Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஒரு கடிதமும் பதிலும்

இரு வட்டங்கள்: உள்ளே வெளியே

//நான் பொதுவாக எனக்கு வரும் கடிதங்களை பிரசுரிப்பதில்லை. அவை தனிப்பட்ட பரிவர்த்தனைகள். ஆனாலும் சிலவேளை ஆழமான கேள்விகளை எழுப்பும் கடிதங்கள் வரும். அவற்றை பிரசுரிப்பதன் மூலம் நல்ல ஒரு விவாதத்தை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். அதில் ஒன்று கீழே தாமஸ் சூசன் எழுதியிருப்பது. அவருக்கான என் பதிலையும் இங்கு தந்திருக்கிறேன். (முறையாக அவரிடம் அனுமதி பெற்றே பிரசுரிக்கிறேன்)//


அன்பிற்குரிய அபிலாஷ் அவர்களுக்கு,

'உயிர்மை'யில் தங்களின் 'கருணைக்கொலை' பற்றிய கட்டுரையை நேற்று தான் வாசிக்க நேர்ந்தது. விவாதத்தை தத்துவார்த்தமான விளக்கங்கள் மூலம் எடுத்து சென்றமை சிறப்பு.


உண்மையில், 'துன்பமும் வாழ்வின் ஓர் அங்கமே' என்ற புரிதல் இன்று நம்மிடையே வாய்த்திருக்கவில்லை. இருத்தலியல் சிந்தனைகள் கூட 'வாழ்க்கை தவிர்க்க முடியாத துன்பங்களை எப்போதும் தன்னிடத்தே கொண்டுள்ளதாகச்' சொல்கின்றன. தோல்வியையும், வலியையும், ஏமாற்றத்தையும், ஏற்று சகித்துப் போவதில் நிறைய இருக்கிறது. உதாரணமாக, வேலைக்காக ஒவ்வொரு அலுவலகமாய் ஏறி இறங்குவதில் நிரம்ப சுவாரஸ்யம் இருக்கிறது. ஒவ்வொரு தோல்விக்கும், ஒவ்வொரு வெளியேற்றத்திற்கும், ஒவ்வொரு ஏமாற்றத்திற்கும் பின்னால் நான் என்னை ஒரு கணம் உற்று நோக்கி நிற்கிறேன்; நிறை குறைகளை காண்கிறேன்; அவைகளை களைய பிரயத்தனம் எடுக்கிறேன்; அதன் வழி வேறொன்றாய் பரிணமிக்கிறேன். இங்கு ஒரு இயக்கம் நிகழ்கிறது. தோல்வியும், வலியும், ஏமாற்றமும் செயலற்றுப் போகவே வைக்குமென்றால் இந்த பரிணமிப்பின் சாத்தியம் இல்லாமலே போகும். தோல்வியும், வலியும், ஏமாற்றமும் அப்படியாக மட்டுமே இருப்பதில்லை. "ஆம், இங்கு எதுவுமே அதுவாக மட்டுமே இருப்பதில்லை, அதுவல்லாததுமாகவும் இருக்கிறது". இந்த புரிதலை எட்டும் அவகாசம் தான் யாருக்கும் அளிக்கபடுவதில்லை.

ஒரு ரயில் நிலைய வாசலில் சிறு புத்தகக்கடை வைத்திருப்பவனாகவோ, ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஷூக்களுக்கு பாலிஷ் போடும் ஒருவனாகவோ இருக்க வாய்த்திருக்குமெனில் அதில் நிச்சயம் அலாதி கொள்வேன். பல்வேறு மனித சாயல்களையும், வாழ்வின் வேறுபட்ட பரிணாமங்களையும் புரிந்துக் கொள்ளும் ஒரு கோணம் அதில் கிடைக்கலாம். ஆனால் படிப்பு, வேலை, வருமானம், திருமணம், சந்ததி பெருக்கம், பதவி உயர்வு, சமூக அந்தஸ்து, சொத்து வளமை என நிறுவனமயப்பட்ட வாழ்கை கூறுகள் நம்மை அதற்கான வழிகளில் விட்டு வைப்பதில்லை. குடும்பம், சமூகம் என்ற இரு பெரும் நிறுவனங்களும் நம்மை எப்போதும் அவைகளுக்கு உபயோகமுள்ளவர்களாகவே வாழப் பணிக்கின்றன.

