ஒரு குறுநாவலை இப்போது தான் எழுதி
முடித்தேன். துப்பறியும் நாவல். பெஞ்சமின் பிளாக்கின் Christine Falls நாவல் படித்த
போது குற்றத்தை யார் செய்திருக்கக் கூடும் எனும் புதிரை அவிழ்ப்பது நோக்கி செல்வதாய்
மட்டும் ஒரு துப்பறியும் நாவல் இருக்க வேண்டியதில்லை என உணர்ந்தேன். ஒரு உளவியல் விசாரணையாக
அந்த துப்பறியும் நாவல் எழுதப்பட்டிருக்கும். நானும் சற்று அந்த பாணியில் தான் முயன்றிருக்கிறேன்.
எனக்கு தூண்டுகோலாய் அமைந்த மற்றொரு முக்கியமான நூல் டோம் ஒ கேரொலின் Paedophilia –
The Radical Case. அந்நூலைக் கொண்டு வேறொரு நாவலை முன்பு எழுத முயன்ற போது ஏற்பட்ட
ஒரு அறச்சிக்கல் காரணமாய் பாதியில் நிறுத்த நேர்ந்தது. ஆனால் இந்நாவலின் வடிவம் காரணமாய்
அறச்சிக்கல்களை எளிதாய் என்னையே அறியாமல் தாண்டிச் சென்று விட்டேன். நான் எழுதிய புத்தகங்களில்
மிகச்சிறியதாக இதுவே இருக்கும். இலக்கிய நோக்கின்றி ஜாலியான விளையாட்டாக கருதி எழுத
வேண்டும் என ஆரம்பத்திலேயே முடிவு செய்தேன். முடிந்தவரை இந்நோக்கததை தக்க வைத்தேன்.
இப்போதைக்கு தலைப்பு “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்”. எப்படி உள்ளது? Working
title தான். பிரசுரத்துக்கு முன் தோன்றினால் மாற்றி விடுவேன்.
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...
கருத்துகள்