Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

விபச்சாரம்: உடல் எனும் பெரும் “தடை”




தமிழோடு ஒப்பிடுகையில் மலையாள சினிமாவில் விபச்சாரம் பற்றி நேர்மறையாக அல்லது மனிதாபிமானத்தோடு விவாதிக்கும் படங்கள் அதிகமாக வந்துள்ளன. தமிழ் சினிமாவில் பெரும்பாலும் விபச்சாரி தீமையில் விழுந்து நாயகனால் காப்பாற்றத்தக்க ஒரு அபலை மட்டும் தான். மலையாளத்தில் சில முக்கிய படங்கள் விபச்சாரத்தின் பின்னுள்ள விழுமியங்களை தீவிரமாக விசாரித்தன. 


குறிப்பாக பத்மராஜனின் ”தூவானத் தும்பிகளை” சொல்லலாம். இதில் இரண்டு நாயகிகள். ஒருவள் கிளாரா. ஒரு வறிய கிறுத்துவ குடும்பத்தில் இருந்து வந்து தன் சுதந்திரத்துக்காக விபச்சாரத்தை தேர்கிறவள். அவளுக்கு விபச்சாரம் பற்றின குற்றவுணர்வுகள் அதிகம் இல்லை. ஆனால் ஆண்களின் அற்பத்தனங்கள் பற்றின புரிதல் உண்டு. உலகம் ஒரு எலிப்பந்தயம் என்பதை அறிவாள். அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதில் சாமர்த்தியசாலி. ஆண்கள் தைரியமற்ற பாசாங்கானவர்களாகவும் பெண்கள் தைரியமிக்க தெளிவானவர்களாகவும் இப்படம் காட்டுகிறது. மோகன்லால் நாயகன். பெயர் ராதாகிருஷ்ணன். அவர் ஒருவித இரட்டை ஆளுமை கொண்ட பாசாங்கு ஆசாமி. அவர் மனதுக்கு என்ன ஓடுகிறது என்பது படம் முழுக்க ஒரு புதிராகவே இருக்கும். அவர் தங்ஙள் எனும் பாலியல் தரகருக்கு உதவும் நோக்கத்துடன் கிளாராவை விபச்சாரத்துக்குள் கொண்டு வருவார். பின்னர் அவருக்கு இது குறித்த குற்றவுணர்வு ஏற்பதும். ஆனால் அப்போதே அவர் அறிந்து கொள்வார் கிளாரா பாலியல் தரகரையும் அவரையும் ஏமாற்றி தப்பி சென்று சுயமாய் விபச்சாரம் பண்ண ஆரம்பித்து விட்டாள் என. “கிளாராவை நாம் ஏமாற்றவில்லை; அவள் தான் நம்மை பயன்படுத்திக் கொண்டாள்” என தங்ங்கள் மோகன்லாலிடம் சொல்வார்.
விபச்சாரம் என்பது பொருளாதார மேம்பாட்டுக்கான ஒரு தொழில் என்பது இப்படத்தின் ஒரு அவதானிப்பு. சரி, பணம் சம்பாதிக்க, விடுதலைக்கு, சுயசார்புக்கு விபச்சாரம் மட்டும் தான் ஒரே வழியா? இல்லை. ஆக கிளாராவுக்கு அது மட்டும் நோக்கம் அல்ல. பத்மராஜன் கிளாராவின் பாத்திரத்தை நுட்பமான அறிவு படைத்தவளாக காட்டியிருப்பார். அவளுக்கு விபச்சாரத்தில் உள்ள விளையாட்டுத்தனம் பிடித்திருக்கிறது. ராதாகிருஷ்ணனை பிற்பாடு சந்திக்கையில் அவள் அவனிடம் தனது வாடிக்கையாளர்களின் அற்பத்தனங்களை, வேடிக்கை பாவனைகளை விவரிக்கிறாள். இருவரும் அதை சொல்லி சிரிக்கிறார்கள்.


