முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்படி ஒன்றும் இருக்காதே?

வா.மணிகண்டனின் சமீபத்தைய பதிவில் இருந்து….
மூன்றாம் நதி நாவலை எழுதி முடித்தவுடன் மகேஷூக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர் வாசித்துவிட்டுஅபிலாஷ், விநாயகமுருகன், செல்லமுத்து குப்புசாமி எழுதுகிற நாவலை எல்லாம் படிக்கணும்ன்னு ஆசை..ஆனா அது சாத்தியமேயில்லைஎன்றார். விழியிழந்தோர் வாசிப்பதற்கு தோதான வடிவங்களில் தமிழில் எந்தப் புத்தகமும் வெளிவருவதில்லை என்பதுதான் காரணம். மகேஷ் வருத்தப்பட்டார்.


வா.மணிகண்டன் நிறைய விசயங்களில் முன்னோடி. அவ்வப்போது கவிதை எழுதி ரகசியமாய் இலக்கிய எழுத்தாளராய் வாழ்ந்த அவர் தினமும் இரண்டு பதிவுகள் எழுதி ஒரு பிரபல பிளாகராகி, அதில் இருந்து சமூக சேவகராகி … இப்படி பல அவதாரங்கள். ஆரம்பிக்கும் எதையும் அரைகுறையாய் விடாமல் ஜெயித்துக் காட்டி விடுவார். நானெல்லாம் மொபைல் செயலிகளை இருட்டில் மின்மினிகளை பிடிப்பது போல் முயன்று கொண்டிருக்கும் போது அவர் தன் நிசப்தம்.காமுக்கு என்று தனியே ஒரு செயலி ஆரம்பித்து பிளேஸ்டோரில் அறிமுகப்படுத்தினார். இப்போது தன் ”மூன்றாம் நதி” நாவலுக்கு ஒலிவடிவம் கொண்டு வந்திருக்கிறார். ஒரு மென்பொருள் பயன்படுத்தி நாவலை ஒலிவடிவில் உருமாற்றி இருக்கிறார். எந்திரக் குரல் தான் என்றாலும் என்ன தான் இருக்கிறது என தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு உதவும் (இதன் தொடுப்பு மணிகண்டனின் இணையதளத்தில்).
என்னுடைய நாவலையும் திருப்பதி மகேஷ் போன்ற அவரது விழியற்ற நண்பர்கள் குறிப்பிட்டு அதற்கு ஒலி வடிவம் வராதா என கேட்டிருக்கிறார்கள். இனி அவர்களுக்காக. தில்லி பல்கலையில் ஆங்கில பேராசிரியராக உள்ள ஒரு நண்பர் இருக்கிறார். பார்வையற்றவர். அபாரமான வாசகர். அவர் தி.ஜா ஆரம்பித்து சமீபத்தில் வந்த ”கறுப்பர் நகரம்” வரை பல நாவல்களை ஒலி வடிவில் மாற்றி வைத்திருக்கிறார். எனக்கு கூட ஒரு பத்து ஒலி நாவல்களை தரவிறக்கி கொடுத்தார். எந்திரக் குரல் அல்ல நிஜமான குரலால் வாசிக்கப்பட்ட நாவல்கள். இதற்கென வாசித்து பதிவு பண்ணி கொடுப்பதற்கு அவர் சென்னையில் ஒரு அணியை சேர்த்து வைத்திருக்கிறார். சமீபத்தில் என் “ரசிகன்” நாவலுக்கு ஒலிவடிவம் கொடுக்கப் போவதாய் சொன்னார். அவருக்கு ஒரு சிறு சந்தேகம். “ஒரு பெண் தான் வாசிக்கப் போகிறார். அவருக்கு சங்கடம் ஏற்படுத்தும் கசமுசா சமாச்சாரங்கள் ஒன்றும் நாவலில் வராதே?” என்று கேட்டார். எழுத்தாளன் என்று இதையெல்லாம் ஒத்துக் கொள்ள போகிறான்? ”சேச்சே ரொம்ப சுத்தமான நாவலுங்க. குழந்தைங்களே படிக்கலாம்” என்றேன். ”அது மட்டுமில்ல, இது முழுக்க ஆண்களின் உலகம் பற்றின நாவல் என்பதால் ஒரு பெண் குரலில் இதை கேட்டால் தான் சுவாரஸ்யமாய் இருக்கும்”. அவரும் சமாதானமாகி போனை வைத்து விட்டார்.
