முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தட்பம் தவிர்

Image result for தட்பம் தவிர்


இரண்டு வகையான வெகுஜன நாவல்கள் உண்டு. ஒன்று மலிவானவை. இன்னொன்று புத்திசாலித்தனமும் கலைநயமும் கூடியவை. முதல் வகைக்கு ராஜேஷ் குமாரையும், இரண்டாவதற்கு சுஜாதாவையும் உதாரணம் காட்டலாம். இன்று சுஜாதாவின் வாசகர்கள் அவர் “இலக்கிய எழுத்தாளர் இல்லைன்னு சொல்றாங்களே, உண்மையா?” என விசனமாக கேட்கிறார்கள். இன்னும் சிலர் இலக்கியமோ இல்லையோ அவர் போல விற்பனைத் தகுதி கொண்ட எழுத்தை வேறு யார் உருவாக்கி இருக்கிறார்கள் என கேட்கிறார்கள். எனக்கு இந்த இரு கேள்விகளுமே அவசியமற்றவை எனத் தோன்றுகின்றன.


இலக்கிய எழுத்தாளனும், வெகுஜன எழுத்தாளனும் இருவேறு மனநிலைகளுக்கு தீனி போடுகிறார்கள். இருவேறு நுண்ணுணர்வு நிலைகளில் நின்று வாசகனுடன் உரையாடுகின்றன. வெகுஜன எழுத்து நம்மிடம் அதிக கவனமும் மூளைத்திறனும் கோருவதில்லை. ஒரு டெம்பிளேட்டுக்குள் இயங்குகின்றன. நம் உணர்ச்சிகளைத் தூண்டி ஆர்வத்தை தக்க வைக்கின்றன. இவை எவையுமே கெட்ட காரியங்கள் இல்லை. இப்படித் தான் வெகுஜன எழுத்தில் இயங்க முடியும். இலக்கிய எழுத்தும் இவற்றை எல்லாம் செய்யும். ஆனால் குறைவாக செய்யும். இரண்டு வகை எழுத்துக்களும் முக்கியம். ஒரே வாசகர் இரண்டு வகையான எழுத்துக்களையும் படிக்கலாம். இரண்டையும் தரம் பிரித்து படிநிலையில் அடுக்குவது அவசியமற்ற பணி. நல்ல இலக்கிய படைப்பைப் போன்றே நல்ல வெகுஜன படைப்பை எழுதுவதும் மிக சிரமமான காரியம். இரண்டுக்கு பின்னும் கணிசமான உழைப்பு உள்ளது.
ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில் தமிழில் துப்பறியும் நாவல்கள் மிக மிகக் குறைவு. குற்றத்தை நாம் பார்க்கிற விதத்தில் உள்ள வித்தியாசம் ஒருவேளை காரணமாய் இருக்கலாம். நம்மூரில் சீரியல் கொலைகள் அதிகம் நடப்பதில்லை. பழிவாங்குவதற்கான, சொத்து பறிப்பதற்கான குடும்ப கொலைகளே அதிகம். குடும்ப குற்றங்கள் பற்றி துப்பறியும் நாவல்கள் எழுத நிறைய சாத்தியங்கள் உள்ளன. அமெரிக்காவில் போல இங்கு துப்பாக்கிகள் எளிதில் கிடைக்காது. அதனால் உயிர்பறிக்கும் வன்முறை சம்பங்கள் அன்றாட வாழ்வில் குறைவு. நாம் துப்பாக்கி சத்தங்கள் கேட்டு காலையில் கண்விழிப்பதில்லை. மும்பை போன்ற நகரங்களில் கேங்ஸ்டர்கள் காவல்துறை ஆசீர்வாதத்துடன் தன்னம்பிக்கையாய் செயல்படுகிறார்கள். இச்சூழலை வைத்து விக்ரம் சந்திரா எழுதிய சேக்ரட் கேம்ஸ் (Sacred Games) விரிவான ஆர்வமூட்டும் நாவல். ஆங்கில துப்பறிய நாவல்களில் சமீபமாக நார்வேயை சேர்ந்த எழுத்தாளர்கள் தாம் ஆட்சி செய்கிறார்க்ள். இவர்களில் ஜொ நெஸ்போ கவனித்தக்கவர். இவரது லெப்பர்ட், ஸ்னோமேன் ஆகியவை என்னை கவர்ந்தவை. இவரது நாவல்கள் 40 மொழிகளுக்கு மேல் பெயர்க்கப்பட்டுள்ளன. வழக்கமான துப்பறியும் நாவல் டெம்பிளேட்டுக்குள் இயங்கினாலும் உளவியல் பார்வையும், வாழ்க்கை மீதான தீவிரமான அக்கறையும் இவரது எழுத்துக்கு அடர்த்தியை அளிக்கின்றன. ஆங்கிலத்தில் இது போல் பல நல்ல துப்பறியும் எழுத்தாளர்கள் உள்ளார்கள்.

