Skip to main content

அப்படி ஒன்றும் இருக்காதே?

வா.மணிகண்டனின் சமீபத்தைய பதிவில் இருந்து….
மூன்றாம் நதி நாவலை எழுதி முடித்தவுடன் மகேஷூக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர் வாசித்துவிட்டுஅபிலாஷ், விநாயகமுருகன், செல்லமுத்து குப்புசாமி எழுதுகிற நாவலை எல்லாம் படிக்கணும்ன்னு ஆசை..ஆனா அது சாத்தியமேயில்லைஎன்றார். விழியிழந்தோர் வாசிப்பதற்கு தோதான வடிவங்களில் தமிழில் எந்தப் புத்தகமும் வெளிவருவதில்லை என்பதுதான் காரணம். மகேஷ் வருத்தப்பட்டார்.


வா.மணிகண்டன் நிறைய விசயங்களில் முன்னோடி. அவ்வப்போது கவிதை எழுதி ரகசியமாய் இலக்கிய எழுத்தாளராய் வாழ்ந்த அவர் தினமும் இரண்டு பதிவுகள் எழுதி ஒரு பிரபல பிளாகராகி, அதில் இருந்து சமூக சேவகராகி … இப்படி பல அவதாரங்கள். ஆரம்பிக்கும் எதையும் அரைகுறையாய் விடாமல் ஜெயித்துக் காட்டி விடுவார். நானெல்லாம் மொபைல் செயலிகளை இருட்டில் மின்மினிகளை பிடிப்பது போல் முயன்று கொண்டிருக்கும் போது அவர் தன் நிசப்தம்.காமுக்கு என்று தனியே ஒரு செயலி ஆரம்பித்து பிளேஸ்டோரில் அறிமுகப்படுத்தினார். இப்போது தன் ”மூன்றாம் நதி” நாவலுக்கு ஒலிவடிவம் கொண்டு வந்திருக்கிறார். ஒரு மென்பொருள் பயன்படுத்தி நாவலை ஒலிவடிவில் உருமாற்றி இருக்கிறார். எந்திரக் குரல் தான் என்றாலும் என்ன தான் இருக்கிறது என தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு உதவும் (இதன் தொடுப்பு மணிகண்டனின் இணையதளத்தில்).
என்னுடைய நாவலையும் திருப்பதி மகேஷ் போன்ற அவரது விழியற்ற நண்பர்கள் குறிப்பிட்டு அதற்கு ஒலி வடிவம் வராதா என கேட்டிருக்கிறார்கள். இனி அவர்களுக்காக. தில்லி பல்கலையில் ஆங்கில பேராசிரியராக உள்ள ஒரு நண்பர் இருக்கிறார். பார்வையற்றவர். அபாரமான வாசகர். அவர் தி.ஜா ஆரம்பித்து சமீபத்தில் வந்த ”கறுப்பர் நகரம்” வரை பல நாவல்களை ஒலி வடிவில் மாற்றி வைத்திருக்கிறார். எனக்கு கூட ஒரு பத்து ஒலி நாவல்களை தரவிறக்கி கொடுத்தார். எந்திரக் குரல் அல்ல நிஜமான குரலால் வாசிக்கப்பட்ட நாவல்கள். இதற்கென வாசித்து பதிவு பண்ணி கொடுப்பதற்கு அவர் சென்னையில் ஒரு அணியை சேர்த்து வைத்திருக்கிறார். சமீபத்தில் என் “ரசிகன்” நாவலுக்கு ஒலிவடிவம் கொடுக்கப் போவதாய் சொன்னார். அவருக்கு ஒரு சிறு சந்தேகம். “ஒரு பெண் தான் வாசிக்கப் போகிறார். அவருக்கு சங்கடம் ஏற்படுத்தும் கசமுசா சமாச்சாரங்கள் ஒன்றும் நாவலில் வராதே?” என்று கேட்டார். எழுத்தாளன் என்று இதையெல்லாம் ஒத்துக் கொள்ள போகிறான்? ”சேச்சே ரொம்ப சுத்தமான நாவலுங்க. குழந்தைங்களே படிக்கலாம்” என்றேன். ”அது மட்டுமில்ல, இது முழுக்க ஆண்களின் உலகம் பற்றின நாவல் என்பதால் ஒரு பெண் குரலில் இதை கேட்டால் தான் சுவாரஸ்யமாய் இருக்கும்”. அவரும் சமாதானமாகி போனை வைத்து விட்டார்.
