Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

துப்பாக்கிப் பட விமர்சனமும் பசுமட விளம்பரமும்




சாருவின்ஓய்வுக்குபிறகு இலக்கிய மொழியில் சினிமா விமர்சனத்தை காரசாரமாக கௌதம சித்தார்த்தன் தான் எழுதி வருகிறார். இதற்கான ஒரு தேவை நிச்சயம் உள்ளது.
இந்த மாத தீராநதியில் அவரது துப்பாக்கிப் படக் கட்டுரை நன்றாக இருக்கிறது. இப்படத்தின் சிக்கலை தெளிவாக முன்வைக்கிறார். அதுவும் ஏன் தலைமை தீவிரவாதியை ஒரு இந்திய முஸ்லீமாக காட்டுகிறார்கள் என்கிற கேள்வி முக்கியம்.
ஸ்லீப்பர் செல்களில் சாமான்யர்கள் இருந்தாலும் ஹாண்டிலர்கள் எனப்படும் தலைமை வெளிநாட்டில் தான் இருக்கும். அவர்களின் உத்தேசம் மற்றும் அரசியல் எல்லாம் முருகதாஸ் காட்டுவது போல் சாதாரண சமூகக்கோபம், இந்திய தேசிய பகை ஆகியவை அல்ல. மாறுபட்டது. அவற்றுக்கு பல சர்வதேச  கணக்கிடல்கள் பின்னே உள்ளன. இங்குள்ள இந்துத்துவா, ஒடுக்குமுறை பயங்கரவாத சட்டங்களால் இஸ்லாமியருக்கு தாம் அந்நியப்பட்டதாக பழிவாங்கப்படுவதாக உணர்வு ஏற்பட்டால் அது புரிந்துக் கொள்ளக் கூடியது தான். இந்த கோபத்தை, தனிமைப்படலை தான் வெளிநாட்டு தீவிரவாத சக்திகள் பயன்படுத்துக் கொள்ளுகின்றன. சில சமயங்களில் இளைஞர்கள் முழு உண்மை தெரியாமலே இந்த வலையில் மாட்டிக் கொள்கிறார்கள். போலிசார் அவிழ்த்து விடும் வன்முறையும் அவர்களை எதிர்மறையாக இத்தேசத்துக்கு எதிராக கிளம்ப வைக்கின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இந்த அரசியல் பின்புலம், சமூகப்பிரச்சனைகளை அறியாமலே ஒற்றைபட்டையாக சித்தரித்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் பெரும்பாலான இந்திய இஸ்லாமியர் தீவிரவாதத்தை, மத அடிப்படைவாதத்தை எதிர்க்கிறவர்கள் தாம். இவ்விசயத்தை காட்டாமல் எல்லோரையும் ஸ்லீப்பர் செல் என்பது போல் சித்தரிப்பது எவ்வளவு பெரிய அநியாயம் என கௌதம சித்தார்த்தன் சரியாகவே கேள்வி எழுப்புகிறார்.
இந்த அரசியல் விவாதத்துக்கு திருஷ்டிப் பொட்டு போல இதே தீராநதியின் பின்னட்டையில் ஒரு பசுமட விளம்பரம் வந்துள்ளது. வயதான பசுக்களை கசாப்புக் கடைகளில் இருந்து காப்பாற்றி சிலர் பரிபாலனம் செய்து வருகிறார்கள். மொத்தம் 110 பசுக்கள். 14 வருடங்களாக இவ்வாறு பசு முதியோர் இல்லம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காஞ்சி ஸ்ரீ மகா பெரியவாளின் “ஆசியோடு” நடத்தி வருகிறார்கள். இந்த மாடுகள் வரும் பொங்கலை கொண்டாடும் விதமாய் நீங்களும் நன்கொடை அளிக்கலாம் எனக் கோருகிறது. சும்மா அல்ல ஒரு வாரத்துக்கு 150 ரூபாய் அளித்தால் வீட்டுக்கு ஒரு கோமாதாவின் படம் அனுப்பின்வைப்பார்கள். 2300 அனுப்பினால் கொமாதாவின் வெள்ளி விக்கிரகம் இப்படி பல வெகுமதிகள் உண்டு. எனக்கு இந்த விளம்பரத்தை படித்த போது சில விசயங்கள் தோன்றியது.
“பசுக்கள் பன்றிகள் மற்றும் சூனியக்காரிகள்” படித்திருப்பீர்கள். அதில் மார்வின் ஹாரிஸ் நமது பசுநேசத்துக்கு ஒரு விவசாய வரலாற்றுக் காரணம் உண்டு என்கிறார். 18, 19ஆம் நூற்றாண்டில் இருந்து இந்தியா நவீனப்படும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பசு என்பது நமக்கு இன்று நவீன கல்வி போல் முக்கியத்துவம் கொண்டதாக இருந்திருக்கிறது. வீட்டில் ஒரு பசு இருந்தால் அதைக் கொண்டு ஒரு குடும்பமே பிழைக்கும். பால், சாணி, உழும் உபகரணம் என அது பல விதத்திலும் பயன்பட்டிருக்கிறது. வடமாநிலங்களில் பஞ்சத்திலும் குறைந்த உணவில் தாக்குப்பிடிக்கும் ஒருவகை பசு வளர்த்து பேணப்பட்டதாக ஹாரிஸ் சொல்கிறார்.


