முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐரோம் ஷர்மிளா: துரோகமா சிந்தனை முதிர்ச்சியா? -

Irom Sharmila  

ஐரோம் ஷர்மிளா சில வருடங்களுக்கு முன்பும் தன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து சகஜ வாழ்வுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். அவருக்கு திருமணம் செய்ய விருப்பம் என்று கூட கூறப்பட்டது. ஆனால் அப்போது அவரைச் சுற்றியுள்ள போராளிகள், அரசியல் ஆர்வலர்கள் நெருக்கடி கொடுத்து அவரை தொடர செய்தனர்.
இப்போது 16 வருடங்களுக்கு பின் அவராகவே தன் விரதத்தை முடித்து விட்டார். மையநீரோட்ட அரசியலுக்கு திரும்ப ஆசைப்படுவதாய் கூறுகிறார். மணிபூர் முதல்வராகப் போவதாய் தெரிவிக்கிறார். இதை ஒரு நேர்மறையான திருப்பமாகவே பார்க்கிறேன். ஆனால் அவரது ஊரிலுள்ள இடதுசாரி சாய்வுள்ள அரசியல் போராளிகள் இப்போது ஷர்மிளாவை ஒரு துரோகியாய் சித்தரிக்க துவங்கி விட்டார்கள். தமக்காய் 16 வருடங்கள் உணவின்றி பட்டினி கிடந்து போராடியவரை இரண்டு இடங்களில் மக்கள் ஏற்க மறுத்து திரும்ப அனுப்பி இருக்கிறார்கள். ஷர்மிளா பற்றி தமிழில் உள்ள “போராளி”, “கலகவாதி” பிம்பமும் மெல்ல மெல்ல இனி சரியத் துவங்கும். ஏன் அவரது இத்தனை வருட பங்களிப்பை மறுத்து அவரை துரோக்கி ஆக்குகிறார்கள்?

