Skip to main content

இந்தியா ஆடும் டெஸ்ட் வெறும் சொப்பு மேட்ச்


வெளிநாட்டு கிரிக்கெட் நிபுணர்களுக்கு தம் அணி பற்றின பீதியுணர்வு அதிகம். போன வருடம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 198 க்கு ஒரு விக்கெட் எனும் நிலையில் இருந்தோம். உடனே இந்தியா வெல்லப் போவதாக கூவினார்கள் தென்னாப்பிரிக்க வர்ணனையாளர்கள். ஸ்டெயின் அப்புறம் 6 விக்கெட் எடுக்க இந்தியா 334க்கு ஆட்டமிழந்தது. அப்போதும் இந்தியா தான் வெல்லப் போவதாய் கூறினார்கள். ஆனால் தென்னாப்பிரிக்கா 500 அடித்து லீட் எடுத்து இந்தியாவை இரண்டாம் இன்னிங்ஸில் சுருட்டினாரகள். இந்தியா அப்போது தோற்றதற்கான முக்கிய காரணம் 500 அடிக்காதது. வெளிநாடுகளில் இந்தியா 400-500க்குள் முதல் இன்னிங்ஸில் அடிக்காத எல்லா டெஸ்டுகளிலும் தோற்கும். இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.


இது தான் இப்போது இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டிலும் நடந்து வருகிறது. இந்தியா 295 அடித்ததும் நிபுணர்கள் இந்தியா தான் வெல்லப் போகிறது என்றார்கள். ஆனால் எனக்கு அப்போதே இது போதாது என பட்டது. இப்போதுள்ள நிலையில் 140 சொச்ச லீடுடன் 4 விக்கெட் இழந்து இருக்கிறோம். ஆனால் 350க்கு மேல் லீட் எடுத்தால் தான் ஏதோ ஒரு சின்ன வாய்ப்பு. 400க்கு மேல் அடித்தால் இங்கிலாந்து தடுப்பாட்ட மனநிலைக்கு சென்று விடும். இது இந்தியாவுக்கு உதவும். இந்தியாவின் பிரச்சனை 300க்குள் ஒரு அணியை சுருட்டுவதற்கான திராணி நமக்கு இல்லை என்பது. நம் வீச்சாளர்கள் எலியை பொறி வைத்து காத்திருப்பது போல் பந்து வீசுகிறார்கள். ஒவ்வொரு விக்கெட் எடுப்பதற்கு இடையிலும் நாம் 30-70 ஓட்டங்கள் இணைப்பாக கொடுக்கிறோம். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போல் நம்மால் தொடர்ந்து பத்து பந்துகளுக்குள் 3,4 விக்கெட்டுகள் வீழ்த்த முடியாது. ஏனென்றால் நம் வீச்சாளர்கள் மட்டையாளர்கள் தவறு செய்வதற்காக காத்திருக்கிறார்கள்.

வீழ்த்தும் வகையான பந்துகளை போட அவர்களுக்கு திறனோ வேகமோ இல்லை. அப்படி திறனுள்ள வேகவீச்சாளர்களுக்கு தொடர்ந்து ரிஸ்க் எடுத்து வாய்ப்புகள் கொடுத்து உருவாக்கவும் தோனி தயாராக இல்லை. இன்னும் பல காரணங்களும் உள்ளன. அதை விடுங்கள் நம்மால் ஒரே நாளில் பத்து விக்கெட் எடுக்க வேண்டும் என்றால் ஆடுதளம் அநியாயத்துக்கு சாதகமாக இருக்க வேண்டும். மட்டையாளர்கள் அநியாயத்துக்கு கேவலமாக அடித்தாடி அவுட்டாக வேண்டும். ஆனால் கொஞ்சம் சுமாரான ஆடுதளம் என்றால், எதிரணியும் பொறுமையாய் தடுத்தாடினால் நம் வீச்சாளர்கள் 50 ஓவர்கள் கடந்ததுமே சோர்வாகி விடுவார்கள். அவர்களுக்கு உடலை வருத்தவோ தாக்கியாடவோ ஆர்வமில்லை. இப்படியான பசுமாடுகளை வைத்து உங்களால் வெல்ல முடியாது.

