Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மறுபிறவி எப்படி சாத்தியமாகிறது?




இம்மாத உயிர்மையில் வெளியாகியுள்ள எஸ்.செந்தில்குமாரின் “புத்தன் சொல்லாத பதில்” நான் படித்துள்ள சிறந்த சிறுகதைகளில் ஒன்று. தன் வீட்டில் தங்க வரும் புத்தருக்கு தெரியாத்தனமாய் விஷ உணவை படைத்து அவர் மரணத்துக்கு காரணமாகும் ஒரு அப்பா மற்றும் அவரது கர்ப்பிணி மகளின் கதை இது. தம் கையால் புத்தருக்கு இப்படி நேர்ந்து விட்டதே என குற்றவுணர்வு கொள்கிறார்கள். ஆனாலும் தன்னை விஷக்காளான் பறித்து சமைக்க செய்தது ஊழ் தான் என அந்த அப்பாவுக்கு தோன்றியபடி இருக்கிறது. ஏன் இப்படியான மகாபாவத்தை செய்யும் படி ஊழ் தன்னை தூண்டியது என அவருக்கு புரியவில்லை.


 இது தான் இக்கதையில் சுவாரஸ்யமான அம்சம். ஒரு ஐரோப்பிய கதையில் என்றால் இந்த குற்றவுணர்வு அவர்களை தொடர்ந்து துரத்திக் கொண்டே இருந்திருக்கும். ஆனால் இந்திய மனம் சுலபமாய் விதி எனும் கதையாடல் மூலம் குற்றத்தில் இருந்து கடந்து சென்று விடுகிறது.
ஊரில் இருந்தால் ஆபத்து என இருவரும் வெளியேறுகிறார்கள். அவர்களுக்கு ஒரு திருடன் அடைக்கலம் அளிக்கிறான். அவன் மனதளவில் முதிர்ச்சியான மனிதன். புத்தரின் மரணத்துக்கு இவர்கள் காரணம் என அறிந்ததும் அவன் புத்தரின் சீடர்கள் மற்றும் பிற ஊர்க்காரர்களைப் போல் அவர்களிடத்து கோபம் கொள்ளவில்லை. புத்தர் என்பவர் ஒரு மனிதர் அல்ல, அவர் எளிதில் மரணத்துடன் முடிந்து போகும் இருப்பல்ல எனும் உணர்வு அவனுக்கு இருக்கிறது. அவன் அவர்களை தன் வீட்டுக்கு அழைத்துப் போகிறான். அவனது சகோதரனுக்கும் அவனுக்கும் ஒரே பெண் தான் மனைவி. கர்ப்பிணியான அவள் குழந்தை பெறுகிறாள். புத்தரின் மரணத்துக்கு காரணமான பெண் அக்குழந்தைக்கு கௌதம புத்தன் என பெயர் வைக்கிறாள்.

 அடுத்து அவளுக்கு குழந்தை பிறக்க அதற்கு யசோதரை என பெயர் சூட்டுகிறாள். இரு குழந்தைகளிடமும் புத்தரின் சாயல் உள்ளது. திருடன் தானும் தன் சகோதரனுமாய் புத்தரிடம் திருட சென்ற கதையை சொல்கிறான். திருட்டின் போது இருவரும் புத்தரிடம் பிடிபடுகிறார்கள். புத்தரிடம் அவன் ஒரு கேள்வி கேட்கிறான்: “உங்களைத் தேடி ஏன் உங்கள் குழந்தைகள் வரவில்லை?”. அதற்கு பதிலளிக்காத புத்தர் புன்னகைக்கிறார். அடுத்து இரு குழந்தைகளையும் காண்பதற்காய் புத்தரின் முதன்மை சீடன் ஒருவன் வருகிறான். பிறந்துள்ள குழந்தைகள் புத்தரின் பிள்ளைகள் என்றும் அவர்களை தான் காண வேண்டும் என்றும் வேண்டுகிறான். பிறகு புத்தரின் மரணத்துக்கு காரணமான அந்த தகப்பன் இந்த சீடரின் பின்னால் சென்று விடுகிறான். அவரது பெண் ”எங்கே போகிறீர்கள்?” எனக் கேட்க அவர் சொல்கிறார் “நான் கௌதம புத்தனின் பின்னால் போகிறேன்”.
இக்கதை பௌத்தம் பேசும் விதிக் கோட்பாடு பற்றின புரிதலை தருகிறது. ஒரு மனிதன் தன் செயல்களின் விளைவுக்கேற்ப மீண்டும் மீண்டும் பிறந்தபடி இருக்கிறான். இது நடைமுறையில் எப்படி சாத்தியம்? உடல் எனும் அணுக்களின் கூட்டிணைவு நம் மரணத்துடன் நின்று போகிறது. அழுகி மண்ணோடு மண்ணாகிறது. அதன் பிறகு வாழ்க்கை இல்லையே? 