ராதாகிருஷ்ணன் கிளாராவை நேசிக்கிறான். ஆனாலும் இப்போது இருவருக்குள்ளும் ஒரு திறந்த உறவு உள்ளது. ஆனால் ஆண்களின் உலகில் பெண்களை தளையின்றி வைத்திருக்க முடியுமா? கிளாராவின் பையைத் திறந்து பார்க்கையில் ராதாகிருஷ்ணனுக்கு அவளது ஒரு பணக்கார வாடிக்கையாளரின் விசிட்டிங் கார்டு கிடைக்கிறது. அவர் இந்தியா முழுக்க பல கிளைகள் வைத்துள்ள வியாபாரி. அவன் ஒரு துச்ச புன்னகையுடன் “கிழவராக இருக்கும்” என சொல்லுகிறான். அதற்கு கிளாரா “அவருடன் உன்னை ஒப்பிட்டு ஏன் வீணாய் பொறாமை” என சிரித்தபடி கூறுகிறாள். அவ்வளவு சீக்கிரம் அவள் பிறரின் மனதை படிக்கக் கூடியவளாக இருக்கிறாள்.
ஒரு நள்ளிரவில் கிளாராவை ரயில் நிலையத்தில் இருந்து அழைத்து வருகிறான். ராதாகிருஷ்ணன். “இந்த இரவில் எங்கே போவது? ஏதாவது ஒரு லாட்ஜில் அறையெடுக்கலாம்” என கூறுகிறான். அவள் “எனக்கு அறைகளுக்குள் முடங்கி அலுப்பாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் சுவர்கள் அல்லது ஜன்னல்கள். அதனால் லாட்ஜ் வேண்டாம். வெட்டவெளியில் இருக்க ஆசையாக இருக்கிறது. சும்மா நடந்து வரலாம்” என அவனை அழைத்து போகிறாள். அவர்கள் போகையில் சில ஆண்கள் கடக்கிறார்கள். “இவளை எங்கிருந்து தள்ளிக் கொண்டு வந்தாய்?” என கிண்டலடிக்க கிளாரா அதை வேடிக்கையாக எடுத்துக் கொள்கிறாள். ராதாகிருஷ்ணன் “ஏதாவது பிரச்சனையாகி விடப் போகிறது. ஒரு கார் வாடகைக்கு எடுக்கலாமே” என, கிளாரா “வேணாம். என்னை அப்படியே இந்த நள்ளிரவில் யாராவது பிடித்து தின்பதாக இருந்தால் தின்று விட்டு போகட்டுமே” என்கிறாள்.
கிளாராவின் அடிப்படை பண்பே இந்த விலகல் பாவம், ஒட்டாமை தான். எதிலும் ஒட்டாமல் திரிவதால் அவளுக்கு பிறர் தன்னை ஏளனம் செய்வது பொருட்டில்லை. பிறரை பொருட்படுத்தாததால் பிறரை கையாள்வது எளிதாகிறது. சரி, நடைமுறையில் விபச்சாரிகள் குற்றவுணர்வால் வருந்துகிறார்களா?
ஒரு சின்ன முயற்சி எடுத்தால் சென்னையில் உள்ள பல தரப்பட்ட விபச்சாரிகளை சந்திக்க முடியும். அவர்களிடமும் இதே விலகல் மனப்பான்மையை காணலாம். குறிப்பாக, உடல் பற்றின ஏளனங்கள், பேச்சுகளை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. பணத்துக்காக ஒரு தொழில் பண்ணுகிறோம் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இத்தொழில் தம்மை சமூக விளிம்புநிலையில் வைத்திருக்கிறது என்பதையும் அறிந்திருக்கிறார்கள். ஆனால் இந்த சிக்கல் அவர்களுக்கு பெரும் பாரமாக இருப்பதில்லை.
மனித மனதின் ஒரு விபரீத குணம் எல்லாவற்றையும் தனித்தனியாக பார்க்க முடிவது. ஒரு விபச்சாரி எப்போதும் விபச்சாரி இல்லை. அது ஒரு சீருடை அணிவது போலத் தான். இங்கு திருமணம் புரிந்து ஆறு மாத குழந்தையை வைத்துக் கொண்டு வீட்டிலேயே விபச்சாரம் பண்ணுகிறவர்கள் இருக்கிறார்கள். தொழில் முடிந்ததும் பழையபடி ஒரு அம்மாவாக, மனைவியாக மாறி விடுகிறார்கள். சமூக மையநீரோட்டத்தில் கலந்து விடுகிறார்கள்.