ஒரு காலத்தில் பசுவின் பயன்பாடு காரணமாய் அதனை கொல்லுவது ஒரு சமூகக்குற்றமாக கருதப்பட்டிருக்கலாம். பின்னர் அது ஒரு தொன்மமாக மதத்துக்குள் வளர்க்கப்படிருக்கலாம். இன்று தமது சைவ உணர்வு மற்றும் மிகை பாரம்பரிய ஈடுபாடு காரணமாயும் நவீன காலத்தில் தமது சாதிய பண்பாட்டு அடையாளம் நொறுங்குகிறது என்ற அச்சம் காரணமாயும் பிராமணர்கள் பசு வதையை கடுமையாக எதிர்க்கிறார்கள். அவர்களுடன் இந்துத்துவா சக்திகளும் இணைகின்றன. இதை கேலி பண்ணும்படியாய் ஆங்கிலத்தில் holy cow எனும் சொல் ரொம்ப வருடங்களாய் பயன்பாட்டில் இருக்கிறது.
என் அப்பா சிறுவயதில் அவர்கள் வீட்டுப் பசுவை பராமரித்திருக்கிறார். அவருக்கு பிற்பாடு ஒரு பசு வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் தன்னால் சாணி அள்ள முடியாது என்று அம்மா கண்டிப்பாக மறுத்தார். நான் நீர் சேர்க்காத செயற்கையாய் சுத்தப்படுத்தப்படாத பசும்பால் குடித்திருக்கிறேன். அதன் சுவை இன்றைய ஆவின் பாலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என எனக்குத் தெரியும். எனக்கும் கூட பசு வளர்க்க ஆசை உள்ளது. பசு நாயைப் போன்றே இனிமையான மனிதர்களோடு ஒட்டிக் கொள்ளும் (அசுத்தத்தில் புரளும்) ஒரு சோம்பேறி மிருகம். எனக்கு அதன் குஞ்சலம் போன்ற வால், கொம்பு, கருணை மிளிரும் கண்கள், அது மூச்சு விடும் பாணி, நின்ற வாகில் அசட்டையாக ஒன்றுக்கு போவது எல்லாமே பிடிக்கும். ஆனாலும் எனக்கு பசுவதை ஒரு தீமையாக தவறாக படவில்லை.
சாப்பிடுவதற்காக பசு, நாய், பூச்சி எதை வேண்டுமானாலும் கொல்வதில் தவறில்லை. நாம் சில பசுமாடுகளைத் தின்பதனால் விவசாயம் மற்றும் பால் உற்பத்திக்கான பசு மாடுகளின் எண்ணிக்கை ஒன்றும் குறைந்து போவதில்லை. பசு கடவுள் என்பதெல்லாம் சும்மா உதார் என்று அதை சொல்லுபவர்களுக்கே தெரியும். பசுவதையை தடுப்போம் என்பது அசைவத்தை எதிர்ப்போம் என்கிற கூட்டுணர்வால் வரும் ஒன்று. பிராமணர்கள் பசுவின் பால், தயிர், நெய், வெண்ணெய் ஆகியவற்றை பிரதானமாக உட்கொள்ளுகிறார்கள். அவர்களுக்கு புரதச்சத்து அதில் இருந்து தான் முக்கியமாய் வருகிறது. அதுவும் சத்துமிக்க மிருகப்புரதம். தம் உணவுக் கலாச்சாரத்தோடு பசு ஒன்றியதாக அவர்களுக்கு இருக்கிறது. இந்த ஒன்றுதல் அசைவ வெறுப்போடு சேர்ந்து எளிதில் பசுவதை எதிர்ப்பாக கட்டமைக்கப்படுகிறது. இதனால் தான் அவர்கள் கோழி அல்லது ஆடு கொல்லப்படுவதை எதிர்ப்பதில்லை.
ஆனால் இந்த பசுவதை எதிர்ப்பு போராளிகள் மாட்டுகறி புசிப்பது ஒரு சமூகத்தின் உணவுப்பண்பாடு என்பதை ஏற்க வேண்டும். இந்த நாட்டில் எல்லா சமூகத்தினரும் தான் வாழ்கிறார்கள். பிராமணர்கள் மட்டுமல்ல. பிற சமூகத்தினரின் விருப்பங்கள், பண்பாட்டு நம்பிக்கைகளை அவர்கள் மறுத்தல் ஆகாது. பசுவதை எதிர்ப்பு என்பது பிற சமூகத்தினரை அவமானப்படுத்தும் பண்பாட்டு ரீதியாக ஒடுக்கும் காரியமாக உள்ளது.
தீராநதியில் இப்படியான விளம்பரங்கள் வருவதையும் இந்த காலத்தில் தவிர்க்க முடியாது. துப்பாக்கிப் படத்தை புதிய தலைமுறை டி.வியில் மறுத்தும் விமர்சித்தும் மனுஷ்யபுத்திரனும் ஷாஜியும் உரையாடிக் கொண்டிருக்கும் போது ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை அதே துப்பாக்கி விளம்பரத்தை தான் உற்சாகமாக ஓட்டினார்கள். இந்த வாடிக்கையாள யுகத்தில் ரொம்ப லட்சியவாதமெல்லாம் பார்க்க முடியாது.
இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் போது என் மனைவி “பசு எல்லாம் பாவம், அதையெல்லாம் கொல்லக் கூடாது” என்று வருத்தமாக சொல்லுகிறாள். விளம்பரத்தில் வருகிற பசுவின் படத்தை காட்டி “எவ்வளவு பாவமா இருக்கு பார்” என்கிறார். பசு மட்டுமல்ல, பசுவை சாப்பிடக் கூடாது என நீங்கள் சொல்லுகிற நாங்களும் பாவம் தான்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...