Skip to main content

ரஜினியும் கமலும்

Image result for rajini and kamal


 எனக்கு என்றுமே ரஜினி ரொம்ப நவீனமான நடிகர் எனத் தோன்றும். குளோசப் மற்றும் சூழலை மிக நுணுக்கமாய் காட்டும் தொழில்நுட்ப வசதி காரணமாய் ஒரு நடிகன் இன்று மிக மிக கொஞ்சம் உணர்ச்சிகளை காட்டினால் போதும் - அது பன்மடங்காக பெருகி பார்வையாளனை அடையும். ஒரு நுண்பெருக்கியின் கீழ் ஒரு எறும்பு நிற்பது போன்ற காரியம் இது. ஆனால் கமல் இதை புரிந்து கொண்டதாய் தெரியவில்லை. கமலுக்கு தன் கை, கால், விரல்கள், மூக்கு, கண், நாடி நரம்பெல்லாம் நடிக்க வேண்டும். சட்டகம் முழுக்க தான் வியாபிக்க வேண்டும். படக்கருவி, இசை, சூழல் இவற்றின் பங்கை அவர் முக்கியமாய் கருதுவதில்லை.

ஆச்சரியமாய் ரஜினியிடம் நாடக மேடையின் உடல் மொழியும் உண்டு. நிற்பது, நடப்பது, கை நீட்டி பேசுவது, நிற்கும் போது தன் கோணத்தை கவனமாய் பயன்படுத்துவதாய், இதில் எல்லாம் சற்று மிகை காட்டுவது என. ஆனால் முகபாவங்கள், குரல் இரண்டையும் சற்று மட்டுப்படுத்தி அழகாய் சமநிலைப்படுத்துவார்.
கமலின் மிகப்பெரிய பலம் அவர் அடிப்படையில் ஒரு நல்ல மிமிக்றி நடிகர் என்பது. அதாவது சாதாரண டிவி, மேடை மிமிக்றி அல்ல. ஆழமான அவதானிப்புகள் கொண்டு பல வித மனிதர்களை உள்வாங்கி அவர்களை தன் உடலில் பிரதிபலித்துக் காட்டும் உயர்ந்த வகை மிமிக்றி. எத்தனை எத்தனை வகை மனிதர்களை தன் நடிப்பில் கோண்டு வந்து காட்டியிருக்கிறார். பாலக்காட்டு பிராமணன், ஸ்டண்ட் நடிகன், பைத்தியம், கிராமத்து வெகுளி, முரடன், வயதான வஞ்சகமான வில்லன், அறிவுஜீவி கல்லூரி ஆசிரியர், அப்பாவியான, நகரத்துக்கு வந்து ஏமாற்றப்படும் நடுத்தர வர்க்க விவசாயி, இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த இறுக்கமான, உள்ளத்தில் பழி உணர்ச்சி கொந்தளிக்கும் மீசை முறுக்கிய பிராமணர், விபத்தில் முகம் சிதைந்து ஊனமுற்ற ஒரு கம்யூனிஸ்ட், ஸ்திரிலோலன் இப்படி எவ்வளவு எவ்வளவு! தமிழில் சிவாஜியும் உள்ளிட்டு எந்த நடிகனும் இவ்வளவு மாறுபட்ட தன்மையிலான வேடங்களை செய்ததில்லை. இந்த வேடங்களுக்கு என்று குரலில், உடல் மொழியில், வசனங்களை பேசுவதில் விடும் இடைவெளி மற்றும் வேகத்தில், பேச்சு மொழியில் அவ்வளவு நுணுக்கமாய் வேலை செய்திருப்பார்.
ரஜினியுடன் ஒப்பிடும் போது இந்த வெரைட்டி கொண்ட கமலிடம் ஒரிஜினாலிட்டி இல்லை என்பதையும் கவனிக்கலாம். இந்த வேடங்களில் உண்மையான கமல் யார்? திருஷ்யம் படத்தின் ஒரு ஸ்டில் பார்த்தேன். மலையாள படத்தில் லால் அணிந்திருந்த உடை, அவரது தலைமுடி அமைப்பு என அப்படியே போல செய்திருந்தார். இது தான் கமல் பாணி. இப்படித் தான் அவர் மார்லன் பிராண்டோவை ”நாயகனில் போல செய்திருந்தார். அவர் மனிதர்களை நேரடியாய் கிரகிப்பது போல சினிமாவில் வரும் பாத்திரங்களையும் கிரகித்து அப்படியே தன் நடிப்பின் வழி சித்தரிப்பார். காப்பி அடிப்பார் என சொல்ல மாட்டேன். ஆனால் கணிசமான தாக்கம் இருக்கும். கமலிடம் மிக அதிகமாய் தாக்கம் செலுத்தின நடிகர் சார்லி சாப்ளின் தான். குறிப்பாய் நகைச்சுவை மற்றும் துன்பியல் பாத்திரங்களில் கமல் நடிப்பதை பாருங்கள் - சார்லி சாப்ளினின் கண்ணாடி பிரதிபிம்பம் தான். சாப்ளினை போலவே கமலும் இது போன்ற காட்சிகளில் தடுமாறி தடுக்கிக் கொண்டே நடிப்பார். முகத்தில் ஒரு சின்ன சுளிப்பும் திகைப்பும் இருக்கும். அடிக்கடி இமைகளை தூக்குவார். பொருட்களை கைதவறி போடுவார். Pathos எனும் உயர்தர இரக்க உணர்வு தொனிக்கும் காட்சிகளில் அவர் அபாரமாய் நடிப்பதற்கும் சாப்ளினின் தாக்கமே காரணம். சாப்ளினுக்கு ஹோமெஜ் போல அவர் சாப்ளின் செல்லப்பாவாக கூட நடித்திருக்கிறார். பல விதமான தமிழ் பேச்சுவழக்குகளை கமலைப் போல் லாவகமாய் பயன்படுத்த மற்றொருவர் தமிழில் இல்லை. குறிப்பாக “சதி லீலாவதியில் பேசின கோவைத் தமிழ் மற்றும் “தசாவதாரத்தில் பேசின குமரிமாவட்ட களியாக்கவிளை தமிழ். மிகக்கொஞ்சம் மிகை இருந்தாலும் இரண்டுமே சாதனைகள் தாம். “தெனாலி ஈழத் தமிழ் இப்போது பல ஈழத்தமிழ் நண்பர்களின் பரிச்சயம் கிடைத்த பின் மிகையாக தோன்றுகிறது. இந்த போல செய்யும் நடிப்பு பாணி அவரது பலமாகவும் பலவீனமாகவும் உள்ளது.
பலவிதமான பரிமாணங்கள் கொண்ட நடிப்பு என்றால் கமல் தான். ஆனால் ஒரிஜினலான நவீன நடிகன் என்றுமே ரஜினி. அதனாலே அவர் எனக்கு பிடித்தமானவர்.

சர்வோத்தமனின் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் என்ற கட்டுரை தான் இந்த எண்ணங்களை எனக்குள் தூண்டின. அதையும் படித்துப் பாருங்கள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...