தத்துவப் புலத்தில் என்றைக்கும் நிலைத்திருக்கும் ஒரு கேள்வி 'வாழ்தல் எதன் பொருட்டு ஆவது?'. வாழ்தல் இருத்தலின் பொருட்டாவது. எனில், இருத்தல் என்பது? இருப்பது. 'Being is what it is' அவ்வளவுதான். இதை எவர் சொல்லி புரிவது. 'ஊரோடு ஒத்து வாழ்' என்னும் பழைமை சித்தாந்தமோ இருத்தலின் தனித்துவ சாத்தியத்தை மறுக்கச் செய்கிறது. முழுக்க நிர்பந்தங்களுக்காவே வாழும் வாழ்கையில் நம் இருப்பை நம்மால் மட்டுமே நிரப்பிக் கொள்ளவோ, நம் இருப்பில் நாம் மட்டுமே தனித்திருக்கவோ வேண்டுமாயின், 'முற்றிலும் மனித முகங்களே அற்ற ஒரு ஏகாந்தத்தில் தொலைந்து போதலன்றி அதற்கு வேறு வழிகளில்லை'. ஆதலின், அந்நிலை எட்டுதலின்றி வாழ்வில் பெருகும் அபத்தமும் தணியாது.
அன்புடன்,
தோமஸ் சூசன்
*******************************************************************************************************
நன்றி தாமஸ் சூசன்

உங்கள் பார்வை சரி தான். நுட்பமான மனம் கொண்டவர்கள் சமூகத்தின் இழுவிசைகளில் மாட்டி தவிக்கிறார்கள். அவர்கள் என்ன செய்ய முடியும்?

ஒன்று, சமூகத்தை இரண்டாய் பிரிக்கலாம். தமக்கு அணுக்கமான, மனரீதியாய் தம்முடன் உரையாட முடிகிற சமூகம். இது ஒரு உள்வட்டம். அடுத்து தம்மை புரிந்து கொள்ள எத்தனிக்காத, அல்லது முடியாத ஒரு சமூகம். இது வெளிவட்டம். உள்வட்டத்தில் மிகச் சில பேர் தான் இருப்பார்கள். இவர்களிடம் ஓரளவு நாம் மனம் திறந்து பேசலாம். ஆத்மார்த்தமாய் இருக்கலாம்.

வெளிவட்டத்தில் நாம் ஈடுபாட்டோடு இருப்பது போல் நடிக்க வேண்டும். ஆனால் அப்படி இருக்க வேண்டியதில்லை. வெளிசமூகத்தில் ஒரு முகமூடி அணிந்து வெறுமனே ஒரு இடத்தில் பொருந்தி இருந்தால் போதும். வேலையிடத்தில், உறவினரிடத்தில், இணையத்தில், சிலநேரம் முகநூலில், அந்நியர்களிடத்தில், எதிரிகளிடத்தில் என. அங்கு நடப்பது எதுவுமே நம் மனதை தொடக் கூடாது. ஆனால் தொட்டது போல் பாவனை செய்ய வேண்டும்

அதேவேளை உள்சமூகத்தில் நடப்பது நம்மை பாதிக்க வேண்டும். ஆனால் ஓரளவு தான். எங்கு எது நடந்தாலும் நம் மனம் அதிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும். அதேவேளை நாம் மும்முரமாய் செயல்பட்டுக் கொண்டும் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு சிறந்த குமாஸ்தாவாக வேலை செய்வதாக நடித்துக் கொண்டே உள்சமூகத்தில் ஒரு எழுத்தாளனாய், வாசகனாய் ஆத்மார்த்தமாய் செயல்பட வேண்டும். இரண்டு சமூகங்களையும் சமனம் செய்ய தெரிய வேண்டும். அப்போது இன்று நாம் சந்திக்கும் கணிசமான நெருக்கடிகள், துயரங்களில் இருந்து மீண்டு விடலாம்.