 அரைமணிநேரம் கழித்த பிறகு தான் எனக்கே ஒரு விசயம் உறைத்தது. புணர்ச்சியையும் உளவியலையும் தொடர்பு படுத்தும் ஒரு graphicஆன உரையாடல் நாவலின் துவக்கத்தில் வருகிறதே என. அதற்கு ஒரு பின்னணி உள்ளது:
பொதுவாக பதின்வயது பையன்கள் கொஞ்சம் வயதில் மூத்த அண்ணன்களிடம் நட்பு கொள்ளும் போது செக்ஸ் குறித்து பேசுவதில் ஆர்வம் காட்டுவார்கள். இது ஒருவிதம் என்றால் அறிவுஜீவிகள் இளைஞர்களை அதிர்ச்சியூட்டுவதற்காய் அவர்கள் எதிர்பாராத வேளையில் செக்ஸ் பற்றி பட்டவர்த்தமாய் உரையாடுவார்கள். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தொண்ணூறுகளின் துவக்கத்தில் கல்லூரி மாணவராய் இருந்த போது நடந்த ஒரு சம்பவத்தை ஒருமுறை குறிப்பிட்டார். நண்பர் அப்போது சென்னை பல்கலை கழக விடுதியில் இருந்தார். ஒரு மூத்த எழுத்தாளர் அடிக்கடி விடுதிக்கு வருவாராம். நண்பர் மூத்த எழுத்தாளரை பார்த்து புன்னகைத்திருக்கிறாரே ஒழிய பேசினதில்லை. ஒருநாள் மூத்த எழுத்தாளர் நேராகவே நண்பரின் அறைக்கு வந்து உட்கார்ந்தார். பேசிக் கொண்டிருக்கும் போது சட்டென கேட்டார் “நீங்கள் மாஸ்டர்பேஷன் பண்ணுவதுண்டா?”. அதன் பிறகு நண்பர் மூத்த எழுத்தாளரை பார்த்தாலே தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார்.
”ரசிகன்” நாவலின் மையபாத்திரமான சாதிக் கொஞ்சம் இப்படியான ஒரு அறிவுஜீவி. சின்னப் பையன்கள் சதா அவனோடே திரிவார்கள். கதைசொல்லி ஒரு பதின்வயதினன். அவன் சாதிக்கிடம் முதன்முதலாய் அறையில் பேசிக் கொள்ளும் சந்தர்ப்பம் அது. அரசியல், தத்துவம் என பேசிக் கொண்டிருக்கும் போது சாதிக் ரொம்ப தீவிரமாய் செக்ஸ் பற்றி பேச ஆரம்பிப்பான். இந்த இடத்தை அப்பெண் உரத்து வாசித்தால் எப்படி இருக்கும் என எனக்கு கொஞ்சம் நெருடலாய் இருந்தது. அதன் பிறகு நண்பரை அழைத்து திருத்தினால் அது சங்கோஜமாய் இருக்கும் என விட்டு விட்டேன்.

அதன் பிறகு ஒலி வடிவத்திற்கு என்ன ஆயிற்று என தெரியவில்லை. அவர் பக்கம் இருந்து எனக்கும் அழைப்பில்லை. எதற்கு அமைதியான குளத்தில் கல்லெறிய வேண்டும் என நானும் அமைதியாக இருந்து விட்டேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...