இன்னொரு வழி புவனேஸ்வர் குமார் போல் மிகுந்த பொறுமையுடன் ஒரே புள்ளியில் தொடர்ந்து பந்தை விழ வைத்து ஸ்விங் செய்வது. ஷாமி, இஷாந்துக்கு அதற்கான பொறுமையோ தன்னம்பிக்கையோ இல்லை. மேலும் எப்போதும் ஒரே மாதிரி பந்து வீசி விக்கெட் எடுக்க முடியாது. சிலவேளை ஸ்விங் ஆகும். சிலவேளை வேகமாய் நேராய் வீச வேண்டும். சிலவேளை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய வேண்டும். ஆனால் ஷாமி, இஷாந்த் போன்றவர்கள் டீச்சர் சொல்வது போல் ஹோம்வொர்க் எழுதி கொடுக்கும் சமர்த்து மட்டும் கொண்ட அம்பி மாணவர்கள் போல. சூழலுக்கு தகுந்தவாறு முனைந்து விக்கெட் எடுக்கும் தன்னம்பிக்கை அவர்களுக்கு இல்லை. விக்கெட் விழவில்லை என்றால் மிஸ் என அழுது கொண்டு தோனிக்கு பின்னால் போல் நின்று கொள்வார்கள். 

இந்த டெஸ்ட் கண்டிப்பாய் டிரா ஆகாது. இந்தியா வெல்ல வேண்டுமென்றால் இங்கிலாந்து மிக அசட்டையாக ஆடி மோசமான ஷாட்கள் அடித்து வெளியேற வேண்டும். ஒருவர் கூட கவனம் செலுத்த கூடாது. அவர்களாக விக்கெட்களை வாரி வழங்க வேண்டும். அப்படியென்றால் ஜெயிப்போம்.

எதிரணிக்கு 400க்கு மேல் இலக்கு நிறுவதற்காக நீண்ட நேரம் மட்டையாடும் பொறுமையும் கவனமும் நம் மட்டையாளர்களுக்கு இல்லை. நம் மட்டையாளர்களும் பந்து வீச்சாளர்களைப் போல 50-80 பந்துகளை சந்தித்ததும் மனதளவில் களைத்து கவனம் இழக்கிறார்கள். 300-400 பந்துகள் ஆடி பொறுமையாய் சதமடித்து அணியை காப்பாற்ற ஒருவர் கூட இந்த அணியில் இல்லை. இங்கிலாந்தின் ஜோ ரூட் போன்றவர்களால் முடியும். புஜாராவால் முடியும் என்கிறார்கள். ஆனால் நான் கவனித்தது வரை அவருக்கு பொறுமை இருக்கிறது, ஆனால் மனதை நீண்ட நேரம் குவிக்க முடிவதில்லை. மனதளவில் களைத்து தவறு செய்து விடுகிறார். இதற்கு இரு காரணங்கள்.

ஒன்று புஜாரா கூட டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டாக அறிமுகமானாலும் அவரது பிரதான கவலை தன்னால் ஒருநாள் போட்டிகளில் ஆட முடியவில்லை என்பது. இங்கே ஐ.பி.எல்லில் 20 பந்தில் 50 அடித்தால் தான் நீங்கள் நட்சத்திரம். விளம்பரங்கள், கோடி பணம் எல்லாம் கிடைக்கும். இந்த அழுத்தத்தினால் பூஜாராவின் மட்டையாட்ட நிலையமைதி சற்றே மாறி உள்ளது. அடித்தாடும் பிற மட்டையாளர்களின் பாணியில் அவர் லெக் ஸ்டம்பில் நின்று பந்து ஆப் பக்கம் பந்தை விரட்ட பார்க்கிறார். அவரது காலாட்டமும் மெத்தனமாகி உள்ளது. இதனால் சட்டென பந்து உள்ளே வர பவுல்டாகி விடுகிறார்.

