முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாட்டுக்கறியும் பிரமிளின் நண்பரும்




இன்று ஆசிய பண்பாட்டு ஆய்வு கழகத்தில் நுகர்வு பண்பாடு பற்றி நடந்த கருத்திரங்கில் கலந்து கொண்டு பேசினேன். நிறைய சுவாரஸ்யமான பேச்சுகளை கேட்க முடிந்தது. சென்னை பல்கலையின் மானுடவியல் துறைத்தலைவர் சுமதி தான் 2000இல் யுனிசெப் புரோஜெக்டுக்காக செய்த ஒரு ஆய்வு பற்றி பேசினார். திண்டுக்கல் பகுதியில் உள்ள தலித் சமூகத்தினரின் உணவு பழக்கம் பற்றியது ஆய்வு. இச்சமூகத்துக்கு பெண்களில் கர்பிணிகளின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் இரும்பு சத்தும், ஹியுமோகுளோபின் அளவும் மிகவும் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு இரும்பு சத்துள்ள மாத்திரைகளை கொடுப்பதும் முருங்கைக்கீரை போன்ற உணவுகளை பரிந்துரைப்பதும் புரோஜெக்டின் நோக்கம். இப்பெண்களின் உணவில் கீரை உள்ளிட்ட காய்கறிகள் மிகவும் குறைவு. அவர்கள் தினமும் மாட்டுக்கறி அல்லது மீன் குழம்பு வைக்கிறார்கள். இதில் புளி கட்டாயம் சேர்க்கிறார்கள். இதற்கு காரணம் புளியில் சமைக்கும் உணவு எளிதில் கெடாது என்பது. குளிர்பதனப்பெட்டி இல்லாத நிலையில் அடுத்த நாள் பழைய சோற்றில் இந்த குழம்பைத் தான் ஊற்றி பிசைந்து பிள்ளைகளை உணவாக அளிப்பார்கள். காய்கறி குழம்பு வைத்தால் அடுத்த நாள் கெட்டுப்போவதுடன் சுவையும் இல்லாதாகிறது. ஆனால் மாட்டுக்கறியோ மீனோ அடுத்த நாளானதும் சுவை இரட்டிப்பாகிறது என இப்பெண்கள் கூறுகிறார்கள்.

 ஒரு சமூகத்தின் பொருளாதார நிலையும் உணவுப்பண்பாடும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து வளர்கிறவை. தடை எனும் பெயரில் ஒரு உணவை ஒரு சமூகத்திடம் இருந்து பறிப்பது அபத்தம் இல்லையா என சுமதி கேட்டார். நான் முன்பு ஒருமுறை குற்றவியல் துறையில் ஒரு நண்பரை பார்க்க சென்றிருந்த போது அவரது அலமாரியில் தூசடைந்து கிடைந்த ஒரு நூலை உருவி புரட்டினேன். அது சுமதியின் முனைவர் பட்ட ஆய்வு. அது திருநெல்வேலி சாணார்கள் பற்றின சுவாரஸ்யமான விவாதங்கள் கொண்டது. அதன் பிறகு தான் அவர் சென்னை பல்கலையில் மானுடவியல் துறையில் உள்ளார் என அறிந்து கொண்டேன்.

இன்று அம்ருதராஜ் மற்றொரு நண்பரை சந்தித்தேன். அவர் ஒரு கவிஞர் என்றும் பிரமிளின் நண்பர் என்றும் சொன்னார். “பிரமிள் அடிக்கடி தேவையில்லாமல் சண்டை போடுவாரா?” எனக் கேட்டேன். அவர் சொன்னார் “பிரமிள் ரொம்ப இனிமையான மனிதர். ஆனால் யாரிடமாவது ரொம்ப நெருங்கி விட்டால், தான் அவர்களை ரொம்ப சார்ந்து இருப்பதாய் அவருக்கு தோன்றினால் அவரால் அதை தாங்க முடியாது. வேண்டுமென்றே அவர்களை வன்மமாய் தாக்கி பேசுவார். காயப்படுத்துவார். பிரிந்து போய் விடுவார். ஆனால் உள்ளுக்குள் நம் மீது அன்புடனே இருப்பார். நம்மை திரும்ப சந்திக்க முனைவார். ஆனால் அதை வெளிப்படையாய் காட்டிக் கொள்ள மாட்டார்”. எப்படி பிரமிள் அவரிடம் தான் எழுதிய கவிதையின் பல்வேறு திருத்தின பிரதிகளை காட்டி விளக்குவார், தான் படிக்கிற, யோசிக்கிற விசயங்களை தயங்காமல் அழகாய் பகிர்ந்து கொள்வார் எனக் கூறினார். ”பிரமிளுடன் இரண்டு வருடங்கள் இருந்தால் அவர் உங்களை அவர் நிலைக்கு உயர்த்தி விடுவார். அந்தளவுக்கு மனத்தீவிரமும் முனைப்பும் கொண்டவர்”. என்றார். பேராசிரியர்களின் கூட்டத்தில் இப்படி ஒரு சிறுபத்திரிகை கவிஞரை காண்பது விசித்திரமாய் இருந்தது. இன்று நிறைய பேரை சந்தித்து உரையாடினேன். ஆனால் ஒருவர் பிரமிள் பற்றி பேசிய சில நிமிடங்களில் இவர் நம் குடும்பத்து ஆள் எனும் அன்னியோன்யம் ஏற்பட்டது. மனம் கனிய அவர் கைகளை பற்றிக் கொண்டேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.