 அரைமணிநேரம் கழித்த பிறகு தான் எனக்கே ஒரு விசயம் உறைத்தது. புணர்ச்சியையும் உளவியலையும் தொடர்பு படுத்தும் ஒரு graphicஆன உரையாடல் நாவலின் துவக்கத்தில் வருகிறதே என. அதற்கு ஒரு பின்னணி உள்ளது:
பொதுவாக பதின்வயது பையன்கள் கொஞ்சம் வயதில் மூத்த அண்ணன்களிடம் நட்பு கொள்ளும் போது செக்ஸ் குறித்து பேசுவதில் ஆர்வம் காட்டுவார்கள். இது ஒருவிதம் என்றால் அறிவுஜீவிகள் இளைஞர்களை அதிர்ச்சியூட்டுவதற்காய் அவர்கள் எதிர்பாராத வேளையில் செக்ஸ் பற்றி பட்டவர்த்தமாய் உரையாடுவார்கள். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தொண்ணூறுகளின் துவக்கத்தில் கல்லூரி மாணவராய் இருந்த போது நடந்த ஒரு சம்பவத்தை ஒருமுறை குறிப்பிட்டார். நண்பர் அப்போது சென்னை பல்கலை கழக விடுதியில் இருந்தார். ஒரு மூத்த எழுத்தாளர் அடிக்கடி விடுதிக்கு வருவாராம். நண்பர் மூத்த எழுத்தாளரை பார்த்து புன்னகைத்திருக்கிறாரே ஒழிய பேசினதில்லை. ஒருநாள் மூத்த எழுத்தாளர் நேராகவே நண்பரின் அறைக்கு வந்து உட்கார்ந்தார். பேசிக் கொண்டிருக்கும் போது சட்டென கேட்டார் “நீங்கள் மாஸ்டர்பேஷன் பண்ணுவதுண்டா?”. அதன் பிறகு நண்பர் மூத்த எழுத்தாளரை பார்த்தாலே தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார்.
”ரசிகன்” நாவலின் மையபாத்திரமான சாதிக் கொஞ்சம் இப்படியான ஒரு அறிவுஜீவி. சின்னப் பையன்கள் சதா அவனோடே திரிவார்கள். கதைசொல்லி ஒரு பதின்வயதினன். அவன் சாதிக்கிடம் முதன்முதலாய் அறையில் பேசிக் கொள்ளும் சந்தர்ப்பம் அது. அரசியல், தத்துவம் என பேசிக் கொண்டிருக்கும் போது சாதிக் ரொம்ப தீவிரமாய் செக்ஸ் பற்றி பேச ஆரம்பிப்பான். இந்த இடத்தை அப்பெண் உரத்து வாசித்தால் எப்படி இருக்கும் என எனக்கு கொஞ்சம் நெருடலாய் இருந்தது. அதன் பிறகு நண்பரை அழைத்து திருத்தினால் அது சங்கோஜமாய் இருக்கும் என விட்டு விட்டேன்.

அதன் பிறகு ஒலி வடிவத்திற்கு என்ன ஆயிற்று என தெரியவில்லை. அவர் பக்கம் இருந்து எனக்கும் அழைப்பில்லை. எதற்கு அமைதியான குளத்தில் கல்லெறிய வேண்டும் என நானும் அமைதியாக இருந்து விட்டேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...