மாறாக முரளி விஜய்யை எடுங்கள். அவர் தன்னை ஒருநாள் வடிவில் ஆட வைக்க மாட்டார்கள் என ஒருவாறு சமானாதமாகி விட்டார். அதனால் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி அதற்கேற்றாற் போல் தன் மட்டையாட்டத்தை செதுக்கி இருக்கிறார். மற்றபடி இந்த அணியில் தவான், தோனி, ஜடேஜா, பின்னி எல்லாரும் பிரதானமாய் ஒருநாள் வீரர்கள். அவர்களுக்கு டெஸ்டுக்கான தொழில்நுட்பமோ பொறுமையோ இல்லை. இங்கிலாந்தில் அது போல் ஒரு மட்டையாளர் இல்லை. ஒவ்வொருவரும் ரன் எடுக்கிறாரக்ளோ இல்லையோ பொறுமையாய் கவனமாய் உழைக்கிறார்கள். நீங்கள் அவர்களை நன்றாக வீசி வீழ்த்த வேண்டும். தோனி, ஜடேஜா, தவான் போல் ஒருநாள் ஷாட் அடித்து அவர்களாகவே விக்கெட்டை பரிசளிக்க மாட்டார்கள். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை போன்ற நாடுகள் டெஸ்ட் அணியை தனியாய் பார்த்து அதற்கேற்ற தேர்வுகளை செய்கிறார்கள். ஒருநாள் மட்டையாளர்களை ஆட்டோமெட்டிக்காக டெஸ்டில் தேர்வு செய்கிற அபத்தத்தை செய்ய மாட்டார்கள். உண்மையை சொல்வதானால் நம் டெஸ்ட் அணிக்கு ஐந்து நாள் ஆடுவது போரடிக்கிறது.

நம்முடையது டெஸ்ட் அணி அல்ல. ஒருநாள் அணியை டிங்கரிங் பண்ணி டெஸ்ட் ஆட அனுப்பி இருக்கிறார்கள். தனியாய் ஒரு டெஸ்ட் அணியை உருவாக்கி அதற்கென உடல் வலு உள்ள வேகவீச்சாளர்களை உருவாக்கி புது அணித்தலைவரையும் நியமிக்காதவரை இந்த அணி வெறும் சொப்பு அணியாக தான் இருக்கும். 

Comments

Madhi ! said…
I think once you have told Root is a kind of player with the talent equal to Rayudu. you meant that in the sense that Root's talent is being exaggerated. but now you are saying he can carve a big innings. is it not contradictory?
இல்லை நான் அப்படி சொல்லவில்லை. ரூட்டை முதன்முறை பார்த்ததில் இருந்தே எனக்கு அவர் மீது மரியாதை உண்டு. அவர் பெரிய திறமையாளர் அல்ல. ஆனால் கடுமையாக உழைக்கக் கூடியவர். விட்டால் ஐந்து நாளூம் மட்டையாடுவார். கேன் வில்லியம்சனும் அவரும் அடுத்த பத்தாண்டுகளில் சதங்கள் குவிக்க போகிறாரக்ள்
ungalsudhar said…
வாத்தியாரே எங்க இருக்கீங்க.. :) :) இப்போ மேட்ச் பாத்துட்டு இருக்கீங்களா.நீங்க இந்த போஸ்ட்ட போடும்போது கோவமா வந்துச்சு..ஆனாலும் சரி உண்மையதான சொல்றாருன்னு நெனச்சிட்டேன். ஆனா அத்தனை முன் அனுமானங்களையும் ஒடச்சு தள்ளி ஜெயிச்சுட்டாங்க நம்மாளுங்க.இஷாந்த் ஷர்மா..வாய்ப்பே இல்ல.. He just re-lived the Perth spell here :)
நான் எழுதினது போல் நான்கு விக்கெட்டுகளை இங்கிலாந்து தாரை வார்த்தது. அதனால் வென்றாரகள். பொறுமையாக ஆடியிருந்தால் இங்கிலாந்து ஜெயித்திருக்கும்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...