தமிழில் முதியவர்கள்
மட்டும் எழுதும் பத்திரிகைகள் இருக்கின்றன. அதில் ஒருவர் தோன்றி “பாருங்க பாரதியார்
ஜாதிவெறியர்” என்று கண்டுபிடிப்பார்.
இன்னொருவர் புதுமைப்பித்தன் என்றொரு இளைஞர் நன்றாக
எழுதி வருகிறார் என்று சொல்வார். இன்னொருவர் “ஆ.மாதவையாவின் நாவலில் சமகால வாழ்வு”
என்றொரு கட்டுரை எழுதுவார். வரலாறு தோன்றியதற்கு முந்தின காலகட்டத்தில் ஆரம்பிக்கும்
சில வாழ்க்கைக்கதை தொடர்களும் இருக்கும். அஜீரணம் ஏற்படக்கூடாது என்பதற்காக பிரதி எப்படி
பிரதியை முழுங்குகிறது என்றொருவர் நூல் சுற்றுவார். அந்த சிடுக்கை அவிழ்த்து முடிக்கும்
போது ஏப்பம் வந்து விடும். அப்புறம் காணாமல் போன பாய் முடையும் கலைஞர்கள், பவர்ஸ்டாரின்
படக்காட்சிகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் போன்ற போராளி எழுத்துக்களும் இருக்கும்.
இத்தகைய பத்திரிகைகள் நம் சமூகத்தில் முதியவர்கள் எப்படி கூட்டுக்குடும்பங்களின் அழிவின்
காரணமாக கைவிடப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கான தகுந்த உதாரணமாக விளங்குகின்றன.
என்னவொரு கொடுமை பாருங்கள்!
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

Comments