முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரஜினியும் கமலும்

Image result for rajini and kamal


 எனக்கு என்றுமே ரஜினி ரொம்ப நவீனமான நடிகர் எனத் தோன்றும். குளோசப் மற்றும் சூழலை மிக நுணுக்கமாய் காட்டும் தொழில்நுட்ப வசதி காரணமாய் ஒரு நடிகன் இன்று மிக மிக கொஞ்சம் உணர்ச்சிகளை காட்டினால் போதும் - அது பன்மடங்காக பெருகி பார்வையாளனை அடையும். ஒரு நுண்பெருக்கியின் கீழ் ஒரு எறும்பு நிற்பது போன்ற காரியம் இது. ஆனால் கமல் இதை புரிந்து கொண்டதாய் தெரியவில்லை. கமலுக்கு தன் கை, கால், விரல்கள், மூக்கு, கண், நாடி நரம்பெல்லாம் நடிக்க வேண்டும். சட்டகம் முழுக்க தான் வியாபிக்க வேண்டும். படக்கருவி, இசை, சூழல் இவற்றின் பங்கை அவர் முக்கியமாய் கருதுவதில்லை.

ஆச்சரியமாய் ரஜினியிடம் நாடக மேடையின் உடல் மொழியும் உண்டு. நிற்பது, நடப்பது, கை நீட்டி பேசுவது, நிற்கும் போது தன் கோணத்தை கவனமாய் பயன்படுத்துவதாய், இதில் எல்லாம் சற்று மிகை காட்டுவது என. ஆனால் முகபாவங்கள், குரல் இரண்டையும் சற்று மட்டுப்படுத்தி அழகாய் சமநிலைப்படுத்துவார்.
கமலின் மிகப்பெரிய பலம் அவர் அடிப்படையில் ஒரு நல்ல மிமிக்றி நடிகர் என்பது. அதாவது சாதாரண டிவி, மேடை மிமிக்றி அல்ல. ஆழமான அவதானிப்புகள் கொண்டு பல வித மனிதர்களை உள்வாங்கி அவர்களை தன் உடலில் பிரதிபலித்துக் காட்டும் உயர்ந்த வகை மிமிக்றி. எத்தனை எத்தனை வகை மனிதர்களை தன் நடிப்பில் கோண்டு வந்து காட்டியிருக்கிறார். பாலக்காட்டு பிராமணன், ஸ்டண்ட் நடிகன், பைத்தியம், கிராமத்து வெகுளி, முரடன், வயதான வஞ்சகமான வில்லன், அறிவுஜீவி கல்லூரி ஆசிரியர், அப்பாவியான, நகரத்துக்கு வந்து ஏமாற்றப்படும் நடுத்தர வர்க்க விவசாயி, இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த இறுக்கமான, உள்ளத்தில் பழி உணர்ச்சி கொந்தளிக்கும் மீசை முறுக்கிய பிராமணர், விபத்தில் முகம் சிதைந்து ஊனமுற்ற ஒரு கம்யூனிஸ்ட், ஸ்திரிலோலன் இப்படி எவ்வளவு எவ்வளவு! தமிழில் சிவாஜியும் உள்ளிட்டு எந்த நடிகனும் இவ்வளவு மாறுபட்ட தன்மையிலான வேடங்களை செய்ததில்லை. இந்த வேடங்களுக்கு என்று குரலில், உடல் மொழியில், வசனங்களை பேசுவதில் விடும் இடைவெளி மற்றும் வேகத்தில், பேச்சு மொழியில் அவ்வளவு நுணுக்கமாய் வேலை செய்திருப்பார்.
ரஜினியுடன் ஒப்பிடும் போது இந்த வெரைட்டி கொண்ட கமலிடம் ஒரிஜினாலிட்டி இல்லை என்பதையும் கவனிக்கலாம். இந்த வேடங்களில் உண்மையான கமல் யார்? திருஷ்யம் படத்தின் ஒரு ஸ்டில் பார்த்தேன். மலையாள படத்தில் லால் அணிந்திருந்த உடை, அவரது தலைமுடி அமைப்பு என அப்படியே போல செய்திருந்தார். இது தான் கமல் பாணி. இப்படித் தான் அவர் மார்லன் பிராண்டோவை ”நாயகனில் போல செய்திருந்தார். அவர் மனிதர்களை நேரடியாய் கிரகிப்பது போல சினிமாவில் வரும் பாத்திரங்களையும் கிரகித்து அப்படியே தன் நடிப்பின் வழி சித்தரிப்பார். காப்பி அடிப்பார் என சொல்ல மாட்டேன். ஆனால் கணிசமான தாக்கம் இருக்கும். கமலிடம் மிக அதிகமாய் தாக்கம் செலுத்தின நடிகர் சார்லி சாப்ளின் தான். குறிப்பாய் நகைச்சுவை மற்றும் துன்பியல் பாத்திரங்களில் கமல் நடிப்பதை பாருங்கள் - சார்லி சாப்ளினின் கண்ணாடி பிரதிபிம்பம் தான். சாப்ளினை போலவே கமலும் இது போன்ற காட்சிகளில் தடுமாறி தடுக்கிக் கொண்டே நடிப்பார். முகத்தில் ஒரு சின்ன சுளிப்பும் திகைப்பும் இருக்கும். அடிக்கடி இமைகளை தூக்குவார். பொருட்களை கைதவறி போடுவார். Pathos எனும் உயர்தர இரக்க உணர்வு தொனிக்கும் காட்சிகளில் அவர் அபாரமாய் நடிப்பதற்கும் சாப்ளினின் தாக்கமே காரணம். சாப்ளினுக்கு ஹோமெஜ் போல அவர் சாப்ளின் செல்லப்பாவாக கூட நடித்திருக்கிறார். பல விதமான தமிழ் பேச்சுவழக்குகளை கமலைப் போல் லாவகமாய் பயன்படுத்த மற்றொருவர் தமிழில் இல்லை. குறிப்பாக “சதி லீலாவதியில் பேசின கோவைத் தமிழ் மற்றும் “தசாவதாரத்தில் பேசின குமரிமாவட்ட களியாக்கவிளை தமிழ். மிகக்கொஞ்சம் மிகை இருந்தாலும் இரண்டுமே சாதனைகள் தாம். “தெனாலி ஈழத் தமிழ் இப்போது பல ஈழத்தமிழ் நண்பர்களின் பரிச்சயம் கிடைத்த பின் மிகையாக தோன்றுகிறது. இந்த போல செய்யும் நடிப்பு பாணி அவரது பலமாகவும் பலவீனமாகவும் உள்ளது.
பலவிதமான பரிமாணங்கள் கொண்ட நடிப்பு என்றால் கமல் தான். ஆனால் ஒரிஜினலான நவீன நடிகன் என்றுமே ரஜினி. அதனாலே அவர் எனக்கு பிடித்தமானவர்.

சர்வோத்தமனின் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் என்ற கட்டுரை தான் இந்த எண்ணங்களை எனக்குள் தூண்டின. அதையும் படித்துப் பாருங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...