வீட்டில் டி.வி ரிப்பேர் ஆகி விட்டது.
டி.வி மெக்கானிக் வந்து பார்த்து விட்டு சொன்னார் “டி.வி மாதிரி எலக்டிரானிக் சாமான்
எல்லாம் மனித உயிர் போலத் தான். ஓடுற வரைக்கும் ஓடும். எப்போ நிக்குமுன்னு சொல்ல முடியாது.”
நான் முன்பு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் போது பக்கத்து படுக்கையில்
ஒரு மூதாட்டி கிடந்தார். ஒருநாள் அவருக்கு முழுக்க பிரக்ஞை போய் விட்டது. அவரது கணவன்
வந்து பார்த்து விட்டு ஒவ்வொரு டாக்டராக அழைத்து கன்னாபின்னா என்று கத்தினார். அவர்கள்
முழித்தார்களே தவிர சரியாய் பதில் சொல்லவில்லை. ஒரே ஒருத்தர் சொன்னார் “நீங்க இவங்களுக்கான
கட்டணத்தை இன்னும் செலுத்தல. அதை போய் செலுத்திட்டு வந்தீங்கன்னா சிகிச்சை தொடர்வாங்க.
ஏன்னா பணம் கட்டாததினால மருந்து நிப்பாட்டி வச்சுருக்காங்க”. அவர் உடனே பணம் செலுத்த
சென்றார். முந்தா நாளில் இருந்தே அவர் படுக்கை பக்கம் எந்த செவிலியோ மருத்துவரோ போகவில்லை
என்பது எனக்கு நினைவு வந்தது. இப்படி சிகிச்சையை நிறுத்துவதனால் அவருக்கு உயிர் போனால்
என்னாவது என்றெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. அந்த மூதாட்டி எனும் டிவியின் மின் தொடர்பை
தற்காலிகமாய் துண்டித்து விட்டார்கள்.
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...
கருத்துகள்