நான் இங்கு சொல்வது ஒரு நவீன உளவியல் கோட்பாடு. அதன்படி உங்கள் சுயத்தை நீங்கள் முழுமையாக எல்லாரிடத்தும் காட்டக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் எந்தளவு நம்மை காட்ட வேண்டும் எனத் தெரிந்தாலே வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.

இது சற்று தத்துவார்த்தமானதும் தான். ஒருமுறை புத்தர் தன் ஆசிரமவாசிகளை வெளியேற சொன்னார். ஏனென்றால் அவர்கள் சடங்கு, சம்பிரதாயம், விவாதம் என ஒரு சுழற்சிக்குள், பாதுகாப்பு வளையத்துக்குள் மாட்டிக் கொண்டார்கள். வாழ்க்கையை நேரடியாய் சந்திக்காமல் விதிமுறைகளுக்குள் ஒளிந்து கொண்டார்கள். புத்தர் அவர்களை பொதுமக்கள் அதிகம் உள்ள சந்தை போன்ற இடங்களில் சென்று சகஜ வாழ்க்கை வாழ சொன்னார். அதேவேளை அங்கு நடக்கும் எதுவும் தம் மனதை பாதிக்காதபடி பார்த்துக் கொள்ள சொன்னார். அதாவது சாமியாராகவும் இருக்க வேண்டாம். சாமான்யனாகவும் இருக்க வேண்டும். இரண்டுக்கும் இடையே இருக்க கேட்டார். இந்த அளவுக்கு நம்மால் செல்ல முடியாது தான். ஆனால் இதையே ஒரு சின்ன அளவில் அன்றாட வாழ்வில் முயன்று பார்க்கலாம். உணர்ச்சிகளோடு இருப்போம். ஆனால் உணர்ச்சிகளற்று இருப்போம்.

இருப்பு பற்றி நீங்கள் சொல்லுவதில் சற்று மாறுபடுகிறேன். இருப்பு என்பது உண்மையானது, தீவிரமானது என நான் நினைக்கவில்லை. எதுவோ அதுவே இருப்பு என்றால் அந்த “எது” என்ன? இது ஒரு முடிவற்ற அரூப விவாதத்துக்கு கொண்டு செல்லும். கீர்க்ககாட் எனும் தத்துவஞானி இருப்பை ஒரு கண்ணாடி போல் பார்க்கிறார். அதற்கு ஒரு நிலைத்த குணமில்லை. நீங்கள் ஒரு அழகான பெண்ணிடத்து இருக்கையில் காமம் உங்கள் இருப்பு. தனியாக இருக்கையில் தனிமை உங்கள் இருப்பு.
இருப்பை நாம் சுயமாய் உற்பத்தி செய்தவாய் கூட அவர் கூறுகிறார். அதாவது ஒரு கணினியில் நீங்கள் உள்ளிடுவது ஒரு கட்டுரையாக அல்லது புகைப்படமாகவோ திரையில் தோன்றும். அதாவது கணினி தனக்கு கிடைக்கிறதை கொண்டு ஒரு அர்த்தத்தில் தன்னையே உற்பத்தி பண்ணுகிறது. அதேவேளை யாரும் உள்ளிடாவிட்டால் அது வெறும் இருட்டான திரையாகி விடும். நாமும் நம்மை இப்படித் தான் உருவாக்குகிறோம் என்கிறார் கீர்க்ககாட் (அவர் கணினியை பற்றி சொல்லவில்லை, அது நான் சேர்த்தது).
இந்த சிந்தனையில் ஒரு விடுதலை உணர்வு உள்ளது என்பதை பார்க்கலாம். நாம் சரியான இடத்திலோ மோசமான இடத்திலோ இருப்பதில்லை. நாம் குற்றவுணர்வு கொள்ள வேண்டியதில்லை. நம் உலகை நாமே பிரதிபலித்து உருவாக்குகிறோம். இது நம் உலகம். இதை நாம் இயக்குகிறோம். கீபோர்டுக்கும் திரைக்குமான உறவு உங்களுக்கும் உங்கள் வாழ்வுக்கும் (அதாவது “இருப்புக்கும்”) உள்ளது.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...