முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேவதச்சன் – படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் மனிதன் (“ஜன்னல்” இதழில் வெளியான பேட்டி)



Image result for தேவதச்சன்

கவிஞர் தேவதச்சன் 2015ஆம் வருடத்தின் விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விருதைப் பெறுகிறார். தேவசதச்சனின் இயற்பெயர் ஆறுமுகம். தூத்துக்குடி மாவட்டத்தின் கோயில்பட்டியை சேர்ந்தவர். எழுபதுகளில் இருந்து கவிதை எழுத துவங்கிய தேவதச்சன் இன்றும் ஒரு படைப்பாளியாக உறையில் இருந்து உருவப்பட்ட பளபளப்பான வாளைப் போல ஜொலிக்கிறார். இதற்கு காரணம் எழுபதுகளில் துவங்கி இன்று வரை அவர் யாரைப் போன்றும் எழுத முயலவில்லை; அவரை போல் யாராலும் எழுத முடிந்ததில்லை.
தேவதச்சன் இந்த கவிதை வெகுபிரசித்தம்.
”துணி துவைத்து
துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்”

சப்தங்கள் நம் மனதுக்குள் இருக்கிறதா வெளியே இருக்கிறதா? “முடியல” எனும் சொல்லைக் கேட்கும் போது வடிவேலுவின் குரல் உடனே நம் காதில் ஒலிப்பது ஏன்? தேவதச்சன் இது போல் நம் மனம் உருவாக்கும் பலவித சித்திரங்கள், ஒலிகள் பற்றி நுணுக்கமாய், மென்மையாய், எளிய அங்கதத்துடன் எழுதுகிறார்.
 ”அத்துவான வேளை”, “கடைசி டினோசர்”, “ஹேம்ஸ் எனும் காற்று” ஆகியவை தேவசத்தச்சனின் முக்கியமான நூல்கள். இத்தருணத்தில் அவரிடம் கவிதை பற்றி கொஞ்சம் பேசுவோம்.
கேள்வி: தமிழில் ஜென் தன்மை கொண்ட கவிதைகளை ஆனந்த், யுவன், நீங்கள், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் தொடர்ந்து எழுதுகிறீர்கள். 2000 வருட தமிழ் கவிதை மரபில் ஜென்னை எங்கு பொருத்தலாம்? உங்களுடைய பார்வையில் ஜென் என்றால் என்ன?
பதில்: ஜென் தத்துவத்தில் மனிதன் தன்னை சமூகத்தின் மையமாக (ஒரு பகுதியாக) நினைப்பதில்லை. ஜென் மனம் கொண்டவன் தன்னை அடையாளங்கள் கடந்த ஒன்றாகவே நினைக்கிறான். அவன் தான் எனும் சிந்தையை ஒரு பேரனுபவத்தில் முழுக்க இழந்து விடுகிறான். ஆனால் தமிழ் நவீன கவிதையில் அப்படியான ஒரு ஜென் மனநிலை உள்ளதென கூற முடியாது. நவீன கவிதை தமிழில் தோன்றும் பொழுது உலகின் பல்வேறு புதிய அழகியல்களை உள்வாங்கிக் கொண்டது. உதாரணமாய் எழுபதுகளில் தமிழில் தோன்றின சர்ரியலிசக் கூறுகளைச் சொல்லலாம். ஆனால் ஜென் எப்போதும் நம் கவிதையின் மைய தத்துவப் பார்வையாக இருந்ததில்லை.
நம் நவீன கவிதையில் உள்ள தேடலை நாம் தத்துவம் என வரித்துக் கொண்டோம். ஆனால் கவிதையில் உள்ள தத்துவமும் தத்துவத்தில் உள்ள கவித்துவமும் ஒன்றல்ல. ஜென் கவிதையில் பதிவாகும் இயற்கைக் காட்சிகள் நம் புலன்களில் அளவில் நாம் நுகரும் வாழ்வை பதிவு செய்கின்றன. அதற்கு அப்பாலோ அதற்கு முன்பாகவோ ஜென் கவிஞன் பிரதிபலிப்பதில்லை. நவீன தமிழ்க் கவிதையில் இருக்கும் தேடல் முழுக்கமுழுக்க நவீன மனிதனின் கேள்விகளே. ஜென் கவிதையில் கேள்விகள் இருப்பதில்லை. தமிழ்க்கவிதையில் பொதுவாக ஒரு ஜென் தன்மை உள்ளதென வேண்டுமானால் கூறலம். ஆனால் அது பிரதானமாய் இல்லை.

