இன்று காலை தூங்கி
ஆரம்பித்த போது வந்த போனில் ஒருவர் திட்ட ஆரம்பித்தார். அதன் பிறகு ஏகப்பட்ட பிரச்சனை.
கடும் வேலை. மாலை ஏழரை வரை யாராவது அழைத்து திட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லாம் முடித்து
வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு தோழி போனில் அழைத்தார். அவரிடம் கேலி
பண்ணி பேசிக் கொண்டிருந்தேன். நான் பொதுவாய் அவரிடம் அப்படி மனம் விட்டு வேடிக்கையாய்
பேசினதில்லை. அவர் கேட்டார் “நீ எப்பவுமே உம்மணாமூஞ்சியாச்சே. இன்னிக்கு என்ன சிரிக்க
சிரிக்க பேசுறே?”. எனக்கே அப்போது தான் அது உறைத்தது. சட்டென எந்த காரணமுமில்லாமல்
நல்ல மனநிலையில் சந்தோசமாய் இருந்தேன். அடி வாங்க வாங்க மனம் சிரிக்கிறது!
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...
கருத்துகள்