இன்மை ஆறாவது இதழ் வெளியாகிறது. அதில் முகப்பு சித்திரமாக ராஜனின்
ஓவியம் மனுஷ்யபுத்திரன் பேட்டி நான்காம் பாகம், ஆத்மார்த்தி, இரா.சீனிவாசன்
ஆகியோரின் கட்டுரைத் தொடர்கள், லஷ்மி சரவணகுமாரின் “மோக்லியை தொலைத்த சிறுத்தை”
தொகுப்புக்கான விமர்சனம், மாயா ஏஞ்சலூ, அன்புசிவன் ஆகியோருக்கு அஞ்சலி
குறிப்புகள், மனுஷ்யபுத்திரன், கலாப்பிரியா, சுதீர் செந்தில், போகன் சங்கர்,
பொன்.வாசுதேவன், சக்தி ஜோதி, கோசின்ரா, சர்வோத்தமன், நாகப்பிரகாஷ்,
பா.வேல்முருகன், ஷான், பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி, மணிபாரதி, ஆர்.செந்தில்குமார்,
ஈழக்கவி ஆகியோரின் கவிதைகள், மாயா ஏஞ்சலூ, லாரன்ஸ் பெர்லிங்கட்டி,
ஆர்.பார்த்தசாரதி, ரூ போர்சன், சார்லஸ் ஹென்ரி போர்டு ஆகியோரின் மொழியாக்கங்கள் மற்றும் டி.ஆர்.நாகராஜ்
கருத்தரங்கு பற்றின அறிவிப்பு ஆகியன இடம் பெறுகின்றன. வாசகர்களின் கருத்துக்கள்
அன்புடன் வரவேற்கப்படுகின்றன.
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கருத்துகள்