எம்.ஸி.ஸியில் முதுகலை படிக்கையில் எங்களுக்கு செரியன் குரியன் எனும் ஒரு பேராசிரியர் இருந்தார். அவர் ஒரு மார்க்ஸியவாதி. அவர் இக்கோட்பாட்டை பற்றிச் சொல்லும் போது மறுபிறவி என்பது மரணத்துக்கு பிறகு நிகழ்வது அல்ல, அது உளவியல்ரீதியான மறுபிறவி என்பார். மனிதன் தன் செயல்களின் விளைவாக தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறான். சரி அப்படி என்றாலும், அவன் மரணத்தோடு பிறவிச் சங்கிலி முடிந்து போக வேண்டுமே? இக்கேள்விக்கு செரியன் குரியன் பதில் ஏதும் தரவில்லை.

சில வருடங்களுக்கு பிறகு பின் அமைப்பியல் சார்ந்து வாசிக்கையில் எனக்கு இதற்கு விடை கிடைத்தது. மனித மனம் என்பது உடம்புக்குள், மூளைக்குள் இல்லை. அது மொழியில் இருக்கிறது. மொழி தொடர்ந்து நம் மனங்களை உற்பத்தி பண்ணியபடியே இருக்கிறது. என் எண்ணம் உங்களுக்குள் புகுந்து உங்கள் எண்ணமாகிறது. உங்கள் சலனங்கள் எனக்குள் புகுந்து ஒரு அலையாக உருவெடுக்கிறது. என்னோடு நீங்கள் பகைமை பாராட்டும் போது என்னுடைய எதிர்வினை என்னை உங்கள் பகைவனாகவோ நண்பனாகவோ ஆக்குகிறது. ஒரு அழகான பெண்ணருகே இருக்கையில், வெடிகுண்டு வெடித்த இடத்தில் இருக்கையில், போர்ச்சூழலில், கடும் வறுமையில், செல்வசெழிப்பில் இருக்கையில் அதற்கேற்றபடி மொழி பரிவர்த்தனைகள் மாறுகின்றன. இந்த பரிவர்த்தனைகள் நம் மனத்தை, நம்மை கட்டமைக்கின்றன. ஒவ்வொரு சூழலிலும், உறவாடலிலும், பேச்சிலும், வாசிப்பிலும் நாம் புதிது புதிதாய் பிறவி எடுக்கிறோம். 

இப்படி ஒரு நீண்ட சங்கிலியாய் நம் பிறவிகள் இந்த ஒரே பௌதிக வாழ்வில் தொடர்கின்றன. இப்பிறவிச் சங்கிலியை முறியடித்து புத்தனாவதற்கு எதிர்வினைகள் மற்றும் மொழிபரிவர்த்தனைகள் மூலம் நம் மனம் மாறுவதை தடுக்க வேண்டும் (அதாவது மொழியுடன் இருக்கையில் மனம் அமைதியாக வேண்டும்; எதிர்வினையாற்றக் கூடாது) என புத்தர் கருதினார். ஆனால் புத்தராலே கூட அது சாத்தியப்படவில்லை என பௌத்த தொன்மங்கள் கூறுகின்றன. ஒரே பிறவியில் அவரால் புத்தராக இயலவில்லை. அஞ்ஞானமும் இப்பிறவியின் சிக்கல்களூம் அவரை துரத்தியபடித் தான் இருந்தன.
அவர் ஒரே புத்தர் அல்ல. புத்தர் மீள மீள பிறந்து இறந்த ஒரு மனிதர். அல்லது அவ்வாறு வாழ்ந்த பல மனிதர்களை ஒற்றை அடையாளத்தின் கீழ் தொகுக்கும் பெயரே புத்தர்.

இந்த உண்மை தான் புத்தரின் கொலைப்பழியில் இருந்து அந்த அப்பாவையும் மகளையும் காப்பாற்றுகிறது. அந்த அப்பா தன் குற்றவுணர்வில் இருந்து விடுபடும் தருணம் அபாரமானது. புத்தனின் சீடர் என வருகிறவர் தன்னை புத்தர் எனக் கோருவதில்லை. ஆனால் அவரே புத்தர் என இவர் கண்டுகொள்கிறார். எப்படி? புத்தர் என்பது ஒரு மனநிலையே மனிதர் அல்ல என புரிந்து கொள்கிறார். யாரும் புத்தராக இருக்கலாம் எனும் போது புத்தர் எப்படி மரிக்க இயலும்? தன் குழந்தைகளை காணும் பொருட்டு புத்தரே மரணித்து பின் திருடர்கள் மற்றும் தன் மரணத்துக்கு காரணமானோரின் குழந்தைகளாய் தோன்றி அவர்களைப் பார்க்க தன் சீடன் வடிவில் வருகிறார் என்றும் புரிந்து கொள்ள முடியும்.

இது போன்ற ஒரு கதையை எழுதுவதற்கு நம் பண்பாடு, தத்துவ மரபு பற்றி ஒரு ஆழமான புரிதலும் கவித்துவமான மன எழுச்சியும் வேண்டும். எஸ்.செந்தில்குமார் ஒரு மேலான படைப்பு நிலையில் நின்று இக்கதையை எழுதி இருக்கிறார். மொழி அளவில் எஸ்.ராமகிருஷ்ணனின் தாக்கத்தில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் அவர் விடுபட்டிருக்கிறார் என்பதும் மகிழ்ச்சியான விசயம்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...