும்
எதிர்த்து கிடக்கவே
விரும்புகிறோம்

ஆக
நாம் சென்று சென்று பிரிபவர்களாக
இருக்க உத்தேசிக்கிறோம்

நாமாக
பிரியும் போது
நம் குற்றவுணர்வை
சுய பொறுப்பு வென்று விடும்
அப்போது
கணக்கு புத்தகங்கள்
நம் பக்கமிருந்து எழுதப்படுகின்றன
வெட்டல்கள் திருத்தல்கள் தாராளமாய் செய்து
இழப்புகளை மிகையாக்கி
காட்டுகிறோம்

நாம் பிரிபவர்களாக இருக்கவே
விரும்புகிறோம்

வந்தவர்கள் போன பின்
சொந்த வீட்டின் நிறைகளும்
பிரிந்து திரும்ப வந்த பின்
அதே வீட்டின் குறைகளும்
பூதாகரமாகி நம்மை
ஆசுவாசப்படுத்து கின்றன

ஒரு உடைந்த நாற்காலியில்
இருக்க கற்ற பின்
குறைந்த காற்றில்
சுவாசிக்க பழகிய பின்
போதாமைகளை அசை போட்டு புளித்த பின்
வீடுகளை தூய்மையாக்கி
ஒவ்வொன்றாய்
தூசுக்கும் இருளுக்கும் விட்டுச் சென்ற பின்

சிலகாலம்
யாருடனாவது இருக்க

யாராலாவது ஒரு காற்றுக் குமிழி போல் விழுங்கப்பட

இருக்க முடியாத தொடர் வெளிச்சத்தில் இருக்க

பூதக்கண்ணாடிக்கு கீழான காட்சிகளுடன் வாழ

பிரியப்படுகிறோம்


எளிதில் நொறுங்கக் கூடிய
லகுவான ஒன்றாய்
மாறுகிறோம்
அதன் அபாயங்களை
பொருட்படுத்தாமல்

அழும் குழந்தையை
பொறுப்பெடுத்துக் கொண்டவரிடம் போல்
கைமாறி கைமாறி போகிறோம்
கொஞ்சல்களும் மிரட்டல்களும்
நம்மை அழ வைக்கின்றன
மேலும் மேலும்

இத்தனை தேவைகள் விருப்பங்களுக்கு
மத்தியில்
தொடர்ந்து பிரிய பாத்தியப்பட்டு இருக்கிறோம் -
ஒரு சிறுகதையின் இறுதிப் பத்தியை போல்
மாயமாய் மறைந்த நபரின்
ஒரே ஒரு கவனமற்ற சொல்லை போல்
மறந்து போன சொல்லின்
முதல் எழுத்தைப் போல்
அது தான்
புரிந்து கொள்வதற்கான துவக்கமாக இருக்கிறது

அதனாலே
எப்போதும் இரு வாசல்களையும்
திறந்து வைத்திருக்கிறோம்
யார் முதலில் வெளியேறுவது
என்று போட்டி போடுகிறோம்

வெளியேறுபவரின் பக்கமே
நியாயம் அதிகம் கனக்கும்
அவர்களின் பக்கம்
என்றுமே தூய்மையானதாக இருக்கும்

அவர்கள் கோபிக்கலாம் கடிந்து கொள்ளலாம் தீர்ப்பெழுதலாம்
இணைந்து இருப்பதன் நியாயங்களை
சொன்னவாக்கில் மறந்து விடலாம்

அவர்களின் கோணலான தர்க்கங்கள்
நிமிர்ந்து கொள்கின்றன
வரலாறு ஒரு பக்கமாய் சாய்கிறது

நாம் எல்லோரும்
அவசரமாய் வியக்கிறோம்
கைகுலுக்கிய கரங்கள்
ஏன் கருணையற்று
கைவிடுகின்றன என

அவர்கள் கடந்து போகிறார்கள்
நிமிர்ந்து பெருமிதமாய் -
விழுந்து உடையும் கண்ணாடிப் பொருளின்
பலகீனத்தை
குற்றம் சாட்டும் ஓராயிரம் வார்த்தைகளுடன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.