இம்மாதம் பத்தாம் தேதி ஷிலோங்கில்
நடைபெறும் விழாவில் சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருதை வாங்கப் போகிறேன். அடுத்த
நாள் விருதாளர்களின் சந்திப்பில் என் படைப்பு வாழ்க்கை பற்றி பேசப் போகிறேன். இத்தருணத்தில்
என் எழுத்து வாழ்க்கையை துவக்கி வைத்த நண்பர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளனாகும் ஆசையை
என்னுள் விதைத்த ஜெயமோகன், புனைவுலகுக்குள் வர தூண்டுதல் அளித்த எஸ்.ரா, தொடர்ந்து
எனக்கு உறுதுணையாக இருக்கும் தக்கலை கலை இலக்கிய பெருமன்ற நண்பர்கள், கடந்த 6 வருடங்களாய்
ஒவ்வொரு மாதமும் எனக்காய் சில பக்கங்கள் ஒதுக்கும் அம்ருதா பத்திரிகை, டி.வி மீடியாவில்
அறிமுகப்படுத்தி எனக்கு முகப்பரிச்சயம் உருவாக்கிய, என் ஒரு கட்டுரையை ஒரு நிகழ்ச்சியின்
பேசுபொருளாகவே மாற்றிய “நீயா நானா” ஆண்டனி, அன்பு மனைவி காயத்ரி ஆகியோரை அன்புடன் நினைத்துக்
கொள்கிறேன். இந்த விருதை விட எனக்கு பெரிதான வாசகர்களை பேரன்புடன் நெஞ்சோடு அணைக்கிறேன்.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கருத்துகள்