கேள்வி: ஒரு செயலை உந்தி நகர்த்தும் ஆற்றலை ’யின்’ என்றும் அதை நெகிழ்ந்து ஏற்கும் ஆற்றலை ’யாங்’ என்றும் ஜென் தத்துவம் கூறுகிறது. ஆணை ’யின்’ என்றும் பெண்ணை ’யாங்’ என்றும் வகைப்படுத்துகிறது. உங்கள் கவிதைகளில் அழுத்தமான பெண்மை நெகிழ்வை, ஒரு ’யாங்’ பார்வையை, பார்க்க முடிகிறது. உங்கள் ஆண் பாத்திரங்களிலும் பெண்மையின் லகுத்தன்மை உள்ளது.. வாழ்க்கையை செலுத்தும் ’யின்’ தன்மை கொண்டவர்களாக அன்றி அதை நெகிழ்ந்து ஏற்கும் ’யாங்’ குணம் கொண்ட மனிதர்கள் உங்கள் கவிதையில் அதிகம் வருகிறார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  
பதில்: மேலோட்டமாக பார்த்தோம் என்றால் நம் கவிதைகளில் ஆண் பெண் தன்மைகள் என தனித்தரியாய் தெரியலாம். அந்த மட்டில் நீங்கள் குறிப்பிடுவது உண்மை தான். ஆனால் கவிதை அதன் ஆழத்தில் பால் வேற்றுமைகளைக் கடந்த ஒன்றாக உள்ளது.
பெண்மையின் நெகிழ்வு என் கவிதையில் உள்ளதற்கு ஒரு காரணம் உள்ளது. கவிதை உணர்வுவயமானது. அது காட்சிபூர்வ சித்தரிப்புகள் கொண்டது. உலகை அறிவியல், தத்துவம் என அறிவுத்துறைகள் வழியாக அணுகி புரிந்து கொள்வது ஒரு முறை. அதையே உணர்வுபூர்வமாய், நெகிழ்ச்சியாய் உள்வாங்கி முன்வைப்பது கவிதையின் வழி. பொதுவாய் அறிவை மட்டும் நம்பாமல் புலன் வழி அறிந்து மனம் கரைந்து போய் அனுபவிப்பது பெண்களின் சுபாவம். என் கவிதையில் பெண் தன்மை இருப்பது இயல்பாகவே அக்காரணத்தினால் தான்.
கேள்வி: உங்கள் கவிதைகளில் படிக்கட்டு ஒரு மையக் குறியீடாக மீளமீள வருகிறது. படிக்கட்டில் ஏறவோ இறங்கவோ செய்யாது அதில் உட்கார்ந்திருக்கும் ஆட்கள் வருகிறார்கள். படிக்கட்டை வாழ்க்கைப் பயணத்துக்கான குறியீடாக கொண்டோமானால் அதில் ஏறாமலோ இறங்காமலோ இருப்பவர்கள் வாழ்க்கையை பற்றி சொல்வது என்ன? வாழ்க்கையை முந்தவோ பிந்தவோ வேண்டாம், அதன் ஒழுக்கோடு (ஆற்றில் மிதக்கும் படகு போல) சென்று கொண்டிருந்தால் போதும் என்றா?
பதில்: நாம் பொதுவாக சிறுவயதில் இருந்தே மீமனிதர்கள் (super humans) மீது பிரேமை கொண்டவர்களாக இருக்கிறோம். இயல்பான நம் வாழ்க்கை போதாமை கொண்டது என நினைக்கிறோம். நம்மை மீறிப் போவது பற்றி கனவு காண்கிறோம். ஆனால் இந்த ஏக்கமும் ஆசையும் நம் ஆழ்மனதின் சிக்கலைத் தான் காட்டுகிறதே அன்றி இது ஆரோக்கியமானதோ உண்மையானதோ அல்ல. இதைக் குறிக்கத் தான் படிக்கட்டு படிமம் என் கவிதைகளில் வருகிறது. என் கவிதையில் வரும் மனிதர்களுக்கு எதையும் கடந்து போகத் தேவையில்லை என்பதால் அவர்கள் படிக்கட்டில் ஏறிப் போவதில்லை. அவர்கள் அதில் உட்கார்ந்தே இருக்கிறார்கள்.
நன்றி: ஜன்னல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...