அரவிந்த் சச்சிதானந்ததின் “தட்பம் தவிர்” தமிழில் நான் வாசித்த மிகச் சில நல்ல துப்பறியும் நாவல்களில் ஒன்று. தரமான வெகுஜன எழுத்து இவருடையது. இந்நாவல் ஒரு கல்லூரியை ஒட்டி நிகழும் தொடர் கொலைகளை துப்பறியும் கார்த்திகேயன் எனும் அதிகாரியின் கண்ணோட்டத்தில் நகர்கிறது. என்னை மிகவும் கவர்ந்த விசயம் அரவிந்த் திகில் மற்றும் வேகத்துக்காக நாவலை நகர்த்துவதில் அவசரம் காட்டவில்லை என்பது. ஒரு துப்பறியும் நாவலுக்கு நிதானம் முக்கியம். அப்போது தான் திகில் அதிகமாகும்.

 அது போல் நாவலின் மையபாத்திரமான இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் பெரும் வல்லவனாக அல்லாமல் நிறைய பலவீனங்களும் குழப்பங்களும் கொண்டவராக வருகிறார். கொலையாளி அவரை எளிதில் மனதளவில் பலவீனப்படுத்த முடிகிறது. அவரது மனைவி பிரிந்து போய் விடுகிறார். அவர் நாவலின் போக்குடன் முதிர்ச்சி கொண்டவராக மாறுகிறார். இது நாவலை எதார்த்தமாக்க உதவுகிறது. நாவலின் இறுதியில் கொலையாளி வெல்ல துப்பறியும் அதிகாரி முறியடிக்கப்படுகிறார். சொல்லப்போனால் நாவலின் இறுதியில் நாயக பாத்திரம் கீழிறங்க கொலையாளியும் மற்றொரு எதிர்நிலை பாத்திரமான அசிஸ்டெண்ட் கமிஷ்னர் தேவும் மேலெழுகிறார்கள். ஒரு துப்பறியும் அதிகாரியை குற்றவாளிகள் எப்படி முட்டாளாக்குகிறார்கள் எனச் சொல்லும் கதையாகவும் இது உள்ளது. குற்றவாளியின் உளவியல் பற்றி பாதிரியாரான தன் வளர்ப்பு தந்தையுடன் கார்த்திகேயன் விவாதிக்கும் இடங்கள் நன்றாக உள்ளன. ஆனால் பாதிரியார் இவ்விதமான உளவியல் பார்வை தவறான பாதையில் வழக்கை திருப்பக் கூடும் என அஞ்சுகிறார். இறுதியில் அவ்விதமே ஆகிறது.

இப்படி நாவலின் களத்தைப் பொறுத்தமட்டில் அரவிந்த் நிறைய புது விசயங்களை முயன்றுள்ளார். ஒரே சிக்கல் கொலைகாரர்களின் திட்டங்களும் அவற்றின் வெற்றியும் நம்பகத்தன்மையுடன் இல்லை என்பது. அதே போல், துப்பறிந்து வழக்கை மெல்ல மெல்ல திறக்கும் இடங்கள் சாதாரணமாய் எதிர்பார்க்கும்படியாய் உள்ளன. ஆனால் டேன் பிரவுன் பாணியில் புதிரை அழகாய் அவிழ்த்து குற்றத்தை கண்டுபிடிப்பது அரவிந்தின் வலிமை அல்ல. அவர் அதிகமும் கதைகூறலில், பாத்திர அமைப்பில், நடையில் மெனக்கட்டிருக்கிறார்.
துப்பறியும் நாவல்களில் பாத்திர அமைப்பு தட்டையாக இருக்கும். காரணம் பாத்திரங்களுக்குள் நுழைய நேரம் இருக்காது. ஆனால் அரவிந்த் பொறுமையாக மைய பாத்திரங்கள் மட்டுமல்ல அடுத்த கட்ட பாத்திரங்களைக் கூட உயிரோட்டமாய் உருவாக்குகிறார். கார்த்திகேயன், அவருக்கு உதவும் ஏழுமலை, கொல்லப்படும் பிரகாஷ், கொலையாளனின் பாட்டி ஆகியோரின் பாத்திரங்களை சொல்லலாம். டி.ஜி.பி வீரபத்திரன் தனது அலுவலகத்தில் கூட்டம் நடக்கும் அறையில் நுழைந்திட பிற அதிகாரிகள் எழுந்து நிற்கிறார்கள். அவர் அதெல்லாம் வேண்டாமென அவசரமாய் கையசைத்து விட்டு கேள்விகளை கேட்கத் துவங்கி விடுகிறார். இந்த ஒரே வரியில் நமக்கு அவரது குணநலன் புரிந்து விடுகிறது.

துப்பறியும் நாவலில் பிரதானமான திகில் உணர்ச்சியை அதிகப்படுத்த கூடவே ஒரு காமம் அல்லது நகைச்சுவை சார்ந்த தொனி வருவது வெகுவாக உதவும். அரவிந்த பகடியை அழகாக பயன்படுத்தி இருக்கிறார்.

இந்நாவல் கூகிள் பிளே ஸ்டோரில் இலவசமாய் தரமிறக்கக் கிடைக்கிறது. நல்ல முயற்சி. படித்து பாருங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.