பத்மராஜன் இந்த விலகல் மனப்பான்மையை ஒரு ஆன்மீக தளத்துக்கு எடுத்து போயிருப்பார். கிருஷ்ணனின் இளவயது லீலைகளின் தொன்மம் பற்றி அறிவோம். லட்சோபலட்சம் காதலிகளை மோகிப்பது என்பது நிஜமாகவே காதலிப்பது அல்ல. அது ஒரு கற்பனை. காதல் எனும் விளையாட்டு மூலம் உலக இயக்கமே ஒரு விளையாட்டு என உணர்த்தும் கற்பனை. ஒரு நேர்மாறான உதாரணம் பார்த்தால், கர்த்தர் தன்னை சிலுவையில் அறைந்து ஒரு மனிதன் தன்னை பலி கொடுத்து எப்படி உலகின் பாவத்தை சீர் செய்யலாம் என உணர்த்தியது போல எனலாம். “தூவானத் தும்பிகளில்” ராதாகிருஷ்ணனே ரெட்டை வேடம் போடுபவன். ஊரில் அவன் ஒரு கஞ்சத்தனமான ஒழுக்கமான பண்ணையார். நகரத்துக்கு போனால் அங்கு ஊதாரியான ஒழுக்கமற்ற நபர். ஊரில் யாருக்கும் அவனது நகரத்து முகம் தெரியாது. ஆனால் அவனது உண்மை ஆளுமை இதன் இரண்டுக்கும் நடுவே ஒளிந்திருக்கிறது. கிளாராவும் விபச்சாரம் மூலம் எண்ணற்ற ஆண்களின் அற்பத்தனங்களை கடந்து போகிறாள். ஆண் உலகின் லீலைகளை தனது ஒட்டாமை மூலம் புறக்கணித்து ஜெயிக்கிறாள். ராதாகிருஷ்ணனின் லீலையை விட இது கட்டற்றதாக மகத்துவமாக இருக்கிறது. ஏனென்றால் ராதாகிருஷ்ணன் போல அவள் குடும்பம், சமூக நம்பிக்கை சார்ந்த எந்த பிணைப்புகளும் இல்லாம ஒழுகிக் கொண்டே இருக்கிறாள். கிருஷ்ணனின் உருவகத்தில் மிகச்சரியாக பொருந்துவது ராதாகிருஷ்ணன் அல்ல கிளாரா தான். பத்மராஜன் கண்ணன் ஒரு “விபச்சாரி” என்கிறார்.
நாம் அன்றாட வாழ்வுக்கு வருவோம். விபச்சாரம் ஒரு குற்றமா? குற்றமெனில் எப்படியான குற்றம்? ஒழுக்க குற்றம். அதனளவில் அல்ல சமூகம் அதனை எப்படி பார்க்கிறது என்பதைப் பொறுத்தே விபச்சாரம் ஒரு குற்றமாகிறது. பாலுறவை திருமண பந்தம் இல்லாமல் ஆனால் பரஸ்பர விருப்பத்துடன் கொள்ளும் போது அது குற்றம் ஆவதில்லை. இது சட்டம். நாம் இன்று ஒரு சமூகமாக இதை ஓரளவு ஏற்கிற நிலைக்கு வந்துள்ளோம். சமீபமாக உயர்நீதிமன்றம் வழங்கிய சேர்ந்து வாழும் உறவை சட்டபூர்வமாக்கும் தீர்ப்பையும் உதாரணமாய் சொல்லலாம். ஆனால் காசுக்காக இதை பண்ணுவது குற்றம்.
சரி, காசுக்காக மூளையை விற்கிறோம், காசுக்காக திறமைகளை விற்கிறோம், வீட்டை, சொந்த பொருட்களை வாடகைக்கு விடுகிறோம். உடலை மட்டும் விற்றால் என்ன தப்பு? இந்த கேள்வியை சமீபமாக வெளியான Trivandrum Lodge எனும் ஒரு மலையாள படத்தில் அதன் நாயகன் கேட்கிறான். அவனது அம்மா திருமணத்துக்கு பிறகு ஒரு விபச்சாரியாக மாறி நிறைய சொத்து சேர்க்கிறாள். அந்த சொத்துக்களை முதலீடாக கொண்டு அவன் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து பெரும்பணக்காரன் ஆகிறான். அவன் அப்பாவுக்கு இது பிடிக்கவில்லை. இறுதி வரை அவருக்கு தன் மனைவியின் ஒழுக்கக்கேடான பணத்தை அனுபவிப்பதில் சிக்கல் உள்ளது. அவர் மகனிடம் இருந்து பிரிந்து ஒரு சின்ன ஓட்டல் நடத்தி வாழ்கிறார். தன் அப்பாவிடம் தான் நாயகன் மேற்சொன்ன கேள்வியை கேட்கிறான்.