ஷர்மிளாவை எதிர்ப்பவர்களில் பெரும்பாலானோர் அவர் ஜனநாயக அரசியலில் நுழைவதை விரும்பவில்லை, அது அவரை சீரழிக்கும் என கூறுகிறார்கள். இந்திய தேசியவாதத்தை ஏற்காத, தனிநாடு கோரும் மக்கள் இவர்கள். ஆனால் ஒரு தனிநாடாக மணிப்பூரால் தன்னை தக்க வைக்க முடியுமா? சீனாவுடன் இணைவார்களா? சீனா ஏற்கனவே திபத்தியர்களை எப்படி நடத்துகிறது என அறிய மாட்டார்களா? சீனா இந்தியா அளவுக்கு கூட எதிர்ப்பரசியலை அனுமதிக்காத நாடு என அறிய மாட்டார்களா?
எனக்கு முக்கியமாய் படுகிற கேள்வி இது: ஷர்மிளா ஒரு தனிமனிதராக போராட முடிவெடுக்கிறார். பிறகு அவர் தன் போராட்டத்தில் நம்பிக்கை இழந்து வேறு வகை பாதையை தேர்ந்தெடுக்கிறார். அவருக்கு அந்த உரிமை இல்லையா? எதிர்ப்பரசியலை கையில் எடுப்பவர்கள் மாற்று கருத்துக்களை, எதிர் நிலைப்பாடுகளை ஏன் திறந்த மனதுடன் ஏற்க தயாராக இல்லை? ஏன் அவர்கள் ஷர்மிளா தன் விரதத்தை தொடர வேண்டும் என்கிறார்கள்? அவர் ஒருவேளை உடல்நலமிழந்து இறந்தால் ஒரு நல்ல உயிர் தியாகி கிடைப்பார் எனும் கனவா? அவர்களுக்கு தேவை உயிருடன் உள்ள ஐரோம் ஷர்மிளாவா அல்லது ஐரோம் ஷர்மிளாவின் பிணமா?
உலகில் பெரும்பாலான இடங்களில் இடதுசாரி இயக்கங்கள் போராளிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களை நடத்தும் விதம் இப்படியாகத் தான் இருக்கிறது. எந்த தனிமனித பார்வைக்கும் இடம் தர மாட்டார்கள். சுயமாய் முடிவெடுக்கிறவர்களை துரோகி என முத்திரை குத்தி வேட்டையாடுவார்கள். இது ஏன்? ஆரம்ப கால மார்க்ஸியம் தான் காரணம்.
 ஆரம்ப கால மார்க்ஸியம் சமூக இயக்கத்தை புரிந்து கொண்ட விதம் சற்று பிழையானது. முதலாளித்துவ அமைப்பு – தொழிலாளிகள் என்று இருமையாக அது சமூக இயக்கத்தை கண்டது. இரு தரப்புக்குமான உற்பத்தி உறவு தான் சமூக இயக்கம் என அது குறுக்கிக் கொண்டது. இந்த தத்துவத்தில் மனம், மூளை, உணர்ச்சி, சிந்தனை, கற்பனைக்கு இடமே இல்லையா? உண்டு. ஆனால் உற்பத்தி உறவை தக்க வைக்கும் ஒரு கருவியாக மட்டுமே இவை பார்க்கப்பட்டது. அரசியல், கலாச்சாரம், சிந்தனை ஆகியவற்றை முதலாளித்துவம் தொழிலாளிகளை ஒடுக்க பயன்படுத்துவதாகவும் பூர்ஷுவா எனப்படும் நேரடியாய் உற்பத்தியில் ஈடுபடாத மத்திய வர்க்கம் முதலாளித்துவத்திற்கு சாதகமாய் கலாச்சாரம், சிந்தனை ஆகியவற்றை பரப்புவதாய் மார்க்ஸ் கருதினார்.
 இந்த ஆரம்ப கால மார்க்ஸியத்தில் மனித மனம் இடது – வலது என ஒரே சீராய் அன்றி முன்பின் முரணாய் யோசிக்க கூடியது எனும் புரிதல் இல்லை. உலக அறிவியக்கத்தில் தெரிதா, லகான் போன்றோரின் சிந்தனைகள் புகுந்த பின்னர் தான் மனித மனம் எப்படி தான் நம்புகிற ஒன்றுக்கு நேர் எதிராய் கூற சிந்திக்கலாம், தன் சிந்தனைக்கு நேர் எதிராய் செயல்படலாம் எனும் புரிதல் ஏற்பட்டது. மனிதன் தர்க்கரீதியானவன் அல்ல எனும் எண்ணம் வலுவானது. அப்படி என்றால் அவனை வெறும் உற்பத்தி உறவின் நீட்சியாய் மட்டுமே காண இயலாது. அவன் முதலாளித்துவத்தின் கருவியும் அல்ல, புர்ஷுவாவும் அல்ல. அவனுக்கு என்று ஒற்றைபட்டையான நிலைப்பாடுகள் இல்லை. அவன் முற்போக்கோ பிற்போக்கோ அல்ல அவன் ஒரு கலவை எனும் பார்வை வலுப்பட்டது. அல்தூசரின் சிந்தனைகள் மார்க்ஸியத்தில் இருந்த இறுக்கத்தை தளர்த்த உதவின.
 ஆனால் இன்றைய இடதுசாரி அமைப்புகள், கட்சிகள் இந்த பின்நவீனத்துவ பார்வையை ஏற்பதில்லை. அவர்களுக்கு ஒன்று நீங்கள் முதலாளித்துவத்தின் பிரச்சாரக் கருவி அல்லது இடதுசாரிகளின் பிரச்சார ஒலிபெருக்கி. இரண்டும் அன்றி, இரண்டுக்கும் இடைப்பட்டதாய், தனிமனித சிந்தனை கொண்டவராய் நீங்கள் இருக்க முடியும் என்றே ஏற்க மாட்டார்கள். ஐரோம் ஷர்மிளா தான் சுயநிலைப்பாடு கொண்டவர், தான் யாருக்கும் பிரச்சார கருவியல்ல என காட்ட முனையும் போது அவர் இடது முகாமில் இருந்து கடும் எதிர்ப்பை சந்திப்பது இதனால் தான்.
இந்த ”முற்போக்கு” சிந்தனையாளர்கள் மிஷல் பூக்கோவின் சிந்தனைகளை கற்க வேண்டும். அவர் அதிகாரத்தை அதிகாரம் கொண்டு மட்டுமே எதிர்க்க முடியும் என்றார். அரசியலை அரசியலால் மட்டுமே வெல்ல முடியும்! ஜனநாயக அதிகாரத்தை அதைக் கொண்டு மட்டுமே மணிபூர் மற்றும் பிற வடகிழக்கு மக்கள் எதிர்கொள்ள முடியும். அவர்கள் தம் வளர்ச்சிக்கு இந்திய மையநீரோட்ட அரசியிலில் பங்கு பெற்று, அதிகாரம் பெற்று, இங்குள்ள கலாச்சார இயக்கங்களில் செல்வாக்கு செலுத்துவது அவசியம். ஷர்மிளா இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதை தான் மணிப்பூர் பிரிவினைவாதிகளால் தாங்க முடியவில்லை. ஆனால் ஷர்மிளாவினுடையது துரோகம் அல்ல. சிந்தனை முதிர்ச்சி. அது பாராட்டத்தக்கது!

நன்றி: கல்கி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.