முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கமல் என்ன உங்க பக்கத்து வீட்டுக்காரரா?




பெ.கருணாகரனின் “காகிதப் படகில் சாகசப் பயணம்” கட்டுரைத் தொகுப்பில் உள்ள கட்டுரை ஒன்றின் தலைப்பே மேலே உள்ளது. கருணாகரன் குமுதத்தில் வேலை பார்க்கும் போது கமலை பேட்டி கண்டு வெளியிடுகிறார். அதற்காய் கமலை அணுகுவது ஆரம்பத்தில் சிரமமாய் இருக்கிறது. குமுதத்தின் டைரக்டர் வரதராசன் அவரிடம் கமலின் தனிபட்ட எண்ணை பெற்றுத் தந்தால் தான் பேசி பேட்டி வாங்கித் தருவதாய் கூறுகிறார். கருணாகரன் அவ்வாறே செய்து பேட்டியை வாங்குகிறார். அதன் பிறகு அவர் அதே எண்ணில் கமலை அழைத்து பேட்டி எப்படி வந்துள்ளது என கேட்கிறார். கமலும் நன்றாகவே பேசுகிறார். ஆனால் சில நிமிடங்களில் கமலின் பி.ஆர்.ஓ போனில் கருணாகரனை அழைத்து “நீ என்ன கமலுக்கு பக்கத்து வீட்டுக்காரரா? உனக்கு தோன்றினால் அவரை அழைத்து பேசுவதா? இனிமேல் என் மூலமாய் தான் கமலை தொடர்பு கொள்ள வேண்டும்” என கடுமையாய் திட்டுகிறார். அத்துடன் அந்த எண் ரத்து மாற்றப்படுகிறது. எனக்கு இது படித்ததும் கமல் ஏன் அவ்வாறு செய்திருப்பார் என கேள்வி எழுந்தது.
ஒரு நிருபர் சும்மா அவரை தொந்தரவு செய்வதற்காய் போன் செய்யப் போவதில்லை. தமிழின் முக்கியமான இயக்குநர்கள் சிலரை யார் வேண்டுமானாலும் நேரில் சந்திக்கலாம். பா.ரஞ்சித்தை சந்தித்த போது அவர் மிக மிக எளிமையான மனிதராய் இருப்பதைக் கண்டேன். நாசரும் அவ்வாறான மனிதர் தான். நலன் குமாரசாமி “தலைவரே” என்று அழைத்து தான் உரையாடுவார். ஸ்டாலின் போன்ற பெரும் தலைவர்கள் நேரில் மிக எளிமையாய் இருக்கிறார்கள். தமிழில் உள்ள பல பெரும் கலைஞர்களும் அவ்வாறே. நீங்கள் நள்ளிரவில் கூட சுந்தர ராமசாமியை அவர் வீட்டில் போய் பார்க்க முடிந்தது. சுஜாதாவை நான் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கண்டு பேசியிருக்கிறேன். கமலுக்கு இணையான அல்லது அவரை விட மேலான எழுத்து கலைஞர்களான ஜெயமோகன், எஸ்.ரா, மனுஷ்யபுத்திரன் போன்றோர் யாருடனும் சகஜமாய் உரையாடக் கூடியவர்கள். சாரு சின்ன பையன்களின் தோளில் கையிட்டு ஜாலியாய் பேசக் கூடியவர். இங்கு தம்மை பொதுமக்களில் இருந்து தனித்து காட்ட விரும்புகிறவர்கள் கதாநாயகர்கள் மட்டும் தான். நடிகர்களில் பெரும்பாலானோரை மக்கள் வெளியே பார்த்தால் மொய்க்க போவதில்லை. ரஜினி போன்று ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்கு. பார்த்திபன் தினமும் கடற்கரையில் நடைபழக போவதை பார்த்திருக்கிறேன். ஒருவர் கூட அவரிடம் சென்று பேசி பார்த்ததில்லை. ஒருவேளை ரஜினி கூட தினமும் அங்கு நடைபழகினால் மக்கள் அவரை தொந்தரவு செய்யாமல் விட்டு விடுவார்கள். ஆனால் ஒருவர் நட்சத்திரமாவதே தன்னை கவனமாய் மக்களிடம் இருந்து விலக்கிக் கொள்வதன் மூலம் தானே. தன்னை எளிதில் ஒருவர் தொடர்பு கொள்ள முடியும் என்பதும், ஒரு சாதாரண நிருபர் தன்னிடம் நேரடியாய் பேச முடியும் என்பதும் கமலின் அகந்தையை சீண்டியிருக்க வேண்டும். அதனாலே அவர் தன் பி.ஆர்.ஓவிடம் சொல்லி கண்டிக்கிறார். எண்ணை மாற்றுகிறார். குமுதத்தின் டைரக்டர் அந்த எண்ணில் பேசுவது சிக்கலில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஆனால் ஒரு நிருபர் பேசும் போது கமலுக்கு அது கௌரவக் குறைவாக படுகிறது.
கமலை கூட முழுக்க குற்றம் சொல்ல முடியாது தான். தொடர்ந்து ரசிகர்களும் மீடியாவும் அவரை கொண்டாடி கொண்டாடி இரண்டு கொம்புகளை மாட்டி விட்டார்கள். இனி கமலே நினைத்தாலும் கொம்பை அறுக்க முடியாது. ஏனென்றால் கொம்பு இல்லாமல் தன் முகத்தை அவரால் இனி கற்பனையே பண்ண முடியாது.

கருத்துகள்

తిరుపతి మహేష్ இவ்வாறு கூறியுள்ளார்…
sir ungal mobile number kodukka mudiyuma?

summa oru murai ungaludan pesathan.

ungalathu ovvoru katturaiyum arumai.
nan thodarchiyaaka vasithu varukiren.



ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
மகேஷ் நீங்கள் என்னை இந்த எண்ணில் அழைக்கலாம் 9790929153

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...