உடலையும் மூளையையும் பயன்படுத்தி சம்பாதிப்பது ஒன்றா? ஆதிகாலம் தொட்டே, அதாவது உழைப்பு முதலீடாக மாறி, பணம் புழக்கத்துக்கு வந்து, சம்பாத்தியம் ஒரு அரூபமான ஒன்றாக மாறி விட்ட பிறகு உடல் மெல்ல மெல்ல அவமானத்துக்குரிய ஒன்றாக மாறி விட்டது எனலாம். இன்னொரு நபரின் பயன்பாட்டுக்கு நம் உடலை ஒப்புவிப்பது ஒரு கீழ்மையான காரியமாக என்றும் இருந்துள்ளது. ஒரு மனிதனை அவமானப்படுத்துவது, தண்டிப்பது எல்லாமே உடலை மையமிட்டு தான் இருந்துள்ளது. பொதுவில் வைத்து சாட்டையடிப்பது, கல்லால் அடிப்பது, தூக்கிலிடுவது, அல்லது உடல்ரீதியாக ஒருவரை சிறையில் வைத்து கட்டுப்படுத்துவது என சொல்லலாம். மனித உடல் எப்படி ஒழுக்கத்துக்கான கருவியாக மாற்றப்படுகிறது என்பது பற்றி பூக்கோ நிறைய விளக்கினார். இன்றுள்ள பி.பி.ஓக்களிலும், மேற்கில் பல பொதுவிடங்களிலும் CCTV கண்காணிப்பு படக்கருவிகள் பொருத்தப்படுவது மறைமுகமாக உடலை கட்டுப்படுத்தும் ஒரு முறை தான். உடல் பிறரால் கட்டுப்படுத்தப்படும் போது அல்லது பயன்படுத்தப்படும் போது மனிதன் ஒரு ஆழமான அவமதிப்புணர்வுக்கு உள்ளாகிறான். இதற்கு அஞ்சி அவன் அதிகாரத்திடம் பணிகிறான். விபச்சாரத்தில் உடல் பயன்படுத்தப்படுவதும் இதே வகையான சிக்கல் தான்.
பொதுவாக பெண்கள் இன்று தம்முடைய கல்வி, அறிவு, பண்பாட்டு ரசனை சார்ந்து அடையாளப்படுத்தப்படுகிறார்கள். ஒரு பெண் தன்னை வெறும் உடம்பாக பார்க்கப்படுவதை பெரும் அவமானமாக நினைப்பாள். ஆனால் அவள் விபச்சாரத்துக்கு வந்ததும் சட்டென்று அவள் தன் உடலால் அடையாளப்படுத்தப்படுகிறாள். மற்ற குற்றங்களுக்கும் செக்ஸ் குற்றங்களுக்கும் இது தான் வித்தியாசம். செக்ஸ் குற்றம் பண்ணுகிறவர் தனக்கான அத்தனை மரியாதையும் இழந்து வெறும் துச்சமான உடலாக மாறி விடுகிறார். மனித உடல் மீது நமக்கு உள்ள அத்தனை வெறுப்பையும், கூச்சத்தையும், குற்றவுணர்வையும் ஒரு விபச்சாரி மீது காட்டுகிறோம்.
விபசாரிக்கு உடல் என்பது ஒரு கருவி. நாம் நமது தொழில் உற்பத்தி, கல்வி, பண்பாடு, மூலம் உடலை கடந்து உடலற்றவர்களாக நவீனப்பட்டு வருகையில் ஒரு விபச்சாரி அத்தனையையும் மீறி தன்னை வெறும் உடலாக முன் வைக்கிறாள். இதைத் தான் நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. நம்முடைய பிரச்சனை விபச்சாரம் அல்ல, அதை மேற்கொள்ளும் அப்பெண் அல்ல, அதற்கு கருவியாகும் உடல் தான். அதனால் தான் உடலை பயன்படுத்தி சம்பாதிக்கக் கூடாது என்கிறோம்.
Trivandrum Lodge படத்தில் விபச்சாரம் முழுக்க முழுக்க நேர்மறையாக காட்டப்படுகிறது. இயக்குநர் வி.கெ.பிரகாஷ் பத்மராஜனின் “தூவானத் தும்பிகளுக்கு” ஒரு ஹோமெஜ் கூட செய்கிறார். அப்படத்தில் இருந்து அதே தங்ஙள் பாத்திரத்தை இறுதியில் மீள் அறிமுகம் செய்கிறார். அவர் ஏழ்மையில் இருக்கும் ஒரு விபச்சாரிக்கு உயர்குடியை சேர்ந்த வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்தி பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகை செய்கிறார். அவளுடைய கணவன் பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக உள்ளான். படத்தின் இறுதிக் காட்சியில் அவள் பணக்காரியாகி ஒரு கார் வாங்கி தன் கணவனை அதில் ஏற்றி போகிறாள்.
விபச்சாரம் இந்த அளவுக்கு நேர்மறையான, உபத்திரவம் இல்லாத ஒரு நல்ல தொழிலா? அல்ல. விபச்சாரத்தின் பிரதான பிரச்சனை சமூகம் அதை விரும்பவில்லை, ஆனாலும் விபச்சாரம் அதற்கு தேவைப்படுகிறது என்பது. இந்த பாசாங்கு காரணமாக போலீஸ்-மாபியா-அரசியல்வாதிகளின் ஒரு வலைப்பின்னலில் விபச்சாரிகள் மாட்டிக் கொள்கிறார்கள். இது அவர்களை சக்கையாக உறிஞ்சி சுதந்திரம் அற்றவர்களாக ஆக்குகிறது. விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குவது போலீஸின் தொந்தரவுகளில் இருந்து அவர்களை பாதுகாக்க உதவும். ஆனால் அதேவேளை மாபியா இதை பயன்படுத்தி பாலியல் தொழிலை இன்னும் விரிவாக வெளிப்படையாக நேர்த்தியாக செய்ய வாய்ப்புள்ளது. சிறு குழந்தைகள், பெண்கள் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுவது அதிகமாகும்.
அனுகூலம் என பார்த்தால் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது எயிட்ஸை கட்டுப்படுத்தவும் பயன்படும். இன்றுள்ள பிரதான பிரச்சனை பாலியல் தொழிலில் உள்ளவர்களின் ஒரு தகவல் கிடங்கை உருவாக்கி அவர்களின் மருத்துவ நிலையை தொடர்ந்து சோதித்து அதன் வழி எயிட்ஸை கட்டுப்படுத்துவது சிரமமாக இருப்பது தான். இத்தொழிலில் உடல் சார்ந்த ஆபத்துக்கள் அதிகம். வாடிக்கையாளரால் காயப்படுத்தப்பட்டால் ஒரு விபச்சாரியால் சட்ட உதவியை நாட முடியாது. சட்டபூர்வமாக்குவது ஒரு பக்கம் அவர்களின் பாதுகாப்பையும் அதிகமாக்கும்.
குடும்ப உறவுக்கும் பாலியல் தொழிலுக்கும் உள்ள உறவையும் நாம் அலச வேண்டும். எப்போதும் நன்மை தான் தீமையை தோற்றுவிக்கிறது. பேஸ்புக்கில் பிரபலங்களை குறி வைத்து அவதூறு எழுதுபவர்களை பாருங்கள். அவர்கள் முழுக்க முழுக்க எதிர்ப்பதன் வழியாக தான் தம் அடையாளத்தை உருவாக்குவார்கள். ஒரு பிரபலம் தன் கணக்கை அழித்து விட்டு பேஸ்புக்கை விட்டு விலகினால் அவரை எதிர்ப்பதை மும்முரமாக செய்பவர்கள் அனாதரவாகி விடுவார்கள். அவர்களின் உயிர்மூச்சே அந்த பிரபலம் தான். அவரது ஒவ்வொரு சொல்லையும் இவர் திரித்து தனதாக்கி கொள்வார். அவர் மௌனித்தால் இவரும் மௌனமாக வேண்டியது தான். குடும்பமும் விபச்சாரமும் இப்படித் தான். குடும்பம் இல்லாவிட்டால் விபச்சாரமும் இல்லை. இதையே திருப்பியும் சொல்லலாம்.
ஆக, விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கினால் குடும்ப அமைப்பு சீர்குலையும் என்பது ஒரு அபத்தமான வாதம். ஏனென்றால் ஏற்கனவே பல வாடிக்கையாளர்கள் திருமணமான ஆண்கள் தாம். குடும்ப அமைப்பின் கடுமையான இறுக்கம், அலுப்பு, சிக்கல்களில் இருந்து ஒரு தற்காலிக விடுதலையாக விபச்சாரம் இந்த ஆண்களுக்கு பயன்படுகிறது. சட்டபூர்வமாக்குவதன் முன் அழியாத குடும்ப அமைப்பு புதிதாக இப்போதும் ஒன்றும் அழியப்போவதில்லை. சொல்லப்போனால் குடும்ப அமைப்பு தன் நிலைப்புக்கு பாலியல் தொழிலுக்கு கடன்பட்டுள்ளது எனலாம்.
சட்டபூர்வமாக்குவதன் பிரச்சனை விபச்சாரத்துக்கு, அதன் மூலம் உடலை பயன்படுத்துவதற்கு, சமூக அங்கீகாரம் வழங்குதில் தான் உள்ளது. தொலைபேசி மூலமாக செக்ஸ், இணைய அரட்டை மூலமாக காட்சிபூர்வ செக்ஸ் ஆகியவற்றை சட்டபூர்வமாக்கி பாருங்கள். கிட்டத்தட்ட யாருமே எதிர்க்க மாட்டார்கள். கற்பு என்பது ஒரு கற்பனை என அறிவியல் நிரூபித்து விட்டது. மேலும் இன்றைய பெண்களில் திருமணத்துக்கு முன் கணிசமானோர் கன்னியாக இருப்பதில்லை. இதையும் இன்றைய நகர்வாழ் இளைஞர்கள் ஏற்க தயாராக இருக்கிறார்கள். உடலுறவு என்பது ஒரு தற்காலிக செயல், அது ஒரு பெண்ணின் உடலையோ மனதையோ மாற்றி விடாது என அவர்கள் அறிவர். அப்படி இருக்கையில் விபச்சாரம் நமக்கு பிரச்சனைக்கு உரியதாக இருப்பதன் காரணம் அதன் பௌதிக தன்மை தான். அது நாம் பார்க்க விரும்பாத ஒரு நிர்வாண தேகத்தை பட்டவர்த்தமாக்கி விலை பேசுகிறது. செக்ஸ் அல்ல இந்த உடலின் பௌதிக தன்மையை ஏற்பது தான் நம் அடிப்படை சிக்கல்.
இறுதியாக ஒரு கேள்வி. விபச்சாரத்தை ஆதரிப்பவர்கள் தங்களது சகோதரி அல்லது குழந்தை விபச்சாரி ஆவதை விரும்புவார்களா? மாட்டார்கள். ஏன்? முதலில் ஒரு நல்ல தொழிலுக்கான பண்புகள் அதில் இல்லை. ஒன்று அதை தொடர்ந்து செய்து ஒருவர் திறன்களை அதிகரித்து சமூகத்தின் மேல்மட்டத்தை அடைய முடியாது. விபச்சாரம் ஒரு தற்காலிக தொழில். அதன் வருமானத்தை வியாபாரத்தில் முதலீடு பண்ணி முன்னேறி நாற்பது வயதில் ஓய்வு பெறத் தான் உத்தேசிக்கிறார்கள். இன்னும் இரு பிரச்சனைகள் எய்ட்ஸும், சமூக அவமானமும். நாம் ஒரு வேலை மூலம் சமூக அங்கீகாரத்தையும் தான் வேண்டுகிறோம். ஆக யாரும் இங்கு விபச்சாரத்தை ஆதரிப்பது இல்லை. அது சமூக முன்னேற்றத்தில் பங்கு பெற முடியாமல் எங்கோ ஒரு கட்டத்தில் முடங்கிப் போனவர்களுக்கு ஆன ஒரு தற்காலிக தொழில். இத்தொழிலை தக்க வைப்பவை எவை என்கிற கேள்வியை தான் ஆதரவாளர்கள் கேட்க விரும்புகிறார்கள். விபச்சாரத்தை நேரடியாக முடக்குவது என்பது சாத்தியம் அல்ல. அதை இருட்டுக்குள் வைத்திருக்க நாம் விரும்புவது ஆரோக்கியமானதும் அல்ல.
விபச்சாரத்தின் ஊற்றுக்கண் என குடும்ப அமைப்பு மற்றும் ஆணாதிக்கவாதத்தை சொல்லலாம். நம் குடும்ப அமைப்பை தளர்த்துவது, சுதந்திரமானதாக மாற்றுவது ஒரு தீர்வு. ஒரு ஆண் ஒரே பெண்ணுடன் இறுதி வரை வாழ்வதை சமூகம் கட்டாயமாக்குகிறது. இதை தளர்த்த வேண்டும். ஆணும் பெண்ணும் குடும்பமாக அல்லாமலும் சேர்ந்து வாழ்வதை ஒரு நடைமுறையாக ஏற்பதும் மற்றொரு தீர்வு. அடுத்து பெண்களுக்கு போதுமான கல்வியறிவும், வேலை வாய்ப்புகளும் அளித்து ஆண்களின் பிடியில் இருந்து அவர்களை விடுவிப்பது. பெண்கள் முழுக்க முழுக்க சுயசார்பு கொண்டவர்களாக இருப்பதை ஒரு ஒழுக்க குற்றமாக இன்று பார்க்கிறோம். குடும்ப வாழ்வை முன்னிறுத்தாமல் பொருளாதார முன்னேற்றம் தான் ஒரு பெண்ணின் சிறப்பு என இந்த சமூகம் ஏற்றால் அதுவும் பயன்படும். இன்று தம் குடும்பத்தை காப்பாற்ற விபச்சாரத்துக்குள் ஈடுபடுகிற பல பெண்கள் இருக்கிறார்கள். சிறுவயது முதலே சம்பாதித்து சுயசார்பை அடைவதை கற்றுக் கொடுத்து வலியுறுத்தி, அதற்கான வாய்ப்புகளையும் வழங்கி இருந்தால் இப்பெண்களின் வாழ்வு வேறு விதமாக இருக்கும். பாலியல் தொழில் என்பது ஆண்கள் பெண்கள் மீது செய்யும் ஒரு பொருளாதார சுரண்டலும் தான். ஒரு சமத்துவ சமூகத்தில் விபச்சாரத்தை விட நன்றாக பணம் ஈட்டுகிற வேலை வாய்ப்புகளும் அதற்கான தகுதிகளும் பெண்களுக்கு ஏராளமாக இருக்கும்.
இந்த இரண்டு பிரச்சனைகளும் சரியாகும் போது மாபியாக்களின் கையில் இருந்து விபச்சாரத்தை விடுவிப்பது எளிதாகும். ஆனாலும் இன்னொரு காரணத்தால் விபச்சாரம் ஒரு சின்ன அளவில் இருந்து கொண்டு தான் இருக்கும். செக்ஸில் ஈடுபடும் முன் நாம் கடுமையான தேர்வுக்கு நம் எதிர்தரப்பை உள்ளாக்குகிறோம். உடல் குறை உள்ளவர்கள், வசதி, வாய்ப்பு, அறிவு இல்லாதவர்கள் இந்த தேர்வில் தோற்பார்கள். இதன் பின் இயங்குவது சிறந்தவர்களுடன் இணைந்து சிறந்த வாரிசை உருவாக்குவதற்கான ஒரு உயிரியல் விழைவு. இத்தேர்வினால் புறம் ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஒரு சுதந்திரமான பாலியல் சமூகத்தில் கூட போதுமான செக்ஸ் துணைகள் இருக்காது. அது ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். இந்த தேவை ஒரு புறம் பாலியல் தொழிலை உயிரோடு தான் வைத்திருக்கும். ஆனால் ஒரு ஆரோக்கியமான சமூகத்தில் விபச்சாரம் இந்தளவுக்கு அவமானகரமானதாக, ஆபத்தானதாக, மாபியாவால் கட்டுப்படுத்தப்படுகிற ஒன்றாக இருக்காது. யுனானி மருத்துவம் போல் அது ஒரு ஓரமாக இருக்கும்.
(”அறிந்ததும் அறியாததும்” அமிர்தா பத்தித் தொடரில் இம்மாத கட்டுரை)

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...